Friday, September 27, 2013

பகுதி 4. அத்தியாயம் 14: உழைப்புப் பிரிவினையும் பட்டறைத் தொழிலும். பிரிவு 5: பட்டறைத் தொழிலின் முதலாளித்துவ தன்மை.

ஒரு முதலாளியின் கட்டுப்பாட்டில் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் இருப்பது, பொதுவாக கூட்டு..வேலைக்கும் குறிப்பாக பட்டறைத் தொழிலுக்கும் இயற்கையான தொடக்க நிலை ஆகும். ஆனால் பட்டறைத் தொழில் உழைப்புப் பிரிவினை தொழிலாளர்களின் எண்ணிக்கையிலான இந்த அதிகரிப்பை ஒரு தொழில் நுட்ப அவசியமாக்கி விடுகிறது.

ஒவ்வொரு முதலாளியின் கையிலும் கட்டாயம் இருக்க வேண்டிய குறைந்தபட்ச மூலதன அளவு மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும்; அதாவது, சமுதாய உற்பத்திச் சாதனங்களும் வாழ்வுச் சாதனங்களும் மூலதனமாக மாற்றமடையும் நிகழ்வு மேலும் மேலும் விரிவடைந்து கொண்டே இருக்க வேண்டும். இது பட்டறைத் தொழிலின் இயல்பிலிருந்தே உதித்தெழும் விதியாகும்.

ஏராளமான தனிப்பட்ட நுணுக்கத் தொழிலாளர்களாலான இந்த இயங்கமைப்பு முதலாளிக்குச் சொந்தமானது. எனவே, உழைப்புகளின் ஒன்றிணைப்பிலிருந்து விளைகிற உற்பத்தித் திறன் மூலதனத்தின் உற்பத்தித் திறனாகத் தோற்றமளிக்கிறது.

சாமனியக் கூட்டு..வேலை தனியாளின் வேலைமுறையைப் பெரும்பாலும் மாற்றமின்றி விட்டு விடுகிறது; ஆனால், பட்டறைத் தொழில் அதை முற்றிலும் புரட்சிகரமான முறையில் மாற்றி, உழைப்புச் சக்தியை அதன் அடி வேருடன் கவர்ந்து கொள்கிறது. அது உற்பத்திக்கான ஆற்றல்களும் ஆர்வங்களுமாகிய ஒர் முழு உலகையே முடக்கி, ஒரே ஒரு நுணுக்க வேலையிலான கைத்திறனை வலுவந்தமாக வளர்த்து, தொழிலாளியை முடமாக்கி விகாரப் படுத்துகிறது.

பொருளுற்பத்தியின் மதிநுட்பம் என்பது பல திசைகளில் மறைந்து விடுவதால் ஒரு திசையில் மட்டும் விரிவடைகிறது. நுணுக்கத் தொழிலாளர்கள் இழப்பவை யாவும் அவர்களை வேலைக்கமர்த்தும் மூலதனத்தில் ஒன்று திரள்கிறது.

விஞ்ஞானத்தை உழைப்பிலிருந்து வேறான உற்பத்திச் சக்தியாக்கி மூலதனச் சேவையில் ஆழ்த்துகிற நவீனத் தொழில் துறையில் இது முழுமை பெறுகிறது.

18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் மெய்யாகவே சிற்சில பட்டறைத் தொழிலதிபர்கள் தொழில் இரகசியங்களை குறிப்பிட்ட சில வேலைகளில் மூடப் பிறவிகளையே அமர்த்த விரும்பினர்/

உடலையும் உள்ளத்தையும் ஓரளவு ஊனப்படுத்துவது சமுதாய முழுமையிலான உழைப்புப் பிரிவினையிலிருந்தும் கூடப் பிரிக்கமுடியாததாகும். ஆயினும் பட்டறைத் தொழிலானது உழைப்புக் கிளைகளின் இந்தச் சமுதாயப் பிரிவினையை இன்னுமதிகமாய் முன்னெடுத்துச் செல்வதாலும், மேலும் அதற்குரிய விசேஷப் பிரிவினையின் மூலம் தனியாளது வாழ்வின் அடிவேர்களையே தாகுவதாலும், தொழில் துறை நோயியலுக்கு இலக்குப் பொருட்களை வழங்குவதிலும், அதனை ஆரம்பித்து வைப்பதிலும் அதுவே முதலாவதாகும்.

பட்டறைத் தொழில் தன்னியல்பாய்த் தோன்றிய ஒன்றாகத் தொடங்குகிறது. சற்றே நிலைபெற்று விரிவடைந்ததும், முதலாளித்துவப் பொருளுற்பத்திக்கென உணர்வு பூர்வமாக ஒழுங்கு செய்து முறைப்படுத்தப்பட்ட வடிவமாகிவிடுகிறது. 

இந்த வடிவத்தில் ஏற்படும் எந்த மாற்றமும், அற்ப விவரங்களிலான மாற்றம் நீங்கலாக, முழுக்க முழுக்க உழைப்புக் கருவிகளிலான புரட்சியின் விளைவேயாகும்.

கைத்தொழில்களைக் கூறுகளாகச் சிதைப்பதன் மூலமும் உழைப்புக் கருவிகளை தனித்திறன் பெறச் செய்வதன் மூலமும், நுணுக்கத்தொழிலாளர்களை உருவாக்குவதன் மூலமும், அவர்களை ஒற்றை இயங்கமைப்பாகத் தொகுத்து ஒன்றிணைப்பதன் மூலமும், பட்டறைத் தொழில் உழைப்புப் பிரிவினையானது சமுதாய உற்பத்தி நிகழ்முறையில் பண்புவழியில் தரவரிசையையும், அளவு வழியில் விகித ஒழுங்கையும் உண்டாக்குகிறது.

பட்டறைத் தொழில், அதன் பிரத்தியேக முதலாளித்துவ வடிவத்தில் ஒப்பீட்டு உபரி..மதிப்பைப் பெறுவதற்கான, அதாவது தொழிலாளியின் செலவில் மூலக்தனத்தின் தற்பெருக்கத்தை அதிகப்படுத்துவதறகான ஒரு குறிப்பிட்ட வழிமுறையே. அது உழைப்பின் சமுதாய உற்பத்தித் திறனை, தொழிலாளியின் நன்மைக்காக அல்லாமல், முதலாளியின் நன்மைக்காக அதிகப்படுதுவது மட்டுமல்லாமல், தனிப்பட்ட தொழிலாளர்களை முடமாக்கியே இதைச் செய்கிறது. உழைப்பின் மீது கோலோச்சுவதறகான புதிய நிலைமைகளை அது தோற்றுவிக்கிறது. எனவே ஒரு புறம் வரலாற்றில் ஒரு முன்னேற்றமாகவும், சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சியில் ஒர் அவசியக் கட்டமாகவும் திகழ்கிறது. மறு புறம், அது ஒரு நாசூக்கான நாகரிகச் சுரண்டல் முறையாகும்.

பட்டறைத் தொழிற் காலத்தின் அரசியல் பொருளாதரம், சமுதாய உழைப்புப் பிரிவினை குறிப்பிட்ட அளவு உழைபைக் கொண்டு கூடுதலான சரக்குகளை உற்பத்தி செய்வதற்கும், இவ்வாறு சரக்குகளை மலிவாக்கி மூலதனத் திரட்டலை விரைவு படுத்துவதற்கும் வாய்த்த சாதனம் என்று மட்டுமே பார்க்கிறது. அளவுக்கும் பரிவர்த்தனை..மதிப்புக்கும் இப்படி உயர் சிறப்பு அளிப்பதற்கு நேர்மாறாக உள்ளது தொல்சீர் பண்டைக்காலத்திய நூலாசிரியர்கள் போக்கு. அவர்கள் முழுக்க முழுக்க பண்பையும் பயன்..மதிப்பையுமே உயர்த்திப் போற்றுகிறார்கள்.

16 ஆம் நூற்றாண்டுக்கும் நவீன தொழில் துறையின் சகாப்த்தத்துக்கும் இடையிலான காலத்தில் மூலதனம் பட்டறைத் தொழிலாளர்களின் பயன்படத்தக்க வேலை நேரம் முழுவதற்கும் அதிபதியாக முடியவில்லை. மேலும் பட்டறைத் தொழிலகள் அற்பாயுள் படைத்தவையாகவே இருந்தன. குடிபெயர்கிற அல்லது குடிவருகிற தொழிலாளர்களுடன் சேர்ந்து இவை தமது இருப்பிடத்தை நாடு விட்டு நாடு மாற்றிக் கொண்டன.

சமுதாயத்தின் பொருளுற்பத்தியை முழு அளவுக்கு கைப்பற்றவோ, அந்த உற்பத்தி முழுவதையும் புரட்சிகரமாக மாற்றவோ பட்டறைத் தொழிலால் முடியவில்லை.     

அதன் மிகப் பூர்தியான படைப்புகளில் ஒன்று, உழைப்புக் கருவிகளையே உற்பத்தி செய்வதற்கான பட்டறையாகும். பட்டறைத் தொழில் உழைப்புப் பிரிவினையிலிருந்து விளைந்தது இந்தப் பட்டறை. இப்பட்டறையிலிருந்து பிறந்தன இயந்திரங்கள். இந்த இயந்திரங்கள்தாம் சமூகப் பொருளுற்பத்தியை ஒழுங்கியக்குகிற கோட்பாடாயிருக்கும் கைவினைஞனின் பணியை அகற்றுகின்றன. இந்த கோட்பாட்டினால் மூலதனத்தின் ஆதிக்கத்துக்கு இடப்பட்ட விலங்குகள் முறிந்து விழுகின்றன.  

Monday, September 23, 2013

பகுதி 4. அத்தியாயம் 14: உழைப்புப் பிரிவினையும் பட்டறைத் தொழிலும். பிரிவு 4: பட்டறைத் தொழில் உழைப்புப் பிரிவினையும் சமுதாய உழைப்புப் பிரிவினையும்

சமுதாய பொருளுற்பத்தியை அதன் பிரதானப் பிரிவுகளாக அல்லது பேரினங்களாக .... வேளாண்மை, தொழில்கள் முதலானவையாக .... பிரிப்பதை பொதுப்படையான உழைப்புப் பிரிவினை என்றும், இந்தப் பிரிவுகலை இனங்களாகவும் உள்ளினங்களாகவும் பிரிப்பதை குறிப்பான உழைப்புப் பிரிவினை என்றும், பட்டறைக்குட்பட்ட உழைப்புப் பிரிவினைய சிறப்பு உழைப்புப் பிரிவினை அல்லது நுணுக்க உழைப்புப் பிரிவினை என்றும் அழைக்கலாம்.

பால் மற்றும் வயது வேறுபாடுகளின் காரணத்தால் உழைப்புப்பிரிவினை முற்றிலும் உடற்கூறு அடிப்படையிலானதாகும்.

வெவ்வேறு சமுதாயங்களுக்கு அவற்றின் இயற்கைச் சுற்றுச் சூழலில் வெவ்வேறு உற்பத்திச் சாதனங்களும், வெவ்வேறு வாழ்வுச் சாதனங்களும் கிடைக்கின்றன. எனவே அவை உற்பத்திச் செய்யும் முறைகளும், அவற்றின் வாழ்க்கை முறைகளும், உற்பத்திப் பண்டங்களூம் வெவ்வேறாய் உள்ளன. வெவ்வேறு சமுதாயங்கள் தொடர்பு கொள்ளும் போது உற்பத்திப் பண்டங்களின் பரஸ்பரப் பரிவர்த்தனையை நேரிடச் செய்வதும், அதன் மூலம் அந்த உற்பத்திப் பண்டங்களை சரக்குகளாகப் பையப் பைய மாற்றமடையச் செய்வதும் தன்னியல்பாய் வளர்ந்த இவ்வேறுபாடே. உற்பத்தித் துறைகளிலிடையேயான வேறுபாடுகள் பரிவர்த்தனையால் வந்தவையல்ல. பரிவர்த்தனையானது ஏற்கனவே வேறுபட்டிருப்பவற்றைத்தான் உறவுபடுத்துகிறது.

ஆதியில் தனித்தனியாகவும் ஒன்றிலிருந்து ஒன்று சுயேச்சையாகவும் இருந்த உற்பத்தித் துறைகளிடையேயான பரிவர்த்தனையிலிருந்து சமுதாய உழைப்புப் பிரிவினை உதித்தெழுகிறது.

முன்பு சுயேச்சையாயிருந்தது சார்புடையதாக்கப்படுகிறது. மறு நேர்வில், முன்பு சார்புடையதாய் இருந்தது சுயேச்சையானதாக்கப்படுகிறது.

குறிப்பிட்ட மக்கள் தொகையும் ஜனநெருக்கமும் சமுதாய உழைப்புப் பிரிவினைக்கு அவசியமான நிலைமையாகும். இங்கே இவை ஒரே பட்டறையில் ஒன்றுதிரளுவதற்கு ஒப்பானவை.

ஒரு சரக்கின் உற்பத்தியில் குறிப்பிட்ட ஒரு கட்டத்தைப் பற்றிக் கொண்டால், அதன் உற்பத்தியின் இதர கட்டங்கள் எல்லாம் அதனை சுயேச்சைத் தொழிலாகளாக மாற்றிவிடுகின்றன.

உற்பத்தியின் குறிப்பிட்ட கிளைகளை நாட்டின் குறிப்பிட்ட வட்டங்களுக்கு மட்டும் உரியனவாக்கும் பிரதேச உழைப்புப் பிரிவினை, தனிவித அனுகூலம் ஒவ்வொன்றையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பட்டறைத் தொழில் முறையிலிருந்து புது ஊக்கம் பெறுகிறது.

உழைப்புப் பிரிவினை பொருளாதாரத் துறையை மட்டுமல்லாமல், சமுதாயத்தின் ஒவ்வொரு துறையையும் பற்றிக் கொள்ளுகிறது. மனிதர்களைத் தனித்திறனாளராக்கி வகை பிரித்திடும் அந்த அமைப்பிற்கும், மனிதனின் எல்லாச் சக்திகளையும் விழுங்கி ஒரு சக்தியை மட்டும் ஓங்கச் செய்யும்படியான அந்த வளர்ச்சிக்கும் அது எங்கும் அடித்தளமிடுகிறது.

சமுதாயத்திலான உழைப்புப் பிரிவினைக்கும் பட்டறையிலான உழைப்புப் பிரிவினைக்கும் இடையே அவற்றை இணைத்திடும் ஒப்புமைகளும் பிணைப்புகளும் ஏராளமென்றாலும் அவை அளவில் மட்டுமல்லாமல் வகையிலும் வேறுபடுகின்றன.

நுணுக்கத் தொழிலாளி எவ்விதமான சரக்கையும் உற்பத்திச் செய்வதில்லை என்பதே பட்டறைத் தொழில் உழைப்புப் பிரிவினையின் சிறப்பியல்பு. நுணுக்கத் தொழிலாளர்கள் ஐன னைவரதும் பொதுவான உற்பத்திப் பொருள் சரக்காகிறது.

பட்டறையிலான உழைப்புப் பிரிவினை ஒரு முதலாளியின் கையில் உற்பத்திச் சாதனங்கள் ஒன்றுகுவிவதைக் குறிக்கிறது; சமுதாயத்திலான உழைப்புப் பிரிவினை பல சுயேச்சையான சரக்கு உற்பத்தியாளர்கள் மத்தியில் அவை பிரிந்து போவதைக் குறிக்கிறது. பட்டறையினுள்ளே, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக் குறிப்பிட்ட பணிகளுக்கு உட்படுத்துவது கண்டிப்பான உறுதி வாய்ந்த விகிதாசார விதியின்படி நடந்தேறுகிற அதே போழ்தில், பட்டறைக்கு வெளியே சமுதாயத்திலோ, பல்வேறு தொழிற் கிளைகளிடையே உற்பத்தியாளர்களையும், அவர்களது உற்பத்திச் சாதனங்க‌ளையும் பங்கீடு செய்வது முழுக்க முழுக்க சந்தர்ப்ப வசத்தின் படியும் சபல புத்தியின் படியும் நடந்தேருகிறது. 

பட்டறையில் உழைப்பு பிரிவினையும், தொழிலாளியை ஒரு பகுதி..வேலையோடு ஆயுள் பரியந்தம் பிணைத்துவிடுவதும், அவரை மூலதனத்துக்கு முழுமையாக கீழ்ப்படுத்துவதும் உழைப்பை ஒழுங்கமைப்பதாகும் என்றும்,  இந்த ஒழுங்கமைப்பு உழைப்பின் உற்பத்தித் திறனை உயர்த்துகிறது என்றும் முதலாளித்துவ சிந்தனை போற்றிப் புகழ்கிறது. இதே முதலாளித்துவ சிந்தனை, உற்பத்தி நிகழ்முறையைச் சமுதாய வழியில் கட்டுப்படுத்தி ஒழுங்கியக்குவதற்கு உணர்வு பூர்வமாய்ச் செய்யப்படும் ஒவ்வொரு முயற்சியையும், சொத்துரிமைகள், தனிப்பட்ட முதலாளியின் முனைவு தங்கு தடையின்றி சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு போன்ற புனிதங்கள் மீதான தாக்குதல் என்று சொல்லி அதே வேகத்துடன் கண்டிக்கிறது.

முதலாளித்துவ பொருளுற்பத்தியைக் கொண்ட சமுதாயத்தில் சமுதாய உழைப்புப் பிரிவினையில் அராஜகமும், பட்டறை உழைப்புப் பிரிவினையில் கொடுங்கோன்மையும் ஒன்றுக்கொன்று முன் நிபந்தனையாகின்றன.  

இந்திய கிராம சமுதாயங்கள் நிலத்தை பொதுவில் வைத்திருப்பதையும், பயிர்த்தொழில்,கைத்தொழில்கள் ஆகியவற்றின் ஒன்றுகலத்தலையும், மாற்றமில்லாத உழைப்புப் பிரிவினையையும் அடிப்படையாகக் கொண்டவையாகும்.

உற்பத்திப் பண்டங்களின் ஆகப் பெரும்பகுதி சமுதாயத்தின் நேரடி உபயோகத்துக்கு உரியதாகும். அது சரக்காக வடிவம் பெறுவதில்லை. ஆகவே இங்கே உற்பத்தியானது, இந்திய சமுதாயம் முழுமையிலும், சரக்குப் பரிவர்த்தனையால் ஏற்படும்  உழைப்புப் பிரிவினையைச் சார்ந்ததல்ல. உபரி மட்டுமே சரக்காகிறது.

நினைவுக்கெட்டாத காலம் தொட்டு இவ்வுற்பத்திப் பண்டங்களின் ஒரு குறிப்பிட்ட அளவு பண்ட வடிவ நில வாரமாக அரசின் கைக்குப் போய்ச் செர்ந்துள்ளது.

ஒவ்வொரு தனிப்பட்ட கைத்திறனாளரும் தத்தம் கைத்தொழிலின் வேலைகள் அனைத்தையும் தம் பட்டறையில் பரம்பரை வழியில், ஆனால் சுயேச்சையாகவும் தம் மீது எந்த அதிகாரத்தையும் ஒப்புக்கொள்ளாமலும், நடத்துகிற அதே நேரத்தில், சமுதாயத்தில் உழைப்புப் பிரிவினையை முறைப்படுத்துகிற விதி இயறகை விதிக்குரிய தடுத்து நிறுத்த முடியாத அதிகாரத்துடன் செயல்படுகிறது. இந்தத் தன்னிறைவுச் சமுதாயங்கள் அதே வடிவில் தம்மை ஓயாது படைத்துக் கொள்கின்றன. தற்செயலாக அழிக்கப்பட்டு விடும் போது அதே இடத்தில் அதே பெயருடன் மீண்டும் துளிர்த்தெழுகின்றன.

ஆசிய அரசுகள் இடையறாது சிதைவதற்கும், மீண்டும் நிறுவப்படுவதற்கும், ஓயாத அரசவம்ச மாற்றங்களுக்கும் நேர் எதிராக கண்ணிற்படுகிறது இந்த மாற்றமின்மை. சமுதாயத்தின் பொருளாதாரக் கூறுகளது வடிவமைப்பு அரசியல் வானத்தில் சீறியெழும் புயல் மேகங்களால் பாதிப்புறாமல் அப்படியே இருந்து வருகிறது.

கைவினைச் சங்கங்களின் விதிகள், தனியொரு ஆண்டான் வேலை வாங்கக்கூடிய பழகு தொழிலாளர்கள், பணியாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கைக்கு வரம்பிட்டதன் மூலம் அந்த ஆண்டானை முதலாளியாக மாற விடாமல் தடுத்தன. மேலும் தான் ஆண்டானாக உள்ள கைத்தொழில் தவிர வேறெந்த கைத்தொழிலிலும் தன் பணியாளர்களை அவர் வேலையில் ஈடுபடுத்த முடியாது.

வியாபாரி எந்த வகைச் சரக்கையும் வாங்கலாம்; ஆனால் உழைப்பை சரக்காக வாங்க முடியாது.

கைவினைச் சங்க ஒழுங்கமைப்பு கைத்தொழிலகளைப் பிரித்து, தனித்தனியாக்கி, செம்மைப்படுத்தியதன் மூலம் பட்டறைத் தொழில் நடப்பதற்கான பொருளாயத நிலைமைகளைத் தோற்றுவிப்பதற்குப் பெரிய அளவில் பங்காற்றியதென்றாலும் பட்டறையில் உழைப்புப் பிரிவினைக்கு இடம் தரவேயில்லை. நத்தை அதன் கூட்டுடன் இறுகப் பிணைக்கப்பட்டிருப்பதைப் போல தொழிலாளி மொத்தத்தில் அவரது உற்பத்திச் சாதனங்களுடன் இறுகப் பிணைக்கப்பட்டிருப்பது போல தொழிலாளி மொத்தத்தில் அவரது உற்பத்திச் சாதனங்களுடன் இறுகப் பிணைக்கப்பட்டவராகவே இருந்தார். இவ்வாறு தொழிலாளியை அவரது உற்பத்திச் சாதனங்களிடமிருந்து பிரிந்து அச்சாதனங்களை மூலதனமாக மாற்ற முடியாததால், பட்டறைத் தொழிலுக்கான பிரதான அடித்தளம் இல்லாது போயிற்று.  

Friday, September 20, 2013

பகுதி 4. அத்தியாயம் 14: உழைப்புப் பிரிவினையும் பட்டறைத் தொழிலும. பிரிவு 1 முதல் 3 வரை

பிரிவு 1: பட்டறைத் தொழிலின் இரட்டைத் தோற்றுவாய்.

உழைப்புப் பிரிவினையின் அடிப்படையிலான கூட்டு..வேலை பட்டறைத் தொழிலில் தன் எடுத்துக் காட்டான வடிவத்தை மேற்கொள்கிறது.

பட்டறைத் தொழில் உதிக்கிற முறை, கைத்தொழில்களில் இருந்து அது வளர்கிற விதம் இரட்டைத் தன்மையதாகும்.  ஒரு புறம், சுயேச்சையான பல்வேறு கைத்தொழில்களின் ஐக்கியத்திலிருந்து அது பிறக்கிறது;

மறு புறம்,கைத்தொழிலைச் சேர்ந்த கைத்திறனாளர்களின் கூட்டு வேலையிலிருந்தும் பட்டறைத் தொழில் பிறக்கிறது:

ஒரு புறம், பட்டறைத் தொழில் உற்பத்தி நிகழ்முறையில் உழைப்புப் பிரிவினையைப் புகுத்துகிறது, அல்லது அந்தப் பிரிவினையை மேலும் வளர்க்கிறது; மறு புறம், முன்னதாக தனித்திருந்த கைத்தொழில்களை அது ஒன்றாய்ச் சேர்க்கிறது. ஆனால், அதன் குறிப்பான தொடக்கம் எதுவாயிருந்தாலும், அதன் இறுதி வடிவம் எப்போதும் ஒன்றே ... மனிதப் பிறவிகளைப் பாகங்களாகக் கொண்ட ஓர் உற்பத்திப் பொறியமைவே.

பட்டறைத் தொழிலில் ஓர் உற்பத்தி நிகழ்முறை அதன் பல்வேறு அடுத்தடுத்த படிகளாகப் பிரிபடுவது ஒரு கைத்தொழில் அதன் அடுத்தடுத்த கைவேலைகளாக‌ப் பகுபடுவதுடன் முற்றிலும் ஒத்தமைகிறது. சிக்கலானதானாலும் எளிமையானதானாலும், ஒவ்வொரு வேலையையும் கையால் செய்ய வேண்டியுள்ளது. அது கைத்தொழிலுக்குரிய தன்மையை இழக்காதிருக்கிறது; எனவே, தன் கருவிகளைக் கையாளுவதில் தனியொரு தொழிலாளிக்குள்ள பலத்தையும், தேர்ச்சியையும், விரைவையும், உறுதியையும் பொறுத்தது அது.

இந்த உழைப்புப் பிரிவினை ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த கூட்டு..வேலையாகும்; அதன் குறைகளில் பலவும் கூட்டு..வேலையின் பொதுத்தன்மையிலிருந்து பிறப்பவையே அல்லாமல், அதன் இந்தக் குறிப்பிட்ட வடிவத்திலிருந்து பிறப்பவை அல்ல.

பிரிவு 2: நுணுக்கத் தொழிலாளியும் அவரது கருவிகளும்.
.
பட்டறைத் தொழிலின் உயிருள்ள பொறியமைவாகிற கூட்டுத் தொழிலாளி (collective labourer )  முழுக்க முழுக்க தேர்ச்சி பெற்ற நுணுக்கத் தொழிலாளர்களால் ஆனவரே. எனவேதான் சுயேச்சையான கைத்தொழிலுடன் ஒப்பிட்டால் குறிப்பிட்ட காலத்தில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. அல்லது உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகமாக்கப்படுகிறது.

பட்டறைத் தொழிலானது பொதுவாக சமுதாயத்தில் தொழில்கள் இயற்கையாகவே வேறுபட்டு வளர்ந்திருக்கக் கண்டு, அந்த வேறுபாட்டை அப்படியே எடுத்தாள்வதோடு, பட்டறைக்குள்ளேயே திட்டமிட்டு அதனைத் தீவிரப்படுத்துவதன் மூலம் நுணுக்கத் தொழிலாளியை தனித்தேர்ச்சி பெறச் செய்கிறது.

தாவரங்களும் மிருகங்களும் இனங்களாகவும் ராசிகளாகவும் வகைபிரிவதை முறைப்படுத்துகிற அதே இயறகை விதியின் செயலிலிருந்தே, சாதிகளும் கைவினை சங்கங்களும் பிறக்கின்றன; ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடைந்ததும் சாதி மூலமான பரம்பரைத் தன்மையும் கைவினைச் சங்கம் மூலமான பிரத்தியேகத் தன்மையும் சமுதாயச் சட்டத்தின் மூலம் நிலைநாட்டப்படுகின்றன என்பதே.

தலைமுறை தலைமுறையாகப் பேணி வளர்க்கப்படுவதும், தந்தை தனயனுக்குத் தருவதுமான தனித் தேர்ச்சி அளிக்கும் செயல் திறமை பட்டறைத் தொழிலாளியின் வேலையோடு ஒப்பிடுமிடத்து மிகவும் சிக்கலானதாகும். 

கைத்திறனாளர் நாள் முழுதுவதிலும் ஒரே வேலையில் பிணைப்புண்டு போனதுமே இடைவெளிகள் மறைந்து போகின்றன. இப்படி வரப்பெறும் கூடுதல் உற்பத்தித் திறன், ஒன்று, குறிப்பிட்ட காலத்தில் உழைப்புச் சக்தியின் செலவீடு அதிகரிப்பதன் ... அதாவது உழைப்பின் மும்முரம் அதிகரிப்பதன் ... விளைவாகவோ, அல்லது திறனில்லா முறையில் நுகரப்படும் உழைப்புச் சக்தியின் அளவு குறைவதன் விளைவாகவோ கிடைக்கலாம்.

உழைப்பின் உற்பத்தித் திறன் தொழிலாளியின் தேர்ச்சியை மட்டும் பொறுத்ததன்று; அவரது கருவிகளின் செம்மையையும் பொறுத்ததாகும்.

முன்பு பல காரியங்களுக்குப் பயன்பட்ட கருவிகளில் மாற்றங்கள் செய்வது அவசியமாகிறது. எப்படிப்பட்ட மாற்றம் என்பது கருவியின் பழைய வடிவத்தால் ஏற்படும் இடர்பாடுகளால் நிர்ணயிக்கப்படுகிறது.

பட்டறைத் தொழிலாளியின் தனிச் சிறப்பு அடங்கியிருப்பது உழைப்புக் கருவிகளின் வகை வேறுபாட்டிலும் ஒவ்வொரு தனிவகைக் கருவியும் குறிப்பிட்ட நுணுக்கத் தொழிலாளியின் கையில் மட்டுமே முழு வீச்சில் பயன்படும் விதத்தில் அந்தக் கருவிகளைத் தனித்திறன் பெறச் செய்வதிலும்தான். 

பட்டறைத் தொழிற் காலம் சாமானியக் கருவிகளின் ஒன்றிணைப்பாலான இயந்திர சாதனம் தோன்றுவதற்கான பொருளாயத நிலைமைகளில் ஒன்றை படைக்கிறது.

பட்டறைத் தொழிலின் மிகவும் சாமானியக் கூறுகளே நுணுக்கத் தொழிலாளியும் அவரது கருவிகளும்.

பிரிவு 3: பட்டறைத் தொழிலின் அடிப்படை வடிவங்கள் இரண்டு: பல படித்தான பட்டறைத் தொழில், தொடர் பட்டறைத் தொழில்

பட்டறைத் தொழிலின் ஒழுங்கமைப்புக்கு அடிப்படை வடிவங்கள் இரண்டு. 1. பலபடித்தான பட்டறைத் தொழில். 2. தொடர் பட்டறைத் தொழில். பிற்காலத்தில் இயந்திர சாதனத்தைக் கொண்டு நடத்தப்படும் நவீனத் தொழில் துறையாக (Modern Industry ) மாற்றமடைவதில் இவை இருவேறு பாத்திரம் வகிக்கின்றன.    இந்த இரட்டைத் தன்மை உற்பத்திச் செய்யப்படும் பண்டத்தின் இயல்பிலிருந்து பிறப்பதாகும். இந்தப் பண்டம் தனித்தனியாகச் செய்யப்பட்ட பகுதி..உற்பத்திப் பொருட்களை யாந்திரிகமாய் இணைத்துப் பொருத்துவதன் மூலமே கிடைக்கப் பெறலாம்; அல்லது தொடர்புள்ள நிகழ்முறைகள், செப்ப முறைகள் ஆகியவற்றாலான தொடரின் மூலம் அதன் பூர்த்தியான உருவம் கிடைக்கப் பெறலாம்.

பட்டறைத் தொழிலின் இயங்குமுறை, குறிப்பிட்ட விளைவு குறிப்பிட்ட காலத்தில் அடையப்படும் என்ற அனுமானத்தின் அடிப்படையிலானது. ஒன்றை ஒன்று நிறைவு செய்யும் பல்வேறு துண்டுதுண்டான உழைப்பு நிகழ்முறைகளும்  தடங்கலின்றியும் ஏககாலத்திலும் அக்கம்பக்கமாகவும் தொடர முடிவது இந்த அனுமானத்தின் பேரில்தான். வேலைகள் ஒன்றை ஒன்றும், ஆகவே தொழிலாளர்கள் ஒருவரை ஒருவரும் இப்படி நேரடியாகச் சார்ந்திருப்பது, அவர்கள் ஒவ்வொருவரையும் தம் வேலையில் அவசியமான நேரத்துக்கதிகமாகச் செலவிட முடியாதபடி செய்துவிடுகிறது.

ஒரு சரக்குக்காகச் செலவிடப்படும் உழைப்பு நேரம் அதன் உற்பத்திக்கு சமுதாய வழியில் அவசியமான உழைப்பு நேரத்தை விஞ்சக் கூடாது என்ற விதி, பொதுவான சரக்கு உற்பத்தியில், போட்டியின் தாக்கத்தாலேயே நிலைநாட்டப் பெறுவதாகத் தோன்றுகிறது.

மாறாக பட்டறைத் தொழிலில், குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட அளவில் உற்பத்திப் பொருளைத் தயாரித்தளிப்பது உற்பத்தி நிகழ்முறையின் தொழில் நுட்ப விதியாகிவிடுகிறது.

பட்டறைத் தொழிலில் அமலாக்கப்படும் உழைப்புப் பிரிவினை சமுதாயக் கூட்டுத் தொழிலாளியின் பண்புவழியில் வேறுபட்ட அங்கங்களை எளிமைப்படுத்துவதும் பல்கச் செய்வதும் மட்டுமல்லாமல், அந்த அங்கங்களின் அளவை .. அதாவது ஒவ்வொரு நுணுக்க வேலைக்குமான தொழிலாளர்களின் ஒப்பீட்டு எண்ணிக்கை அல்லது தொழிலாளர் குழுவின் ஒப்பீட்டு அளவை .. ஒழுங்குபடுத்தும் நிலையான கணித உறவு அல்லது விகிதத்தையும் உருவாக்குகிறது. அது, சமுதாய உழைப்பு நிகழ்முறையின் பண்புவழிப்பட்ட உட்பிரிவினையோடு கூட, அந்த நிகழ்முறைக்கு ஓர் அளவு வழிப்பட்ட விதியையும் விகிதாசார உறவையும் வளர்த்தெழச் செய்கிறது.

பட்டறைத் தொழில் பகுதியளவுக்கு எப்படிப் பல்வேறு கைத்தொழில்களின் ஒன்றிணைப்பிலிருந்து பிறக்கிறதோ, அதேபோல் பல்வேறு பட்டறைத் தொழில்களின் ஒன்றிணைப்பாகவும் வளர்கிறது.

பட்டறைத் தொழிலில் பெருவீதத்திலும், பெரும் சக்திப் பிரயோகத்தைக் கொண்டும் நடத்தப்பட வேண்டிய சில சாமானிய ஆரம்ப நிகழ்முறைகளுக்காக இங்குமங்குமாய் யந்திரங்கள் உபயோகப் படலாயின.

கைதொழிற் காலம் திசைகாட்டி, வெடிமருந்து, அச்சிடும் இயந்திரம், இயந்திர கடிகாரம் ஆகிய பெரும் கண்டுபிடிப்புகளை நம்க்கு வழங்கிச் சென்றது.

பல நுணுக்கத் தொழிலாளர்களின் ஒன்றிணைவால் உருவாகும் கூட்டுத்தொழிலாளிதான் பட்டறைத் தொழிற் காலத்துக்குரிய தனிவித இயந்திர சாதனம் ஆவான்.

ஒரு வேலையில் அதிக பலத்தையும், இன்னொன்றில் அதிகத் தேர்ச்சியும், மற்றொன்றில் அதிகக் கவனத்தையும் இந்தக் கூட்டுத் தொழிலாளி செலுத்த வேண்டியிருக்கிறது.

திரும்பத் திரும்ப ஒன்றையே செய்கிற பழக்கம் ஒருபோதும் பிசகாதக் கருவியாக அவரை மாற்றி விடுகிறது. அதே நேரத்தில், இயங்கமைப்பு முழுவதுடனும் அவருக்குள்ள தொடர்பு அவர் இயந்திரத்தின் பாகங்களுக்குரிய முறைப்பாட்டுடன் வேலை செய்யும்படி நிர்பந்திக்கிறது.

ஒரு புறம், தனிப்பட்ட தொழிலாளர்கள் வரம்பிடப்பட்ட ஒரே பணிக்கு உரித்தாக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் அப்பணியில் பிணைக்கப்படுகின்றனர்; மறுபுறம், படிவரிசைக்குரிய பல்வேறு வேலகளும், தொழிலாளர்கள் மத்தியில், அவர்களது இயற்கை ஆற்றல், ஈட்டிய ஆற்றல் இரண்டுக்கும் ஏற்பப் பிரித்தளிக்கப்படுகின்றன.

பட்டறைத் தொழிலானது மனிதனின் ஒட்டுமொத்தமான வேலைத் திறனுக்குப் பதிலாக, ஒரு தரப்பான தனித்திறனை மட்டும் வளர்த்து நிறைவு பெறச் செய்வதோடல்லாமல், வளர்ச்சி என்பதே இல்லாத நிலையையும் ஒரு தனித்திறனாக மாற்றத் தொடங்குகிறது. தர வரிசையோடு கூடவே, தொழிலாளர்களைத் தேர்ச்சி பெற்றோராகவும், தேர்ச்சியற்றோராகவும் பிரிக்கிற சாமனியப் பிரிவினை அடியெடுத்து வைக்கிறது. தேர்ச்சியற்றோருக்கு தொழில் பழகும் செலவு இல்லாமற் போகிறது; தேர்ச்சி பெற்றோருக்கு அவர்களது பணிகள் எளிமையாக்கப்படுவதால் இச்செலவு கைத்திறனாளர்களோடு ஒப்பிடுமிடத்து குறைந்து போகிறது. இரு நேர்வுகளிலுமே உழைப்புச் சக்தியின் மதிப்பு குறைகிறது.    

Thursday, September 12, 2013

பகுதி 4: அத்தியாயம் 13: கூட்டு வேலை

பெரும் எண்ணிக்கையிலான உழைப்பாளிகள் ஒரு முதலாளியின் மேலாண்மையில் ஒரே வகைச் சரக்கை உற்பத்தி செய்யும் பொருட்டு ஒரே நேரத்தில் ஓர் இடத்தில் ஒருங்கே வேலை செய்வது வரலாற்று வழியிலும் தர்க ஆய்வு வழியிலும் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் தொடக்கமாக அமைகிறது.

குறிப்பிட்ட குறைந்தபட்ச எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் ஒன்றாக வேலைக்கு அமர்த்தப்படும் போதெல்லாம் தனி நபர் வேறுபாடுகள் அல்லது, கணிதத்தில் சொல்வது போல் "பிழைகள்" ஒன்றை ஒன்று ஈடு செய்து மறைந்து போகின்றன.

தனிப்பட்ட உற்பத்தியாளர்கள் முதலாளியாக இருந்து பல ஆட்களை வேலைக்கமர்த்தி உற்பத்தி செய்கையில் அவர்களது உழைப்பு உடனே அதன் கூட்டு இயல்பால் சராசரி சமுதாய உழைப்பாகக் கருதத் தக்கதாகிறது. அந்நிலையில்தான் மதிப்பு..உற்பத்தி விதிகள்  அவருக்கு முழுமையாக நிறைவேற்றம் பெறுகின்றன.

பெரிய அளவில் பொதுவில் பயன்படுத்துவதற்காக ஒன்று குவிக்கப்படும் உற்பத்திச் சாதனங்களின் மதிப்பு அச்சாதனங்களின் பெருக்கத்துக்கும், அதிகரித்த பயன்பாட்டுக்கும் ஒப்ப அதே விகிதத்தில் அதிகரிப்பதில்லை. பொதுவில் நுகரப்படும் போது அவை ஒவ்வொரு தனி உற்பத்திப் பண்டத்துக்கும் தமது மதிப்பில் முன்னிலும் சிறிய பகுதியையே தருகின்றன.

தனித்த தொழிலாளர்கள் செலுத்துகிற யாந்திரிகச் சக்திகளின் மொத்தத் தொகை என்பது கனத்த எடையைத் தூக்குவது, திருகுப் பொறியைத் திருப்புவது, தடைக் கல்லை அகற்றுவது போன்ற முழுமையான ஒரே வேலையில் பல கரங்கள் ஒருங்கே ஈடுபடும் போது உருவாகிற சமுதாயச் சக்தியிலிருந்து வேறுபடுகிறது. இத்தகைய நேர்வுகளில் ஒருங்கிணைந்த உழைப்பின் பலனை தனி ஆளின் உழைப்பால் பெறவே முடியாது.

இங்கு நாம் கூட்டு..வேலையின் மூலம் தனி ஆளின் உற்பத்தித் திறன் அதிகமாவதை மட்டும் காணவில்லை. ஒரு புதிய சக்தி, அதாவது வெகு ஜனங்களது கூட்டுச் சக்தி உதித்தெழுவதையும் காண்கிறோம்.

பல சக்திகளை ஒரே சக்தியாக இணைப்பிலிருந்து பிறக்கிற புதிய ஆற்றல் அன்னியில், சமூக ஒட்டுறவே நேசப் போட்டியையும் ஆர்வத் துடிப்பையும் தோற்றுவித்து பெரும்பாலான தொழில்களில் தனிப்பட்ட ஒவ்வொரு தொழிலாளியின் செய்திறனையும் உயர்த்துகிறது.

அரிஸ்டாட்டில் வாதிடுவதுபோல், மனிதன் அரசியல் பிராணியாக இல்லாவிட்டாலும், எப்படியும் சமுதாயப் பிராணியாவான் என்பதே இதற்கு காரணம்.

ஒத்திசைந்து வேலை செய்கிற மனிதர்களின் குழு முன்னும் பின்னும் கரங்களும் கண்களும் கொண்டுள்ளது, ஓரளவுக்கு சர்வ வியாபியாய் உள்ளது என்பதே காரணம். வேலையின் பல்வேறு பகுதிகள் ஒருங்கே முன்னேறுகின்றன.

வேலை சிக்கலானதாக இருப்பின், கூட்டாக வேலை செய்கிற ஆட்களின் தொகையே பல்வேறு வேலைகள் வெவ்வேறு கரங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படுவதற்கும், ஆதலால் அவை ஒருங்கே செய்யப்படுவதற்கும் இடமளிக்கிறது. இதனால் வேலை முழுவதும் பூர்த்தியாவதற்கு அவசியமான நேரம் குறைகிறது.

வேலைக்கு அனுமதிக்கப்படும் நேரம் சிறிதாயிருப்பதை, தீர்மானகரமான தருணத்தில் உற்பத்திக் களத்தில் இறக்கப்படும் உழைப்புத் திரள் பெரிதாயிருப்பது ஈடு செய்து விடுகிறது. சரியான நேரத்துக்குள் பணியை முடிப்பது ஏராளமான வேலை..நாட்களை இணைத்து ஒருங்கே பிரயோகிப்பதைப் பொறுத்ததாகும்; பயனுள்ள விளைவின் அளவு உழைப்பாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்ததாகும்; ஆயினும் இந்த எண்ணிக்கை அதே காலத்தில் அதே அளவு வேலைய செய்வதற்கு அவசியமான தனித்த உழைப்பாளிகளின் எண்ணிக்கையை விட‌   எப்போதுமே சிறியதாகும்.

ஒரு புறம் கூட்டு..வேலை விரிவான இடப்பரப்பில் வேலை நடப்பதற்கு வழி செய்கிறது. மறுபுறம், உற்பத்தியின் அளவுவீதத்தை விரிவுபடுத்துகிற அதே நேரத்தில் ஒப்பளவில் அரங்கம் சுருங்கிவிட அது உதவுகிறது. இந்த அரங்கச் சுருக்கம் உற்பத்தியின் அளவுவீத விரிவாக்கத்திலிருந்து பிறந்து, அதுனுடன் ஒருங்கே நடைபெறுகிறது.

ஒன்றிணைந்த வேலை..நாளின் தனிவித உற்பத்தித் திறன் என்பது எல்லா நிலைமைகளிலும் உழைப்பின் சமுதாய உற்பத்தித் திறனாகும், அல்லது சமுதாய உழைப்பின் உற்பத்தித் திறனாகும். இந்த திறனுக்கு காரணம் கூட்டு..வேலையே. உழைப்பாளி மற்றவர்களுடன் முறையாக கூட்டு வேலை செய்யும் போது  தன் தனித்தன்மையின் தளைகளை அறுத்தெறிந்து விட்டு, தன் இன ராசியின் ஆற்றல்களை வளர்க்கிறார்.

ஏராளமான கூலித் தொழிலாளர்களின் கூட்டு..வேலையின் மூலம், மூலதனத்தின் ஆளுகை என்பது உழைப்பு நிகழ்முறையை நடத்திச் செல்வதற்கே ஓர் அவசிய தேவையாக, உற்பத்தியின் மெய்யான அவசிய தேவையாக வளர்கிறது.

பெருவீதத்தில் ஒன்றிணைந்த உழைப்பனைத்துக்கும் இயக்கி ஆளும் அதிகாரம் ஒன்று அதிகமாகவோ குறைவாகவோ அவசியமாகும். அப்போதுதான் தனித்தனி நடவடிக்கைகளின் இசைவான செயற்பாட்டை சாதிக்க முடியும். ஒன்றிணைந்த உயிரமைப்பின் செயலிலிருந்து ... அதன் தனி அங்கங்களின் செயலிலிருந்து அன்று ... பிறக்கிற பொதுவான பணிகளை ஆற்ற முடியும்.

கூட்டு..வேலை செய்கிற தொழிலாளர்களின் தொகை அதிகரிக்க அதிகரிக்க, மூலதனத்தின் ஆளுகைக்கு அவர்கள் காட்டும் எதிர்ப்பும், அதனுடன் கூடவே இந்த எதிர்ப்பை மூலதனம் எதிர் நிர்ப்பந்தத்தின் மூலம் சமாளிக்க வேண்டிய அவசியமும் அதிகரிக்கின்றன.

கூலித் தொழிலாளர்களின் கூட்டு..வேலை முழுக்க முழுக்க அவர்களை வேலைக்கமர்த்தும் மூலதனத்தாலேயே தோற்றுவிக்கப்படுகிறது.

உற்பத்தி நிகழ்முறையே இரட்டைத் தன்மையதாய் உள்ளது; அதாவது ஒரு புறம் பயன்..மதிப்புகளை உற்பத்தி செய்வதற்கான சமுதாய நிகழ்முறையாகவும், மறு புறம் உபரி..மதிப்பைப் படைப்பதற்கான நிகழ்முறையாகவும் உள்ளது.

இப்போது முதலாளி தனிப்பட்ட தொழிலாளர்களையும் தொழிலாளர் குழுக்களையும் நேரடியாகவும் இடைவிடாமலும் கண்காணிக்கிற வேலையை ஒரு தனி வகைப்பட்ட கூலித் தொழிலாளியிடம் ஒப்படைக்கிறார்.

அரசியல் பொருளாதார அறிஞர் இந்தக் கண்காணிப்பு உழைப்பை திறனிலா உற்பத்தி செலவு என்ற கணக்கில் சேர்க்கிறார்.

ஒருவர் முதலாளியாக இருப்பது தொழில்..தலைவராக இருப்பதால் அன்று; மாறாக, அவர் தொழில்..தலைவராக இருப்பது முதலாளியாக இருப்பதால்தான்.

தொழிலாளி தனது உழைப்புச் சக்தியின் விற்பனைக்காக முதலாளியுடன் பேரம் செய்து முடிக்கும் வரை அவ்வுழைப்புச் சக்தியின் உடைமையாளர் அவரே; அவரிடம் இருப்பதற்கதிகமாக ... அதாவது அவரது தனிப்பட்ட ஒண்டியான உழைப்புச் சக்திக்கு அதிகமாக ... எதையும் அவர் விற்க முடியாது.

இந்தக் கூட்டு..வேலை ஆரம்பிப்பது உழைப்பு நிகழ்முறையோடுதான். ஆனால் அப்போது அவர்கள் தமக்கே சொந்தமானவர்களாய் இல்லாது போய்விடுகின்றனர். அந்த நிகழ்முறையினுள் நுழைந்ததும், அவர்கள் மூலதனத்துடன் இணைந்துவிடுகின்றனர். கூட்டு..வேலையாளர்கள் என்ற விதத்தில், செயல்படும் உயிரமைப்பு ஒன்றின் உறுப்புகள் என்ற விதத்தில், அவர்கள் மூலதனத்தின் நிலவல் வடிவங்களே ஆவர். எனவே கூட்டாக வேலை செய்யும்போது தொழிலாளி உருவாக்கும் உற்பத்தித் திறன் மூலதனத்தின் உற்பத்தித் திறனாகிறது.

ஆசிய முடியரசு ஒன்றில் பயிர்த் தொழிலில் ஈடுபடாத உழைப்பாளர்களிடம் அவர்களது தனிப்பட்ட உடல் முயற்சி அல்லாமல், பணிக்கு உதவக் கூடியது வேறொன்றுமில்லை. ஆனால் எண்ணிக்கையே அவர்களது பலமாகி விடுகிறது. இந்த மக்கள் திரள்களை ஆட்டிப் படைகிற சக்தி அரண்மணைகளையும் ஆலயங்களையும் பிரமிடுகளையும் திரள் திரளாக பெரும் சிலைகளையும் எழுப்பியது. இந்த உழைப்பாளிகளுக்கு உணவளிக்கிற வருவாய்கள் ஒருவரின் அல்லது ஒரு சிலரின் கையில் அடங்கிப் போவதே இத்தகைய பெரும் பணிகளைச் சாத்தியமாக்குகிறது.

புராதன காலத்திலும், மத்திய காலத்திலும், நவீன காலக் குடியேற்ற நாடுகளிலும், இங்குமங்குமாய் கையாளப்படும் பெருவீதக் கூட்டு வேலை ஆதிக்கமும் தொண்டூழியமும் என்ற உறவு முறையை .. பிரதானமாக அடிமைத்தனத்தை ... சார்ந்துள்ளது. இதற்கு மாறாக, முதலாளித்துவக் கூட்டு..வேலையானது மூலதனத்திடம் உழைப்புச் சக்தியை விற்கிற சுதந்திரமான கூலித் தொழிலாளி இருப்பதை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அவசியமாக்குகிறது.

கூட்டு..வேலை என்றுமே முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறைக்குரிய அடிப்படை வடிவமாகத் திகழ்கிறது; ஆயினும் கூட்டு வேலையின் ஆரம்ப வடிவம் முதலாளித்துவ பொருளுற்பத்திக்குரிய ஒரு குறிப்பான வடிவமாக அந்த உற்பத்தி முறையின் வளர்ச்சி பெற்ற வடிவங்களோடு கூடவே தொடர்ந்து நீடிக்கிறது.

Tuesday, September 10, 2013

பகுதி 4: ஒப்பீட்டு உபரி..மதிப்பின் உற்பத்தி. அத்தியாயம் 12: ஒப்பீட்டு உபரி..மதிப்பு என்ற கருத்தமைவு.

உபரி..மதிப்பு வீதமும், வேலை நாளின் கால அளவும், அவசிய வேலை நேரத்திற்கு மேல் தொழிலாளி தொடர்ந்து வேலை செய்யும் நேரத்தின் நீட்டிப்பை பொருத்தது. அவசிய வேலை நேரம் மாறாதிருந்தாலும் மொத்த வேலை நாள் மாறுந்தன்மையது.

வேலை..நாளின் கால அளவும், உழைப்புச் சக்தியின் மதிப்பும் குறிப்பிட்டதாய் இருக்கும் போது உபரி உழைப்பின் கால அளவும் குறிப்பிட்டதாகிறது.

வேலை நாளின் கால அளவு மாறாமல் இருக்கும்போது, உபரி..உழைப்பின் நீட்டிப்பு அவசிய உழைப்பு நேரத்தை குறுக்குவதற்கேற்ப அமையும்.

உழைப்புச் சக்தியின் மதிப்பிலான வீழ்ச்சி உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிக்காமல் சாத்தியமில்லை. உற்பத்திக் கருவியிலோ, வேலை முறையிலோ, அல்லது இரண்டிலுமோ மாற்றம் செய்தாலன்றி இதைச் செய்ய முடியாது. உற்பத்தி முறையும், உழைப்பு நிகழ்முறையும் கூட புரட்சிகரமாக மாற்றப்படவேண்டும். இவ்வழியில் உழைப்புச் சக்தியின் மதிப்பைக் குறையச் செய்யமுடியும், அதன் மறு உற்பத்திக்கு அவசியமான வேலை..நாட் பகுதியை சுருங்கச் செய்ய முடியும்.

வேலை..நாளை நீட்டிப்பதன் மூலம் உற்பத்திச் செய்யப்படும் உபரி..மதிப்பை அறுதி உபரி..மதிப்பு ( absolute surplus..value)  என்றழைக்கிறேன். மறுபுறம், அவசிய..உழைப்பு நேரத்தை குறைப்பதன் மூலமும், வேலை..நாளின் இரு அங்கங்களின் கால அளவைகளும் இதற்கொப்ப மாறுவதன் மூலமும் கிடைக்கிற உபரி..மதிப்பை ஒப்பிட்டு உபரி..மதிப்பு (relative surplus..value)   என்றழைக்கிறேன்.

வாழ்க்கையின் அவசியப் பண்டங்களையோ இந்த அவசியப் பண்டங்களுக்கான உற்பத்திச் சாதனங்களையோ வழங்காத தொழிற் கிளைகளில் உழைப்பின் உற்பத்தித் திறனில் ஏற்படும் அதிகரிப்பால் உழைப்புச் சக்தியின் மதிப்பு பாதிக்கப்படுவதில்லை.

உழைப்பு நேரத்தில் ஏற்படும் மொத்தக் குறைவு என்பது அந்தப் பல்வேறு, தனித் தனித் தொழில்களில் செய்யப்படும் வெவ்வேறு உழைப்பு நேர குறைப்புகள் அனைத்தின் மொத்தமாகும்.

தனியொரு முதலாளி உழைப்பின் உற்பத்தித்  திறனை அதிகமாக்குவதன் மூலம் உழைப்புச் சக்தியின் மதிப்பைக் குறைப்பதும், அந்த அளவுக்கு அவசிய..உழைப்பு நேரத்தைச் சுருக்குவதும் அவரது குறிக்கோளாயிருக்க வேண்டிய கட்டாயமில்லை. ஆனால், முடிவில் இவ்விளைவு ஏற்படுவதற்குப் பங்கு செலுத்துகிறார் என்ற அளவில்தான், அவர் பொதுவான உபரி..மதிப்பு வீதத்தை உயர்த்த உதவுகிறார்.

உண்மை மதிப்பானது ஒவ்வொரு தனிப்பட்ட உருப்படிக்காகவும் உற்பத்தியாளருக்குச் செல்வாகிற உழைப்பு நேரத்தால் அளவிடப்படுவதில்லை; அதன் உற்பத்திக்கு சமுதாய வழியில் தேவைப்படும் உழைப்பு நேரத்தாலேயே அளவிடப்படுகிறது.

உழைப்பின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் அதன் காரணமாக அதிக உற்பத்திக்கு வழி காணவும் செய்கிற ஒரு முதலாளி, ஒரு நாளின் உற்பத்தியை விற்றுத் தீர்க்க வேண்டுமானால், வேண்டலானது முன்பிருந்ததைப் போல் இரட்டிப்பாக வேண்டும். சந்தை இரு மடங்காக விரிவடைந்தாக வேண்டும். மற்றவை சமமாயிருக்க, அவரது சரக்குகள் விலை குறைந்தால்தான் சந்தையை ஆள முடியும். எனவே அவரது சரக்கு ஒவ்வொன்றையும் அவற்றின் தனிப்பட்ட மதிப்புக்கு மேலாக, ஆனால் அவற்றின் சமுதாய மதிப்புக்குக் கீழாக விற்பார். அதிகப்படியான உபரி மதிப்பு அவர் கைக்குப் போய் சேருகிறது. இவ்வாறாக உழைப்பின் உற்பத்தித் திறனை அதிகமாக்கி தன் சரக்குகளுக்கு ஆகும் செலவைக் குறைக்க ஒவ்வொரு தனிப்பட்ட முதலாளியும் உந்தப்படுகிறார்.

புதிய உற்பத்தி முறை எல்லா முதலாளிகளுக்கும் பொதுவானதாகி, குறைந்த செலவாகிய சரக்கின் தனிப்பட்ட மதிப்புக்கும் அதன் சமுதாய மதிப்புக்கும் இடையிலான வேறுபாடு மறைந்ததும், இந்த கூடுதல் உபரி மதிப்பு மறைந்து போகிறது. தனது சரக்குகளை அவற்றின் சமுதாய மதிப்புக்கும் குறைவாக விற்கவேண்டியது போட்டியின் வலுக்கட்டாய விதியாகச் செயல்பட்டு, போட்டியாளர்கள் அனைவரையும் புதிய உற்பத்தி முறையை மேற்கொள்ளுமாறு நிர்பந்திக்கிறது.

சரக்குகளின் மதிப்பு உழைப்பின் உற்பத்தித் திறனுக்கு எதிர் விகிதத்தில் உள்ளது.  உழைப்புச் சக்தியின் மதிப்பும் அவ்வாறே உள்ளது. ஏனெனில் அது சரக்குகளின் மதிப்பைப் பொறுத்தது. மாறாக ஒப்பீட்டு உபரி..மதிப்பு அந்த உற்பத்தித் திறனுக்கு நேர் விகிதத்தில் உள்ளது. உற்பத்தித் திறன் உயர்ந்தால் அது உயர்கிறது; உற்பத்தித் திறன் வீழ்ந்தால் அது வீழ்கிறது.

சரக்குகளை மலிவாக்கி, இப்படி மலிவாக்குவதன் மூலம் தொழிலாளியையே மலிவாக்கும் பொருட்டு உழைப்பின் உற்பத்தித் திறனை உயர்த்த வேண்டுமென்ற அவாவும் இடை விடாத போக்கும் மூலதனத்தின் உள்ளார்ந்த இயல்புகளாகும்.

முதலாளித்துவ பொருள் உற்பத்தியின் வரம்புக்குள் உழைப்பின் உற்பத்தித் திறனது வளர்ச்சி அனைத்துக்கும் குறிக்கோளாய் இருப்பது, தொழிலாளி வேலை..நாளில் தனக்காகவே உழைக்க வேண்டிய பகுதியைக் குறைப்பதும், இப்படி குறைப்பதன் மூலமே, முதலாளிக்கு இலவசமாய் உழைப்பதற்காக அவர் விடுவிக்கப்படும் அந்த இனொரு பகுதியை நீட்டுவதுமே.

Friday, September 6, 2013

பகுதி 3. அத்தியாயம் 11: உபரி..மதிப்பின் வீதமும் திரளும்

உற்பத்தி செய்யப்படும் உபரி..மதிப்பின் திரள் மூன்னீடு செய்யப்படும் மாறும் மூலதனத்தின் அளவை உபரி..மதிப்பின் வீதத்தால் பெருக்கி வரும் தொகைக்குச் சமம்; வேறு விதமாகச் சொன்னால்: அது ஏக காலத்தில் ஒரே முதலாளியால் சுரண்டப்படும் உழைப்புச் சக்திகளின் எண்ணிக்கைக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட உழைப்புச் சக்தியின் மீதான சுரண்டல் கடுமைக்கும் இடையிலான கூட்டு விகிதத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.

உபரி மதிப்பின் திரள்  Sஆகவும், சராசரி நாளில் தனிப்பட்ட தொழிலாளி வழங்குகிற உபரி..மதிப்பு sஆகவும், ஒரு தனிப்பட்ட உழைப்புச் சக்தியை வாங்குவதில் அன்றாடம் முன்னீடு செய்யப்படும் மாறும்..மூலதனம் vஆகவும் மாறும் மூலதனத்தின் மொத்தத் தொகை Vஆகவும், ஒரு சராசரி உழைப்புச் சக்தியின் மதிப்பு Pஆகவும், அதன் மீதான சுரண்டல்..கடுமை a' / a (உபரி..உழைப்பு / அவசிய..உழைப்பு) ஆகவும் வேலையில் ஈடுபடுத்தப்படுகிற தொழிலாளர்களின் எண்ணிக்கை nஆகவும் இருப்பின் பெறப்படுவது: 
S = (s/v) x V ; S = P x (a'/a) x n.

திட்டமான உபரி..மதிப்புத் திரளின் உற்பத்தியில், ஒரு காரணியின் குறைவு மற்றொரு காரணியின் அதிகரிப்பால் ஈடு செய்யப்படலாம். மாறும்..மூலதனம் குறைந்து, அதே போது உபரி..மதிப்பின் வீதம் அதே விகிதத்தில் அதிகரித்தால், உற்பத்தி செய்யப்படும் உபரி..மதிப்பின் திரள் மாறாதுள்ளது.

மாறும் மூலதனத்தின் குறைப்பு, உழைப்புச் சக்தியின் மீதான சுரண்டல்..கடுமை அதற்கேற்ப உயர்வதால் ஈடு செய்யப்படலாம்; அல்லது வேலையில் ஈடுபடுத்துகிற தொழிலாளர்களின் தொகையிலான குறைவு வேலை..நாளை நீட்டிப்பதால் ஈடு செய்யப்படலாம்.

உபரி..மதிப்பு வீதத்தில் ஏற்படும் குறைவைத் தொடர்ந்து, மாறும்..மூலதனத்தின் அளவோ அல்லது வேலையில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கையோ அதே விகிதத்தில் அதிகரித்தால், உற்பத்தி செய்யப்படும் உபரி..மதிப்பின் திரள் மாறாது.

சராசரி வேலை..நாளின் அறுதி வரம்பு (absolute limit)   மாறும் மூலதனத்திலான குறைப்பை உபரி..மதிப்பு வீத உயர்வைக் கொண்டு, அல்லது சுரண்டப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கையிலான குறைவை உழைப்புச் சக்தியின் மீதான சுரண்டல்..கடுமையின் உயர்வைக் கொண்டு ஈடு கட்டுவதற்கு ஓர் அறுதி வரம்பை விதிக்கிறது.

வேலையில் ஈடுபடுத்தப்படுகிற உழைப்புச் சக்தியின் திரள் அல்லது மாறும்..மூலதனத்தின் அளவு அதிகரித்து, ஆனால் அவ்வதிகரிப்பு உபரி..மதிப்பின் வீதத்திலான குறைவின் விகிதத்தில் இல்லாவிட்டால், உற்பத்திச் செய்யப்படும் உபரி..மதிப்பின் திரள் குறைகிறது.

உபரி..மதிப்பின் வீதம் அல்லது உழைப்புச் சக்தியின் மீதான சுரண்டல்..கடுமையும், உழைப்புச் சக்தியின் மதிப்பு அல்லது அவசிய வேலை நேரத்தின் அளவும் குறிப்பிட்டவையாய் இருக்க, மாறும்..மூலதனம் எவ்வளவு அதிகமோ, உற்பத்தி செய்யப்படும் மதிப்பின் திரளும் உபரி..மதிப்பின் திரளும் அவ்வளவு அதிகமாக இருக்கும்.

உபரி..மதிப்பின் வீதமும் உழைப்புச் சக்தியின் மதிப்பும் குறிப்பிட்டதாய் இருக்க, உற்பத்தி செய்யப்படும் உபரி..மதிப்புத் திரள்கள் முன்னீடு செய்யப்படும் மாறும்..மூலதனங்களின் அளவுகளுக்கு நேர் விகிதத்தில் மாறுபடுகின்றன.

ஒரே சமூகப் பொருளுற்பத்தி முறையின் அடிப்படையில், மாறா..மூலதனம், மாறும் மூலதனம் என்ற மூலதனப் பிரிவினை வெவ்வேறு உற்பத்திக் கிளைகளில் வெவ்வேறு விதமாயிருக்கிறது. ஒரே உற்பத்தி கிளைக்குள்ளேயும் கூட, தொழில் நுட்ப நிலைமகளிலும் உற்பத்தி நிகழ் முறைகளின் சமுதாய இணவுகளிலும் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப இந்த உறவு மாறுகிறது.

மாறா..மூலதனத்தின் மதிப்பு உற்பத்திப் பொருளின் மதிப்பில் அப்படியே திரும்பவும் இடம் பெறுகிறது. புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட மதிப்பில், புதிதாகப் படைக்கப்பட்ட மதிப்பு..உற்பத்தியில் அது சேருவதில்லை.

வெவ்வேறு மூலதனங்களால் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு, உபரி..மதிப்பு இவற்றின் திரள்கள் ... உழைப்புச் சக்தியின் மதிப்பு குறிப்பிட்டதாகவும், அதன் மீதான சுரண்டல்..கடுமை சமமாகவும் இருக்க ... இந்த மூலதனங்களது மாறும் அங்கங்களின் அளவுகளுக்கு, அதாவது உயிருள்ள உழைப்புச் சக்தியாக மாற்றப்படுகிற அங்கங்களின் அளவுகளுக்கு நேர் விகிதத்தில் மாறுபடுகின்றன.

தோற்றத்தை அடிப்படையாகக் கொண்ட அனுபவம் அனைத்துடனும் இவ்விதி தெளிவாகவே முரண்படுகிறது.

கொச்சைப் பொருளாதாரம் எப்போதுமே "உண்மையில் எதையும் கற்றறிவதில்லை;" தோற்றங்களுக்குக் காரணமாய் அமைந்து அவற்றை ஆளுகிற விதியை விட்டு விட்டு, எங்கும் போலவே இங்கும் தோற்றங்களையே கட்டித் தழுவிக் கொள்கிறது.

மாறும் மூலதனத்தின் குறைந்தபட்ச அளவென்பது உபரி மதிப்பின் உற்பத்திக்காக ஆண்டு பூராவிலும் நாள் முழுவதும் ஈடுபடுத்தப்படும் தனியொரு உழைப்புச் சக்தியின் அடக்க விலையாகும்.

செல்வப் பெருக்கம் என்பது முதலாளித்துவப் பொருள் உற்பத்தியின் உள்ளார்ந்த அவசியமாகும்.

முதலாளி தான் ஒரு முதலாளியாக, அதாவது மூலதனத்தின் ஆளுருவமாகச் செயல்படுகிற நேரம் முழுவதையும், பிறர் உழைப்பைத் தனதாக்கவும் எனவே அதன் மீது ஆதிக்கம் செலுத்தவும், இந்த உழைப்பின் பலன்களை விற்பதற்கும் செலவிட இயல வேண்டுமென்பது முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் அவசியமாகிறது.

உற்பத்திக்காக முன்னீடு செய்யப்படும் குறைந்தபட்ச தொகை மத்திய காலத்தின் அதிகபட்சத்தைத் தாண்டி வெகுவாக அதிகரித்துவிடும்போதுதான் பணம் அல்லது சரக்குகளின் உடமையாளர் உள்ளபடியே முதலாளியாக மாறுகிறார். ஒரு குறிப்பிட்ட நிலைக்கப்பால் வெறும் அளவு வேறுபாடுகள் பண்பு வேறுபாடுகளாக மாறுகின்றன என்று ஹெகல் கண்டுபிடித்த விதி பிழையற்றதென்பது இயற்கை விஞ்ஞானத்தைப் போலவே இங்கும் மெய்ப்பித்துக் காட்டப்படுகிறது.

சாமானிய உழைப்பு நிகழ்முறை என்ற கோணத்திலிருந்து உற்பத்தி நிகழ்முறையை நோக்கினால், உற்பத்திச் சாதனங்களுடன் தொழிலாளி உறவு கொண்டிருப்பது, உற்பத்திச் செயற்பாட்டுக்கு வகை செய்யும் சாதனமும் பொருளும் ஆகும் என்பதால்தானே தவிர அவை மூலதனம் என்கிற பண்புடைத்திருப்பதால் அன்று. ஆனால் உபரி..மதிப்பை படைக்கும் நிகழ்முறையென்ற கோணத்திலிருந்து நாம் ஆராயத் தொடங்கியதுமே உற்பத்திச் சாதனங்கள் பிறர் உழைப்பை உறிஞ்சும் சாதனங்களாக மாறிப் போகின்றன.