Saturday, December 21, 2013

பகுதி 7 அத்தியாயம் 25 முதலாளித்துவ திரட்டலின் பொது விதி பிரிவு 4 மற்றும் 5

ஒப்பீட்டு உபரி-மக்கள்தொகையின் பல்வேறு வடிவங்கள். முதலாளித்துவத் திரட்டலின் பொது விதி

ஒப்பீட்டு உபரி-மக்கள்திரள் சாத்தியமான சகல வடிவங்களிலும் தலைகாட்டுகிறது. பகுதி நேரம் மட்டுமே வேலைபெறும் அல்லது எந்நேரமும் வேலையற்றவராய் இருக்கும் ஒவ்வொரு தொழிலாளியும் இத்திரளைச் சேர்ந்தவரே.

உபரி-மக்கள்தொகை மூன்று விதமான வடிவங்களில் --- வந்து போவது, உள்ளுறையானது, தேங்கிநிற்பது --- தலைகாட்டுகிறது.

தொழிலாளர் தொகையில் இயற்கையாக ஏற்படும் அதிகரிப்பு மூலதனத் திரட்டலின் தேவைகளை நிறைவு செய்யப் போதுமானதாய் இல்லை என்றாலும், எச்சமயத்திலும் அத்தேவைகளைக் காட்டிலும் அதிகமாய் இருப்பது மூலதன இயக்கத்துக்குரிய ஓர் உள்ளார்ந்த முரண்பாடு.

முதலாளித்துவப் பொருளுற்பத்தி வேளாண்மைத் துறையில் வியாபிக்கையில், எந்த அளவு வியாபிக்கிறதோ அதற்கேற்ப விவசாயத் தொழிலாள மக்களுக்கான வேண்டல் அறுதியாகக் குறைகிறது; வேளாண்மை அல்லாத தொழிலகளில் நடைபெறுவது போல ஆட்களின் இந்த வெளியேற்றத்துக்கு ஈடாக இன்னும் கூடுதலான அளவில் ஆட்கள் உள்ளிழுக்கப்படாமலே வேளாண்மைத் துறையில் திரட்டல் மேலும் மேலும் நடந்தேறுகிறது.

ஒப்பீட்டு உபரி..மக்கள்தொகைக்கு ஆதாரமான இந்த ஊற்று இவ்வாறு எந்நேரமும் சுரந்து கொண்டே இருக்கிறது. ஆனால், நகரங்கள் நோக்கிய இடையறாத இந்நீரோட்டத்துக்கு கிராமப்புறத்திலேயே உட்கிடையான உபரி-மக்கள்தொகை எந்நேரமும் இருத்தல் அவசியமாகிறது. விவசாயி பெறும் கூலி எப்போதுமே கீழ்மட்டத்துக்கு தாழ்ந்து விடுகிறது. 

ஒப்பீட்டு உபரி-மக்கள்தொகையின் மூன்றாவது வகையான தேங்கி நிற்கும் வகை வேலையிலிருக்கும் உழைப்புப் பட்டாளத்தின் பகுதியாக இருந்த போதிலும், முறையின்றி அரிதாகவே வேலை பெறுகிறது. இவ்வாறு அது, மூலதனம் வேண்டும் போது மட்டும் பயன்படுத்திக் கொள்வதற்கான உழைப்புச் சக்தியின் வற்றாத ஏரி ஆகிறது. 

உண்மையில், பிறப்பு-இறப்பு எண்ணிக்கை மட்டுமல்லாமல் குடும்பங்களின் அறுதி அளவும் கூட கூலி மட்டத்தோடு எதிர் விகித உறவு கொண்டுள்ளது; எனவே தொழிலாளர்களின் வெவ்வேறு வகையினர் பயன்படுத்தும் வாழ்வுச் சாதனங்களின் அளவோடும் எதிர்விகித உறவு கொண்டுள்ளது.

ஒப்பீட்டு உபரி-மக்கள்தொகையின் அடிமட்டப் படிவ முடிவில் வக்கற்ற நிலையினுள் ஆழ்ந்து விடுகிறது. சமுதாயத்தின் இந்த அடுக்கை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலாவது: வேலை செய்யக் கூடியவர்கள். இரண்டாவது: அனாதைக் குழைந்தைகளும், வக்கற்ற குழந்தைகளும். மூன்றாவது: நம்பிக்கையிழந்து நலிவுற்றோர்.

ஒப்பீட்டு உபரி-மக்கள் திரள் தோன்றுகையில் வக்கற்ற நிலையும் அதோடு சேர்ந்து தோன்றுகிறது. பின்னதன் அவசியம் முன்னதன் அவசியத்தில் அடங்குகிறது.

முதலாளித்துவ பொருளுற்பத்திக்குத் தேவையான திறனிலாச் செலவுகளில் இதுவும் ஒன்றாகும். ஆனால் மூலதனம் இச்செலவுகளில் பெரும்பகுதி தன் தலையில் விழாமல் தொழிலாளி வர்க்கத்தின் தலையிலும் நடுத்தர வர்க்கக் கீழ்த்தட்டின் தலையிலும் விழும் படி பார்த்துக் கொள்கிறது.

செலவத்தின் செயல்திறன் அதிகமாவதைத் தொடர்ந்து தொழில் துறை சேமப் பட்டாளத்தின் ஒப்பீட்டுப் பருமனும் அதிகமாகிறது.

தொழிலாளி வர்க்கத்தின் பஞ்சைப் பராரிப் பிரிவுகளும் தொழில் துறை சேமப்பட்டாளமும் எவ்வளவுக்கு எவ்வளவு விரிவடைகின்றனவோ, அதிகாரபூர்வமாக வக்கற்றோராய் ஏற்கப்படுவோர் தொகையும் அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாகிறது.

சமுதாய உழைப்பின் உற்பத்தித் திறன் ஓங்குவதன் பயனாய், மேலும் மேலும் குறைந்த மனித சக்தியைக் கொண்டு மேலும் மேலும் கூடுதலான உற்பத்திச் சாதனங்களை இயங்க வைக்கும் விதியானது முதலாளித்துவச் சமுதாயத்தில் --- தொழிலாளி உற்பத்திச் சாதனங்களை வேலை வாங்குவதற்கு பதில் உற்பத்திச் சாதனங்கள் தொழிலாளியை வேலை வாங்கும் இச்சமுதாயத்தில் --- தலைகீழ் மாற்றமடைந்து, உழைப்பின் உற்பத்தித் திறன் எவ்வளவுக்கு எவ்வளவு உயர்கிறதோ, வேலை வாய்ப்புச் சாதனங்கள் மீது தொழிலாளர்களின் நெருக்குதல் அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாகிறது.

உற்பத்திச் சாதனங்களும் உழைப்பின் உற்பத்தித் திறனும் உற்பத்தித் திறனுள்ள மக்கள் தொகையைக் காட்டிலும் வேகமாக அதிகரிக்கின்றன என்ற உண்மை முதலாளித்துவ சமுதாயத்தில் தலைகீழ் மாற்றமடைந்து, உழைப்பாளி மக்கள்தொகையானது, அதன் அதிகரிப்பை மூலதனம் தன் தற்பெருக்கத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முடிவதைக் காட்டிலும் எப்போதுமே துரிதமாய் அதிகரிக்கிறது.

மூலதனத் திரட்டல் எந்த அளவுக்கு நடைபெறுகிறதோ, அந்த அளவுக்கு தொழிலாளியின் கதி --- அவரது ஊதியம் உயர்வானதென்றாலும் சரி, தாழ்வானதென்றாலும் சரி --- மேலும் மோசமடைந்தே தீரும்.

செல்வமெல்லாம் ஒரு முனையில் திரள, எதிர் முனையில், அதாவது எந்த வர்கத்தின் உற்பத்திப் பொருள் மூலதனமாக வடிவெடுக்கிறதோ அந்த வர்க்கத்தின் முனையில், துன்பதுயரமும், ஓயாமற் பாடுபடுவதன் வேதனையும் அடிமை இயல்பும் அறியாமையும் மிருகத்தனமும் ஒழுக்கச் சீர்கேடும் திரளக் காண்கிறோம்.  

(பிரிவு 5 முழுவதும் முதலாளித்துவத் திரட்டலின் பொது விதிக்கான சில எடுத்துக்காட்டுகள்  தரப்பட்டுள்ளது.)

Thursday, December 19, 2013

பகுதி 7 அத்தியாயம் 25 முதலாளித்துவ திரட்டலின் பொது விதி பிரிவு 3

ஒப்பீட்டு உபரி-மக்கள் தொகை அல்லது தொழில் துறை சேமப் பட்டாளம் மேன்மேலும் அதிகமாதல்

முதலாளித்துவ முறையிலான பொருளுற்பத்தியும், அதோடு கூடவே உழைப்பின் உற்பத்தித் திறனில் ஏற்படும் வளர்ச்சியும், மூலதனத்தின் அங்கக இயைபில் அதனால் உண்டாகும் மாற்றமும் மூலதனத் திரட்டலின் முன்னேற்றத்துக்கு அல்லது சமுதாய செல்வத்தின் வளர்ச்சிக்கு இணையான வேகத்தில் மட்டுமே நடைபெறுவதில்லை. இவையெல்லாம் இன்னும் கூட மிக அதிக வேகத்தில் நடைபெறுகின்றன. ஏனென்றால், மொத்த சமுதாய மூலதனத்தின் அறுதிப் பெருக்கமாகிய வெறும் திரட்டலோடு கூடவே அந்த மொத்தத்தில் உள்ளடங்கிய தனித்தனி மூலதனங்களின் மையப்பாடும் நடந்தேறுகிறது. மேலும் ஏனென்றால் கூடுதல் மூலதனத்தின் தொழில் நுட்ப இயைபில் மாற்றம் ஏற்படுகையில் ஆரம்ப மூலதனத்தின் தொழில் நுட்ப இயைபிலும் இதையொத்த மாற்றம் ஏற்படுகிறது. எனவே, மூலதனத் திரட்டல் முன்னேறிச் செல்லும்போது, மாறும்-மூலதனத்துடன் மாறா-மூலதனத்திற்குள்ள விகிதம் மாறுகிறது.

மாறாப் பகுதியுடன் ஒப்பிடுமிடத்து மாறும் பகுதி வளர்வேகத்தில் குறைந்து செல்கிறது. மூலதனத்தின் மாறும் பகுதியில் வளர்வேகத்தில் ஏற்படும் இந்த ஒப்பீட்டுக் குறைவு --- மொத்த மூலதனத்தின் வளர்வேக அதிகரிப்புடன் கூடவே ஏற்பட்டு இந்த அதிகரிப்பைக் காட்டிலும் எப்போதுமே துரிதமாய் நிகழும் இக்குறைவு --- எதிர் முனையில் தலை கீழ் வடிவம் பெறுகிறது; அதாவது உழைக்கும் மக்கள் தொகையில் ஏற்படும் அறுதி அதிகரிப்பாக, மாறும்-மூலதனம் அல்லது வேலை வாய்ப்புச் சாதனங்களின் அதிகரிப்பைக் காட்டிலும் எப்போதும் துரிதமாய் ஏற்படும் அதிகரிப்பாகத் தோற்றமளிக்கிறது. 

உண்மையில் முதலாளித்துவத் திரட்டல்தான் ஒப்பளவில் தேவைக்கதிகமான உழைப்பாளி மக்கள் தொகையை --- அதாவது மூலதனத் தற்பெருக்கத்தின் சராசரித் தேவைகளுக்குப் போதுமானதை விடவும் அதிகமானது என்பதால் உபரி..மக்கள்தொகை எனப்படுவதை --- ஒய்வு ஒழிச்சலின்றி, அதன் ஆற்றலுக்கும் அளவுக்குமான நேர் விகிதத்தில் உண்டாக்குகிறது.

எல்லாத் துறைகளிலுமே மூலதனத்தின் மாறும் பகுதி அதிகரிப்பதும், ஆகவே அதனால் வேலை பெறும் தொழிலாளர்களின் தொகை அதிகமாவதும் கொந்தளிப்பான தொழில்..வாணிப ஏற்ற இறக்கங்களோடும் தாற்காலிகமாய் உண்டாகிற உபரி-மக்கள்தொகையோடும் எப்போதும் சேர்ந்துதான் ஏற்படுகின்றன.

மூலதனம் கூடுதலான தொழிலாளர்களை ஈர்ப்பதுடனாகவே கூடுதலான தொழிலாளர்களை வெளியே விரட்டும் நிகழ்வின் வீச்சும் மேன்மேலும் விரிவடைகிறது.

உழைக்கும் மக்கள் தாம் படைக்கும் மூலதனத்தின்  திரட்டலை உண்டாக்குவதோடு கூட. தாமே ஒப்பளவில் தேவைக்கதிகமானோராய் ஆக்கப்படுவதற்கான, ஒப்பீட்டு உபரி..மக்கள்தொகையாக மாற்றப்படுவதற்கான சாதனங்களையும் படைக்கிறார்கள்; அதோடு எப்போதுமே மேன்மேலும் அதிகமாகிச் செல்லும் அளவில் இதனைச் செய்கிறார்கள். இது முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறைக்கே உரித்தான மக்கள்தொகை விதியாகும். 

மூலதனத் திரட்டலின் அல்லது முதலாளித்துவ அடிப்படையிலான செல்வப் பெருக்கத்தின் அவசிய விளைவாய் இருக்கும் உபரியான உழைக்கும் மக்கள் தொகை, மறு புறத்தில் முதலாளித்துவ திரட்டலின் நெம்புகோலாகிறது; அது மட்டுமன்று, முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை நிலவிடத் தேவையான நிலைமையும் ஆகிறது. இந்த உபரியான உழைக்கும் மக்கள், மூலதனமே அதன் சொந்தச் செலவில் வளர்த்து ஆளாக்கியது போல் முற்றிலும் அதன் உடைமையாகி, வேண்டும் போது பயன்படுத்திக் கொள்ளத் தயார் நிலையில் உள்ள தொழில் துறை சேமப் பட்டாளம் (Industrial Reserve Army) ஆகி விடுகிறார்கள்.

நவீனத் தொழில் துறைக்கே உரித்தான பாதையாகிய சராசரி முனைப்பு, அதிமும்முர உற்பத்தி, நெருக்கடியும் தேக்கமும் ஆகிய கட்டங்கள் அடங்கிய பத்தாண்டு சகடமானது (இடையிடையே சிறுசிறு அலைவுகளைக் கொண்டது) தொழில் துறை சேமப் பட்டாளம் அல்லது உபரி-மக்கள்தொகை இடையறாது உண்டாவதிலும், மறுபடியும் உண்டாவதிலும் ஆதாரப்பட்டுள்ளது. 

மக்கள் தொகை அறுதியாக உயர்ந்தாலும் உயரா விட்டாலும் உழைப்பாளர் தொகை உயர வேண்டும். தொழிலாளர்களில் ஒரு பகுதியை ஓயாமல் "விடுவிக்கும்" சாமானிய நிகழ்முறையே உழைப்பாளர் தொகையை இவ்விதம் உயரச் செய்கிறது.

நவீனத் தொழில்துறையின் இயக்கப் போக்கு முழுவதுமே உழைக்கும் மக்களில் ஒரு பகுதியினரை வேலையில்லாதவர்களாக அல்லது பகுதி நேரத்துக்கு மேல் வேலையில்லாதவர்களாக ஓயாமல் மாற்றுவதில் ஆதாரப்பட்டுள்ளது.   

ஒரு புறத்தில், மூலதனத் திரட்டல் முன்னேறிச் செல்கையில், முன்னிலும் அதிகமான மாறும்-மூலதனம் முன்னிலும் அதிகமான தொழிலாளர்களை அமர்த்தாமலே முன்னிலும் அதிகமான உழைப்பைக் கறக்கிறது; மறு புறத்தில், ஒரே பருமனுள்ள மாறும்-மூலதனம் ஒரே அளவு உழைப்புச் சக்தியைக் கொண்டு முன்னிலும் அதிகமான உழைப்பைக் கறக்கிறது; இறுதியாக உயர்தர உழைப்புச் சக்திகளை அகற்றி, கூடுதலான தொகையில் மட்டரக உழைப்புச் சக்திகளை செயலில் இறக்குகிறது.

ஆகவே, ஒப்பீட்டு உபரி-மக்கள்தொகையின் (relative surplus population) உருவாக்கம் அல்லது தொழிலாளர்களின் வெளியேற்றம் என்பது, மூலதனத் திரட்டலின் முன்னேற்றத்துடன் சேர்ந்து வருவதும், அம்முன்னேற்றத்தால் முடுக்கி விடப்படுவதுமான பொருளுற்பத்தி நிகழ்முறையின் தொழில் நுட்பப் புரட்சியை விடத் துரிதமாக நடக்கிறது; இப்புரட்சிக்கிணையாய் மூலதனத்தின் மாறாப் பகுதியோடு ஒப்பிடுமிடத்து மாறும் பகுதி குறைந்து செல்வதை விடவும் துரிதமாக நடக்கிறது.     

தொழிலாளி வர்க்கத்தில் வேலை பெற்ற பகுதியின் மிகையுழைப்பு சேமப் பட்டாள அணிகளைப் பெருக்குகிறது. அதே போது சேமப் பட்டாளத்தின் போட்டியானது வேலை பெற்றோரை முன்னிலும் அதிகமாய் நிர்பந்தித்து, மிகையுழைப்புக்கு சம்மதிக்குமாறும், மூலதனத்தின் சொல்லுக்கு அடங்கி நடக்குமாறும் கட்டாயப்படுத்தப்படுகிறது. தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதி மிகையுழைப்புக்கு ஆட்படுவதால் மறு பகுதி வேலையின்றி சும்மாயிருக்கும்படி நிர்பந்திக்கப்படுகிறது. நேர்மாறாக, பின் சொன்ன நிலைமையால் முன்சொன்ன நிலைமையும் ஏற்படுகிறது.

பொதுவாக கூலியின் அலைவுகளை ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து, பிரத்தியேகமாய் தொழில் துறை சேமப் பட்டாளத்தின் பெருக்கத்தாலும் குறுக்கத்தாலுமே அவை இயக்கப்படுகின்றன‌

இந்தப் பெருக்கமும் குறுக்கமும் செயல்படும் பட்டாளமாகவும் சேமப் பட்டாளமாகவும் தொழிலாளி வர்க்கம் பிரிந்துள்ள மாறுபடும் விகிதங்களாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன.

இந்நிலையில், மூலதனத்தின் செயல் மக்கள்தொகையில் ஏற்படும் அறுதி மாற்றத்தைப் பொறுத்ததெனப் பசப்புகிற விதி அதியற்புத விதிதான்.

தொழிலாளர்கள் எவ்வளவு அதிகமாய் வேலை செய்கிறார்களோ, பிறருக்காக எவ்வளவு அதிகமாய் செல்வத்தை உற்பத்தி செய்கிறார்களோ, அவர்களது உற்பத்தித் திறன் எவ்வளவு அதிகரிக்கிறதோ, மூலதனத்தின் தற்பெருக்கச் சாதனம் என்ற அவர்களின் பணி எப்படி அதே அளவுக்கு அவர்களுக்கு மேன்மேலும் ஆபத்து விளைவிப்பதாகி விடுகிறது என்ற இரகசியத்தை அவர்கள் புரிந்து கொள்ளத் தலைப்படுகிறார்கள்; முதலாளித்துவ பொருளுற்பத்தியின் இந்த இயற்கை விகிதங்கள் வர்க்கத்தின் மீது ஏற்படுத்டும் நாச விளைவுகளைப் போக்கிட அல்லது தணித்திட வேலைபெற்றோருக்கும் வேலையற்றறோருக்குமிடையில் முறையான ஒத்துழைப்பை ஏற்படுத்தத் தொழிற் சங்கங்கள் மூலமும் பிறவற்றின் மூலமும் முயற்சி எடுக்கிறார்கள்.

Thursday, December 12, 2013

பகுதி 7 அத்தியாயம் 25 முதலாளித்துவ திரட்டலின் பொது விதி பிரிவு 2

மூலதனத் திரட்டலோடும் அதோடு சேர்ந்து நடைபெறும் மூலதனக் குவிப்போடும் கூடவே மூலதனத்தின் மாறும் பகுதி ஒப்பளவில் குறைந்தும் செல்லுதல்

முதலாளித்துவ அமைப்புக்கான பொது அடிப்படை இருக்குமாயின், மூலதனத் திரட்டலின் போது, சமுதாய உழைப்பினது உற்பத்தித் திறனின் வளர்ச்சி அத்திரட்டலுக்கு மிகவும் சக்திவாய்ந்த உந்துகோல் ஆகி விடும் படியான ஒரு நிலை வருகிறது.

எந்தவொரு சமுதாயத்திலும் உழைப்பினது உற்பத்தித் திறனின் படித்தரமானது, ஓர் உழைப்பாளர் குறிப்பிட்ட கால அளவில் உழைப்புச் சக்தியை ஒரே அளவு விறுவிறுப்புடன் பிரயோகித்து ஒப்பளவில் எவ்வளவு உழைப்புச் சாதனங்களை உற்பத்திப் பொருட்களாக மாற்றுகிறார் என்பதன் வாயிலாகத் தெரிவிக்கப்படுகிறது.

உற்பத்திச் சாதனங்களில் சிலவற்றின் அதிகரிப்பு உற்பத்தித் திறன் அதிகரிப்பதன் விளைவாகும்; வேறு சிலவற்றின் அதிகரிப்பு அவ்வுற்பத்தித் திறன் அதிகரிப்பதற்கு தேவையான நிலைமையாகும்.

உழைப்பின் உற்பத்தித் திறனில் ஏற்படும் உயர்வு உழைப்பால் இயக்கப்படும் உற்பத்திச் சாதனங்களின் திரளுடன் ஒப்பிடுகையில் உழைப்பின் திரளில் ஏற்படும் குறைவாக, அல்லது உழைப்பு நிகழ்முறையின் இலக்குப் பொருளோடு ஒப்பிடுகையில் காரணப் பொருளில் ஏற்படும் குறைவாகக் காட்சியளிக்கிறது.

மூலதனத்தின் தொழில் நுட்ப இயைபில் ஏற்படும் இந்த மாற்றம், உற்பத்திச் சாதனங்களை உயிர்பெறச் செய்கிற உழைப்புச் சக்தியின் திரளோடு ஒப்பிடுகையில் அச்சாதனங்களின் திரளில் ஏற்படும் இந்தப் பெருக்கம் மூலதனத்தின் மதிப்பு..இயைபில் மாறும் பகுதி குறைந்து மாறாப் பகுதியில் ஏற்படும் அதிகரிப்பாகப் பிரதிபலிக்கிறது.

சரக்கின் விலையில் உற்பத்திச் சாதனங்களின் அல்லது நுகரப்பட்ட மூலதனத்தின் மாறாப் பகுதியின் மதிப்பை மட்டும் குறிக்கிற கூறினது ஒப்பீட்டுப் பருமன், மூலதனத் திரட்டலின் வளர்ச்சிக்கு நேர் விகிதம் கொண்டுள்ளது; உழைப்புக்குத் தரப்படும் ஊதியத்தை (மூலதனத்தின் மாறும் பகுதியை) குறிக்கும் விலைக் கூறினது ஒப்பீட்டுப் பருமன் மூலதனத் திரட்டலின் வளர்ச்சிக்கு எதிர் விகிதம் கொண்டுள்ளது.

மூலதனத்தின் மாறாப் பகுதியோடு ஒப்பிடுகையில் மாறும் பகுதியில் ஏற்படும் இந்த குறைவு, அதாவது மூலதனத்தின் மதிப்பு-இயைபிலான மாற்றம் அதன் பொருட் கூறுகளின் இயைபிலான மாற்றத்தை தோராயமாகவே காட்டுகிறது. 

மாறா-மூலதனத்துக்கும் மாறும்-மூலதனத்துக்கும் இடையிலான வேறுபாட்டின் அதிகரிப்பு, மாறா-மூலதனம் மாற்றப்பட்டு வரும் உற்பத்திச் சாதனங்களின் திரளுக்கும் மாறும்-மூலதனம் மாற்றப்பட்டு வறும் உழைப்புச் சக்தியின் திரளுக்கும் இடையிலான வேறுபாட்டின் அதிகரிப்பை விட மிகக் குறைவு.

சரக்கு உற்பத்தி அடிப்படையாய் இருக்கும் போது, பெருவீதப் பொருளுற்பத்தி முதலாளித்துவ வடிவமுடையதாகவே இருக்க முடியும். எனவே தனித் தனியான சரக்கு உற்பத்தியாளர்களின் கையில் மூலதனம் ஓரளவு திரட்டப்படுவது முதலாளித்துவ முறையிலமைந்த பொருளுற்பத்திக்கு இன்றியமையாத் தேவையாகும். ஆகவே கைத்தொழிலிலிருந்து முதலாளித்துவத் தொழில் துறைக்கு மாறிச் செல்லும் காலத்தில் இது நிகழ்வதாக நாம் அனுமானித்துக் கொள்ள வேண்டியிருந்தது. இதனை ஆதித் திரட்டல் (primitivi accumulation) எனலாம். ஏனென்றால் இத்திரட்டல் முதலாளித்துவ பொருளுற்பத்தியின் வரலாற்று விளைவாக இருப்பதற்கு பதில் அப்பொருளுற்பத்தியின் வரலாற்று அடிப்படையாக இருக்கிறது. 

உழைப்பின் உற்பத்தித் திறனை உயர்த்துவதற்கு உருவாக்கப்படும் எல்லா வழிமுறைகளும் அதே போது உபரி-மதிப்பு அல்லது உபரி-உற்பத்திப் பணடத்தின் உற்பத்தியை அதிகமாக்குவதற்கான வழிமுறைகளும் ஆகும். இந்த உபரி-மதிப்பு அல்லது உபரி-உற்பத்திப் பண்டம்தான் மூலதனத் திரட்டலுக்கு ஆதாரமாகும். ஆகவே, இவ்வழிமுறைகள் மூலதனம் மூலதனத்தை உற்பத்திச் செய்வதற்கான, அதாவது மூலதனத் திரட்டலை முடுக்கிவிடுவதற்கான வழிமுறைகளும் ஆகும்.

இதுவே விரிதிற உற்பத்திக்கும், அதனுடன் கூடவே உழைப்பின் உற்பத்தித் திறனை உயர்த்தும் வழிமுறைகளுக்கும், உபரிமதிப்பின் உற்பத்தியை முடுக்கி விடுவதற்கும் அடிப்படை ஆகிறது.

மூலதனத் திரட்டலும் முதலாளித்துவ முறையிலமைந்த‌ பொருளுற்பத்தியும் --- ஒன்றுக்கொன்று அளித்துக் கொள்ளும் உந்துதல்களின் கூட்டு விகிதத்தில் --- மூலதனத்தின் தொழில் நுட்ப இயைபில் ஏற்படுத்தும் மாற்றம் மூலதனத்தின் மாறாப் பகுதியுடன் ஒப்பிடுகையில் மாறும் பகுதியை மேலும் மேலும் சிறிதாக்கிச் செல்லும் மாற்றமாகும்.

தனிப்பட்ட ஒவ்வொரு மூலதனமும் பெரிதாகவோ சிறிதாகவோ அமைந்த உற்பத்திச் சாதனக் குவிப்பும் அதற்கிசைவாய் பெரிதாகவோ சிறிதாகவோ அமைந்த உழைப்புப் பட்டாளத்தின் (labour-army) மீதான ஆதிபத்தியமும் ஆகும்.

சமுதாய மூலதனத்தின் வளர்ச்சி தனித்தனியான பல மூலதனங்களின் வளர்ச்சியின் வாயிலாய் ஏற்படுகிறது. தனித்தனி மூலதனங்கள் அதிகரிக்கின்றன; உற்பத்திச் சாதனக் குவிப்பும் அதிகரிக்கிறது; மற்றெல்லா நிலைமைகளும் மாறாதிருக்க, இந்த அதிகரிப்பானது அந்தத் தனித்தனி மூலதனங்கள் மொத்த சமுதாய மூலதனத்தின் ஈவுப் பகுதிகளாய் அமையும் அதே விகிதாசாரத்தில் அமைகிறது.

மற்றவை மாறாதிருக்க, சமுதாயத்தின் பொருளுற்பத்திச் சாதனங்கள் தனிப்பட்ட முதலாளிகளின் கையில் மேலும் மேலும் குவிந்து செல்வதற்கு சமுதாய செல்வப் பெருக்கத்தின் அளவு வரம்பிடுகிறது.

குறிப்பிட்ட ஒவ்வொரு உற்பத்தித் துறையிலும் இடம் பெற்றுள்ள சமுதாய மூலதனப் பகுதி எதிரும் புதிருமாய் நின்று போட்டியிடும் சுயேச்சையான சரக்கு உற்பத்தியாளர்களாகிய பல முதலாளிகளுடையே பிரிந்திருக்கிறது. ஆகவே மூலதனத் திரட்டலும் அதன் உடநிகழ்வான மூலதனக் குவிப்பும் (concentration) திட்டுதிட்டாய்ச் சிதறுண்டு நிகழ்வது மட்டுமல்லாமல், செயல்படும் மூலதனம் ஒவ்வொன்றின் பெருக்கமும் புதிய மூலதனங்கள் உருவாவதாலும் பழைய மூலதனங்கள் பிளவுண்டு பிரிவதாலும் தடைபடுகிறது. ஆகவே, மூலதனத் திரட்டலானது ஒரு புறத்தில் உற்பத்திச் சாதனங்களும் உழைப்பின் மீதான ஆதிபத்தியமும் மேன்மேலும் அதிகமாய்க் குவிவதாகவும், மறுபுறத்தில் தனித்தனியான பல மூலதனங்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகியோடுவதாகவும் அமைகிறது.

சமுதாயத்தின் மொத்த மூலதனம் தனித்தனியான பல மூலதனங்களாக இப்படி பிளவுண்டு பிரிவதற்கு, அதாவது அதன் பின்னப் பகுதிகள் ஒன்றிலிருந்து ஒன்று விலகி ஓடுவதற்கு எதிர் வினையாக அவை ஒன்றையொன்று கவர்ந்து விழுங்கும் நிகழ்வு அமைகிறது. இந்நிகழ்வை உற்பத்திச் சாதனங்கள், உழைப்பின் மீதான ஆதிபத்தியம் ஆகியவற்றின் நேரடி குவிப்பாக, திரட்டலே தவிர வேறில்லை என்னும் படியான இந்தக் குவிப்பாக கொள்ளலாகாது. இது ஏற்கனவே உருவான மூலதனங்களின் குவிப்பாகும்; தனித்தனியாக செயல்படும் அவற்றினது சுயேச்சையின் அழிவாகும்; முதலாளியை முதலாளியே விழுங்கிடும் உடைமைப் பறிப்பு (expropriation) ஆகும். மிகப் பலவான சிறு சிறு மூலதனங்கள் மிகச் சிலவான பெரும் பெரும் மூலதனங்கள் ஆகிடும் மாற்றமாகும்.

ஓரிடத்தில் மூலதனம் ஒரே கையில் பெருந்திரளாய் வளர்ந்து பெருகுகிறதென்றால், பிறிதோர் இடத்தில் மிகப் பலரும் அதனைப் பறிகொடுப்பதே இதற்குக் காரணம். மூலதனத் திரட்டலிலிருந்தும் மூலதனக் குவிப்பிலிருந்தும் இது முற்றிலும் வேறானது; முறைப்படி சொல்லுகையில் மூலதன மையப்பாடு (centralisation) என்பது இதுவே.

சரக்குகளை மலிவாக்கி போட்டா போட்டி என்னும் போர் நடத்தப்படுகிறது. சரக்குகளை மலிவாக்குதல், மற்றவை மாறாதிருக்க, உழைப்பின் உற்பத்தித் திறனைப் பொறுத்தது. உழைப்பின் உற்பத்தித் திறனோ உற்பத்தியின் அளவு வீதத்தைப் பொறுத்தது. எனவே, பெரிய மூலதனங்கள் சிறிய மூலதனங்களை வீழ்த்துகின்றன. மேலும், முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை வளர்ந்து செல்லும் போது, இயல்பான நிலைமைகளில் தொழிலை நடத்திச் செல்வதற்கு அவசியமான தனிப்பட்ட மூலதனத்தின் குறைந்தபட்சத் தொகை அதிகமாவது தெரிந்ததே. எனவே, சிறிய மூலதனங்கள் ஏதோ இங்குமங்குமாக அல்லது அரை குறையாக மட்டுமே நவீனத் தொழில்துறை (Modern Industry) தன்பிடிக்குள் கொண்டுவந்திருக்கும் உற்பத்தித் துறைகளுக்குள் நெரிசலாய்ப் புகுந்து கொள்கின்றன.

முட்டி மோதுகிற மூலதனங்களுக்கிடையே இத்துறைகளில் அவற்றின் எண்ணிக்கைக்கு நேர் விகிதத்திலும், பருமன்களுக்கு எதிர் விகிதத்திலும் கடும் போட்டி நடக்கிறது. இப்போட்டியால் சிறு முதலாளிகள் பலரும் நாசமாகிப் போகின்றனர். அவர்களது மூலதனங்களில் ஒரு பகுதி அவர்களை வீழ்த்தி வெற்றி கொண்டவர்களின் கைக்குச் செல்கிறது; மறு பகுதி மறைந்து போகிறது. மேலும், முதலாளித்துவ பொருளுற்பத்தியைத் தொடர்ந்து புத்தம்புதியதொரு சக்தி களத்தில் இறங்குகிறது --- அதுதான் கடன்-செலாவணி அமைப்பு (credit system). ஆரம்பக் கட்டங்களில், இவ்வமைப்பு மூலதனத் திரட்டலின் பணிவன்பு மிக்க உதவியாளராய் மெல்ல மெல்ல நுழைகிறது, சமுதாயத்தின் மேற்பரபில் சிதறிக் கிடக்கும் பணச் செல்வாதரங்களைக் கண்ணுக்குப் புலப்படாத இழைகள் கொண்டு இழுத்து, தனித்தனியான அல்லது கூட்டாய்ச் சேர்ந்த முதலாளிகளின் கையில் சேர்ப்பிக்கிறது. ஆனால் சீக்கிரம் அது போட்டாப் போட்டி எனும் போரில் பயங்கரமான புதிய ஆயுதமாகிறது. இறுதியில் மூலதனங்களின் மையப்பாட்டுக்கான பிரம்மாண்டமான சமூகப் பொறியமைவாய் மாற்றமடைகிறது.

முதலாளித்துவ பொருளுற்பத்தியும், மூலதனத் திரட்டலும் வளர்ந்தோங்க ஓங்க மூலதனங்களின் மையப்பாட்டுக்கான சக்தி மிக்க இருபெரும் நெம்புகோலகளாகிய போட்டியும் கடன்..செலாவணியும் வளர்ந்திடுகின்றன.

முதலாளித்துவ பொருளுற்பத்தி விரிவடைந்து, ஒரு புறம் பிரம்மாண்டத் தொழில் முயற்சிகள் எழுவதற்கு வேண்டிய சமூகத் தேவையையும், மறு புறம் அம்முயற்சிகள் ஈடேறுவதற்கான தொழில் நுட்பச் சாதனங்களையும் உண்டாக்குகிறது.

மையப்பாடு நோக்கிய இயக்கத்தின் ஒப்பீட்டுப் பெருக்கமும் ஆற்றலும், ஏற்கனவே அடைந்துள்ள முதலாளித்துவச் செல்வத்தின் பருமனாலும் பொருளாதார பொறியமைவின் மேன்மையாலும் ஓரளவுக்கு நிர்ணயிக்கப்படுகிறது என்றாலும், மையப்பாட்டிலான முன்னேற்றம் சமுதாய மூலதனத்தினது பருமனின் நேர்முக வளர்ச்சியை எவ்விதத்திலும் பொறுத்ததன்று. மையப்பாட்டுக்கும் குவிப்புக்கும் உள்ள பிரத்தியேக வேறுபாடு இதுவே; குவிப்பு என்பது விரிதிற மறுவுற்பத்தியேதான்.

இந்த மையப்பாடு தாக்கிக் கைப்பற்றும் வன்முறை வழியிலும் நடைபெறலாம்; அதாவது சிற்சில மூலதனங்கள் தலையாயக் கவர்ச்சி மையங்களாகி, ஏனையவற்றின் தனிப்பட்ட ஒன்றிப்பைத் தகர்த்து, உடைந்து பிரியும் துண்டுகளைக் கவர்ந்து கொள்ளும் வழியிலும் நடைபெறலாம். அல்லது, உருவாகி வருகிறவையும் ஏற்கனவே உருவாகி விட்டவையுமான பல மூலதனங்கள் கூட்டு பங்கு நிறுமங்களாக (joint-stock companies) அமைதி வழியிலும் ஒன்றாகலாம்.  

மறுவுற்பத்தியானது வட்ட வடிவிலிருந்து சுழலேணி வடிவிற்கு மாறுகையில் மூலதனத்தில் ஏற்படும் படிப்படியான அதிகரிப்பே திரட்டலாகும்.

தனித்தனியான சில மூலதனங்கள் ஓர் இருப்புப் பாதையை நிறுவுவதற்குத் தேவையான அளவுக்குப் பெரிதாகும் வரை மூலதனத் திரட்டல் நடைபெறுவதற்காகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுமேயானால், உலகம் இன்னமும் இருப்புப் பாதைகளற்றதாகவே இருக்கும். ஆனால் மையப்பாடு கூட்டுப் பங்கு நிறுமங்களை அமைத்து, கண் சிமிட்டும் நேரத்துக்குள் இதை செய்து முடித்தது.      

மையப்பாடு இவ்விதம் திரட்டலின் விளைவுகளைத் தீவிரப்படுத்தியும் விரைவுபடுத்தியும் செல்லும் அதே நேரத்தில், மூலதனத்தின் மாறாப் பகுதியை உயர்த்தி, இதன் மூலம் உழைப்புக்கான ஒப்பீட்டு வேண்டலை சுருங்கச் செய்யும் புரட்டசிகளை --- மூலதனத்தின்  தொழில் நுட்ப இயைபிலான புரட்சிகளை --- விரிவுபடுத்தியும்  விரைவுபடுத்தியும் செல்கிறது.

ஒரு புறத்தில், திரட்டலின் போது உருவாகும் கூடுதல் மூலதனம் அதன் பருமனுடன் ஒப்பிடுகையில் மேலும் மேலும் குறைவான தொழிலாளர்களையே அமர்த்திக் கொள்கிறது; மறு புறத்தில், இயைபில் மாற்றம் பெற்று கால வட்ட முறையில் மறுவுற்பத்தி செய்யப்படும் பழைய மூலதனம் முன்பு அதனிடம் வேலை பெற்ற தொழிலாளர்களில் மேலும் மேலும் அதிகமானோரை வேலையற்றவராக்கி விரட்டுகிறது.  

Wednesday, December 11, 2013

பகுதி 7 அத்தியாயம் 25 முதலாளித்துவ திரட்டலின் பொது விதி பிரிவு 1

மூலதனத்தின் இயைபு மாறாதிருக்க, மூலதனத் திரட்டலுடன் கூடவே உழைப்புச் சக்திக்கான வேண்டல் அதிகரித்தல்.

மதிப்பென்ற முறையில் மூலதனம் மாறா-மூலதனமாகவும், மாறும்-மூலதனமாகவும், அதாவது உற்பத்திச் சாதனங்களின் மதிப்பாகவும் உழைப்புச் சக்தியின் மதிப்பாகிய கூலியின் மொத்தத் தொகையாகவும் எவ்விதத்தில் பிரிக்கப்படுகிறது என்பது மூலதனத்தின் இயைபை நிர்ணயிக்கிறது.

பிண்டப் பொருளென்ற முறையில், உற்பத்தி நிகழ்முறையில் செயல்படும் மூலதனம் அனைத்தும் உற்பத்திச் சாதனங்களாகவும், உயிருள்ள உழைப்புச் சக்தியாகவும் பிரிக்கப்படுகிறது. இதனை மூலதனத்தின் மதிப்பு-இயைபு (value..composition) என்று அழைக்கிறேன்.

ஒரு புறம் ஈடுபடுத்தப்படும் உற்பத்திச் சாதனங்களின் திரளுக்கும், மறு புறம் அவற்றை ஈடுபடுத்துவதற்கு தேவையான உழைப்பின் திரளுக்கும் இடயிலான உறவால் நிர்ணயிக்கப்படுகிறது. இதனை தொழில்நுட்ப இயைபு (technical composition) என்று அழைக்கிறேன்.

இவையிரண்டும் கறாரான இடையுறவு (correlation) கொண்டவை. இந்த இடையுறவைப் புலப்படுத்தும் விதத்தில் மூலதனத்தின் மதிப்பு-இயைபை ---அது தொழில்நுட்ப இயைபினால் நிர்ணயிக்கப்பட்டு அதன் மாற்றங்களை படம் பிடித்துக் காட்டுகிற அளவுக்கு --- மூலதன அங்கக இயைபு (organic composition) என்று அழைக்கிறேன்.

கூடுதல் மூலதனமாக மாற்றப்படும் உபரி-மதிப்பில் ஒரு பகுதி, எப்போதுமே, மாறும்-மூலதனமாக அல்லது தொழிலாளர் நுகர்வுக்கான கூடுதல் நிதியமாக மாற்றப்பட வேண்டும். உழைப்புக்கான வேண்டலும் தொழிலாளர்களின் வாழ்வுச் சாதன நிதியமும் மூலதனம் அதிகரிக்கும் அதே விகிதத்தில் அதிகரிக்கின்றன என்பதும். மூலதனம் அதிகரிக்கும் அதே வேகத்தில் அதிகரிக்கின்றன என்பதும் தெளிவு.

புதிதாய் தோன்றிய சமுதாயத் தேவைகள் இன்னபிறவற்றின் விளைவாக மூலதனத்தின் முதலீட்டுக்கான புதிய சந்தைகளோ புதிய மண்டலங்களோ திறக்கப்படுவது போன்ற காரணங்களால் மேலும் மேலும் செல்வம் சேர்ப்பதற்கான தூண்டுதலுக்கு ஆளாகி, உபரி-மதிப்பு அல்லது உபரி-உற்பத்திப் பண்டம் மூலதனமாகவும் வருவாயாகவும் பிரிக்கப்படுவதில் ஏற்படும் மாற்றத்தின் மூலமே திரட்டல் வீதம் திடுமென உயரலாம். திரட்டப்பட்டுக் கொண்டிருக்கும் மூலதனத்தின் தேவைகளிலான அதிகரிப்பு இம்மாதிரியான காரணங்களால் உழைப்புச் சக்தியில் அல்லது தொழிலாளர் தொகையிலான அதிகரிப்பை விஞ்சிவிடலாம்.

சாமானிய மறுவுற்பத்தியானது முதலாளித்துவ உறவை, அதாவது முதலாளிகள், கூலித் தொழிலாளர்கள் என்ற உறவை மறுவுற்பதி செய்வது எப்படியோ, அதே போல மேன்மேலும் அதிகமாகிச் செல்லும் அளவு வீதத்திலான மறுவுற்பத்தி --- அதாவது மூலதனத் திரட்டல் --- மேன்மேலும் அதிகமாகிச் செல்லும் அளவுவீதத்திலான மூலதன உறவை மறுவுற்பத்தி செய்கிறது.  திரளான உழைப்புச் சக்தியின் மறுவுற்பத்தி மூலதனத்தின் மறுவுற்பத்திக்கு இன்றியமையாதது. இந்த உழைப்புச் சக்தி மூலதனத்தின் தற்பெருக்கத்துக்காக அம்மூலதனத்தோடு ஓயாமல் மறுபடியும் மறுபடியும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டியதும், மூலதனத்திலிருந்து விடுபட முடியாததும் ஆகும்.

மூலதனத் திரட்டல் என்பது இவ்விதம் பாட்டாளி வர்க்க பெருக்கத்தைக் குறிப்பதாகும்.

உழைப்புச் சக்தியானது எந்த அளவுக்கு உற்பத்திச் சாதனங்களை மூலதனமாக தொடருமாறு பேணிக் காத்திடுகிறதோ, தன் சொந்த மதிப்பை மூலதனமாக மறுவுற்பத்தி செய்கிறதோ, ஊதியமில்லா உழைப்பின் வாயிலாக கூடுதல் மூலதனம் தோன்றுவதற்கான ஆதாரத்தைக் கொடுக்கிறதோ, அந்த அளவுக்குதான் விற்கக் கூடியதாய் இருக்கிறது.

ஊதியமில்லா உழைப்பில் ஏற்படும் குறைவு மூலதனத்தின் ஆட்சி எல்லை விரிவடைவதற்கு எவ்விதத்திலும் தடையாவதில்லை.

உழைப்பின் விலையேற்றத்தால் மூலதனத் திரட்டல் மந்தமாகிறது.

முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிகழ்முறையின் பொறியமைவே அது தாற்காலிகமாகத் தோற்றுவிக்கும் தடங்கல்களை அகற்றி விடுகிறது. உழைப்பின் விலை திரும்பவும் சரிந்து மூலதனத்தின் தற்பெருக்கத் தேவைகளுக்கு ஏற்ற மட்டத்தை அடைகிறது.

முதலாவது நேர்வில், மூலதனம் மிகுதியாக இருப்பதற்கு காரணம் உழைப்புச் சக்தியில்  அல்லது உழைக்கும் மக்கள் தொகுதியில் அறுதியாகவோ விகிதாசார அளவிலோ ஏற்படும் அதிகரிப்பின் குறைந்த வீதமல்ல; மாறாக, மூலதனம் மிகுதியாக இருப்பதுதான் சுரண்டலுக்கு ஆட்படும் உழைப்புச் சக்தியின் போதாமைக்குக் காரணம்.

இரண்டாவது நேர்வில், மூலதனத்தின் போதாமைக்குக் காரணம் உழைப்புச் சக்தியில் அல்லது உழைக்கும் மக்கள் தொகையில் அறுதியாகவோ விகிதாசார அளவிலோ ஏற்படும் அதிகரிப்பின் உயர்ந்த வீதமல்ல; மாறாக, சுரண்டலுக்கு ஆட்படும் உழைப்புச் சக்தி, அல்லது சரியாகச் சொன்னால், அதன் விலை மிகுதியாக இருப்பதற்குக் காரணம் மூலதனத்தின் ஒப்பளவிலான குறுக்கமே.

கணித முறையில் சொல்வதானால்: திரட்டல் வீதம் சாரும் மாறியன்று, சாரா மாறியே. கூலி வீதம் சாரா மாறியன்று, சாரும் மாறியே.

மூலதனத் திரட்டலுக்கும் கூலி விகிதத்துக்கும் இடையிலான உறவு என்பது மூலதனமாக மாற்றப்படும் ஊதியிமிலா உழைப்புக்கும் இந்த கூடுதல் மூலதனத்தை இயக்குவதற்குத் தேவைப்படும் கூடுதலான ஊதிய உழைப்புக்கும் இடையிலான உறவே தவிர வேறில்லை.

கூலியுயர்வு வரம்பு மீறாத படி கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த வரம்பு முதலாளித்துவ அமைப்பின் அடித்தளங்களை சேதமில்லாத படி விட்டுவைப்பதோடு, மேலும் மேலும் விரிவான அளவில் இவ்வமைப்பு மறுவுற்பத்தியாவதையும் உறுதி செய்கிறது.

மனிதனது கரத்தின் படைப்பு மனிதனையே ஆள்கிறது.

Saturday, December 7, 2013

பகுதி 7 அத்தியாயம் 24: உபரி..மதிப்பை மூலதனமாக மாற்றுதல். பிரிவு 4 மறும் 5

உபரி-மதிப்பு மூலதனமாகவும் வருவாயாகவும் பிரிக்கப்படும் விகிதத்தைச் சாராமலே, மூலதனத் திரட்டலின் அளவை நிர்ணயிக்கும் காரணிகள். உழைப்புச் சக்தி மீதான சுரண்டல்-கடுமை. உழைப்பின் உற்பத்தித் திறன். ஈடுபடுத்தப்படும் மூலதனத் தொகைக்கும் நுகரப்படும் மூலதனத் தொகைக்கும் இடையிலான வேறுபாடு அதிகமாதல். முன்னீடு செய்யப்படும் மூலதனத்தின் பருமன்.

முதலாவதாக உபரி-மதிப்பு வீதம் உழைப்புச் சக்தி மீதான சுரண்டல்-கடுமையை பொறுத்தது. உழைப்பின் உற்பத்தித் திறன் கூடுதலாவதால் ஏற்படுகிற திரட்டல் வேக முடுக்கத்தை தொழிலாளியைச் சுரண்டுவது கூடுதலாவ‌தால் ஏற்படுகிற திரட்டல் வேக முடுக்கத்துக்கு முழுதொத்ததாய்க் கொள்ளும் அளவுக்கு சில சந்தர்ப்பங்களில் செல்கிறது. கூலியை உழைப்புச் சக்தியின் மதிப்புக்கும் கீழாக வலுவந்தமாய் குறைப்பது நடைமுறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தொழிலாளியின் அவசிய நுகர்வு நிதியத்தை (necessary consumption fund ) மூலதனத் திரட்டலுக்கான நிதியமாகவே கூட மாற்றி விடுகிறது.

18ஆம் நூற்றாண்டின் முடிவிலும் 19ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளிலும், ஆங்கிலேய சாகுபடியாளர்களும் நிலவுடைமையாளர்களும் விவசாயத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்சத்துக்கும் குறைவானதைக் கூலியாகவும், மீதத்தை மறை வட்டார உதவியாகவும் அளித்து கூலியின் அறுதி குறைந்தபட்சத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தனர்.

தொழிலாளியின் அவசிய நுகர்வு நிதியத்திலிருந்து நேரடியாக அடிக்கப்படும் கொள்ளை இக்காலத்தில் உபரி-மதிப்பை உருவாக்குவதற்கும், எனவே மூலதனத்தின் திரட்டல் நிதியத்தை உருவாக்குவதற்கும் ஆற்றுகிற பங்கை வீட்டுத் தொழில் எனப்படுவது ஏற்கனவே தெளிவாக்கிவிட்டது.

எல்லாத் தொழிற் கிளைகளிலும், மாறா-மூலதனத்தில் உழைப்புச் சாதனங்களாலான பகுதி (தொழில் முயற்சியின் பருமனால் நிர்ணயிக்கப்படுவதான) குறிப்பிட்ட தொகையிலான தொழிலாளர்களுக்குப் போதுமானதாய் இருக்க வேண்டும் என்றாலும் தொழிலாளர்கள் அதிகரிக்கும் அதே விகிதத்தில்தான் எப்போதும் அதிகரிக்க வேண்டும் என்பதில்லை.

உழைப்புச் சக்தியை அதிகத் தாக்கத்துக்குள்ளாக்கி கூடுதலாய் வருத்துவதால் பெறப்படும் கூடுதல் உழைப்பு, மூலதனத்தின் மாறாப் பகுதியை அதிகமாக்காமலே உபர-உற்பத்திப் பண்டத்தையும் உபரி-மதிப்பையும் (அதாவது மூலதனத் திரட்டலின் ஆதாரத்தை) அதிகமாக்க முடியும். 

சுரங்கங்கள் முதலான எடுபொருள் தொழில்களில் (Extractive industries) கச்சாப் பொருட்களானவை முன்னீடு செய்யப்படும் மூலதனத்தின் பகுதியாவதில்லை. இத்தொழில்களில் மாறா-மூலதனம் அநேகமாய் முழு அளவுக்கு உழைப்புச் சாதனங்களாலேயே ஆனதாகும்; இச்சாதனங்களால் முன்னிலும் அதிக அளவு உழைப்பை உட்கிரகிக்க முடியும். மற்றவையெல்லாம் மாறாதிருக்க, உற்பத்திப் பண்டத்தின் திரளும் மதிப்பு செலவிடப்படும் உழைப்புக்கு நேர் விகிதத்தில் உயரும்.

செய்பொருளுற்பத்தித் தொழில் எனப்படுவதில் உழைப்பின் கூடுதல் செலவீடு நேரிடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கச்சாப் பொருட்களில் அதற்கிணையான கூடுதல் செலவீடு தேவைப்படுகிறது.

மூலதனமானது செல்வத்தின் இரு பெரும் படைப்பாளிகளான உழைப்புச் சக்தியையும் நிலத்தையும் தன்னோடு இணைத்துக் கொள்வதன் மூலம், விரிவகற்சித் திறன் பெறுகிறது; இந்தத் திறனின் துணை கொண்டு அது தனது திரட்டலின் கூறுகளைப் பெருக்கிச் செல்ல முடிகிறது.    

மூலதனத் திரட்டலில் இன்னொரு முக்கிய காரணி சமுதாய உழைப்பினது உற்பத்தித் திறனின் படித்தரமாகும். உழைப்பின் உற்பத்தித் திறன் உயரும் போது உற்பத்திப் பண்டத்தின் திரள் அதிகமாகிறது.

இந்த உபரி-உற்பத்திப் பண்டத்தை வருவாயாகவும் கூடுதல் மூலதனமாகவும் பகிர்ந்திடும் விகிதம் மாறாதிருக்குமாயின், திரட்டல்-நிதியத்தில் குறைவேதும் இல்லாமலே முதலாளியின் நுகர்வு கூடுதலாகலாம். திரட்டல் நிதியத்தின் ஒப்பீட்டுப் பருமன் நுகர்வு-நிதியத்தின் செலவில் அதிகரிக்கும் போதே கூட, சரக்குகளின் விலை குறைவால் முதலாளிக்கு அனுபோகச் சாதனங்கள் முன்னிலும் அதிகமான அளவிலும் கூட கிடைக்கலாம்.

உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகமாவதன் கூடவே, தொழிலாளியின் ஊதியத்துக்காகும் செலவு குறைகிறது; அதனால் உண்மைக் கூலி உயரும்போதே கூட உபரி-மதிப்பு வீதம் உயர்ந்து செல்கிறது. உண்மைக் கூலி ஒருபோதும் உழைப்பின் உற்பத்தித் திறன் உயரும் விகிதாசாரத்தில் உயர்வதில்லை.

கூடுதல் மூலதனத்தின் மதிப்பு மாறாதிருக்கும்போது, அல்லது குறையும் போதே கூட வளர்வேகத் திரட்டல் நடைபெறுகிறது. மறுவுற்பத்தியின் அளவுவீதம் பொருள்வகையில் விரிவடைவதோடு கூட, உபரி-மதிப்பின் உற்பத்தியும் கூடுதல் மூலதனத்தின் மதிப்பைக் காட்டிலும் துரிதமாய் அதிகரிக்கிறது.

உழைப்புச் சாதனங்களின் பயன்பாட்டுக் காலத்தில் உழைப்பின் உற்பத்தித் திறன் உயர்ந்திருக்குமானால், பழையவற்றுக்கு பதிலாய் அதிக செய்திறனுள்ள, மலிவாகிவிட்ட புதிய இயந்திரங்கள், கருவிகள், பொறியமைவுகள் முதலானவை புகுத்தப்படுகின்றன.

மாறா மூலதனத்தின் மற்றொரு பகுதி --- கச்சாப் பொருளும் துணைப் பொருட்களும் --- ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் இடையறாது மறுவுற்பத்தி செய்யப்படுகிறது.

இரசாயத்திலான ஒவ்வொரு முன்னேற்றமும் பயனுள்ள மூலப் பொருட்களின் எண்ணிக்கையையும், ஏற்கனவே தெரிந்த மூலப் பொருட்களின் பயனுள்ள பிரயோகங்களையும் பெருகச் செய்கிறது; இவ்விதம் மூலதன வளர்ச்சியோடு கூடவே அதன் முதலீட்டுத் துறையையும் விரிவாக்குகிறது. இது மட்டுமன்று உற்பத்தி மற்றும் நுகர்வு நிகழ்முறைகளின் கழிவுகளை மறுவுற்பத்தி நிகழ்முறையின் சுற்றோட்டத்தினுள் திரும்பவும் எப்படி செலுத்துவது என்பதையும் அது கற்றுக் கொடுக்கிறது; இவ்விதம் மூலதன முன்னீடு இல்லாமலே புதிய மூலப் பொருளை மூலதனத்துக்குப் படைத்தளிக்கிறது.

விஞ்ஞானமும் தொழில் நுட்பவியலும் உள்ளபடியே இயங்கிச் செயல்படும் மூலதனத்தின் பருமனைச் சார்ந்திராத ஒரு விரிவகற்சித் திறனை மூலதனத்துக்கு கொடுக்கின்றன. அவை அதே போது, ஆரம்ப மூலதனத்தில் புதுப்பிக்கப்பட்டு புது உருவம் பெறுகிற இப்பகுதி தன் பழைய உருவம் பயன்பாட்டிலிருந்த போது அடையப்பட்ட சமூக முன்னேற்றத்தை இலவசமாக சுவீகரித்துக் கொள்கிறது. உற்பத்தித் திறனில் ஏற்படும் இந்த வளர்ச்சியுடன் கூடவே ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் மூலதனத்தில் பகுதியளவு மதிப்பிறக்கம் ஏற்படுவது மெய்தான். இந்த மதிப்பிறக்கத்தால் போட்டியில் கடுமையான பாதிப்பு ஏற்படுமானால், அந்த பாதிப்பின் சுமை தொழிலாளி மீதே விழுகிறது; தொழிலாளியை முன்னிலும் கூடுதலாய்ச் சுரண்டியே முதலாளி இழப்பு ஏற்படாமல் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறார்.

உழைப்பானது, அதன் உற்பத்திச் சாதனங்களின் பயந்திறனிலும் விரிவிலும் மதிப்பிலும் ஏற்படும் அதிகரிப்பைத் தொடர்ந்து, எனவே அதன் உற்பத்தித் திறனது வளர்ச்சியுடன் சேர்ந்து நடைபெறும் மூலதனத் திரட்டலைத் தொடர்ந்து, புத்தம் புது வடிவில் மேன்மேலும் அதிகமாகிச் செல்லும் மூலதன-மதிப்பைப் பாதுகாத்து நிரந்தரமாக்குகிறது. இது உழைப்பின்  இயற்கையான ஆற்றலாகும். எப்படி சமுதாய உழைப்பின் உற்பத்தித் திறன்கள் மூலதனத்தின் உள்ளார்ந்த இயல்புகளாய்த் தோற்றமளிக்கின்றனவோ, எப்படி முதலாளிகள் இடையறாது உபரி-உழைப்பைத் தமதாக்குவது மூலதனத்தின் இடையாறாத தற்பெருக்கமாகத் தோற்றமளிக்கிறதோ, அதே போல் உழைப்பின் இந்த இயற்கையான ஆற்றலும் அது உருக்கொண்ட மூலதனத்தின் உள்ளார்ந்த இயல்பாகத் தோற்றமளிக்கிறது.

உழைப்புச் சாதனங்கள் உற்பத்திப் பொருளுக்கு மதிப்பு சேர்க்காமலே உற்பத்திப் பொருளாக்கிகளாக மட்டும் செயல்படுவதற்கேற்ப, அதாவது முழுமையாக ஈடுபடுத்தப்பட்டு, ஆனால் சிறிதளவு மட்டும் நுகரப்படுவதற்கேற்ப, நாம் முன்னர் பார்த்தது போல, இயற்கைச் சக்திகள், நீர், நீராவி, காற்று, மின்சாரம் போன்றவை புரியும் அதே இலவசச் சேவையைப் புரிகின்றன.

கடந்த கால உழைப்பு எப்போதுமே மூலதனமாக மாறுவேடம் தரிக்கிறது; அதாவது ஏ, பி, சி முதலானோரது கடந்த கால உழைப்புக்குரிய கடன் உழைப்பாளியல்லாத எக்ஸ் என்பவரின் நிகழ் காலக் கையிருப்பாக வடிவெடுக்கிறது..

அடுத்தடுத்த திரட்டல்களைக் கொண்டு மூலதனம் எவ்வளவுக்கு அதிகரிக்கிறதோ, நுகர்வு-நிதியமாகவும் திரட்டல்-நிதியமாகவும் பிரிக்கப்படும் மதிப்புத் தொகை அவ்வளவுக்கு அதிகரிக்கிறது. எனவே முதலாளி முன்னிலும் கூடுதலாய் சுகபோகம் அனுபவிக்கலாம்; அதே போதில் முன்னிலும் கூடுதலாய் "துறவும்" பூணலாம்.

தொழிலாளர் நுகர்வு..நிதியம் எனப்படுவது 

தொல்சீர் பொருளாதார இயலானது சமுதாய மூலதனத்தை நிலையான செய்திறன் கொண்ட நிலையான பருமனாகவே எப்போதும் கொள்ள விரும்பியது. அவர்கள் கோட்பாட்டின்படி பொருளுற்பத்தி நிகழ்முறையின் சர்வ சாதாரணமான நிகழ்வுகளும், உதாரணமாக அதன் திடீர்ப் பெருக்கங்களும் சுருக்கங்களும், ஏன் மூலதனத் திரட்டலும் கூட நினைக்கவே முடியாதவையாகிவிடுகின்றன. இந்தக் கோட்பாட்டை சப்பைக்கட்டுவாத நோக்கத்துக்கு அனுசரணையாகவே பயன்படுத்தினர். முக்கியமாக மூலதனத்தின் ஒரு பகுதியை, அதாவது மாறும்-மூலதனத்தை, அல்லது உழைப்புச் சக்தியாக மாற்றப்படக்கூடிய மூலதனப் பகுதியை மாறாது நிலையாயிருக்கும் பருமனாகக் காட்டும் பொருட்டே பயன்படுத்தினர். மாறும்-மூலதனத்தின் பிண்டப் பொருள், அதாவது தொழிலாளிக்கென அதனால் குறிக்கப்படுகிற வாழ்வுச் சாதனங்களின் திரள், அல்லது தொழிலாளர் நுகர்வு நிதியம் எனப்படுவது சமுதாயச் செல்வத்தில் தனித்த ஒரு பகுதியாகும் என்றும், இயற்கையின் விதிகளால் வரையறுக்கப்பட்டதென்றும், மாற்ற முடியாததென்றும் கதை கட்டினர்.

ஒரு புறம், சமுதாயச் செல்வத்தை தொழிலாளரல்லாதவருக்கான சுகபோகச் சாதனங்களாகவும், உற்பத்திச் சாதனங்களாகவும் பகிர்வதில் தலையிட தொழிலாளிக்கு உரிமை இல்லை. மறுபுறம், அனுகூலமான, விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே, தொழிலாளர் நுகர்வு-நிதியம் எனப்படுவதை செல்வந்தர்களது "வருவாயின்" செலவில் அவரால் அதிகமாக்க முடிகிறது.


தொழிலாளர் நுகர்வு-நிதியத்தின் முதலாளித்துவ வரம்புகளை அதன் இயற்கை வரம்புகளாகவும் சமூக வரம்புகளாகவும் சித்தரிக்க முயல்கின்றனர். அதாவது ஒவ்வொரு தொழிலாளிக்கும் தரப்படும் தனித்தனி கூலிகளை சேர்த்து கூட்ட வேண்டும்; பின்னர், இவ்வாறு வரும் கூட்டுத் தொகையைக் கடவுளும் இயற்கையும் நமக்கு விதித்திட்ட "தொழிலாளர் நுகர்வு..நிதியத்தின்" மொத்த மதிப்பென்று சாதிக்க வேண்டும் என்பதே.

Wednesday, December 4, 2013

பகுதி 7 அத்தியாயம் 24: உபரி மதிப்பை மூலதனமாக மாற்றுதல் பிரிவு 2 மற்றும் 3

மேன்மேலும் அதிகரிக்கும் அளவுவீதத்தில் நடைபெறும் மறுவுற்பத்தி பற்றி அரசியல் பொருளாதாரத்தின் தவறான கருத்தமைவு

பொதுஜனத் தப்பெண்ணமானது முதலாளித்துவப் பொருளுற்பத்திக்கும் மிச்சப்படுத்தி சேர்த்து வைப்பதற்கும் உள்ள வேறுபாடு விளங்காமல் இரண்டையும் குழப்பிக் கொள்கிறது. அழிந்து விடாமல், அதாவது நுகரப்படாமல், இருக்கிற வடிவத்தில் அப்படியே பாதுகாக்கப்படும் செல்வம்தான் அல்லது சுற்றோட்டத்திலிருந்து விலக்கப்படுகிற செல்வம்தான் திரட்டப்பட்ட செல்வம் என்று அது கற்பிதம் செய்து கொள்கிறது.

கொஞ்சம் கொஞ்சமாய் நுகர்வதற்காக செல்வந்தர் சேமித்து வைக்கும் பண்டத் திரளையும், திரட்டி வைக்கும் சேமிப்புகளையும் பார்க்கையில் பொதுமக்களுக்கு பிரமிப்பாய் இருப்பது மெய்தான்.

மூலதனத் திரட்டல் என்பது திறனுடைத் தொழிலாளர்கள் உபரி-உற்பத்திப் பொருட்களை நுகர்வதுதானே தவிர வேறு ஒன்றும் இல்லை என்கிறார் ஆதாம் ஸ்மித். ரிகார்டோவும் அடுத்து வரும் பொருளாதார அறிஞர்கள் அனைவரும் ஆதாம் ஸ்மித் கூறியதையே திருப்பிச் சொல்கிறார்கள்; அதாவது "மூலதனத்தோடு சேர்க்கப்படுவதாகச் சொல்லப்படும் வருவாய்ப் பகுதி திறனுடைத் தொழிலாளர்களால் நுகரப்படுகிறது" என்கிறார்கள். இக்கருத்தின்படி மூலதனமாக மாற்றப்படும் மதிப்பனைத்தும் மாறும்-மூலதனமாகி விடுகிறது. நடப்பதோ முற்றிலும் வேறு. ஆரம்ப மூலதனத்தைப் போலவே உபரி-மதிப்பும் மாறா-மூலதனமாகவும் உழைப்புச் சக்தியாகவும் பிரிகிறது. உழைப்பு நிகழ்முறையின் போது உழைப்புச் சக்திதான் மாறும்-மூலதனம் என்ற ஒன்று இருப்பதற்கான வடிவமாகும். இந்த நிகழ்முறையின் போது முதலாளி உழைப்புச் சக்தியை நுகர்கிறார். உழைப்புச் சக்தியோ உழைப்பாகிய அதன் பணியைச் செய்து உற்பத்திச் சாதனங்களை நுகர்கிறது.

உபரி-மதிப்பு மூலதனமாகவும் வருவாயாகவும் பிரிதல். துறவுத் தத்துவம்.

உபரி-மதிப்பில் ஒரு பகுதி வருவாயாக முதலாளியால் நுகரப்படுகிறது; மறு பகுதி மூலதனமாக ஈடுபடுத்தப்படுகிறது, திரட்டப்படுகிறது.

முதலாளி மூலதனத்தின் ஆளுருவமாய் இருக்கும் வரை, அவரைச் செயல்படத் தூண்டுவது பரிவர்த்தனை-மதிப்பும் அதன் பெருக்கமும்தானே தவிர, பயன்-மதிப்புகளோ அவற்றை அனுபவித்தலோ அல்ல. மதிப்பைப் பெருகச் செய்திட வேண்டுமென்று வெறி கொண்டுவிடும் அவர் உற்பத்தியின் நிமித்தமே உற்பத்தி செய்யுமாறு இரக்கமற்ற முறையில் மனித இனத்தைக் கட்டாயப்ப்டுத்துகிறார்.  இவ்வாறு, அவர் நெருக்க நிர்ப்பந்தித்து சமுதாயத்தின் உற்பத்தித் திறன்களை வளரச் செய்கிறார்; மேலும் உயர்வான சமுதாயத்துக்கு மெய்யான அடித்தளம் அமைவதற்கு அத்தியாவசியமான பொருளாயத நிலைமைகளை இவ்விதம் தோற்றுவிக்கிறார். இந்த உயர்வான சமுதாயத்தில் தனியாள் ஒவ்வொருவரின் முழுமையான, சுதந்திரமான வளர்ச்சியே ஆளூம் நெறியாய் அமைகிறது; மூலதனத்தின் ஆளுருவம் என்ற முறையில் மட்டுமே முதலாளி மதிக்கத் தக்கவராகிறார்.

முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் வளர்ச்சியானது குறிப்பிட்ட தொழில் நிறுவனத்தில் முதலீடாயிருக்கும் மூலதனத்தின் பரிமாணத்தை ஓயாமல் மேலும் மேலும் அதிகமாக்கிச் செல்லும் படி கட்டாயப்படுத்துகிறது. போட்டியானது முதலாளித்துவ பொருளுற்பத்தியின் உள்ளார்ந்த விதிகளைப் புறத்திலிருந்து கட்டாயப்படுத்தும் விதிகளாக்கி தனிப்பட்ட ஒவ்வொரு முதலாளியையும் அவற்றுக்கு கீழ் படிய வைக்கிறது. தனது மூலதனத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு அதனை இடையறாது விரிந்து பெருகச் செய்யுமாறு அவரைக் கட்டாயப்படுத்துகிறது; ஆனால் மேன்மேலும் அதிகமாக்கிச் செல்லும் திரட்டலின் மூலமாக அல்லாமல் வேறு எவ்விதத்திலும் அவர் தனது மூலதனத்தை விரிந்து பெருகச் செய்ய முடியாது.

முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் முன்னேற்றம் கோடி கோடிக் குதூகலங்களைப் படைப்பது மட்டுமல்லாமல், திடீர் பணக்காரராவதற்கு ஊக வாணிபம், கடன்-செலாவணி வசதி ஆகியவற்றின் உருவில் ஓராயிரம் வழிகளைத் திறந்துவிடுகிறது. குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தை வந்தடைந்த பின், ஓரளவு ஊதாரித்தனம் --- இது செல்வச் செழிப்பை விளம்பரப்படுத்தி, கடன் வசதிக்கு வழி கோலும் மார்க்கமும் ஆகிறது --- முதலாளிக்கு வியாபார அவசியமாகி விடுகிறது.

முதலாளி பணக்காரராவது கருமியைப் போல் சொந்த உழைப்பினாலும், கட்டுத்திட்டமான நுகர்வினாலும் அல்ல. எந்த அளவுக்குப் பிறரது உழைப்புச் சக்தியைக் கசக்கி பிழிகிறாரோ, எந்த அளவுக்கு வாழ்வின் இன்பங்களையெல்லாம் கைவிட்டுத் துறவு பூணுமாறு தொழிலாளியைக் கட்டாயம் செய்கிறாரோ, அந்த அளவுக்கே முதலாளி பணக்காரராகிறார்.

மூலதனத் திரட்டல் வளர வளர முதலாளியின் செலவும் அதனுடன் சேர்ந்து வளர்கிறது. ஒன்றின் வளர்ச்சி மற்றதன் வளர்ச்சிக்குத் தடையாவதில்லை. அதே நேரத்தில் ஒரு மோதல் முதலாளியின் நெஞ்சிலும் மூள்கிறது  --- மூலதனம் திரட்ட வேண்டுமென்ற வேட்கைக்கும் இன்பம் நுகர வேண்டுமென்ற ஆசைக்குமிடையிலான மோதல் இது.

வெவ்வேறு வகைப்பட்ட சமூகப் பொருளாதார அமைப்புகளிலும் சாமானிய மறுவுற்பத்தி மட்டுமல்லாமல், மேன்மேலும் அதிகரிக்கும் அளவுவீதத்திலான மறுவுற்பத்தியும் பல்வேறு படித்தரங்களில் நடைபெறுகிறது. மேன்மேலும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, மேன்மேலும் அதிக அளவில் நுகரப்படுகிறது; இதன் விளவாக, மேன்மேலும் அதிக அளவிலான உற்பத்திப் பொருட்களை உற்பத்திச் சாதனங்களாக மாற்ற வேண்டியுள்ளது. ஆயினும் உழைப்பாளியின் உற்பத்திச் சாதனங்களும், அவற்றுடன் அவரது உற்பத்திப் பண்டமும் வாழ்வுச் சாதனங்களும் மூலதனத்தின் உருவில் அவரெதிரே வராத வரை, இந்த நிகழ்முறை மூலதனத்திரட்டலோ, முதலாளியின் பணியோ ஆவதில்லை.    

Monday, December 2, 2013

பகுதி 7 அத்தியாயம் 24: உபரி..மதிப்பை மூலதனமாக மாற்றுதல். பிரிவு 1

முதலாளித்துவ பொருளுற்பத்தியின் அளவுவீதம் மேன்மேலும் அதிகமாகிச் செல்லுதல். சரக்கு உற்பத்தியைக் குறிக்கும் சொத்துடைமை விதிகள் முதலாளித்துவத் தனதாக்கத்தின் விதிகளாக மாறுதல்

உபரி மதிப்பை மூலதனமாக மாற்றுவது மூலதனத் திரட்டல் (accumulation of capital) என்று அழைக்கப்படுகிறது. 

மூலதன-மதிப்பு ஆரம்பத்தில் பண வடிவில் முன்னீடு செய்யப்பட்டது. மாறாக, உபரி-மதிப்பு மொத்த உற்பத்தியில் குறிப்பிட்ட ஒரு பகுதியின் மதிப்பாகவே ஆரம்பத்தில் இருக்கிறது. இந்த மொத்த உற்பத்தி விற்கப்பட்டு, பணமாக மாற்றப்பட்டால், மூலதன-மதிப்பு அதன் ஆரம்ப வடிவத்தை மீண்டும் பெறுகிறது. அதுமுதல் மூலதன-மதிப்பு, உபரி-மதிப்பு இவையிரண்டுமே பணத் தொகைகள்தாம்; மூலதன-மதிப்பு, உபரி-மதிப்பு இரண்டையும் செலவிட்டு, முதலாளி சரக்குகள் வாங்குகிறார்; இந்த சரக்குகளைக் கொண்டு முன்னிலும் விரிவான அளவில் உற்பத்தி செய்ய முற்படுகிறார்.

உழைப்பு நிகழ் முறையில் ஈடுபடுத்தக் கூடிய பண்டங்களையும் (அதாவது உற்பத்திச் சாதனங்களையும்), மேலும் தொழிலாளியின் வாழ்வுக்கு வேண்டிய பண்டங்களையும் (அதாவது வாழ்வுச் சாதனங்களையும்) தவிர வேறெதையும் மூலதனமாக மாற்ற முடியவே முடியாது. ஆதலால், வருடாந்திர உபரி-உழைப்பில் ஒரு பகுதி, முன்னீடு செய்யப்பட்ட மூலதனத்தை மாற்றீடு செய்ய தேவைப்படுவதற்கும் கூடுதலான உற்பத்திச் சாதனங்களையும் வாழ்வுச் சாதனங்களையும் உற்பத்திச் செய்வதற்குப் பிரயோகிக்கப்பட்டிருக்க வேண்டும். சுருங்கச் சொல்லின், உபரி-உற்பத்திப் பொருளில் புதிய மூலதனத்தின் பொருட் கூறுகளும் சேர்ந்திருப்பதால்தான் இந்த உபரி-உற்பத்திப் பொருளின் மதிப்பாகிய உபரி-மதிப்பு மூலதனமாய் மாற்றத்தக்கதாகிறது.

ஏற்கனவே வேலையில் உள்ள தொழிலாளர்களைச் சுரண்டுவது அளவிலோ மும்முரத்திலோ அதிகரிக்காவிட்டால், கூடுதல் உழைப்புச் சக்தி தேவைப்படும். முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் இயங்கமைப்பு ஏற்கனவே இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கூடுதல் உழைப்புச் சக்தியை வருடாந்திர உற்பத்தியிலடங்கிய உபரி-உற்பத்திச் சாதனங்களோடு மூலதனம் இணைத்து விட்டாலே போதும். உபரி-மதிப்பு மூலதனமாக மாற்றப்பட்டு விடுகிறது. சாமானிய மறுவுற்பத்திக்குரியதான வட்டப் பாதை அதன் வடிவத்தை மாற்றிக் கொண்டு சுழலேணியாய் மாறுகிறது.

ஆரம்ப மூலதனம் அதன் முதலீட்டாளருக்கு எப்படிக் கிடைத்தது? "தன் சொந்த உழைப்பாலும் தன் மூதாதையர்களின் உழைப்பாலுமே" என்று அரசியல் பொருளாதாரத்தின் சொல்விளம்பிகள் ஏகோபித்த குரலில் பதிலளிக்கிறார்கள். ஆனால், கூடுதல் மூலதனம் இப்படிப்பட்டதன்று. அதன் மதிப்பில் ஊதியமில்லா உழைப்பிலிருந்து வராதது ஓரணுக்கூட இல்லை. கூடுதல் உழைப்புச் சக்தி சேர்ந்து கொள்கிற உற்பத்திச் சாதனங்களும், மற்ற தொழிலாளர்கள் உயிர் வாழ்வதற்கான அவசிய பண்டங்களும் உபரி-உற்பத்திப் பொருளின் கூறுகளே தவிர வேறல்ல.

கூடுதல் தொழிலாளர்கள் ஏற்கனவே வேலை செய்யும் தொழிலாளர்களின் ஊதியமில்லா உழைப்பைக் கொண்டு வேலைக்கமர்த்தப்படுகிறார்கள் என்பதால் எந்த மாறுபாடும் ஏற்படுவதில்லை. 

முன்னரே பொருள் வடிவாக்கப்பட்ட பிறர் உழைப்பில் ஒரு பகுதியைத் திரும்பத் திரும்ப முதலாளி சமதையேதும் தராமல் தனது உடைமையாக்கி, அதனை மேலும் அதிக அளவிலான உயிருள்ள உழைப்புக்குப் பரிவர்த்தனை செய்கிறார். சொத்துரிமைகள் அவரது சொந்த உழைப்பை ஆதாரமாய் கொண்டவை என்றுதான் முதலில் நினைத்தோம். எப்படியும், இப்படி ஒரு அனுமானம் அவசியமாய் இருந்தது; ஏனென்றால், சரிசமமான உரிமை படைத்த சரக்குடைமையாளர்கள் மட்டுமே ஒருவரையொருவர் எதிர்கொண்டனர்; அவரவரும் தன் சொந்த சரக்கினை உடைமை மாற்றம் செய்துதான் பிறரது சரக்கினைத் தனது உடைமையாக்கிக் கொள்ள முடிந்தது. இந்த சரக்குகள் யாவும் உழைப்பால் படைக்கப்படுகிறவைதாம். ஆனால், இப்போது, சொத்து என்பது பிறரது ஊதியமிலா உழைப்பை அல்லது அவ்வுழைப்பின் உற்பத்திப் பொருளைத் தனதாக்கிட முதலாளிக்குள்ள உரிமை என்றும், தான் உற்பத்தி செய்யும் பொருளை தனதாக்கிட தொழிலாளிக்குள்ள முடியாமை என்றும் ஆகி விடுகிறது. உழைப்பிலிருந்து சொத்து இப்படி பிரிக்கப்படுவதானது இவையிரண்டின் முழுதொத்த தன்மையிலிருந்து வந்ததாகத் தோன்றிய விதியின் தவிர்க்க முடியாத விளைவாகிறது.

முதலாளித்துவத் தனதாக்க முறை சரக்கு உற்பத்தியின் மூல விதிகளை எவ்வளவுதான் மதியாததாய்த் தோன்றினாலும், இவ்விதிகளைப் பிரயோகிப்பதால் வருவதே தவிர அவற்றை மீறுவதால் அல்ல. 

புதிய உற்பத்திப் பொருளின் மதிப்பில் மேலும் அடங்கியிருப்பது; உழைப்புச் சக்தியினது மதிப்பின் சமதையும், அத்துடன் கூட ஓர் உபரி-மதிப்பும். திட்டமான காலத்துக்கு, உதாரணமாக ஒரு நாள் அல்லது ஒரு வாரத்துக்கு விற்கப்படும் உழைப்புச் சக்தியின் மதிப்பு --- அந்த காலத்தில் அதனை உபயோகித்துப் படைக்கப்படும் மதிப்பை விடக் குறைவு.  ஆனால் தொழிலாளி அவரது உழைப்புச் சக்தியை விற்று பயன்-மதிப்பை உடைமை மாற்றம் செய்திருக்கிறார். விற்றல் வாங்கல் ஒவ்வொன்றிலும் நடப்பது இதுவே.

உழப்புச் சக்தி என்னும் இந்த குறிப்பிட்ட சரக்கு உழைப்பை வழங்கி, மதிப்பைப் படைக்கும் தனிவிதப் பயன்-மதிப்பைக் கொண்டதாகும். 

விற்பவரை ஏமாற்றி இது நடைபெறவில்லை, அவருக்கு அவரது சரக்கின் மதிப்பு கிடைத்து விடுகிறது. 

ஒன்றுக்கொன்று பரிவர்த்தனை செய்து கொள்ளப்படும் சரக்குகளின் பரிவர்த்தனை விதி சமத்துவத்தைக் கோருகிறது. ஆனால், அவற்றின் பயன்..மதிப்புகளைப் பொறுத்த வரை, ஆரம்பத்திலிருந்தே, இரண்டுக்குமிடையில் வேறுபாடு இருப்பது இந்த விதிக்கு முன் தேவையாகிறது. பேரம் முடிந்து நிறைவேற்றப்பட்ட பின்னரே தொடங்குவதான அவற்றின் நுகர்வுக்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

பணம் மூலதனமாகிற ஆரம்ப மாற்றம் சரக்கு உற்பத்தியின் பொருளாதார விதிகளையும், அவற்றிலிருந்து பெறப்படும் சொத்துரிமையையும் சற்றேனும் மீறாமலேதான் நடந்தேறுகிறது. ஆயினும் அதன் விளைவு என்னவென்றால்;

1. உற்பத்திப் பொருள் முதலாளிக்குச் சொந்தம், தொழிலாளிக்கு அல்ல.
2. உற்பத்திப் பொருளின் மதிப்பில் முன்னீடு செய்யப்பட்ட மூலதனத்தின் மதிப்போடு கூட உபரி-மதிப்பும் அடங்கியுள்ளது; இந்த உபரி-மதிப்புக்காகத் தொழிலாளி உழைப்பைச் செலவிடுகிறார், முதலாளி ஏதும் செலவிடுவதில்லை என்றாலும் இது சட்டப்படி முதலாளிக்குச் சொந்தமான சொத்தாகிறது.
3. தொழிலாளி அவரது உழைப்புச் சக்தியை இழந்துவிடவில்லை; வாங்குகிறவர் கிடைப்பாராயின் மீண்டும் அவர் இதனை விற்கலாம்.

சாமானிய மறுவுற்பத்திக்கு பதில் விரிதிற மறுவுற்பத்தி (reproduction on an extended scale), அதாவது மூலதனத் திரட்டல் நடைபெறுவதாயினும் நிலைமையில் மாற்றம் ஏதுமில்லை. 

தனியொரு முதலாளிக்கும் தனியொரு தொழிலாளிக்கும் பதிலாக எதிரும் புதிருமாக நிற்கும் முதலாளி வர்க்கத்தையும் தொழிலாளி வர்க்கத்தையும் முழுமொத்தமாகப் பார்க்கையில், நிச்சயமாக நிலைமை முற்றிலும் மாறி விடுகிறது.

விற்றலும் வாங்கலும் குறிப்பிட்ட தனியாட்களிடையே பேசி முடிக்கப்படுவதால், முழு சமுதாய வர்க்கங்களிடையிலான உறவுகளை இங்கே தேடக் கூடாது.                          

இன்று செயல்படுகிற மூலதனம் காலவட்ட மறுவுற்பத்திகளும் முன்சென்ற திரட்டல்களுமான நீண்ட நெடிய தொடரைக் கடந்து வந்திருப்பினும், அதன் ஆரம்பக் கன்னிமையை ஒரு போதும் இழப்பதில்லை. பரிவர்த்தனை விதிகளை ஒவ்வொரு தனிப் பரிவர்த்தனைச் செயலிலும் கடைபிடித்துக் கொண்டிருக்கும்வரை, சரக்கு உற்பத்திக்குரியவையான சொத்துரிமைகளை எவ்விதத்திலும் பாதிக்காமலே தனதாக்க முறையில் முற்றிலும் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

இந்த புரட்சிகரமான மாற்றம், உழைப்பாளியே உழைப்புச் சக்தியை ஒரு சரக்காகச் சுதந்திரமாய் விற்கத் தொடங்கும் தருணம் முதற்கொண்டு தவிர்க்க முடியாததாகிறது.          

அரசியல் பொருளாதாரம் மூலதனத்தைப் பொதுவாக "உபரி-மதிப்பின் உற்பத்தியில் திரும்பத் திரும்ப ஈடுபடுத்தப்படும் திரட்டப்பட்ட செல்வம்" (மாற்றப்பட்ட உபரி-மதிப்பு அல்லது வருவாய்) என்றும், முதலாளியை "உபரி-மதிப்பின் உடைமையாளர்" என்றும் வர்ணிக்கிறது.  

Friday, November 22, 2013

பகுதி 7 அத்தியாயம் 23: சாமானிய மறுவுற்பத்தி

எப்படி சமுதாயம் நுகர்வதை நிறுத்த முடியாதோ அதே போல் உற்பத்தி செய்வதையும் நிறுத்த முடியாது. எனவே, தொடர்புள்ள முழுமையாகவும், ஓயாமல் புதுப்பிக்கப்பட்டுச் செல்வதாகவும் நோக்கப்படும் போது, சமுதாய பொருளுற்பத்தி நிகழ்முறை ஒவ்வொன்றும் அதே போது மறுவுற்பத்தி நிகழ்முறையும் (process of reproduction) ஆகும். உற்பத்தி நிலைமைகள் அதே போது மறுவுற்பத்தி நிலைமைகளுமாகும்.

ஒவ்வொரு ஆண்டின் உற்பத்திப் பண்டத்திலும் குறிப்பிட்ட பகுதி உற்பத்தித் துறைக்கு உரியதாகும். திறனுடை நுகர்வுக்கு (productive consumption) உரியதாய் ஆரம்பமுதற்கொண்டே அமைந்த இப்பகுதி, பெரும்பாலும் சொந்த நுகர்வுக்கு சிறிதும் பொருந்தாத பண்டங்களாய் இருப்பதாகும். 

உற்பத்தியானது முதலாளித்துவ வடிவமுடையதாய் இருந்தால் மறுவுற்பத்தியும் அவ்வாறே இருக்கும். உழைப்பு நிகழ்முறையானது எப்படி உற்பத்தியில் மூலதனத்தின் தற்பெருக்கத்துக்கான (self expansion) வழிவகையாகவே இடம் பெறுகிறதோ, அதே போல் மறுவுற்பத்தியில் முன்னீடு செய்யப்படும் மதிப்பை மூலதனமாக  --- அதாவது தற்பெருக்கமடையும் மதிப்பாக --- மறுவுற்பத்தி செய்வதற்கான வழிவகையாகவே இடம் பெறுகிறது. 

மூலதனத்தின் காலவட்டப் பலன் என்ற முறையில் உபரி-மதிப்பு என்பது மூலதனத்திலிருந்து பிறக்கிற வருவாயின் வடிவத்தைப்பெறுகிறது. இந்த வருவாய் கால வட்ட முறையில் செலவிடப்பட்டுவிட்டால், மற்றவை மாறாதிருக்க, சாமானிய மறுவுற்பத்தி --- அதன் பழைய அளவுவீதத்தில் --- நடைபெறும்.

நிர்ணயமான காலத்துக்கு உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குவது உற்பத்தி நிகழ்முறையின் பீடிகை ஆகும். இந்தப் பீடிகை திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படுகிறது. ஆனால், தொழிலாளி அவரது உழைப்புச் சக்தியைச் செலவிட்டு அதன் மதிப்பை மட்டுமல்லாமல் உபரி-மதிப்பையும் சரக்குகளில் ஈடேற்றம் பெறச் செய்யும் வரை அவருக்கு ஊதியம் அளிக்கப்படுவதில்லை. ஆகவே, அவர் உபரி-மதிப்பை மட்டுமல்லாமல் அவருக்கு ஊதியமளிப்பதற்கான நிதியையும், அதாவது மாறும்-மூலதனத்தையும் உற்பத்திச் செய்கிறார். 

இந்த வாரம் அல்லது இந்த வருடம் அவரது உழைப்புச் சக்திக்கு விலையாகப் பெறுவது அவரது சென்ற வாரத்திய அல்லது சென்ற வருடத்திய உழைப்பே. பணத்தின் குறுக்கீட்டால் ஏற்படுகிற மாயத் தோற்றமானது, நாம் தனியொரு முதலாளிக்கும் தனியொரு தொழிலாளிக்கும் பதிலாக முதலாளிகளின் வர்க்கம் முழுவதையும் தொழிலாளி வர்க்கம் முழுவதையும் எடுத்துக் கொண்டதுமே மறைந்து போகிறது. தொழிலாளி வர்க்கத்தால் உற்பத்தி செய்யப்பட்டு முதலாளி வர்க்கத்தால் தனதாக்கப்படும் சரக்குகளில் ஒரு பகுதியைப் பெறுவதற்கான ஆணைச் சீட்டுகளையே முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கத்துக்கு பண வடிவில் தொடர்ச்சியாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. 

மாறும்-மூலதனம் என்பது தொழிலாளிக்கு வேண்டிய அவசிய வாழ்க்கைத் தேவைகளுக்கு வகை செய்வதற்கான நிதியம். இந்நிதியம் அவரது உழைப்புக்கு ஊதியமளிக்கும் பணத்தின் வடிவத்தில் இடையறாது அவரிடம் வருகிறதென்றால் அவர் படைக்கும் உற்பத்திப் பொருள் மூலதனத்தின் வடிவில் இடையறாது அவரை விட்டு விலகிச் செல்வதே இதற்கு காரணம். ஆனால், உற்பத்திப் பண்டத்தில் ஈடேற்றம் பெற்றுள்ள தொழிலாளியின் உழைப்புதான் முதலாளியால் அவரிடம் முன்னீடு செய்யப்படுகிறது என்ற உண்மையை இதெல்லாம் மாற்றிவிடுவதில்லை. 

முதலாளி தாம் பிறரின் ஊதியமிலா உழைப்பின் உற்பத்தியை, அதாவது உபரி-மதிப்பை நுகர்ந்து கொண்டிருப்பதாகவும், தமது ஆரம்ப மூலதனத்தை அப்படியே பாதுகாத்து வைத்திருப்பதாகவும் நினைக்கிறார்; ஆனால் அவர் அப்படி நினைப்பதாலேயே இது உண்மையாகிவிடமுடியாது. சில ஆண்டுகள் கழிந்த பின்னர் அவர் பெற்றிருக்கும் மூலதனத்தின் மதிப்பு அந்த ஆண்டுகளில் அவரால் தனதாக்கப்பட்ட உபரி-மதிப்பின் மொத்தத் தொகைக்குச் சமமாகும்; அவர் நுகர்ந்திருக்கும் மொத்த மதிப்பு அவரது ஆரம்ப மூலதனத்தின் மதிப்புக்குச் சமமாகும். அவரது பழைய மூலதனத்தின் மதிப்பில் ஓரணுவும் இப்போது இல்லை.    

உழைப்பை அதன் உற்பத்திப் பொருளிடமிருந்து --- உழைப்பவரின் உழைப்புச் சக்தியை உழைப்பதற்கு அவசியமான எதார்த்த நிலைமைகளிட்மிருந்து  --- பிரிப்பதுதான் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் மெய்யான அடித்தளமும் தொடக்கமும் ஆகும்.

உற்பத்தி நிகழ்முறையானது பொருட் செல்வத்தை ஓயாமல் மூலதனமாக மாற்றுகிறது; அதாவது மேலும் மேலும் கூடுதலான செல்வத்தைப் படைக்கும் சாதனமாகவும், முதலாளியின் அனுபோகத்துக்கான சாதனமாகவும் மாற்றுகிறது. மறு புறம் தொழிலாளியோ உற்பத்தி நிகழ் முறையில் நுழைந்த போது இருந்த அதே நிலையில்தான் அதை விட்டு வெளியேறும் போதும் இருக்கிறார்; அதாவது செல்வத்தின் தோற்றுவாயாக இருப்பினும் அந்தச் செல்வத்தை தம்முடையதாக்கிக் கொள்வதற்கான எந்த சாதனமும் இல்லாதவராகவே இருக்கிறார், உற்பத்தி நிகழ் முறையில் நுழையுமுன்னரே தொழிலாளி தமது உழைப்புச் சக்தியை விற்று, தமது உழைப்பைத் தமது உடைமையிலிருந்து நீக்கிக் கொண்டுவிடுகிறார்; ஆகவே உற்பத்தி நிகழ்முறையின் போது அவ்வுழைப்பு தொழிலாளிக்குச் சொந்தமில்லாத உற்பத்திப் பண்டத்தில்தான் ஈடேற்றம் பெற வேண்டியிருக்கிறது.  

தொழிலாளி புறவயப் பொருட் செல்வத்தை ஓயாமல் உற்பத்தி செய்கிறார்; ஆனால் மூலதனத்தின் வடிவில்தான். இதே போல் முதலாளியும் உழைப்புச் சக்தியை உற்பத்தி செய்கிறார்; தொழிலாளியை உற்பத்தி செய்கிறார். ஆனால் கூலித் தொழிலாளியாகத்தான்.

தொழிலாளி இரு விதங்களில் நுகர்கிறார். உற்பத்தி செய்யும்போது தமது உழைப்பால் உற்பத்திச் சாதனங்களை நுகர்ந்து முன்னீடு செய்யப்பட்ட மூலதனத்தின் மதிப்பை விட அதிக மதிப்புள்ள உற்பத்திப் பண்டங்களாக அவற்றை மாற்றுகிறார். இது அவருடைய திறனுடை நுகர்வு (productive consumption) ஆகும். அதே நேரத்தில் இது அவரது உழைப்புச் சக்தியை வாங்கிய முதலாளி அதனை நுகர்கிற நுகர்வுமாகும். மறு புறம், தொழிலாளி தனது உழைப்புச் சக்திக்காகத் தரப்பட்ட பணத்தை வாழ்வுச் சாதனங்களாக மாற்றுகிறார். இது அவரது சொந்த நுகர்வு (individual consumption) ஆகும்.

அவர் தமது உழைப்புச் சக்தியைப் பராமரித்து கொள்ளும் பொருட்டு அவசியப் பண்டங்களைத் தமக்கு தாமே கிடைக்கச் செய்து கொள்கிறார். அந்நிலையில் அவரது நுகர்வுச் சாதனங்கள் உற்பத்திச் சாதனங்களில் ஒன்றுக்கு அவசியமான நுகர்வுச் சாதனங்களாகிவிடுகின்றன. அவரது சொந்த நுகர்வு நேரடியாகத் திறனுடை நுகர்வாகி விடுகிறது.

முதலாளி தனது மூலதனத்தின் ஒரு பகுதியை உழைப்புச் சக்தியாக மாற்றுவதன் மூலம், தனது முழு மூலதனத்தின் மதிப்பையும் பெருகச் செய்கிறார். ஒரே கல்லால் இரு மாங்காய் அடிக்கிறார். தொழிலாளியிடமிருந்து தான் பெறுவதைக் கொண்டு மட்டுமல்லாமல், தொழிலாளிக்குத் தான் கொடுப்பதைக் கொண்டும் இலாபமடைகிறார்.

கண்டிப்பான அவசியத்தின் வரம்புகளுக்குள், தொழிலாளி வர்க்கத்தின் சொந்த நுகர்வு என்பது, உழைப்புச் சக்திக்கு விலையாக‌ முலதனம் கொடுத்த வாழ்வுச் சாதனங்களை மூலதனத்தின் சுரண்டலுக்குப் பயன்படவல்ல புதிய  உழைப்புச் சக்தியாக திரும்பவும் மாற்றுவதாகும்.

பட்டறையினுள் நடந்தாலும் சரி, வெளியே நடந்தாலும் சரி, உற்பத்தி நிகழ்முறையைச் சேர்ந்திருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, தொழிலாளியின் சொந்த நுகர்வு என்பது மூலதனத்தின் உற்பத்தியிலும் மறுவுற்பத்தியிலும் ஒரு காரணியாகிறது.

பொதி சுமக்கும் குதிரை தீனி தின்பது உற்பத்தி நிகழ்முறைக்கு அவசியமானது. குதிரை சுவைத்துத் தின்கிறது என்பதால் இந்த அவசியம் சிறிதும் குறைந்து விடுவதில்லை. தொழிலாளி வர்க்கப் பராமரிப்பும் மறுவுற்பத்தியும் மூலதன மறுவுற்பத்திக்கு அவசிய நிபந்தனையாக இருக்கிறது; எக்காலும் இருந்தே தீரும்.

முதலாளியும் அவரது அரசியல் பொருளாதார அறிஞரும் தொழிலாளியின் சொந்த நுகர்வின் எந்த பகுதி தொழிலாளி வர்க்கத்தை நிலைத்து நீடிக்கச் செய்வதற்கு அவசியமானதோ, முதலாளி நுகர்வதற்கு உழைப்புச் சக்தி வேண்டுமானால் எந்தப் பகுதி இன்றியமையாததோ அந்தப் பகுதியை மட்டும் திறனுடை நுகர்வாகக் கருதுகின்றனர். அந்தப் பகுதிக்கும் மேலே தொழிலாளி தனது மனநிறைவுக்காக நுகர்வது திறனிலா நுகர்வு என்கின்றனர்.

எதார்த்தத்தில் தொழிலாளியின் சொந்த நுகர்வு அவரைப் பொறுத்த வரை திறனிலா நுகர்வே; ஏனென்றால், தேவைகளால் வாடும் தனியாளைத்தான் அது மறுவுற்பத்தி செய்கிறது. வேறொன்றையும் அல்ல. ஆனால், முதலாளிக்கும் அரசுக்கும் அது திறனுடை நுகர்வாகும். ஏனென்றால் அவர்களின் செல்வத்தைப் படைக்கும் சக்தியை அது உற்பத்தி செய்கிறது.

ரோமானிய அடிமை சங்கிலிகளால் பூட்டப்பட்டிருந்தான்; கூலித் தொழிலாளி கண்ணுக்குப் புலப்படாத இழைகளால் தனது அதிபரோடு கட்டுண்டிருக்கிறான்.

முதலாளித்துவ பொருளுற்பத்தி நிகழ்முறையே தொழிலாளியைத் தனது உழைப்புச் சக்தியை விற்க வேண்டியவராக ஓயாமல் திரும்பத் திரும்ப சந்தைக்கு அனுப்புகிறது.

அவர் அப்போது தன்னைத் தானே விற்றுக் கொள்வதும், தனது அதிபர்களை மாற்றிக் கொள்வதும், உழைப்புச் சக்தியின் சந்தை விலையில் ஏற்படுகிற அலைவுகளும் அவரது பொருளாதாரக் கொத்தடிமை நிலையை உண்டாக்குவதோடு கண்ணுக்குத் தெரியாமல் அதனை மறைத்திடவும் செய்கின்றன.

முதலாளித்துவப் பொருளுற்பத்தியானது முதலாளித்துவ உறவை --- ஒரு பக்கம் தொழிலாளியையும் மறு பக்கம் கூலித் தொழிலாளியையும் --- அது உற்பத்தியும் மறுவுற்பத்தியும் செய்கிறது.

Thursday, November 21, 2013

பகுதி 7: மூலதனத் திரட்டல்

பணத் தொகை உற்பத்திச் சாதனங்களாகவும் உழைப்புச் சக்தியாகவும் மாற்றம் பெறுவதுதான் மூலதனமாகச் செயல்படப் போகிற  மதிப்புத் தொகை எடுத்து வைக்கும் முதலடி.

முதலாளி தமது சரக்குகளை விற்கவும், விற்றுக் கிடைக்கிற பணத்தில் பெரும் பகுதியை மீண்டும் மூலதனமாக மாற்றவும் முடிந்திடல் வேண்டும் ... இதுவே மூலதனத் திரட்டுலுக்கான முதல் நிபந்தனை.

ஒரு புறம் முதலாளி அவர் உற்பத்தி செய்த சரக்குகளை அவற்றின் மதிப்புக்கே விற்பதாகக் கொள்கிறோம். மறு புறம்,  முதலாளித்துவ் உற்பத்தியாளரை உபரி-மதிப்பு முழுவதன் உடைமையாளாராக அல்லது, இன்னும் சரியாகச் சொன்னால், அவருடன் சேர்ந்து கொள்ளைப் பொருளை பகிர்ந்து கொள்வோர் அனைவருக்கும் பிரதிநிதியாகக் கொள்கிறோம்.

உபரி-மதிப்பு துண்டுகளாகப் பிளவுறுவதால் அதன் இயல்பு மாறிவிடுவதில்லை; எந்நிலைமைகளில் அது திரட்டலின் கூறுகளில் ஒன்றாகிறதோ அந்நிலைமைகளும் மாறி விடுவதில்லை. 

மூலதனத் திரட்டல் நிகழ்முறையின் சாமானிய அடிப்படை வடிவம், அதனை தோற்றுவிக்கிற சுற்றோட்ட நிகழ்ச்சியாலும், உபரி..மதிப்பு பிளவுறுவதாலும் மறைக்கப்படுகிறது.  ஆகவே, இந்நிகழ்முறையை சரிவரப் பகுத்தாய வேண்டுமானால், அதன் உள்ளியக்கச் செயற்பாட்டை மறைக்கிற புறத் தோற்றங்கள் யாவற்றையும் சிறிது நேரத்துக்கு கவனியாது விட்டுவிட வேண்டும்.

Tuesday, November 19, 2013

பாகம் 6. அத்தியாயம் 22: நாடுகளிடையிலான கூலி வேறுபாடுகள்.

நாட்டினுள் கூலியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களில் வெவ்வேறு சேர்க்கைகளது தொடராக எது தோற்றமளிக்கிறதோ, அது வெவ்வேறு நாடுகளிலும் ஒரே காலத்தில் தேசக் கூலி மட்டத்திலான வேறுபாடாக தோற்றமளிக்கக் கூடும். ஆகவே, வெவ்வேறு நாடுகளில் கிடைக்கும் கூலிகளை ஒப்பிடுகையில், உழைப்புச் சக்தியினது மதிப்பின் அளவிலான மாற்றங்களை நிர்ணயிக்கிற எல்லாக் காரணிகளையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். 

அந்தந்தத் தொழிலிலும் வெவ்வேறு நாடுகளிலும் கிடைக்கிற சராசரி தினக் கூலியை முதலில் ஒரேசீரான வேலை-நாளுக்கு உரியதாகப் பெயர்த்திட வேண்டும். பலன்வீதக் கூலி மட்டுமே உழைப்பின் உற்பத்தித் திறன், மும்முரம் இரண்டுக்கும் அளவு கோலாக இருக்க முடியுமென்பதால் நேரவீதக் கூலியையும் பலன்வீதக் கூலியாகப் பெயர்த்திட வேண்டும். 

உழைப்பின் சராசரி மும்முரம் நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. உலக உழைப்பின் சராசரி அலகு இந்த அளவுகோலின் அலகாகிறது.

முதலாளித்துவப் பொருளுற்பத்தி ஒரு நாட்டில் வளர்ச்சியடைந்திருக்கும் அதே விகிதத்தில், அங்கு உழைப்பின் தேச மும்முரமும் உற்பத்தித் திறனும் சர்வதேச மட்டத்துக்கு மேலாக உயர்கின்றன. ஆகவே ஒரே வேலை நேரத்தில் வெவ்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் ஒரே வகைச் சரக்குகளின் வெவ்வேறு அளவுகளது சர்வதேச மதிப்புகள் சமமற்றவை; இம்மதிப்புகள் வெவ்வேறு விலைகளில், அதாவது சர்வதேச மதிப்புகளுக்கேற்ப மாறுபடும் பணத் தொகைகளில் தெரிவிக்கப்படுகின்றன. ஆதலால், பணத்தின் ஒப்பீட்டு மதிப்பானது அதிகம் வளர்ச்சியடைந்த முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையுடன் கூடிய நாட்டில் குறைவாக வளர்ச்சியடைந்த நாட்டிலிருப்பதை விடக் குறைவாய் இருக்கும். அப்படியானால், பணமாகத் தெரிவிக்கப்படும் உழைப்புச் சக்தியின் சமதையான பெயர்க் கூலியும் இரண்டாவது நாட்டிலிருப்பதை விட முதலாவது நாட்டில் அதிகமாய் இருக்கும்; இதிலிருந்து உண்மைக் கூலியும், அதாவது தொழிலாளிக்குக் கிடைக்கக்கூடிய வாழ்வுச் சாதனங்களும் இவ்வாறே அதிகமாய் இருக்கும் எனக் கொள்ளலாகாது.

தினக் கூலி அல்லது வாரக் கூலி போன்ற நேரவீதக் கூலி இரண்டாவது நாடிலிருப்பதை விட முதலாவது நாட்டில் அதிகமாய் இருப்பினும் உழைப்பின் ஒப்பீட்டு விலை --- அதாவது உபரி..மதிப்பும் உற்பத்திப் பொருளின் மதிப்பு ஆகிய இரண்டுடனும் ஒப்பிடுகையிலான உழைப்பின் விலை --- முதலாவதிலிருப்பதை விட இரண்டாவதில் அதிகமாய் இருக்கக் காணலாம். 

பகுதி 6. அத்தியாயம் 21: பலன்வீதக் கூலி

நேரவீதக் கூலி என்பது உழைப்புச் சக்தியின் மதிப்பு அல்லது விலையின் மாறிய வடிவம்தான் என்பது போலவே, பலன்வீதக் கூலியும் நேரவீதக் கூலியின் மாறிய வடிவமே தவிர வேறில்லை.

இந்த உழைப்பின் விலை நேரவீதக் கூலியைப் போல் 'உழைப்புச் சக்தியின் தின மதிப்பு / குறிப்பிட்ட மணிகள் கொண்ட வேலை..நாள்' என்ற பின்னத்தால் அன்றி, உற்பத்தியாளரின் உழைப்புத் திறனாலேயே நிர்ணயிக்க்ப்படுவது போலவும் தோன்றுகிறது.

இவ்விரு கூலி வடிவங்களும் ஒரே வகைத் தொழிற் கிளைகளில் ஒருங்கே நிலவுகின்றன. ஒரு வடிவம் இன்னொரு வடிவத்தை  விட முதலாளித்துவ‌ பொருளுற்பத்தியின் வளர்ச்சிக்கு சாதகமாய் இருக்கக் கூடும் என்றாலும், கூலி கொடுப்பதலான வடிவ வேறுபாட்டால் கூலியின் அடிப்படை இயல்பு எவ்விதத்தும் மாறுவதில்லை.

பலன்வீதக் கூலி எந்த மதிப்புறவுக்கும் நேரடித் தெரிவிப்பாவதில்லை. உருப்படியின் மதிப்பு அதில் அடங்கிய வேலை நேரத்தால் அளவிடப்படுவதில்லை; இதற்கு மாறானதே நடைபெறுகிறது. தொழிலாளி செலவிட்டிருக்கும் வேலை நேரம் அவர் உற்பத்தி செய்திருக்கும் உருப்படிகளின் தொகையால் அளவிடப்படுகிறது. நேர வீதக் கூலியில் உழைப்பு நேரடியாக அதன் கால அளவால் அளவிடப்படுகிறது; பலன்வீதக் கூலியில் உழைப்பு குறிப்பிட்ட கால அளவில் அது உருவாக்கிய உற்பத்திப் பொருட்களின் அளவால் அளவிடப்படுகிறது. 

இங்கே உழைப்பின் தரம் வேலையாலேயே கட்டுப்படுத்தப்படுகிறது; பலன்வீதக் கூலி முழுமையாகக் கிடைக்க வேண்டுமானால் வேலை  சராசரி நிறைவுள்ளதாக இருக்க வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில், பலன்வீதக் கூலியானது கூலிக் குறைப்புகள், முதலாளித்துவ மோசடி ஆகியவற்றுக்கு மிகவும் பயன்படுகிறது. 

இது உழைப்பின் மும்முரத்தை அளப்பதற்குத் துல்லியமான அளவுகோலை முதலாளிக்கு வழங்குகிறது. முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட பரிசோதனை முறையில்  நிர்ணயிக்கப்பட்ட அளவிலான சரக்குகளில் உருக்கொண்ட வேலை நேரம் மட்டுமே சமுதாய வழியில் அவசியமான வேலை நேரமாகக் கணக்கிடப்பட்டு, அவ்வாறே ஊதியம் பெறுகிறது. 

பலன்வீதக் கூலியானது முன்னர் விவரித்த நவீன "வீட்டு உழைப்புக்கும்," அதே போல் சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைக்கான படிநிலை அமைப்புக்கும் அடிக்கல் நாட்டுகிறது. முதலாளிக்கும் கூலித் தொழிலாளிக்குமிடையே புல்லுருவிகள் ஊடுருவலுக்கும், "உழைப்பின் உள்குத்தகைக்கும்" வழி வகுக்கிறது. இந்த இடைத் தரகர்களின் ஆதாயம் முழுவதும் முதலாளி செலுத்துகிற உழைப்பு..விலைக்கும் அவ்விலையில் அவர்கள் தொழிலாளியிடம் உள்ளபடியே போய்ச்சேர விடுகிற பகுதிக்கும் இடையிலான வேறுபாட்டிலிருந்தே வருகிறது.

தலைமைத் தொழிலாளி தனக்கென ஒரு விலை எடுத்துக் கொண்டு, தன் துணையாட்களை வேலைக்கமர்த்தி அவர்களுக்கு ஊதியமளிக்க பொறுப்பேற்கிறார். தொழிலாளி மீதான முலதனத்தின் சுரண்டல் இங்கே தொழிலாளி மீதான தொழிலாளியின் சுரண்டல் மூலம் நடந்தேறுகிறது. 

பலன்வீதக் கூலி தரப்படுகையில், தன் உழைப்புச் சக்தியை முடிந்த வரை கடுமையாக வருத்திக் கொள்வதில் தொழிலாளிக்குத் தனிப்பட்ட அக்கறை இருப்பது இயல்பே; உழைப்பின் இயல்பான மும்முரத்தை எளிதாகவே மேலும் உயர்த்துவதற்கு இது வகை செய்கிறது. 

வேலை-நாள் நீட்டப்படும் போது --- பலன் வீதக் கூலி மாறாதிருந்தாலும் கூட தவிர்க்க முடியாத படி உழைப்பின் விலை வீழ்ச்சியடையவே செய்கிறது.

நேர வீதக் கூலியில், சில விதிவிலக்குகளோடு கூட, ஒரே வகை வேலைக்கு ஒரே கூலிதான்; பலன்வீதக் கூலியிலோ, வேலை நேரத்தின் விலை உற்பத்திப் பொருளின் குறிப்பிட்ட அளவால் அளவிடப்பட்ட போதிலும், தொழிலாளர்களின் தனி வேறுபாடுகளுக்கேற்ப நாட் கூலி அல்லது வாரக் கூலி மாறுபடும். 

பலன்வீதக் கூலி முறை தனியாளின் கூலியை சராசரிக் கூலிக்கும் கூடுதலாய் உயர்த்தும் அதே போது, இந்த சராசரியை குறைத்திடும் போக்குடையது. 

முதலாளித்துவ பொருளுற்பத்தி முறைக்கு மிகவும் இசைவான கூலி வடிவம் பலன்வீதக் கூலியே என்பது தெளிவாகிறது.       

உழைப்பின் மாறும் உற்பத்தித் திறனுகேற்ப ஒரே அளவு உற்பத்திப் பொருள் வெவ்வேறான வேலை நேரங்களைக் குறிக்கிறது. ஒர் உருப்படியில் செலவிடப்படும் வேலை நேரம் குறைவதற்கேற்ப பலன்வீதக் கூலி குறைந்து போகிறது. இந்த மாற்றம் முதலாளிக்கும் தொழிலாளிக்குமிடையே ஓயாத போராட்டத்துக்கு இட்டுச் செல்கிறது. காரணம் என்னவெண்றால் பலன்வீதக் கூலியிலான மாற்றத்தை ஓர் உபாயமாக்கி முதலாளி உள்ளபடியே உழைப்பின் விலையைக் குறைக்கிறார்; அல்லது உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதோடு கூடவே உழைப்பின் மும்முரமும் அதிகரிக்கிறது. அல்லது, தொழிலாளி பலன்வீதக் கூலியின் புறத்தோற்றத்தையே உண்மையெனக் கொண்டு விடுகிறார். அதாவது ஊதியமளிக்கப்படுவது தமது உழைப்புச் சக்திக்காக அல்ல, உற்பத்திப் பொருளுக்காகவே எனக் கொண்டு விடுக்கிறார்.        

Monday, November 18, 2013

பகுதி 6. அத்தியாயம் 20 நேரவீதக் கூலி

உழைப்புச் சக்தியின் ஒரு நாளைய மதிப்பு, ஒரு வாரத்திய மதிப்பு போன்றவற்றின் மாறிய வடிவமே நேரவீதக் கூலி (time-wages) வடிவமாகும்; இவ்விதம் நாட் கூலி வாரக் கூலி என்பது போன்ற வடிவமாகும். 

உழைப்புச் சக்தியின் பரிவர்த்தனை..மதிப்புக்கும், இந்த மதிப்பு உருமாறுவதால் கிடைக்கும் தேவைப் பண்டங்களின் ஒட்டுமொத்தத்துக்கும் இடையிலான வேற்றுமை இப்போது பெயர்க் கூலிக்கும் (nominal wages) உண்மைக் கூலிக்கும் (real wages) இடையிலான வேற்றுமையாக வெளிப்படுகிறது. 

தொழிலாளி தனது ஒரு நாளைய அல்லது ஒரு வார உழைப்புக்காகப் பெறுகிற பணத் தொகை அவரது பெயர்க் கூலியின் அல்லது மதிப்பு வழிப்பட்ட கூலியின் அளவாக அமைகிறது. ஆனால், வேலை-நாளின் கால அளவிற்கேற்ப, அதாவது அன்றாடம் உள்ளபடியே ஆற்றப்படுகிற உழைப்பின் அளவுக்கேற்ப, ஒரு நாட் கூலி அல்லது வாரக் கூலி உழைப்பின் வெவ்வேறான விலைகளை, அதாவது ஒரே அளவு உழைப்புக்கான வெவ்வேறான பணத் தொகைகளைக் குறிக்கலாம்.

உழைப்புச் சக்தியின் சராசரி அன்றாட மதிப்பை வேலை..நாளின் மணிகளின் சராசரி எண்ணிக்கையால் வகுத்து, உழைப்பின் சராசரி விலையைக் கணக்கிடுகிறோம். இவ்விதம் பெறப்படும் வேலை-மணியின் விலை உழைப்பின் விலையைக் கணக்கிடுவதற்கான அலகாகப் பயன்படுகிறது. 

எனவே, உழைப்பின் விலை இடைவிடாது குறைந்து சென்றாலும், தினக் கூலி, வாரக் கூலி போன்றவை மாறாதிருக்கலாம் என்று தெரிகிறது.

உழைப்பின் அளவு விரிவு தொடர்பாக அதிகரிப்பதற்கு பதில் மும்முரம் தொடர்பாக அதிகரித்தாலும், இதே விளைவு ஏற்படக் கூடும். 

உழைப்பின் விலையோ, ஒன்று, உழைப்புச் சக்தியின் மதிப்புகேற்ப, அல்லது அதன் விலைக்கும் மதிப்புக்கும் இடையிலான வேறுபாட்டுக்கேற்ப மாறுபடுகிறது. மறு புறம், உழைப்பின் விலை குறிப்பிட்டதாய் இருக்க, தினக் கூலி அல்லது வாரக் கூலி ஒரு நாளைய உழைப்பு அல்லது ஒரு வாரத்திய உழைப்பின் அளவைப் பொறுத்தது.

தொழிலாளியின் ஜீவனத்துக்கு அவசியமான உழைப்பு நேரம் அவருக்குக் கிடைக்காமலே, முதலாளி அவரிடமிருந்து குறிப்பிட்ட அளவு உபரி-உழைப்பைக் கறக்கலாம். 

சட்டமியற்றி வேலை-நாளுக்கு வரம்பிடுவது இம்மாதிரியான அக்கிரமத்துக்கு முடிவு..கட்டுகிறது.

உழைப்புச் சக்தியின் தின மதிப்பு / வேலை-நாள் என்ற பின்னத்தில் அடியெண் அதிகரித்தால் மேலெண் இன்னும் கூட அதிக விரைவோடு அதிகரிக்கிறது. உழைப்புச் சக்தியின் மதிப்பு அதன் தேய்வுக்கும் தளர்வுக்கும் ஏற்ப மேலும் மேலும் அதிகமாவதால், உழைப்புச் சக்தி இயங்கும் காலம் அதிகரிக்கையில் அதன் மதிப்பும் அதிகரிக்கிறது. கால அதிகரிப்பைக் காட்டிலும் விரைவாக அதிகரிக்கிறது. வேலை நேரத்துக்குச் சட்ட வரம்புகளின்றி நேரவீதக் கூலி  பொது வழக்காயுள்ள பல தொழிற்கிளைகளில், வேல-நாளை குறிப்பிட்ட வரம்பு வரை மட்டுமே இயல்பானதென்று கருதும் பழக்கம் தன்னியல்பாய் வளர்ந்துள்ளது. இந்த வரம்பைக் கடந்ததும் வேலை நேரமானது மிகை-நேரம் (over-time) ஆகிறது.  

இயல்பானதெனப்படும் நேரத்தில் உழைப்பின் விலை மிகக் குறைவாயிருப்பதால் தொழிலாளி ஓரளவேனும் போதுமான கூலி பெறும் பொருட்டு மேலான ஊதியதுக்குரிய மிகை-நேரத்தில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வேலை-நாளுக்குச் சட்டப் படி வரம்பிடுவது இந்த விபரீதத்துக்கு முடிவு கட்டுகிறது.

சரக்கின் விலையில் ஒரு பகுதி உழைப்பின் விலையால் ஆனது. உழைப்பு விலையின் ஊதியமில்லாப் பகுதியைச் சரக்கின் விலையில் சேர்க்கத் தேவையில்லை. வாங்குபவருக்கு இதனை இலவசமாகத் தரலாம். போட்டியினால் ஏற்படுகிற முதல் நிலை இது.  இரண்டாவது நிலை என்னவென்றால், வேலை-நாளின் நீட்டிப்பால் படைக்கப்படும் அசாதாரண உபரி-மதிப்பில் குறைந்தது ஒரு பகுதியையும் கூட சரக்கின் விற்பனை விலையில் சேர்க்காமல் விட்டு விடலாம். இவ்விதத்தில் சரக்கின் விற்பனை விலை அசாதாரணமாய் குறைந்து போவதானது முதலில் சிதறலாக எழுந்து, பையப்பைய நிலைத்து விடுகிறது. இந்த குறைந்த விற்பனை  விலை அது முதற்கொண்டு அதீதமான வேலை நேரமும் கேவலமான கூலியும் என்ற நிலைமைக்கு மாறா அடிப்படையாகிறது.

அடக்க விலைக்கு குறைவாக ரொட்டி விற்கும் குறைவிலைக்காரர் ஆட்களின் உழைப்பிலிருந்து அதிகமாய்ப் பெறுவதன் மூலம் அதனை ஈடு செய்ய வேண்டும். குறை விலைக்காரரிடம் வேலை செய்வோரில் பெரும் தொகையினர் கொடுத்த கூலியை வாங்கிக் கொள்வது தவிர வேறு வழியில்லாத அந்நியர்களும் இளைஞர்களும் ஆவர்.

வழக்கமான உழைப்பு நேரத்தின் விலையில் போலவே, இந்தக் கூடுதல் ஊதியத்திலும் ஊதியமில்லா உழைப்பு அடங்கியுள்ளது.         

Sunday, November 17, 2013

பகுதி 6: கூலி. அத்தியாயம் 19: உழைப்புச் சக்தியின் மதிப்பும், அதோடு விலையும் கூலியாக மாற்றமடைதல்

சரக்கின் மதிப்பு என்பதென்ன? அதன் உற்பத்தியில் செலவிடப்பட்ட சமுதாய உழைப்பின் புறவய வடிவமே. இந்த மதிப்பின் அளவினை அளப்பது எப்படி? அதில் அடங்கியுள்ள உழைப்பின் அளவைக் கொண்டே.

நேரடியாகப் பணத்தை, அதாவது ஈடேற்றம் செய்யப்பட்ட உழைப்பை உயிருள்ள உழைப்புக்குப் பரிவர்த்தனை செய்து கொள்வதால் நிகழ்வது என்ன? ஒன்று, முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் அடிப்படையில் மட்டுமே தங்கு தடையின்றி வளர்ச்சி பெறக் கூடிய மதிப்பு விதி ஒழிந்து விடும்; அல்லது, நேரடியாகக் கூலியுழைப்பை ஆதாரமாய்க் கொண்ட முதலாளித்துவப் பொருளுற்பத்தியே ஒழிந்து விடும். 

சமமில்லாத அளவுகளை இப்படிச் சமமாக்குவது மதிப்பு நிர்ணயிப்பை ஒழித்து விடுவது மட்டுமல்ல. தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் இந்த முரண்பாட்டை விதியாக வகுத்துரைப்பதும் முடியாத காரியம்.

சரக்கின் மதிப்பு உள்ளபடியே அதில் ஈடேற்றம் செய்யப்பட்டுள்ள உழைப்பின் அளவால் நிர்ணயிக்கப்படாமல், அதன் உற்பத்திக்கு அவசியமான உயிருள்ள உழைப்பின் அளவால் நிர்ணயிக்கப்படுவதால் இந்த அபத்தம் பேரபத்தமாகிறது.

உழைப்பாளி விற்பது அவரது உழைப்புச் சக்தியையே. உழைப்பானது மதிப்பின் சாரமும், உள்ளார்ந்த அளவையும் ஆகும்; ஆனால் அதற்கென்று மதிப்பேதுமில்லை.

"உழைப்பின் மதிப்பு" என்ற தெரிவிப்பில், மதிப்பென்ற கருத்து அறவே இல்லாதொழிக்கப்படுவது மட்டுமல்ல. உள்ளபடியே நேர்முரணானதாகவும் மாற்றப்படுகிறது. இத்தெரிவிப்பு பூமியின் மதிப்பு என்பது போல் கற்பனையான ஒன்று. ஆயினும், இந்த கற்பனை தெரிவிப்புகள் உற்பத்தி உறவுகளிலிருந்தே உதிக்கின்றன. இந்த சாரம்ச உறவுகளின் புலப்பாட்டு வடிவங்களைக் குறிக்கும் கருத்தினங்கள். பலவும் அவற்றின் தோற்றத்தில் நேர்முரணாய்க் காட்சியளிப்பது அரசியல் பொருளாதாரம் தவிர ஒவ்வொரு விஞ்ஞானத்துக்கும் பிரசித்தமானதே. 

அரசியல் பொருளாதாரம் உழைப்பின் தற்செயலான விலைகளை ஊடகமாகக் கொண்டு உழைப்பின் மதிப்பை வந்தடையலாம் என்று நினைத்தது. வேறு எந்தச் சரக்கின் மதிப்பையும் போலவே, இந்த மதிப்பையும் உற்பத்திச் செலவால் நிர்ணயிக்க வேண்டியிருந்தது. ஆனால் உற்பத்திச் செலவு  ---தொழிலாளியின் உற்பத்திச் செலவு, அதாவது தொழிலாளியையே உற்பத்தி அல்லது மறு உற்பத்தி செய்யும் செலவு --- என்பது என்ன?

உழைப்பின் மதிப்பென்று பொருளாதார அறிஞர்கள் கூறுவது, உண்மையில் தொழிலாளியாக உருக்கொண்டுள்ள உழைப்புச் சக்தியின் மதிப்பே.

உழைப்புச் சக்தியின் ஒரு நாளைய மதிப்பு தொழிலாளியின் ஆயுளில் குறிப்பிட்ட கால அளவை வைத்துக் கணக்கிடப்படுகிறது; இந்தக் கால அளவு வேலை-நாளின் குறிப்பிட்ட கால அளவைப் பொறுத்தமைகிறது.

உழைப்பின் மதிப்பு என்பது உழைப்புச் சக்திக்கான ஒவ்வாத் தெரிவிப்பே ஆகும் என்பதால், உழைப்பின் மதிப்பு எப்போதுமே அது உற்பத்தி செய்கிற மதிப்பை விடக் குறைவாகவே இருக்கும். 

அடிமை உழைப்பில், அடிமையானவர் அவரது வாழ்வுச் சாதனங்களின் மதிப்பை மாற்றீடு செய்யும் ‍ --- ஆகவே உண்மையில் தனக்காக மட்டுமே வேலை செய்யும் --- வேலை-நாட் பகுதியும் கூட அடிமையுடமையாளருக்கான உழைப்பாகத் தோன்றுகிறது. அடிமையின் உழைப்பு முழுவதுமே ஊதியமிலா உழைப்பாகத் தோன்றுகிறது. மாறாக, கூலியுழைப்பில் உபரி..உழைப்பு அல்லது ஊதியமில்லா உழைப்பு என்பதே கூட ஊதிய உழைப்பாகத் தோன்றுகிறது. அங்கே சொத்துறவு அடிமை தனக்காகவே ஆறும் உழைப்பை மறைத்து விடுகிறது; இங்கே பண உறவு கூலித் தொழிலாளி ஊதியம் பெறாமலே ஆற்றும் உழைப்பை மறைத்து விடுகிறது.

எனவே உழைப்புச் சக்தியின் மதிப்பும் விலையும் கூலி வடிவமாக, அல்லது உழைப்பின் மதிப்பும் விலையுமாகவே மாற்றமடைவது எவ்வளவு தீர்மானகர முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்த புறத்தோற்ற வடிவம் உள்ளபடியே நிலவும் உறவை கண்ணிற்படாமல் மறைத்து, அந்த உறவிற்கு நேர்விரோதமான ஒன்றைக் காட்டுகிறது; கொச்சைப் பொருளாதார அறிஞர்களின் சப்பைக்கட்டுவாதத் தகிடுதத்தங்களுக்கெல்லாம் இந்த புறத்தோற்ற வடிவமே அடிப்படை.

தொல்சீர் அரசியல் பொருளாதாரம் தட்டுத் தடுமாறி உண்மை நிலவரத்தை அநேகமாய் வந்தடைந்த போதிலும், அதனை உணர்வு பூர்வமாய் வரையறுக்கவில்லை. முதலாளித்துவத் தோலைக் களைந்தெறியாமல் இருக்கும் வரை அதனால் இதைச் செய்ய முடியாது.

Saturday, November 16, 2013

பகுதி 5. அத்தியாயம் 18: பல்வேறு உபரி-மதிப்பு வீத சூத்திரங்கள்

உபரி-மதிப்பு வீதச் சூத்திரங்கள்:

1. உபரி-மதிப்பு / மாறும்-மூலதனம் (s / v) = உபரி-மதிப்பு / உழைப்புச் சக்தியின் மதிப்பு = உபரி-உழைப்பு / அவசிய-உழைப்பு 

2. உபரி-உழைப்பு / வேலை-நாள் = உபரி-மதிப்பு / உற்பத்திப் பொருளின் மதிப்பு = உபரி-உற்பத்திப் பொருள் / மொத்த உற்பத்திப் பொருள்

வேலை-நாள் 12 மணி நேரம், அவசிய உழைப்பு நேரம் 6 மணி நேரம், உழைப்புச் சக்தியின் மதிப்பு 3 ஷில்லிங் எனக் கொள்வோம்.

6 மணி நேர உபரி-உழைப்பு / 6 மணி நேர அவசிய-உழைப்பு = 3 ஷில்லிங் உபரி-மதிப்பு / 3 ஷில்லிங் மாறும் மூலதனம் = 100%

இரண்டாவது சூத்திரத்திலிருந்து பெறப்படுவது முற்றிலும் வேறானது:

6 மணி நேர உபரி-உழைப்பு / 12 மணி நேர வேலை-நாள் = 3 ஷில்லிங் உபரி-மதிப்பு / 6 ஷில்லிங் படைத்த மதிப்பு = 50%

இந்த வழிச் சூத்திரங்கள் மெய்யாகவே வெளியிடுவது, வேலை-நாள் அல்லது வேலை-நாளில் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு முதலாளிக்கும் தொழிலாளிக்குமிடையே பங்கிடப்படும் விதத்தையே. இந்த சூத்திரம் மூலதனம் தற்பெருக்கமடையும் வீதத்தின் நேரடித் தெரிவிப்புகளாகக் கொண்டால் உபரி-உழைப்பு அல்லது உபரி-மதிப்பு ஒரு போதும் 100 சதவீதத்தை எட்ட முடியாது என்ற தவறான விதி செல்லத்தக்கதாகி விடும். 100 சதவிகிதத்தை அடைய வேண்டுமானால் முழு நாளும் (அதாவது ஒரு வாரத்தின் அல்லது ஆண்டின் சராசரி நாளும்) உபரி உழைப்புக்கே போய் விட வேண்டுமானால், அவசிய உழைப்பு பூஜியமாகி விட வேண்டும். ஆனால், உபரி-உழைப்பு அவசிய-உழைப்பையே சார்ந்து இருப்பதால், அவசிய உழைப்பு மறைந்து போனால் உபரி உழைப்பும் மறைந்து போகிறது. 

உபரி-மதிப்பையும் உழைப்புச் சக்தியின் மதிப்பையும் படைக்கப்பட்ட மதிப்பின் பின்னங்களாக காட்டுவது முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையிலிருந்து உதித்தெழுகிற ஒரு பழக்கம். 

மூன்றாவது சூத்திரம் ஒன்று உண்டு.

உபரி-மதிப்பு / உழைப்புச் சக்தியின் மதிப்பு = உபரி-உழைப்பு / அவசிய-உழைப்பு = ஊதியமில்லா உழைப்பு / ஊதிய உழைப்பு 

மூலதனம் என்பது உழைப்பின் மீதான ஆதிக்கம் மட்டுமன்று. சாராம்சத்தில் அதி ஊதியமில்லா உழைப்பின் மீதான ஆதிக்கமாகும். உபரி-மதிப்பு அனைத்துமே சாராம்சத்தில் ஊதியமில்லா உழைப்பின் பொருளாக்கம்தான். 

பகுதி 5அத்தியாயம் 17: உழைப்புச் சக்தியின் விலையிலும் உபரி..மதிப்பிலும் பருமன் மாற்றங்கள்

உழைப்புச் சக்தியின் மதிப்பு சராசரித் தொழிலாளிக்கு வழக்கமாகத் தேவைப்படும் அவசிய வாழ்க்கைத் தேவைகளின் மதிப்பால் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த அவசிய தேவைகளின் அளவு குறிப்பிட்ட சமுதாயத்தில் குறிப்பிட்ட காலத்தில் தெரிந்ததே; எனவே இதனை மாறாப் பருமனாகக் கருதலாம். 

சரக்குகள் அவற்றின் மதிப்புக்கே விற்கப்படுகின்றன என்றும், உழைப்புச் சக்தியின் விலை எப்போதாவது அதன் மதிப்பை விட உயர்ந்தாலும், ஒரு போதும் அம்மதிப்பை விடக் குறைவதில்லை என்றும் அனுமானித்துக் கொள்வோம்.

உபரி-மதிப்பினதும் உழைப்புச் சக்தியின் விலையினதுமான ஒப்பீட்டு பருமன்கள் (1) வேலை..நாளின் கால அளவு (2) உழைப்பின் இயல்பான மும்முரம் அல்லது உழைப்பின் மும்முரப் பருமன் (3) உழைப்பின் உற்பத்தித் திறன் ஆகிய மூன்று காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன.

I வேலை-நாளின் கால அளவும் உழைப்பின் மும்முரமும் மாறாதவை. உழைப்பின் உற்பத்தித் திறன் மாறுவது.

1.உழைப்பின் உற்பத்தித் திறனும், அத்துடன் உற்பத்திப் பண்டத் திரளும், உற்பத்தி செய்யப்பட்ட தனிப்பட்ட சரக்கு ஒவ்வொன்றின் விலையும் எப்படி மாறுபட்டாலும், குறிப்பிட்ட கால அளவுள்ள வேலை-நாள் எப்போதுமே ஒரே அளவு மதிப்பைப் படைக்கிறது.

2. உபரி-மதிப்பும் உழைப்புச் சக்தியின் மதிப்பும் எதிரெதிர் திசைகளில் மாறுபடுகின்றன. உழைப்பின் உற்பத்தித் திறனிலான மாறுபாடு -- அதன் பெருக்கம் அல்லது சுருக்கம் -- உழைப்புச் சக்தியின் மதிப்பில் எதிர்த் திசையிலும், உபரி-மதிப்பில் அதே திசையிலும் மாறுபாட்டைத் தோற்றுவிக்கிறது. 

உபரி-மதிப்பு, உழைப்புச் சக்தியின் மதிப்பு ஆகியவற்றின் கூட்டுத் தொகை வேலை-நாள் படைக்கிற மதிப்பாகும். உபரி-மதிப்பின் அறுதிப் பருமனிலோ, அல்லது உழைப்புச் சக்தியினது மதிப்பின் அறுதிப் பருமனிலோ மாற்றம் ஏதும் ஏற்பட வேண்டுமானால், அதே போது அவற்றின் ஒப்பீட்டுப் பருமன்களிலும் -- அதாவது ஒன்றுக்கொன்று உள்ள ஒப்பளவிலும் -- மாற்றம் ஏற்பட்டாக வேண்டும்.  அவை ஒருங்கே உயர்வதோ குறைவதோ சாத்தியமில்லை. 

உழைப்பின் உற்பத்தித் திறன் உயராமல் உழைப்புச் சக்தியின் மதிப்பு குறைய முடியாது; ஆதலால் உபரி-மதிப்பு உயர முடியாது. உழைப்பின் உற்பத்தித் திறனிலான அதிகரிப்பு உழைப்புச் சக்தியின் மதிப்பில் வீழ்ச்சியையும், அதன் விளைவாக உபரி-மதிப்பில் உயர்வையும் தோற்றுவிக்கிறது. மறு புறம் இவ்வுற்பத்தித் திறனிலான குறைவோ உழைப்புச் சக்தியின் மதிப்பில் உயர்வையும், உபரி-மதிப்பில் வீழ்ச்சியையும் தோறுவிக்கிறது.

உழைப்பின் உற்பத்தித் திறனில் குறிப்பிட்ட மாற்றத்தின் விளைவாக உபரி-மதிப்பில் ஏற்படும் அதிகரிப்பு அல்லது குறைவின் விகிதம் வேலை-நாளில் உபரி-மதிப்பாக உருப்பெறும் பகுதியின் ஆரம்பப் பருமனைப் பொறுத்ததாகும்; அந்த நாட்பகுதி எந்த அளவுக்குச் சிறியதோ, மாற்றத்தின் விகிதம் அந்த அளவுக்குப் பெரியது; அந்த நாட்பகுதி எந்த அளவுக்குப் பெரியதோ, மாற்றத்தின் விகிதம் அந்த அளவுக்குச் சிறியது.

3. உபரி-மதிப்பில் ஏற்படும் அதிகரிப்பு அல்லது குறைவு, எப்போதுமே, இதற்கிணையாய் உழைப்புச் சக்தியின் மதிப்பில் ஏற்படும் குறைவு அல்லது அதிகரிப்பின் விளைவாகுமே தவிர, காரணமாகாது. 

கீழ் வரம்பாகக் கொண்டு உழைப்புச் சக்தியின் விலையில் ஏற்படும் வீழ்ச்சியின் அளவானது, ஒரு புறத்தில் மூலதனத்தின் நெருக்குதலுக்கும் மறு புறத்தில் தொழிலாளி காட்டும் எதிர்ப்புக்கும் உள்ள ஒப்பீட்டு வலுவைப் பொறுத்ததே. 

உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரித்துக் கொண்டிருக்கும்போது, உழைப்புச் சக்தியின் விலை மேலும் மேலும் சரிந்து செல்வதும், ஆயினும் இதனுடன் கூடவே தொழிலாளியின் வாழ்வுச் சாதனங்களது திரள் இடைவிடாது பெருகிச் செல்வதும் சாத்தியமாகிறது. ஆனால் இந்நிலையிலும் கூட, உழைப்புச் சக்தியின் மதிப்பு குறைவதன் விளைவாய் உபரி-மதிப்பு அதற்கிணையாக உயரும். இவ்வாறு தொழிலாளியின் நிலைக்கும் முதலாளியின் நிலைக்கும் இடையிலான பெரும் பிளவு விரிந்த வண்ணமிருக்கும். 

இலாப வீதம் என்பது முன்னீடு செய்யப்பட்ட மொத்த மூலதனத்தோடு உபரி-மதிப்புக்குள்ள விகிதமாகும்; உபரி-மதிப்பு வீதம் என்பது அந்த மூலதனத்தின் மாறும் பகுதியோடு உபரி-மதிப்பிற்குள்ள விகிதமாகும். 

II வேலை-நாள் மாறாதது. உழைப்பின் உற்பத்தித் திறன் மாறாதது. உழைப்பின் மும்முரம் மாறுவது.

ஒரே கால அளவு கொண்ட இரு வேலை-நாட்களில் அதிக மும்முரமான உழைப்புடைய வேலை-நாள் அவ்வளவு அதிக மும்முரமில்லாத உழைப்புடைய வேலை-நாளை விட அதிக உற்பத்திப் பொருட்களில் உருக் கொள்கிறது. 

உழைப்பின் மும்முரம் அதிகமாகும் போது, அந்த மதிப்பு மாறாதிருக்கிறது; ஏனென்றால் ஒவ்வொரு பண்டத்துக்கும் முன் போல் அதே அளவு உழைப்பு செலவாகிறது. இங்கே உற்பத்திப் பண்டங்கள் ஒவ்வொன்றினதும் விலைகள் குறையாமல் உற்பத்திப் பண்டங்களின் தொகை அதிகமாவதைக் காண்கிறோம்.

ஆனால் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்போது குறிப்பிட்ட மதிப்பு முன்னிலும் அதிகமான உற்பத்திப் பண்ட திரளில் நிரவப்படுகிறது.

படைக்கப்படும் மதிப்பானது, உழைப்பின் மும்முரம் சமுதாயத்தில் அதன் இயல்பான மும்முரத்திலிருந்து விலகிச் செல்லும் அளவுக்கேற்ப மாறுபடுகிறது. எனவே குறிப்பிட்ட வேலை-நாள் முன் போல் மாறா மதிப்பைப் படைப்பதில்லை, மாறும் மதிப்பையே படைக்கிறது. 

இந்த மதிப்பு பிரிக்கப்பட்டு வருகிற இரு பகுதிகள் --- அதாவது உழைப்புச் சக்தியின் விலை, உபரி..மதிப்பு இரண்டுமே --- ஏககாலத்தில் சமமாகவோ சமமின்றியோ அதிகமாகலாம் என்பது தெளிவு.

உழைப்புச் சக்தியின் விலையிலான உயர்வு உழைப்புச் சக்தியின் மதிப்புக்கு மேல் விலை உயர்ந்திருப்பதைக் குறிக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. மாறாக, விலை உயர்வானது மதிப்பு வீழ்ச்சியோடு சேர்ந்து வரலாம். உழைப்புச் சக்தியின் விலையிலான உயர்வு அதன் அதிகரித்த தேய்மானத்துக்கு ஈடாகாத போதெல்லாம் இவ்வாறு நிகழ்கிறது. 

உழைப்பின் மும்முரம் ஒவ்வொரு தொழிற் கிளையிலும் ஏக காலத்திலும் சரிநிகராகவும் அதிகரித்தால், புதிய, உயர்ந்த மும்முர நிலை சமுதாயத்துக்குரிய இயல்பான நிலையாக மாறி விடும்; ஆகவே அது கணக்கில் கொள்ளப்படாது. ஆனால், அப்போதும் கூட உழைப்பின் மும்முரம் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறாக இருக்கும்; மதிப்பு விதியை சர்வதேச அளவில் பிரயோகிக்கையில் விளைவுகள் வெவ்வேறாகவே இருக்கும். ஒரு நாட்டின் கூடுதலான மும்முரமுள்ள வேலை-நாள் இன்னொரு நாட்டின் குறைவான மும்முரமுள்ள வேலை-நாளை விட அதிகப் பணத்தொகையால் குறிக்கப்படும்.

 III உழைப்பின் உற்பத்தித் திறனும் மும்முரமும் மாறாதவை. வேலை-நாளின் கால அளவு மாறுவது.

1. வேலை-நாள் அதன் கால அளவுக்கேற்ற விகிதத்தில் அதிகமான அல்லது குறைவான அளவு மதிப்பைப் படைக்கிறது. இவ்வாறு அது படைப்பது மதிப்பின் மாறுபடும் அளவே தவிர, மாறா அளவன்று.

2. உபரி-மதிப்பின் பருமனுக்கும் உழைப்புச் சக்தியினது மதிப்பின் பருமனுக்கும் இடையிலான உறவில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் உபரி-உழைப்பின், ஆதலால் உபரி-மதிப்பின் அறுதிப் பருமனிலான மாற்றத்திலிருந்து பிறக்கிறது. 

3. உபரி-உழைப்பின் நீட்டிப்பு உழைப்புச் சக்தியினது தேய்மானத்தின் மீது ஏற்படுத்தும் பிரதிபலிப்பின் விளைவாக மட்டுமே உழைப்புச் சக்தியின் அறுதி மதிப்பு மாற முடியும். இந்த அறுதி மதிப்பில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் உபரி-மதிப்பின் பருமலினான மாற்றத்தின் விளைவே தவிர, ஒருபோதும் அதன் காரணமன்று. 

வேலை..நாளை குறுக்குவதால் உழைப்புச் சக்தியின் மதிப்பிலோ, அவசிய..உழைப்பு நேரத்திலோ மாற்றம் ஏற்படுவதில்லை. உபரி..உழைப்பும் உபரி..மதிப்புமே குறைகின்றன. உபரி..மதிப்பின் அறுதிப் பருமனோடு கூடவே, அதன் ஒப்பீட்டுப் பருமனும் அதாவது மாறாதிருக்கும் பருமனையுடைய உழைப்புச் சக்தியின் மதிப்போடு ஒப்பளவிலான அதன் பருமனும் வீழ்கிறது. 

வேலை..நாளை நீட்டுவதால் உபரி..மதிப்பு அறுதியாகவும் ஒப்பளவிலும் அதிகரிக்கிறது. உழைப்புச் சக்தியின் மதிப்பில் அறுதி மாற்றம் ஏதும் இல்லையென்றபோதிலும் ஒப்பளவிலான வீழ்ச்சி ஏற்படுகிறது.  ஒரு நாள் உழைப்பு உருக்கொண்டிருக்கும் மதிப்பு அந்த நாளின் கால அளவுக்கேற்ப அதிகரிக்கிறது என்பதால், உபரி..மதிப்பும் உழைப்புச் சக்தியின் விலையும் சம அளவுகளிலோ சமமில்லா அளவுகளிலோ ஏககாலத்தில் அதிகரிக்கலாம் என்பது தெளிவு. 

IV ஒரே நேரத்தில் உழைப்பின் கால அளவிலும் உற்பத்தித் திறனிலும், மும்முரத்திலும் மாறுபாடுகள்.

உழைப்பின் உற்பத்தித் திறன் குறைகிற அதி நேரத்தில் வேலை-நாளை நீட்டுதல் :

உழைப்பின் உற்பத்தித் திறன் குறைகிற அதே நேரத்தில் வேலை..நாளை நீட்டும் போது, உபரி-மதிப்பின் ஒப்பீட்டுப் பருமன் குறைந்தாலும் அதன் அறுதிப் பருமன் மாறாது இருக்கலாம்; அதன் அறுதிப் பருமன் அதிகரித்தாலும் ஒப்பீட்டுப் பருமன் மாறாது இருக்கலாம்; போதுமான அளவு வேலை..நாளை நீட்டினால், இரண்டுமே அதிகரிக்கலாம்.

உழைப்பின் மும்முரமும் உற்பத்தித் திறனும் அதிகரிக்கிற அதே நேரத்தில் வேலை..நாளைக் குறுக்குதல்:

உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரித்தாலும், மும்முரம் அதிகரித்தாலும், விளைவு ஒரே மாதிரியானதே. இரண்டில் எது அதிகரித்தாலும், குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்களின் திரள் அதிகமாகிறது. எனவே, தொழிலாளிக்கு அவரது வாழ்வு சாதனங்களையோ அவற்றின் சமதையையோ உற்பத்தி செய்ய தேவைப்படும் வேலை-நாட்பகுதி குறுகிப் போகிறது. வேலை-நாளின் குறைந்தபட்ச கால அளவு இந்த அவசியமான, ஆனால் சுருங்கத்தக்க வேலை-நாட்பகுதியால் நிர்ணயிக்கப்படுகிறது. வேலை-நாள் முழுவதுமே இந்தப் பகுதியின் கால அளவாகச் சுருங்குவதானால், உபரி-உழைப்பு மறைந்து போய்விடும்; மூலதனத்தின் ஆளுகையில் இப்படி நிகழ வாய்ப்பே இல்லை. முதலாளித்துவப் பொருளுற்பத்தி வடிவத்தை இல்லாதொழிப்பதன் முலம் மட்டுமே, வேலை..நாளின் கால அளவை அவசிய-உழைப்பு நேரமாகக் குறைக்கலாம். ஆனால் அந்நிலையிலும் கூட அவசிய-உழைப்பு நேரத்தின் வரம்புகள் விரிந்து செல்லும். ஒரு புறம் ஏனெனில், "வாழ்வுச் சாதனங்கள்" என்ற கருத்து கணிசமாக விரிவடையும்; தொழிலாளி முற்றிலும் வேறுவிதமான வாழ்க்கைத் தரத்தை கோருவார். மறுபுறம் ஏனெனில், இப்போது உபரி- உழைப்பாக இருப்பதன் ஒரு பகுதி -- அதாவது சேம வைப்புக்கும் திரட்டலுக்குமான நிதியை உண்டாக்கும் உழைப்பு -- அப்போது அவசிய..உழைப்பாகக் கணக்கிடப்படும்.

உழைப்பின் உற்பத்தித் திறன் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகரிக்கிறதோ, வேலை-நாளை அவ்வளவுக்கு அவ்வளவு குறைக்கலாம். வேலை-நாள் எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கப்படுகிறதோ, உழைப்பின் மும்முரத்தை அவ்வளவுக்கு அவ்வளவு அதிகரிக்கலாம். சமூகக் கண்ணோட்டத்தில், உழைப்புச் சிக்கனம் அதிகரிக்கும் அதே விகிதத்தில் உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது; உற்பத்திச் சாதனங்களின் சிக்கனம் மட்டுமல்ல, பயனற்ற உழைப்பை முற்றாகத் தவிர்ப்பதும் கூட உழைப்புச் சிக்கனம் என்பதில் அடங்கும். முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை ஒரு புறம் ஒவ்வொரு தனித்தொழிலிலும் சிக்கனத்தை அமலாக்கும் அதே நேரத்தில் மறுபுறம், தன் அராஜகப் போட்டி முறையால், உழைப்புச் சக்தியும் சமுதாய உற்பத்திச் சாதனங்களும் அக்கிரமமான விதத்தில் விரயம் செய்யப்படும் நிலையைத் தோற்றுவிக்கிறது. இப்போது இன்றியமையாதவை என்றாலும், தம்மளவில் தேவையில்லாத உத்தியோகங்கள் ஏராளமாய் தொற்றுவிக்கப்படுவது பற்றி சொல்லவே வேண்டாம்,.

உழைப்பின் மும்முரமும், உற்பத்தித் திறனும் குறிப்பிட்டதாய் இருக்கையில், வேலையானது சமுதாயத்தின் உடல்திறனுள்ள உறுப்பினர்கள் அனைவரிடையிலும் மேலும் மேலும் சமமாய்ப் பிரிக்கப்படுவதற்கேற்ப, இயற்கையால் அவசியமாக்கப்படும் உழைப்பின் சுமையை சமுதாயத்தின் குறிப்பிட்ட ஒரு அடுக்கு தன் தோளிலிருந்து பிறிதொரு அடுக்கின் தோளுக்கு மாற்ற மேலும் மேலும் சக்தியற்றதாக்கப்படுவதற்கேற்ப, பொருளுற்பத்திக்காக சமுதாயம் செலவிடவேண்டிய நேரம் மேலும் மேலும் குறைந்து செல்லும்; ஆதலால் தனியாள் அறிவுத் துறையிலும் சமூகத் துறையிலும் தடையின்றி வளர்ச்சி பெறுவதற்குக் கிடைக்கும் நேரம் மேலும் மேலும் கூடிச் செல்லும். ஆனால், வேலை..நாள் இப்படிக் குறுக்கப்படுவதற்கு ஓர் இறுதி வரம்பு உண்டு; உழைப்பு சகலருக்குமான ஒன்றாகும் போது இந்த வரம்பு வரப்பெறுகிறது. முதலாளித்துவ சமுதாயத்தில், பெருந்திரளான மக்களின் ஆயுட்காலம் முழுவதையும் உழைப்பு நேரமாக மாற்றுவதன் மூலம், ஒரு வர்க்கத்துக்கு வெட்டிப் பொழுது கிடைக்க வழி செய்யப்படுகிறது. 

Friday, November 15, 2013

பகுதி 5: அறுதி உபரி..மதிப்பின் உற்பத்தியும் ஒப்பீட்டு உபரி..மதிப்பின் உற்பத்தியும். அத்தியாயம் 16: அறுதி உபரி..மதிப்பும் ஒப்பீட்டு உபரி..மதிப்பும்

உழைப்பு நிகழ் முறை முற்றிலும் தனிப்பட்ட முறையிலானதாய் உள்ள வரை, தனியொரு உழைப்பாளி -- பிற்பாடு தனித்தனியாகிற -- எல்லாப் பணிகளையும் தன்னில் ஒன்றுபடுத்துகிறார்.

இயற்கையான உடம்பில் மூளையும் கையும் ஒன்றுக்கொன்று பணிவிடை செய்வது போல, உழைப்பு நிகழ்முறை கையுழைப்பை மூளையுழைப்புடன் ஒன்றுபடுத்துகிறது. 

உற்பத்திப் பண்டமானது தனியாளின் நேரடி உற்பத்தியாக இல்லாது போய், கூட்டுத் தொழிலாளியால் பொதுவில் உற்பத்தி செய்யப்படும் போது சமுதாய உற்பத்தியாகி விடுகிறது. உற்பத்தி திறனுள்ள விதத்தில் உழைத்திட வேண்டுமானால், நேரிடையாகக் கையுழைப்பில் ஈடுபட இனியும் அவசியமில்லை; கூட்டுத் தொழிலாளியின் அங்கமாய் அமைந்து, அந்த கூட்டின் சார்நிலைப் பணிகளில் ஒன்றை நிறைவேற்றினாலே போதும். முழு மொத்தமாய் பரிசீலிக்கும்போது கூட்டுத் தொழிலாளிக்கு பொருந்தும் இந்த விளக்கம் இந்தக் கூட்டின் ஒவ்வொரு உறுப்பினரையும் தனித்தனியாக எடுத்துக் கொள்ளும் போது பொருந்துவதில்லை. 

முதலாளித்துவப் பொருளுற்பத்தி என்பது சரக்குகளின் உற்பத்தி மட்டுமல்ல; சாராம்சத்தில் அது உபரி-மதிப்பின் உற்பத்தியாகும். முதலாளிக்காக உபரி-மதிப்பை உற்பத்தி செய்து, மூலதனத்தின் தற்பெருக்கத்துக்காக இவ்விதம் வேலை செய்கிற தொழிலாளி மட்டுமே திறனுடைத் தொழிலாளி ஆவார்.

திறனுடைத் தொழிலாளி என்ற கருத்து, வேலைக்கும் பயனுள்ள விளைவுக்கும் இடையிலான, உழைப்பாளிக்கும் உழைப்பின் உற்பத்திப் பொருளுக்கும் இடையிலான உறவை மட்டுமின்றி, ஒரு குறிப்பான, சமூக வழிப்பட்ட உற்பத்தி உறவையும் -- வரலாற்று வழியில் பிறந்திருப்பதும், உழைப்பாளியை உபரி-மதிப்பை படைக்கும் நேரிடைச் சாதனமாக முத்திரையிடுவதுமான உறவை -- குறிக்கிறது.  

தொழிலாளி தனது உழைப்புச் சக்தியின் மதிப்புக்கு ஈடான சமதையை மட்டும் உற்பத்தி செய்வதற்கும் அப்பால் வேலை-நாளை நீட்டி, அந்த உபரி-உழைப்பை மூலதனம் தனதாக்கிக் கொள்வதுதான் அறுதி உபரி..மதிப்பின் உற்பத்தி. அது முதலாளித்துவ அமைப்பின் பொதுவான அடிநிலையாகவும், ஒப்பீட்டு..உபரி மதிப்பின் உற்பத்திக்கான தொடக்க நிலையாகவும் அமைகிறது.  

ஒப்பீட்டு உபரி-மதிப்பின் உற்பத்தி உழைப்பின் தொழில்நுட்ப நிகழ்முறைகளையும், சமுதாயத்தின் இயைபையும் அடியோடு புரட்சிகரமாக மாற்றியமைக்கிறது. உழைப்பு மூலதனத்துக்கு வடிவ அளவில் கீழ்ப்படுவதன் (formal subjection of labour to capital ) அடிப்படையில் தன்னியல்பாய் உருவாகி வளர்கிறது. இந்த வளர்ச்சியின் போது, உழைப்பு மூலதனத்துக்கு வடிவ அளவில் மட்டும் கீழ்ப்படுவதற்கு பதிலாய் மெய்யாகவே கீழ்ப்படலாகிறது.

இதற்கு முன்பான இடைநிலையில் கடுவட்டி மூலதனம் அல்லது வணிக மூலதனம் ஒட்டுண்ணி போல் உற்பத்தியாளர்களை உறிஞ்சுகிறது. சில இடைநிலை வடிவங்கள் நவீனத் தொழில் துறையின் பின்னணியில் -- முற்றிலும் மாறிப்போன முக லட்சணத்துடன்தான் என்றாலும் -- இங்குமங்குமாய் தலைத் தூக்குகின்றன.

திட்டவட்டமான முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை ஓர் உற்பத்திக் கிளை முழுவதையும் வெற்றி கொண்டதுமே, ஒப்பீட்டு உபரி-மதிப்பை உற்பத்தி செய்வதற்கான சாதனமாக மட்டும் இருந்த நிலை மறைகிறது; எல்லா முக்கிய கிளைகளையும் அது வெற்றி கொள்ளும் போது, இந்நிலை மறைந்தே போகிறது. இப்போது அது பொதுவானதும், சமுதாயத்தில் மேலோங்கியதுமான பொருளுற்பத்தி வடிவமாகி விடுகிறது.

ஒரு நோக்கு நிலையில், அறுதி உபரி-மதிப்புக்கும் ஒப்பீட்டு உபரி..மதிப்புக்கும் இடையிலான வேறுபாடு என்பது வெறும் மாயத் தோற்றமே எனலாம்.

உழைப்பின் உற்பத்தித் திறனும், அதன் இயல்பான மும்முரமும் குறிப்பிட்டதாய் இருக்க, வேலை..நாளை உள்ளபடியே நீட்டுவதன் மூலம் மட்டுமே உபரி-மதிப்பு விகிதத்தை உயர்த்தமுடியும்; மறுபுறம், வேலை..நாளின் கால அளவு குறிப்பிட்டதாய் இருக்க, வேலை..நாளின் கூறுகளது -- அதாவது அவசிய உழைப்பினதும், உபரி..உழைப்பினதும் -- ஒப்பீட்டு பருமன்களிலான மாற்றத்தின் மூலம் மட்டுமே உபரி-மதிப்பு வீதத்தை உயர்த்த முடியும்; கூலியானது உழைப்புச் சக்தியின் மதிப்புக்கும் கீழே வீழாதிருக்க வேண்டுமானால், உழைப்பின் உற்பத்தித் திறனிலோ மும்முரத்திலோ மாற்றம் செய்தால்தான் இந்த ஒப்பீட்டு பருமன்களை மாற்ற முடியும்.

தொழிலாளிக்கு அவரது நேரம் முழுவதும் அவருக்கென்றும் அவரது இனத்துக்கென்றும் அவசிய வாழ்வுச் சாதனங்களை உற்பத்தி செய்து கொள்வதற்குத் தேவைப்படுமானால், மற்றவர்களுக்கு இலவசமாக வேலை செய்ய அவருக்கு நேரம் இருக்காது. பெரும் சொத்துடையாளர் வர்க்கமே இருக்காது.

ஒருவனின் உபரி-உழைப்பு பிறிதொருவனின் வாழ்க்கைத் தேவையாகிற நிலைமை பிறப்பது, மனிதர்கள் மிருகங்களின் தரத்துக்கு மேலாக உயர்ந்த பிறகுதான்; எனவே, அவர்களது உழைப்பு ஓரளவுக்கு சமுதாய உழைப்பான பிறகுதான்.

தேவைகள் அவற்றை நிறைவு செய்யும் சாதனங்களோடும் அச்சாதனங்களைக் கொண்டும் வளர்கிறவை. ஆரம்பகாலத்தில், சமுதாயத்தில் பிறரது உழைப்பை கொண்டு வாழும் பிரிவு, நேரடி உற்பத்தியாளரின் பெருந்திரளோடு ஒப்பிடுமிடத்து, மிகச் சிறியதே. உழைப்பின் உற்பத்தித் திறனிலான முன்னேற்றத்தோடு கூடவே, சமுதாயத்தின் அந்த சிறு பிரிவு அறுதியாகவும், ஒப்பளவிலும் அதிகமாகிறது.

கட்டாயம் நிறைவு செய்தாக வேண்டிய இயற்கைத் தேவைகளின் தொகை எவ்வளவுக்கு எவ்வளவு சொற்பமோ, இயற்கையான மண் வளமும்சாதகமான தட்பவெப்ப நிலைமைகளும் எவ்வள்வுக்கெவ்வளவு அதிகமோ, உற்பத்தியாளரின் பராமரிப்புக்கும் மறுவுற்பத்திக்கும் அவசியமான உழைப்பு நேரம் அவ்வளவுக்கு அவ்வளவு குறைவாகும். எனவே அவரது உழைப்பில் அவருக்கானது போக பிறருக்கென எஞ்சுவது அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாயிருக்க முடியும்.

புராதன எகிப்தின் பிரம்மாண்டமான வடிவமைப்புகள், அதன் மக்கள் தொகையினது அளவின் விளைவு என்பதைக் காட்டிலும், அந்த மக்கள் தொகையில் இலவசமாக இவ்வேலைக்கு தங்குதடையின்றிக் கிடைத்த பெரும் விகிதத்தின் விளைவென்றே சொல்ல வேண்டும். அவசிய..உழைப்பு நேரம் குறைவதற்கேற்ப உபரி..உழைப்பில் அதிகமாய் ஈடுபடமுடிவது எப்படி தனிப்பட்ட உழைப்பாளிக்குப் பொருந்துமோ, அவ்வாறே உழைக்கும் மக்கள் திரளுக்கும் பொருந்தும்.  அவர்களில் அவசிய வாழ்வுச் சாதனங்களிம் உற்பத்திக்குத் தேவைப்படும் பகுதியினர் எவ்வளவு குறைவோ அவ்வளவு அதிகமான மற்றொரு பகுதியினரை வேறு வேலையில் ஈடுபடச் செய்யலாம்.

முதலாளித்துவப் பொருளுற்பத்தி கோலோச்சுகையில் மற்றெல்லா நிலைமைகளும் மாறாதிருக்க, வேலை நாளின் கால அளவு குறிப்பிட்டதாய் இருக்க உபரி-உழைப்பின் அளவு உழைப்பின் பௌதிக நிலைமைகளுக்கேற்ப, குறிப்பாக மண் வளத்துக்கு ஏற்ப மாறுபடும்.

இந்த பொருளுற்பத்தி முறை இயற்கையை மனிதன் ஆள்வதை அடிப்படையாகக் கொண்டதாகும்.

மூலதனத்தின் தாய் நாடாக இருப்பது மித வெப்ப மண்டலமே அன்றி பூத்துக் குலுங்கும் வெப்பமண்டலங்கள் அல்ல.

இந்தியாவிலும் பாரசீகத்திலும் செயற்கையாய் அமைக்கப்பட்ட பாசனக் கால்வாய்கள் நிலத்துக்கு அவசியமான நீரை அளிப்பதுடன், மலைகளிலிருந்து கிடைக்கும் வண்டல் மண் உருவில் தாது உரங்களையும் அந்நீருடன் சேர்த்துக் கொண்டுவந்து கொடுக்கின்றன.

சாதகமான இயற்கை நிலைமைகளால் மட்டும் எதார்த்தத்தில் உபரி-உழைப்பும் ஆதலால் உபரி-மதிப்பு மற்றும் உபரி-உற்பத்திப் பொருளும் கிடைத்து விடுவதில்லை; இவை கிடைப்பதற்கான சாத்தியப்பாடுதான் உண்டாகிறது. உழைப்பின் இயற்கை நிலைமைகளிலான வேறுபாட்டின் பயனாய், ஒரே அளவிலான உழைப்பு வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறான தேவைகளின் திரளகளை நிறைவு செய்கிறது. ஆதலால் ஏனைய அமிசங்கள் ஒத்திருக்கும் நிலைமைகளில் அவசிய..உழைப்பு நேரம் வேறுபடுகிறது.

தொழிலாளி உபரி-உழைப்பின் வடிவில் விலை கொடுத்தே தனது ஜீவனத்துக்காக உழைக்கிற உரிமையை வாங்க வேண்டியிருக்கும்.

தொழிலாளி வாரந்தோறும் ஆறு நாள் வேலை செய்ய வேண்டியிருப்பதற்கும், ஐந்து நாள் உபரி..உழைப்பைத் தர வேண்டியிருப்பதற்கும் இயற்கையின் வண்மை விளக்கமாவதில்லை. அவரது அவசிய..உழைப்பு நேரம் வாரத்துக்கு ஒரு  நாளாக வரம்புக்குட்படுவதற்கே அது விளக்கமாகும்.

உழைப்பின் சமூக உற்பத்தித் திறன் -- வரலாற்று வழியில் வளர்ச்சியடைந்த இந்த சமூக உற்பத்தித் திறன் -- மட்டுமல்லாமல், அதன் இயற்கையான உற்பத்தித் திறனும் அந்த உழைப்பு இணைக்கப் பெறும் மூலதனத்தின் உற்பத்தித் திறனாய்ப் பார்வைக்குத் தெரிகிறது.

ரிகார்டோ ஒருபோதும் உபரி..மதிப்பின் மூலாதாரம் (origin of surplus-value ) குறித்துக் கவலைப்படவில்லை. அவர் அதை முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையில் உள்ளார்ந்த ஒன்றெனக் கருதுகிறார்; அவரது பார்வையில் இவ்வுற்பத்தி முறையே சமுதாயப் பொறுளுற்பத்தியின் இயற்கை வடிவமாகும்.

உழைப்பின் உற்பத்தித் திறனே இலாபத்தின் (உபரி-மதிப்பின் எனக் கொள்க) மூலகாரணமென்று அவரது மரபினர் வெளிப்படையாகவே பறைசாற்றினர். எப்படியும் இது, வணிக ஊக்கவாதிகளோடு ஒப்பிடுங்கால் முன்னேற்றமே.

உபரி-மதிப்பின் மூலாதாரம் பற்றிய பிரச்சினையை ஆழக் கிளறுவது ஆபத்தாகவே முடியும் என்பதை இந்த முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்கள் சரியாகவே உள்ளூர உணர்ந்திருக்கிறார்கள்.