Friday, January 31, 2014

பாகம் 2 பகுதி 1 அத்தியாயம் 1 பண-மூலதனத்தின் சுற்று. மூன்றாம் கட்டம்: C' - M'

சரக்குகள் உபரி-மதிப்பை உற்பத்தி செய்து முடித்த மூலதன-மதிப்புக்கான பணிவழிப்பட்ட நிலவல் வடிவமாய் சரக்கு-மூலதனம் (commodity capital) ஆகின்றன. சரக்கு உற்பத்தியானது சமுதாயம் முழுவதிலும் முதலாளித்துவ முறையில் நடைபெற்றால் எல்லா சரக்குகளும் ஆரம்பத்திலிருந்தே சரக்கு-மூலதனத்தின் கூறுகளாய் இருக்கும்.

சரக்கு வடிவிலான மூலதனம் சரக்காகச் செயல்படவேண்டும். மூலதனமாய் அமையும் பண்டங்கள் விசேஷமாக சந்தைக்கென்றே உற்பத்திச் செய்யப்படுகிறவை. அவற்றை விற்றுப் பணாமாக உருமாற்ற வேண்டும். எனவே அவற்றுக்கு C - M என்னும் நிகழ்முறை நடைபெற்றாக வேண்டும்.

இந்த சரக்கின் விலை C - M என்ற விற்றலின் மூலமாக பணமாக வரப்பெறுவதாகக் கொள்வோம். சரக்குச் சுற்றோட்டச் செயல்கள் யாவற்றிலும் மிகச் சாதாரணமான இச்செயலை அதேபோது மூலதனப் பணியாக்குவது வடிவத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்தான். வடிவில் முன்பு சரக்காக இருந்தது, இபோது பணமாகியிருக்கிறது. இவ்வாறு  M - C என்னும் முதல் கட்டத்துக்கும் C - M என்னும் கடைசி கட்டத்துக்குமிடையே மிகப் பெரிய வேறுபாடு இருப்பது தெளிவகவே தெரிகிறது. அங்கே முன்னீடு செய்த பணம் பண-மூலதனமாகச் செயல்படுகிறது; ஏனென்றால் சுற்றோட்டத்தின் வாயிலாக அது குறிப்பிட்ட பயன்-மதிப்புள்ள சரக்குகளாக உருமாற்றம் பெறுகிறது. இங்கே, சரக்குகள் அவற்றின் சுற்றோட்டம் ஆரம்பமாகு முன்னர் உற்பத்தி நிகழ்முறையிலிருந்து மூலதனத் தன்மை வாய்ந்தனவாய் வெளிவரும் அளவுக்கு மட்டுமே மூலதனமாகப் பயன்பட முடியும்.

உற்பத்தி நிகழ்முறையின் போது உழைப்பாளர்கள் உபரி-உற்பத்தியைப் படைக்கிறார்கள்.முதலாவதாக, உற்பத்தி செய்யப்பட சரக்கில் உற்பத்தியின் போது நுகரப்பட்ட திறனுடை-மூலதனமாகிய P இன் மதிப்பு அடங்கியிருக்கிறது. இரண்டாவதாக, உபரி-மதிப்பும்  அடங்கியுள்ளது. இப்போது சரக்கின் மதிப்பு C, இந்த Cஇல் ஏற்பட்ட பெருக்கம் ஆகிய இரண்டின் கூட்டுத் தொகைக்குச் சமம். இந்த பெருக்கத்தை cஎனக் குறிக்கலாம், ஏனெனில் இந்தப் பெருக்கம் ஆரம்பத்திலிருந்தே Cஐப்போல் அதே சரக்கு-வடிவில்தான் இருக்கிறது. ஆகவே இப்போது அதன் மதிப்பை C+c=C'  என்பது குறிக்கிறது.

வேறெந்தC இன் மதிப்புப் பருமனைபயும் போலவே, இந்த மதிப்புப் பருமனும் இதில் உருக்கொண்ட உழைப்பின் அளவாலேயே நிர்ணயிக்கப்படுகிறது. அதன் ஒப்பீட்டு மதிப்புப் பருமனே, அதாவது அதன் உற்பத்தியின் போது நுகரப்பட்ட மூலதனமான Pஇன் மதிப்புப் பருமனுடன் ஒப்பிடுகையில் அதற்குள்ள மதிப்புப் பருமனே Cஐ C'ஆக மாற்றுகிறது. இந்த Pஇன் மதிப்பும், அத்துடன் கூடவே திறனுடை-மூலதனம் வழங்கிடும் உபரி-மதிப்பும் C'இன் மதிப்பில் அடங்கியுள்ளன. C'இன் மதிப்பு மூலதன-மதிப்பின் மதிப்பைக் காட்டிலும் cஎன்னும் உபரி-மதிப்பின் அளவு கூடுதலாய், மிகுதியாய் இருக்கிறது.

முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிகழ்முறையின் உற்பத்திப் பொருளாய் இருப்பதால்தான் அது இப்படி ஆகிறது. C' ஆனது ஒரு மதிப்புறவைத் தெரிவிக்கிறது; உற்பத்தி செய்யப்படும் சரக்குகளின் மதிப்பு அவற்றின் உற்பத்திக்காக செலவிடப்படும் மூலதனத்தின் மதிப்போடு கொண்டுள்ள உறவைத் தெரிவிக்கிறது; அதாவது இச்சரக்குகளின் மதிப்பு மூலதன மதிப்பாலும் உபரி மதிப்பாலும் ஆனது என்பதை தெரிவிக்கிறது.

முன்னிலும் பெரிதாகிவிட்ட இந்த மூலதனம் சரக்கு-மூலதனமாகவே இருக்கும் வரை, ஒய்ந்திருக்கிறது. சரக்கு-மூலதனம் உற்பத்திப் பொருட்களையோ மதிப்பையோ படைப்பதில்லை. குறிப்பிட்ட மூலதன-மதிப்பு வெகுவாய் வேறுபடும் அளவில் உற்பத்திப் பொருட்களையும் மதிப்பையும் படைக்கக் கூடியது.

எவ்வளவு விரைவாய் சரக்கு விற்கப்படுகிறது என்பதைப் பொறுத்து, மறுவுற்பத்தியின் அளவு பெருகவோ குறுகவோ செய்கிறது.

C' என்பது C+c என்பதற்குச் சமம். C ஆனது திறனுடை-மூலதனமான P இன் மதிப்புக்குச் சமம்; இது உற்பத்தி அடிக்கூறுகளை விலைக்கு வாங்குவதற்காக M - C என்னும் கட்டத்தில் முன்னீடு செய்யப்பட்ட பணமாகிய Mஇன் மதிப்புக்குச் சமம். உபரி உற்பத்தியாகிய cஇன் பண வடிவிலான தெரிவிப்பே m . C' -- M' = (C+c) - (M+m). ஆகவே M - C ... P...C' - M' என்னும் சுற்றினை அதன் விரிவடைந்த வடிவில் பின்வருமாறு எழுதலாம்:  M - C< L / mp ... P ... (C+c) - (M+m).

முதல் கட்டத்தில் முதலாளி நுகர்வுப் பண்டங்களை (articles of consumption) முறையான சரக்குச் சந்தையிலிருந்தும் உழைப்புச் சந்தையிலிருந்தும் பெறுகிறார். மூன்றாவது கட்டத்தில் அவர் சரக்குகளை சந்தையினுள் திருப்பிச் செலுத்துகிறார்; ஆனால் ஒரேயொரு சந்தையினுள் மட்டுமே, சரக்குச் சந்தையினுள் மட்டுமே செலுத்துகிறார். முதலில் அவர் M என்னும் மதிப்பை அதனுள் செலுத்தி அதற்கு சமதையான Cஐ அதனிடமிருந்து பெற்றார்: இப்பொழுது C+cஐ அதனுள் செலுத்தி விட்டு அதற்குச் சமதையான M+mஐ அதனிடமிருந்து பெருகிறார்.

அவர் இந்தக் கூடுதலான மதிப்பைச் சந்தையினுள் செலுத்த முடிவதற்கு என்ன காரணம்? உற்பத்தி நிகழ்முறையில் உழைப்புச் சக்தியைச் சுரண்டி உபரி-மதிப்பை (உற்பத்திப் பொருளின் ஈவுப் பகுதியாக [aliquot part] உபரி-உற்பத்தியின் உருவில் தெரிவிக்கப்படுவதை) படைத்ததே காரணம்.

உபரி-மதிப்பான c உற்பத்தி நிகழ்முறையின் போதுதான் அவதரித்தது. அது இப்போதுதான் முதல் தடவையாக சரக்குச் சந்தையினுள் நுழைகிறது.; சரக்குகளின் வடிவில் நுழைகிறது. சரக்கு வடிவமே சுற்றோட்டத்தில் அதன் முதல் வடிவம்; எனவே c - m என்னும் செயல்தான் அதன் முதல் சுற்றோட்டச் செயல் அல்லது முதல் உருமாற்றம் ஆகும்; இனி இதன் எதிர்நிலைச் செயல் அல்லது தலைகீழ் உருமாற்றமான m - c என்பதால் நிறைவு செய்தாக வேண்டும்.

C' - M' என்னும் இதே சுற்றோட்ட செயலின் மூலம் மூலதன-மதிப்பு C நிகழ்த்தும் சுற்றோட்டம் வேறுவிதமானது. அது சுற்றோட்டத்தில் முதலில் M - C அடுத்து C - M ஆகிய இரு எதிர்நிலைக் கட்டங்களைக் கடந்துள்ளது; திரும்பவும் சுழல் இயக்கத்தைத் தொடங்குவதற்கு வேண்டிய வடிவத்திற்கு திரும்பி வந்துள்ளது. உபரி-மதிப்புக்கு சரக்கு வடிவத்திலிருந்து பண வடிவத்துக்கு மாறுவதாகிய அதன் முதல் உருமாற்றமாக அமைவது, மூலதன-மதிப்புக்கு அதன் ஆரம்ப வடிவமான பண வடிவத்துக்குத் திரும்பிச் செல்லும் மாற்றமாக அல்லது மீட்டுருமாற்றமாக (retransformation) அமைகிறது.

முதலாவதாக, மூலதன-மதிப்பை அதன் ஆரம்ப வடிவமான பண வடிவத்துக்கே முடிவில் திரும்பச் செய்வது சரக்கு-மூலதனத்தின் பணியாகும். இரண்டாவதாக, உபரி-மதிப்பு முதன்முதலாய் உருமாற்றம் பெற்று அதன் ஆரம்ப வடிவமான சரக்கு வடிவத்திலிருந்து பண வடிவத்துக்கு மாறும் படி செய்வதும் இப்பணியில் அடங்குகிறது.

ஈடேற்றம் பெற்ற சரக்கு-மூலதனம் C+c  இப்போது முதலாளியின் கையில் M+m என்ற வடிவில் இருக்கிறது. இப்போது மூலதன-மதிப்பும் உபரி-மதிப்பும் சர்வப்பொது சமதை வடிவமான பண வடிவத்தில் இருக்கின்றன.

இந்நிகழ்முறையின் ஆரம்ப வடிவமும் இறுதி வடிவமும் M என்னும் பண-மூலதன வடிவத்தில் இருப்பதால் இவ்வகைச் சுற்றோட்ட நிகழ்முறையை பண-மூலதனச் சுற்று என்கிறோம். முடிவில் மாற்றம் பெறுவது முன்னீடு செய்யப்பட்ட மதிப்பின் பருமன் தானே தவிர, அதன் வடிவமல்ல.

M ஆக இருந்தது இப்போது M' ஆகிவிட்டது. அளவில் வேறுபாடு உள்ளது. இந்த வேறுபாடு M ... M' என்பதால் தெரிவிக்கப்படுகிறது; சுற்றின் இரு முனைகளும் அளவில் இவ்வாறு வேறுபடுகின்றன. இடையில் வரும் மூன்று புள்ளிகள் சுற்றின் இயக்கத்தைக் குறிக்கின்றன. M' > M; M' - M = s, அதாவது உபரி-மதிப்பு. ஆனால் என்னும் இந்தச் சுழல் இயக்கத்தின் விளைவாக இப்போது இருப்பது M' மட்டுமே. விளைப‌யன் மட்டும் இருக்க, அதனை உருவாக்கிய நிகழ்முறை மறைந்து வருகிறது. இப்போது அதனை தோற்றுவித்த இயக்கத்திலிருந்து சுயேச்சையாகத் தானாகவே நிலவுகிறது. அந்த இயக்கம் போய் விட்டது; அதனிடத்தில் M' இருக்கிறது.

ஆனால் M' என்பது M+m ஆகும். அதே போது இது பண்புவழி உறவு ஒன்றையும் குறிக்கிறது. இந்தப் பண்புவழி உறவு ஒரே தொகையின் பகுதிகளிடையிலான உறவாகவே, எனவே அளவு வழி உறவாகவே நிலவுகிறது. முன்னீடு செய்யப்பட்ட மூலதனமாகிய M இப்போது ஆரம்ப வடிவத்துக்கே திரும்பியுள்ளது என்றாலும் ஈடேற்றம் பெற்ற மூலதனமாக நிலவுகிறது. அது தன்னைக் காப்பாற்றி கொண்டிருப்பதோடு கூட, m என்பதிலிருந்து மூலதனம் என்ற முறையில் தன்னை வேறுபடுத்திக் கொள்வதன் மூலம் மூலதனமாக ஈடேற்றம் பெற்றுள்ளது. இந்த  mஉடன் அதற்குள்ள உறவு தன்னுடைய அதிகரிப்புடன், தன்னுடைய விளைவுடன், தான் பெற்றெடுத்த பெருக்கத்துடன் உள்ள உறவே ஆகும். மதிப்பைப் படைக்கும் மதிப்பாக அது ஈடேற்றம் பெறுகிறது. அதனால் மூலதனமாக  ஈடேற்றம் பெறுகிறது. M' என்பது மூலதன உறவாக நிலவுகிறது.Mஇனி வெறும் பணமாக இருக்கவில்லை, வெளிப்படையாகவே பண-மூலதனமாகப் பணி புரிகிறது. தற்பெருக்கமடைந்த மதிப்பாக, ஆகவே தற்பெருக்க இயல்புடைய அதாவது தன்னைக் காட்டிலும் அதிகமான மதிப்பை உண்டாக்கும் இயல்புடைய மதிப்பாகத் தெரிவிப்பு பெறுகிறது. M ஆனது அதனால் உண்டாக்கப்பட்ட, அதனை காரணமாகக் கொண்டு உருவான, அதனை ஆதாரமாகக் கொண்டு விளைந்த M'இன் மறு பகுதியோடு அதற்குள்ள உறவின் பயனாய் மூலதனமாகிறது. இவ்வாறு M' ஆனது அதனுள் வகை பிரிக்கப்படுகிற, பணி வழியில் (கருத்தியலாக) வேறுபடுத்திக் காட்டப்படுகிற மூலதன உறவைத் தெரிவிக்கிற மதிப்புகளின் தொகையாக விளங்குகிறது.

ஆனால், இந்த மூலதன உறவு ஒரு விளைவாக மட்டுமே --- எந்நிகழ்முறையின் விளைவோ அந்நிகழ்முறை இடையிலே வராதபடி --- தெரிவிக்கப்படுகிறது.

சரக்குகளிடையிலான எல்லா வேறுபாடுகளும் பண வடிவத்தில் மறைந்து போகின்றன; இந்த பணத் தொகை உதித்து உருவாகிய கதையின் இடைநிலைக் கண்ணிகள் எல்லாம் இத்தொகையின் இப்போதைய நிலவலில் மறைந்து விடுவதாலும், மூலதனத்தின் வெவ்வேறு அடக்கக் கூறுகள் இடையிலான பிரத்தியேக வேறுபாட்டுத் தடங்கள் யாவும் உற்பத்தி நிகழ்முறையின் போது ஒழிந்து போவதாலும், முன்னீடு செய்யப்பட்ட மூலதனமாகிய அசல் தொகை என்னும் கருத்தளவிலான ஒரு வடிவத்துக்கும், கூடுதல் மதிப்புக்கும் இடைப்பட்ட வேறுபாட்டைத் தவிர வேறு ஏதும் எஞ்சவில்லை. ஆகவே, ஈடேற்றம் பெற்ற மூலதனத்தின் பணத் தெரிவிப்பானது, இந்நிகழ்முறையின் முடிவில் மூலதன உறவின் ஒவ்வாத் தெரிவிப்பாக அமைகிறது.

Cஐயும் cஐயும் ஒருபடித்தான ஒரே சரக்குத் திரளினது மதிப்பின் விகிதாச்சாரப் பகுதிகளாக மட்டுமே கொண்ட C' ஆனது அது Pஇன் நேரடி உற்பத்திப் பொருள் என்பதைக் காட்டி விடுகிறது; ஆனால் சுற்றோட்டத்திலிருந்து நேரடியாக வரப்பெற்ற வடிவமான  M'இல் Pஉடனான நேரடி உறவு மறைந்து போகிறது.

M' என்பது M ... M' என்னும் இயக்கத்தின் விளைவினை தெரிவிப்பதாக இருக்கும் வரை, அசல் தொகைக்கும் கூடுதல் தொகைக்கும் இடையிலான ஒவ்வா வேறுபாட்டைத் தன்னுள் கொண்டிருக்கிறது;  M'ஆனது மீண்டும் பண மூலதனமாக முனைப்புடன் செயல்படத் தொடங்கியவுடனே --- இவ்வேறுபாடு ஒழிந்து போகிறது. ( M' இப்போது M ஆகச் செயல்பட்ட போதிலும்) பண-மூலதனச் சுற்று Mஇலிருந்துதான் தொடங்க முடியும்; ஒரு போதும் மூலதன உறவின் தெரிவிப்பாகத் தொடங்க முடியாது. M' ஆனது முன்னிலும் அதிகப் பணமாகும். அதிக மூலதன-மதிப்பாகும்; இப்போது அதன் இரு அடக்கக் கூறுகளுக்கும் இடையிலான உறவு மறைந்து விடுகிறது.

மூலதனத் திரட்டலானது, யாவற்றுக்கும் மேலாய், ஓயாமல் புதுப்பிக்கப்படும் பண-மூலதன முன்னீடுகள் காலவட்ட முறையில் அடையும் பெருக்கமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

M+m என்பதற்குச் சமமான M' என்பது மூலதனத்தின் ஒவ்வா வடிவமாக இருந்தாலும், அது ஈடேற்றம் பெற்ற வடிவிலுள்ள --- பணத்தை உண்டாகிய பணத்தின் வடிவிலுள்ள --- பண-மூலதனமே ஆகும்.

மூலதன-மதிப்பாகிய M அதற்குப் பிறந்த உபரி-மதிப்பாகிய m ஆகியவற்றாலான M' தற்பெருக்கமடைந்த மூலதன-மதிப்பைக் குறிக்கிறது --- இதுவே மூலதனச் சுற்று முழுமையின் நோக்கமும் விளைவுமாகும், அதன் பணியாகும். M' ஆனது இந்த முடிவைப் பண வடிவில் தெரிவிப்பதற்கு, ஈடேற்றம் பெற்ற பண-மூலதனமாகத் தெரிவிப்பதற்கு என்ன காரணம்? அது மூலதனத்தின் பண வடிவமாக, பண-மூலதனமாக இருப்பதல்ல காரணம்; அது பண-மூலதனமாக, பண வடிவிலுள்ள மூலதனமாக இருப்பதே காரணம்; மூலதனம் இந்த நிகழ்முறையைத் தொடங்கியதே காரணம்; அது பண வடிவில் முன்னீடு செய்யப்பட்டதே காரணம்.

பண-மூலதனம், சரக்கு-மூலதனம் இவை இரண்டுக்கும் உள்ள பொது அமிசம் என்னவென்றால், இரண்டுமே மூலதனத்தின் நிலவல் வடிவங்கள் என்பதே. ஒன்று பண வடிவிலான மூலதனம், ஒன்று சரக்கு வடிவிலான மூலதனம். ஆகவே அவற்றின் பிரத்தியேகப் பணிகளிடையிலான வேறுபாடுகள் என்பவை பணத்தின் பணிகளுக்கும் சரக்குகளின் பணிகளுக்கும் இடையிலான வேறுபாடுகளாகத்தான் இருக்க முடியும். முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிகழ்முறையின் நேரடி விளைவாகிய சரக்கு-மூலதனம் அதன் தோற்றுவாயை நினைவுபடுத்துவதாய் இருக்கிறது; ஆகவே பண-மூலதனத்தைக் காட்டிலும் அதிக அளவுக்கு அறிவுக்கொத்த, புரிந்து கொள்ளத்தக்க வடிவமாய் திகழ்கிறது; பண-மூலதனத்திலோ முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிகழ் முறையின் தடயங்கள் யாவும் மறைந்து போகின்றன --- பொதுவாகச் சரக்குகளின் தனிவிதப் பயன்பாட்டு வடிவங்கள் யாவும் பணத்தில் மறைந்து போகின்றனவே அது போல.

Monday, January 27, 2014

பாகம்: 2 பகுதி: 1 அத்தியாயம் 1: பண-மூலதனத்தின் சுற்று. இரண்டாம் கட்டம்

திறனுடை-மூலதனத்தின் பணி

உழைப்புச் சக்தியின் பயனாகிய உழைப்பை உழைப்பு நிகழுமுறையில்தான் பொருள் வடிவாக்கிட முடியும். முதலாளி தொழிலாளியை சரக்காக மறு விற்பனை செய்ய முடியாது; ஏனென்றால் தொழிலாளி அவருக்கு அசையுஞ் சொத்தாகிய அடிமையல்ல; குறிப்பிட்ட காலத்துக்கு அவரது உழைப்புச் சக்தியைப் பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமையைத்தான் முதலாளி வாங்குகிறாரே தவிர வேறு எதையுமல்ல. உற்பத்திச் சாதனங்களைப் பயன்படுத்தி உழைப்புச் சக்தியின் துணை கொண்டு சரக்குகளை உற்பத்தி செய்வதன்றி வேறு எவ்விதத்திலும் முதலாளி இந்த உழைப்புச் சக்தியை உபயோகிக்க முடியாது. 

மூலதனம் உற்பத்தித் திறனுள்ளதாகச் செயல்படுகிற கட்டமான இரண்டாவது கட்டம் ஆரம்பமாகிறது. இதுவே முதல் கட்டத்தால் ஏற்படும் விளைவு.

இந்த இயக்கத்தை M - C < L / mp என்று குறிக்கிறோம். M - C < L / mp  என்பது நடைபெற வேண்டுமானல், அவர் சரக்கு உற்பத்தியாளராக இருப்பது அவசியமாகிறது.  

முதலாளி எப்போதுமே பண முதலாளியாக, தமது மூலதனத்தைப் பண மூலதனமாக வைத்துக் கொண்டு தொழிலாளியை எதிர்நோக்க வேண்டியுள்ளது. மறு புறம், நேரடி உற்பத்தியாளராகிய திரள் திரளான கூலித் தொழிலாளர்கள்  என்னும் செயலை நிறைவேற்ற வேண்டுமானால், அவசிய வாழ்வுச் சாதனங்கள் விலைக்கு வாங்கிக் கொள்ளக் கூடிய வடிவில், அதாவது சரக்குகளின் வடிவில், எப்போதும் அவருக்கு கிடைத்து வர வேண்டும். இந்நிலவரம் ஏற்படுவதற்கு, சரக்கு வடிவிலான உற்பத்திப் பொருட்களது சுற்றோட்டமும், ஆகவே உற்பத்தி செய்யப்படும் சரக்குகளின் அளவும் பரிமாணமும் உயர் வளர்ச்சி கண்டிருப்பதும் அவசியமாகிறது. கூலியுழைப்பைக் கொண்டு நடைபெறும் பொருளுற்பத்தி சர்வவியாபகமாகும் போது, சரக்கு உற்பத்திதான் பொருளுற்பத்திக்கான மிகப் பரவலான வடிவமாகத் திகழும். 

முதலாளித்துவ பொருளுற்பத்திக்கு இன்றியமையாத தேவையான கூலித் தொழிலாளி வர்க்கம் நிலவுவதற்கு வழி செய்யும் நிலைமைகள் சரக்கு உற்பத்தி முழுவதும் முதலாளித்துவச் சரக்கு உற்பத்தியாக மாறுவதற்கும் ஊக்கமளிக்கின்றன.

முதலாளித்துவ பொருளுற்பத்தி எங்கே வேரூன்றினாலும் அங்கே நாளடைவில் அது உற்பத்தியாளர்களது சுய வேலையின் அடிப்படையிலோ, மிகை உற்பத்திப் பொருளை மட்டும் சரக்காக விற்பதன் அடிப்படையிலோ அமைந்த பழைய சரக்கு-உற்பத்தி வடிவங்கள் யாவற்றையும் அழிக்கவே செய்கிறது.

உற்பத்தியின் சமூக வடிவம் எதுவானாலும், எப்போதுமே உழைப்பாளர்களும் உற்பத்திச் சாதனங்களும்தான் அதன் காரணிகள். ஆனால் ஒன்றிடமிருந்து ஒன்று பிரிந்துள்ள நிலையில், இவ்விரு காரணிகளில் எந்தவொன்றும் உள்ளுறையாக (potentiallly) மட்டுமே உற்பத்தி காரணி ஆகிறது. இரண்டும் ஒருசேர இணைந்தாலன்றி உற்பத்தி நடைபெற முடியாது. இந்த இணைப்பு பல  விதத்திலும் ஏற்படலாம். சமூக அமைப்பின் வெவ்வேறு பொருளாதார சகாப்தங்களையும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்திக் காட்டுவது இந்த இணைப்பு எந்த விதத்தில் ஏற்படுகிறது என்பதுதான்.

எந்த தொழில் முனைவாய் (enterprise) இருப்பினும் உழைப்புச் சக்தியைச் சுரண்டாமல் அதனால் சரக்கு உற்பத்தி செய்ய முடியாதுதான். ஆயினும் முதலாளித்துவ சரக்கு உற்பத்தி முறையினால் மட்டுமே சகாப்தகர முக்கியத்துவம் வாய்ந்த சுரண்டல் முறையாக (mode of exploitation) முடிந்திருக்கிறது. வரலாற்று வழியிலான அதன் வளர்ச்சியின் போது, உழைப்பின் நிகழ்முறையை ஒழுங்கமைத்தும், தொழில் நுட்பத்தைப் பிரமாதமாய் மேம்படுத்தியும், இதற்கு முந்தைய சகாப்தங்களை எல்லாம் விஞ்சி வானுற உயர்ந்து விடும் விதத்தில் அது சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு அனைத்தையும் புரட்சிகரமான முறையில் அடியோடு மாற்றியமைத்திருக்கிறது.

உற்பத்திச் சாதனங்களும் உழைப்புச் சக்தியும் முன்னீடு செய்யப்படும் மூலதன-மதிப்பின் நிலவல் வடிவங்களாய் (forms of existence) உள்ள வரை, மதிப்பின் படைப்பில் --- ஆதலால் உபரி..மதிப்பின் படைப்பிலும் ---  உற்பத்தி நிகழ்முறையின் போது அவை வகிக்கும் வெவ்வேறு பாத்திரங்களினால் மாறா-மூலதனமாகவும், மாறும்-மூலதனமாகவும் வேறுபடுத்திக் காட்டப்படுகின்றன. திறனுடை-மூலதனத்தின் வெவ்வேறு அங்கங்களான இவற்றைமேலும் வேறுபடுத்திக் காட்டுவது என்னவென்றால்: முதலாளியின் வசமுள்ள உற்பத்திச் சாதனங்கள் உற்பத்தி நிகழ்முறைக்கு வெளியேயும் கூட அவரது மூலதனமாகவே இருந்து வருகின்றன; ஆனால் உழைப்புச் சக்தியோ இந்நிகழ்முறைக்குள் மட்டுமே ஒரு தனிப்பட்ட மூலதனத்தின் நிலவல் வடிவமாகிறது.

திறனுடை-மூலதனம் தனக்குரிய பணிகளைச் செய்கையில் தனது அடக்கக்கூறுகளையே நுகர்ந்து, அவற்றினும் அதிக மதிப்புள்ள திரளான உற்பத்திப் பொருள்களாக அவற்றை மாற்றுகிறது. உழைப்புச் சக்தியானது இம்முலதனத்தின் உறுப்புகளில் ஒன்றாகவே செயல்படுவதால், அதனுடைய உபரி-உழைப்பால் திறனுடை மூலதன அடக்கக் கூறுகளின் மதிப்புக்கும் கூடுதலாக உண்டக்கப் பெறும் மதிப்பும் கூட மூலதனதுக்கு உரித்தான விளைபயனாகிறது. உழைப்புச் சக்தியின் இந்த உபரி-உழைப்பு இலவசமாய் மூலதனத்துக்குக் கிடைக்கும் உழைப்பாகும். இவ்விதம் அது முதலாளிக்குக் கிடைக்கும் உபரி-மதிப்பாகிறது. இந்தச் சரக்கின் மதிப்பு P+s ஆகும்.

Sunday, January 26, 2014

பாகம்: 2 பகுதி: 1 மூலதனத்தின் உருமாற்றங்களும் அவற்றின் சுற்றுகளும். அத்தியாயம் 1: பண-மூலதனத்தின் சுற்று. முதல் கட்டம்: M --- C

பொதுவான சரக்குச் சுற்றோட்டத்தில் நிகழும் செயலாகிய இது, அதே போது ஒரு தனிப்பட்ட மூலதனத்தின் சுயேச்சையான சுற்றில் குறிப்பிட்ட பணி புரியும் ஒரு பகுதியும் ஆகிறது. இப்படி ஆவதற்கு செயலின் வடிவம் அல்ல பிரதான காரணம்; செயலின் உள்ளடக்கப் பொருட்களே, பணத்துக்கு பதிலாக வரப்பெறும் சரக்குகளது பிரத்தியேகப் பயனுடைமையே பிரதான காரணம். இந்த சரக்குகள் ஒரு புறம் உற்பத்திச் சாதனங்களாகவும் (means of production) மறுபுறம் உழைப்புச் சக்தியாகவும் இருப்பவை, இவை சரக்கு உற்பத்திக்குப் பொருள் வடிவிலும் ஆள் வடிவிலும்  அவசியமான காரணிகள் ஆகின்றன.

உழைப்புச் சக்தியை L   என்றும், உற்பத்திச் சாதனங்களை mp   என்றும் குறிப்போம்.   உருமாறுவதால் வரப்பெறும் சரக்குத் தொகுதியின் இந்த பண்புவழிப் பிரிவினை ஒரு புறமிருக்க M --- C< L / mp  என்னும் சூத்திரம் மிக அலாதியான அளவுவழி உறவையும் குறிப்பதாகும்.

உழைப்புச் சக்தியின் மதிப்பு (value) அல்லது விலை (price) அதனைச் சரக்காக விற்க முன் வருகிற அதன் உடமையாளருக்குக் கூலியின் (wages) வடிவில் செலுத்தப்படுகிறது. அதாவது உபரி-உழைப்பு (surplus-value) உள்ளிட்ட உழைப்பின் கூட்டளவுக்கான விலையாகச் செலுத்தப்படுகிறது. 

அப்படியானால் M --- C< L / mp  என்பது குறிப்பிட்ட ஒரு பணத்தொகைக்கு ஈடான உற்பத்திச் சாதனங்கள் மற்றும்  உழைப்புச் சக்தியின் தொகைக்குப் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுவதைக் காட்டும் விதத்தில் பண்புவழி உறவை (qualitative relation) தெரிவிப்பதோடு கூட உழைப்புச் சக்திக்காகச் செலவிடப்படும் பணப் பகுதியான  Lக்கும் உற்பத்திச் சாதனங்களுக்காகச் செலவிடப்படும் பகுதியான mpக்கும் இடையிலான அளவுவழி உறவையும் (quantitative relation) தெரிவிப்பதாகும். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் செலவிட வேண்டிய மிகுதி உழைப்பின், அதாவது உபரி-உழைப்பின் அளவுதான் ஆரம்பத்திலிருந்தே இந்த உறவை நிர்ணயிக்கிறது.

பல்வேறு தொழிற் கிளைகளிலும் மிகுதி உழைப்பைப் பயன்படுத்திக் கொள்ள உறபத்திச் சாதனங்கள் வடிவில் எவ்வளவு கூடுதல் மதிப்பு  தேவைப்படுகிறது என்பது இங்கு முக்கியம் அன்று. உற்பத்திச் சாதனங்களுக்காக, அதாவது M - mp மூலம வாங்கப்படும் உற்பத்திச் சாதனங்களுக்காகச் செலவிடும் பணப் பகுதி முற்றிலும் போதுமானதாய் இருக்க வேண்டும். உற்பத்திச் சாதனங்களின் அளவு உழைப்பின் அளவை உட்கிரகிக்கப் போதுமானதாய், அந்த உழைப்பினால் உற்பத்திப் பண்டங்களாக (products) மாற்றப் போதுமானதாய் இருக்க வேண்டும். கைவசமுள்ள உற்பத்திச் சாதனங்கள் போதாவிட்டால், உழைப்புச் சக்தியை வாங்குபவர் தமக்குக் கிடைக்கக் கூடிய மிகுதி உழைப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது.

M - C< L / mp   என்னும் செயல் முடிக்கப் பெறுகிறது, வாங்குபவரிடம் இப்போது இருப்பது என்ன? பயனுள்ள பண்டம் ஒன்றின் உற்பத்திக்கு வேண்டிய உற்பத்திச் சாதனங்களும் உழைப்புச் சக்தியும் மட்டுமல்ல, இவற்றுக்கும் கூடுதலானவை அவரிடம் உள்ளன: உழைப்புச் சக்தியை இயங்க வைப்பதற்கான ஆற்றல் தேவையான அளவுக்கும் அதிகமாய், அதாவது இந்த உழைப்புச் சக்தியின் மதிப்பினது மாற்றீட்டுக்கு (replacement) வேண்டியதை விடவும் அதிக அளவிலான உழைப்பு அவர் வசம் உள்ளது. உற்பத்தி.. அடிக்கூறுகளின் மதிப்பை விடக் கூடுதலான மதிப்புடைய பண்டங்களை உற்பத்திச் செய்வதற்கு வேண்டிய உற்பத்திக் காரணிகள்  (factors of production) அவர் வசம் உள்ளன. அதாவது, உபரி-மதிப்பைத் தம்முள் கொண்ட சரக்குத் திரளைத் தயாரிப்பதற்குத் தேவையான உற்பத்திக் காரணிகள் அவரிடம் இருக்கின்றன. பண வடிவில் அவர் முன்னீடு செய்த மதிப்பு இப்போது மூக்கும் முழியுமாய் தசையுரு (bodily form) எடுத்துள்ளது. இங்கே மதிப்பையும் உபரி-மதிப்பையும் படைக்க வல்லதாகிய மூலதனத்தின், அதாவது திறனுடை-மூலதனத்தின் (productive capital) நிலை அல்லது வடிவில் உள்ளது. இவ்வடிவில் இருக்கும் மூலதனத்தை P என்போம்.

மூலதன-மதிப்பு (capital-value) என்ற முறையில் Pஉம் Mஉம் ஒன்றுதான்; நிலவல் வடிவம் மட்டுமே வேறுபடுகிறது. அதாவது M என்பது பணத்தின் நிலையில் அல்லது வடிவில்  உள்ள் மூலதன மதிப்பு ஆகும் --- பண-மூலதனம் ஆகும்.

M - C< L / mp என்பது, அல்லது அதன் பொது வடிவமான M-C என்பது, விலை கொடுத்து சரக்கு வாங்கும் செய்ல்களின் தொகுதியாகும், பொதுவான சரக்கு சுற்றோட்டத்தில் நடைபெறும் செயலாகும். ஆகவே இது அதுபோது --- மூலதனத்தின் சுயேச்சையான சுற்றில் ஒரு கட்டம் என்ற முறையில் --- பண வடிவிலுள்ள மூலதன-மதிப்பு உற்பத்தித் திறனுள்ள வடிவத்தை அடையும் உருமாற்றம் ஆகும்.  சுருங்கச் சொன்னால், பண-மூலதனமாக இருப்பது திறனுடை-மூலதனமாக உருமாறுவதை இது குறிக்கிறது.

மூலதனம் பண-மூலதனத்தின் வடிவிலுள்ள போது அது பணத்தின் பணிகளை ஆற்றக் கூடியதாய் இருக்கிறது. இங்கு நமது உதாரணத்தில் அது சர்வபொது வாங்கற் சாதன (universal means of purchase) பணிகளையும் சர்வப் பொதுக் கொடுப்புச் சாதன (universal means of payment) பணிகளையும் ஆற்றக் கூடியதாய் இருக்கிறது.

பண மூலதனத்துக்கு உள்ள இந்த ஆற்றல் அது பணமாக இருப்பதிலிருந்து வருவதுதானே தவிர, மூலதனமாக இருப்பதிலிருந்து வருவதன்று. பணப் பணிகள் மூலதனப் பணிகளாக மாறுவது எதனால்? பணம் இங்கே சரக்குகளாக மாறுகிறது.. இச்சரக்குகளின் தொகுதி திறனுடை மூலதனத்தின் தசையுருவைக் குறிக்கிறது; ஏற்கனவே இது முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிகழ்முறையால் விளையும் பயனை உள்ளுறை நிலையில் தன்னுள் கொண்டுள்ளது.

 M - L என்பது பண-மூலதனம் திறனுடை-மூலதனமாக மாற்றம் பெறுவதில் தனிப் பெரும் நிகழ்முறையாகும். ஏனென்றால், பண வடிவில் முன்னீடு செய்யப்படும் மதிப்பானது மூலதனமாக, அதாவது உபரி..மதிப்பை உற்பத்தி செய்கிற மதிப்பாக மெய்யாகவே மாற்றம் பெருவதற்கு இது இன்றியமையாத நிபந்தனை ஆகிறது.

பொதுவாக M - L ஆனது முதலாளித்துவ பொருளுற்பத்தி முறைக்குரிய தனிக் குணமாகக் கருதப்படுகிறது. ஆயினும் இப்படிக் கருதப்படுவதற்கு மேற்கூறியது அல்ல காரணம். மாறாக அதன் வடிவம் காரணமாகவே அது இப்படி கருதப்படுகிறது. ஏனெனில் கூலி வடிவிலான பணம்தான் உழைப்பினை வாங்குகிறது. பணப் பொருளாதாரத்துக்கு இதுதான் அடையாளக் குறி.

மதிப்பைப் படைப்பது உழைப்பே என்பதால் உழைப்புக்கு மதிப்பு ஏதும் இருக்க முடியாது, ஆகவே குறிப்பிட்ட அளவுடைய உழைப்பு மதிப்புடையதாகி, குறிப்பிட்ட அளவுப் பணத்துக்கு சமதை என்ற முறையில் அதன் விலையில் தெரிவிக்கப்படுதலும் முடியாத காரியம். இருப்பினும் நமக்குத் தெரியும்: மாறுவேடம் பூண்ட ஒரு வடிவமே கூலி; உதாரணமாக, ஒரு நாளுக்கான உழைப்புச் சக்தியின் விலை அந்த உழைப்புச் சக்தி ஒரு நாளில் இயக்குகிற உழைப்பின் விலையாக வேடம் பூண்டு வெளிப்படுகிறது.

நெடுங்காலத்துக்கு முன்பே,  M ஆனது பண-மூலதனமாக உருமாற்றம் பெறாமலே, பொருளாதார அமைப்பின் பொதுவான தன்மையில் எந்த மாற்றமும் இல்லாமலே, சேவகள் என்பனவற்றை வாங்குகிறவராக பணம் தோற்றமளித்து வந்திருக்கிறது.

உழைப்புச் சக்தியானது அதன் உடைமையாளரது சரக்காக சந்தையை அடைந்து, உழைப்புக்கு ஊதியம், அதாவது கூலி கொடுப்பதின் வடிவில் அதன் விற்பனை முடிவுற்றதும், அதன் விற்றலும் வாங்கலும் எவ்விதத்திலும் அதிசயமாய் இல்லாமல், மற்றெந்த சரக்கின் விற்றலையும் வாங்கலையும் போன்ற சர்வசாதாரணச் செயல்களாகி விடுகின்றன. இந்த தனி விசேஷமாகக் குறிப்பிடவேண்டியது உழைப்புச் சக்தி விற்பனைச் சரக்காவதே தவிர, சரக்காகிய உழைப்புச் சக்தி விற்கவும் வாங்கவும் கூடியதாவது அல்ல.

முதலாளியானவர்  உழைப்புச் சக்தியை அவர் தமது அதிகாரத்துக்குப் பணிந்து செயல்படுமாறு நிர்பந்தம் செய்ய தொடங்குகையில் அந்த உழைப்புச் சக்தியை இயங்க வைப்பதற்கு வேண்டிய உற்பத்திச் சாதனங்கள் அவரிடம் இருக்க வேண்டும்.

உற்பத்திச் சாதனங்கள் வேறொருவரது உடைமையாதலால், அவை உழைப்புச் சக்தியின் உடைமையாளருக்கு எதிர் நிலையில் இருப்பவை. மறு புறத்தில் உழைப்பை விற்பவர் அதனை வாங்குகிறவரை வேறொருவரது உழைப்புச் சக்தியாக எதிர்நோக்குகிறார். வாங்குகிறவர்  வேறொருவரது உழைப்புச் சக்தியான இதனை தம் சொற்படி நடக்கச் செய்து தமது மூலதனத்துடன் இணைய வைத்தாக வேண்டும்; அப்போதுதான்  அது மெய்யாகவே திறனுடை..மூலதனமாக முடியும்.

ஒருவரையொருவர் எதிர்நோக்கும் தருணம் முதலாய் இவர்களிடையே முதலாளிக்கும் கூலித் தொழிலாளைக்கும் இடையிலான வர்க்க உறவு நிலவுகிறது, நிலவுவதாக கொள்ளவும் படுகிறது.

இந்த உறவு எங்கிருந்து எழுகிறது? உழைப்புச் சக்தியின் ஈடேற்றத்துக்குத் தேவையான சாதனங்கள், அதாவது வாழ்வுச் சாதனங்களும் (means of subsistence) உற்பத்திச் சாதனங்களும் உழைப்புச் சக்தியின் உடைமையாளரிடமிருந்து பிரிக்கப்பட்டு வேறொருவரது சொத்தாக இருக்கும் நிலைமையிலிருந்து எழுகிறது.

M - L ஆனது இங்கேபணமூலதனத்தின் செயலாக, அதாவது மூலதனத்தின் நிலவல் வடிவமாய் இருக்கும் பணத்தின் செயலாகாத் தெரிகிறதே, அது எப்படி?  பயன் தரும் மனிதச் செயற்பாடு அல்லது சேவைக்கு விலை கொடுப்பதற்கான  சாதனமாக பணம் இங்கே செயல்படுவது மட்டுமல்ல காரணம். அதை, கொடுப்புச் சாதனமாகப் பணம் ஆற்றுகிற பணியின் விளைவாய் கொள்வதற்கில்லை. இந்த வடிவில் பணத்தை  செலவிட முடிவதற்கே காரணம், உழைப்புச் சக்தியை அதன் உற்பத்திச் சாதனங்களிலிருந்து (உழைப்புச் சக்தியை உற்பத்தி செய்கிற சாதனங்களாகிய வாழ்வுச் சாதனங்களும் இவற்றில் அடங்கும்) பிரித்துத் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதும், உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளரிடம் உழைப்புச் சக்தியை விலைக்கு விற்பது ஒன்றே இந்தப் பிரிவினைய அகற்றுவதற்கான வழியாய் இருப்பதும்தான்.

பணம் அதன் தன்மையின் காரணமாய் உண்டாக்குவது அல்ல மூலதன உறவு. மாறாக மூலதன உறவு என்பதாக ஒன்று இருப்பதுதால்தான் வெறும் பணப் பணி மூலதனப் பணியாக உருமாற்றமடைய வேண்டியதாகிறது.

அடிமை முறை நிலவினால்தான் அடிமைகளை வாங்குவதற்காகப் பணத்தை முதலீடு செய்ய முடியும். வெறும் பண உடைமையே அடிமை முறையச் சாத்தியமாக்கி விட முடியாது.

M - C < L / mp என்பதன் உட்பொருள் பங்கீடே அன்றி வேறு எதுவுமல்ல --- சாதாரண அர்த்தத்திலான பங்கீடு அல்ல, அதாவது நுகர்வுப் பண்டங்களது பங்கீடு அல்ல; உற்பத்தி.. அடிக்கூறுகளது பங்கீடு. அதாவது ஒரு புறத்தில் உற்பத்தியின் பொருட் சாதனங்கள் எல்லாம் குவிக்கப்பட்டிருக்க, மறுபுறத்தில் உழைப்புச் சக்தி பிரித்துத் தனிமைப்படுத்தப்படும் பங்கீடு குறிக்கப்படுகிறது.

மூலதனம் உயிர்த்தெழுந்து பொருளுற்பத்தியை தன் பிடிக்குள் கொண்டுவர வேண்டுமானால், வாணிபமும் வளர்ச்சியுற்று, குறிப்பிட்ட ஒரு கட்டத்தை அடைந்திருக்க வேண்டும். இதன் பொருட்டு சரக்குகளின் சுற்றோட்டமும், ஆகவே சரக்கு உற்பத்தியும் வளர்ந்திருக்க வேண்டும். ஏனெனில் பண்டங்கள் விற்பனைக்கென்று --- அதாவது சரக்காக உற்பத்தி செய்யப்படாவிட்டால், அவற்றால் சரக்காக சுற்றோட்டத்தில் நுழைய முடியாது.

பண வடிவிலான மூலதனம் எப்போதும் கிடைக்கக் கூடியதாய் இருக்க வேண்டும், முக்கியமாக கூலி கொடுப்பதற்கு இது கிடைத்தாக வேண்டும். அப்போதுதான் முதலாளித்துவ முறையில் பொருளுற்பத்தி நடைபெறமுடியும்.

தொழில் துறை முதலாளியின் கைக்கு அவரது சொந்தப் பணம் மட்டுமல்லாமல் ஏனையோரது பணமும் எட்டப் போகிற காலம் நெருங்கி வருகிறது.

பணம் சரக்குகளாக அடையும் உருமாற்றமான  M - C பண-மூலதனம் திறனுடை-மூலதனமாக உருமாறுவதைக் குறிக்க வேண்டுமானால், சுதந்திரமான கூலித் தொழிலாளர்கள் சமுதாய அளவில் விரிந்து பரந்திருப்பது இன்றியமையாததாகும்.   

Saturday, January 18, 2014

பகுதி 8 அத்தியாயம் 33: குடியேற்ற முறையின் நவீனத் தத்துவம்

தனிச் சொத்துடைமையின் இரு வேறு வகைகளில் ஒன்று, உற்பத்தியாளரின் சொந்த உழைப்பை ஆதாரமாய்க் கொண்டது; இன்னொன்று, பிறர் உழைப்பைச் சுரண்டுவதை ஆதாரமாய்க் கொண்டது. இரண்டாம் வகை முதலாம் வகையின் நேரடி எதிர்நிலையாய் இருப்பது மட்டுமன்றி, முழுக்க முழுக்க அந்த முதலாம் வகையின் புதைமேட்டின் மீதே வளர்கிறது.

மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ ஆளுகையானது தேசப் பொருளுற்பத்தியின் முழு மண்டலத்தையும் நேரடியாகக் கைப்பற்றி விட்டது; அல்லது, பொருளாதார நிலமைகள் வளர்ச்சி குன்றியுள்ள இடங்களில், பண்டைக் கால பொருளுற்பத்தி முறையைச் சேர்ந்தவை என்றாலும் அதனோடு அக்கம்பக்கமாகத் தொடர்ந்து நிலவி படிப்படியாக நசிந்து கொண்டிருக்கும் சமூக அடுக்குகள் மீது சுற்றடியாகக் கட்டுப்பாடு செலுத்துகிறது.

குடியேற்ற நாடுகளின் நிலைமை முற்றிலும் மாறானது. அங்கே, முதலாளித்துவ ஆட்சியானது சொந்தத்துக்குப் பாடுபடும் உற்பத்தியாளரின் எதிர்ப்புடன் எல்லாவிடங்களிலும் மோதிக் கொள்கிறது. தாம் பயன்படுத்தும் உழைப்புச் சாதனங்களின் உடைமையாளராகிய இந்த உற்பத்தியாளர் உழைப்பது தமது செல்வத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகவே தவிர, முதலாளியின் செல்வத்தைப் பெருக்குவதற்காக அன்று. நேர் முரணான இவ்விரு பொருளாதார அமைப்புகளுக்கும் இடையிலான முரண்பாடு இவ்விருவருக்கும் இடையிலான போராட்டமாய் நடைமுறையில் வெளிப்படுகிறது. முதலாளி தாய் நாட்டின் வலிமையைப் பின்பலமாகக் கொண்டுள்ள இடத்தில் சுயேச்சையான உற்பத்தியாளரது சொந்த உழைப்பின் அடிப்படையிலான பொருளுற்பத்தி முறையையும் தனதாக்க முறையையும் தனது பாதையிலிருந்து வன்முறை மூலம் ஒழித்து கட்டுகிறார்.

முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் பெருஞ்சிறப்பு என்னவென்றால்: அது கூலித் தொழிலாளியைக் கூலித் தொழிலாளியாகவே தொடர்ந்து மறுவுற்பத்தி செய்வதொடு நிற்பதில்லை; மூலதனத் திரட்டலுக்கேற்ற விதத்தில் கூலித் தொழிலாளர்களின் ஒப்பீட்டு உபரி-மக்கள் தொகையையும் எப்போதும் உற்பத்தி செய்கிறது. இவ்வாறு, உழைப்பின் வழங்கல்-வேண்டல் விதி தடம் புரளாமல் பார்ர்துக் கொள்ளப்படுகிறது; கூலியின் ஏற்ற இறக்கம் முதலாளித்துவ சுரண்டலுக்கு திருப்திகரமான வரம்புகளுக்குள் கட்டுப்படுத்தப்படுகிறது; இறுதியாக, முதலாளியைத் தொழிலாளி சமூக வழியில் சார்ந்திருக்குமாறு செய்ய வேண்டிய அந்த இன்றியமியாத நிலைமை உறுதி செய்யப்படுகிறது.

ஆனால் குடியேற்ற நாடுகளில் இந்தக் கவர்ச்சிமிக்க மாயாஜாலம் பலிக்கவில்லை. அறுதியான மக்கள்தொகை தாய்நாட்டை விட இங்கே மிகத் துரிதமாய் பெருகுகிறது; ஏனெனில் உழைப்பாளிகள் பலர் வயதுவந்தோராகவே இவ்வுலகில் நுழைகிறார்கள்; ஆயின்,  உழைப்புச் சந்தை எப்போதும் தட்டுப்பாடாகவே இருக்கிறது. உழைப்பின் வழங்கல்-வேண்டல் விதி தகர்ந்துவிடுகிறது. 

மூலதனத் திரட்டல் வளர்வதற்கேற்ப வேண்டாத தொழிலாளர்கள் உருவாவது என்னாகிறது? இன்றைய கூலித் தொழிலாளி நாளை சொந்தத்துக்கு வேலை செய்யும் சுயேச்சையான விவசாயி அல்லது கைவினைஞர் ஆகிறார். உழைப்புச் சந்தையிலிருந்து மறைந்து விடுகிறார். மூலதனத்துக்காக உழைப்பதற்கு பதில் சொந்தத்துக்கு உழைப்பவர்களும் முதலாளித்துவ கனவானகளின் செல்வத்தைப் பெருக்குவதற்கு பதில் தமது செல்வத்தைப் பெருக்கிக் கொள்வோருமான சுயேச்சைப் பொருளுற்பத்தியாளர்களாகக் கூலித் தொழிலாளர்கள் இப்படித் தொடர்ந்து மாறுவது உழைப்புச் சந்தையின் நிலைமைகள் மீது விபரீதமான பிரதிபலிப்பை ஏற்படுத்துகிறது. கூலித் தொழிலாளி மீதான சுரண்டல் கடுமை கேவலமான முறையில் குறைவாகவே இருந்து வருகிறது என்பது மட்டுமல்ல. இதற்கும் மேலே, கூலித் தொழிலாளியானவர் எதிலும் அளவோடிருக்கிற முத்லாளியைச் சார்ந்திருக்கும் சார்பு உறவை இழப்பதுடன் கூடவே, சார்பு எண்ணத்தையும் இழக்கிறார்.

அப்படியானால், முதலாளித்துவ எதிர்ப்பு என்னும் இந்த வியாதியை குடியேற்ற நாடுகளிலிருந்து போக்குவது எப்படி? நிலத்தையெல்லாம் பொதுச் சொத்தாய் இல்லாமல் ஒரேயடியில் தனிச் சொத்தாய் மாற்ற தயாராய் இருபார்களானால், இவர்கள் நிச்சயமாய் இந்த வியாதியை பூண்டோடு அழித்துவிடலாம். ஆனால் அத்தோடு குடியேற்ற நாடுகளும் அழிந்துவிடுமே! ஒரே கல்லில் இரு மாங்காய் விழுமாறு சூழ்ச்சி செய்தாக வேண்டும். அரசானது வேண்டல் வழங்கல் விதியைக் கருதாமலே செயற்கையான முறையில் விலை நிர்ணயிக்க வேண்டும். குடியேறிய தொழிலாளி நிலம் வாங்கி சுயேச்சை விவசாயியாக மாறும் அளவுக்குப் போதிய பணம் சம்பாதிக்க வேண்டுமானால், அதற்கு முன்னால் நீண்ட காலம் கூலிக்கு வேலை செய்யுமாறு நிர்பந்திக்கும் படியாக இந்த விலை அதிகமாய் இருக்க வேண்டும். மறு புறம், கூலித் தொழிலாளர்களுக்கு ஒப்பளவில் எட்டாத விலைக்கு நிலம் விற்பதிலிருந்து கிடைக்கும் நிதியம் --- புனிதமான வழங்கல்-வேண்டல் விதியை மீறி தொழிலாளர்களின் கூலியிலிருந்து பறிக்கப்படும் இந்த பண நிதியம் --- வளர்ந்து பெருகுவதற்கேற்ப, ஐரோப்பாவிலிருந்து குடியேற்ற நாடுகளுக்குள்  ஓட்டாண்டிகளை இறக்குமதி செய்யவும், இவ்வாறு முதலாளிகளுக்காக உழைப்புச் சந்தை நிறைந்திருக்குமாறு செய்யவும் அரசாங்கம் அந்த நிதியத்தைப் பயன் படுத்த வேண்டும். இந்த நிலைமைகளில், இவுலகம் யாவும் இனிதே நடைபெறும் இனிய புவனம் ஆகிவிடுகிறது.

குடியேற்ற நாடுகளில் பயன்படுமென்று நியமம் செய்யும் இந்த ஆதித் திரட்டல் முறையே ஆங்கிலேய அரசு பல்லாண்டு காலமாய் கடைப் பிடித்தது என்பது குறிப்பிடத் தக்கது.

ஒருபுறம் ஆண்டுக்காண்டு அமெரிக்காவிற்கு விரட்டப்படும் மனிதர்களின் வற்றாத வெள்ளப் பெருக்கு அமெரிக்க ஐக்கிய அரசின் கிழக்குப் பகுதியில் விட்டுச் செல்லும் வண்டல் படிவு அகலாமல் நிலைத்து விடுகிறது. அங்கே ஐரோப்பாவிலிருந்து வந்த குடியேற்ற அலை உழைப்புச் சந்தைக்கு மிக துரிதமாய் ஆட்களைக் கொண்டுவந்து சேர்தது. மறுபுறம் அமெரிக்க உள்நாட்டுப் போரின் விளைவாக தேசக் கடன் பூதாகாரமாய் பெருகியது; இதைத் தொடர்ந்து வரிச்சுமை அதிகரித்தது; கேடு கெட்ட நிதியாதிக்கப் பிரபுமார் தலையெடுத்தனர்; இரயில்வேக்கள், சுரங்கங்கள் முதலானவற்றில் ஊக வாணிப நிறுமங்கள் ஆதாயம் பெறுவதற்காகப் பொது நிலத்தில் பெரியதொரு பகுதி தாரை வார்க்கப்பட்டது; சுருங்கச் சொல்லின் மூலதன மையப்பாடு அதி வேகமாய் நடைபெற்றது. ஆகவே, மாபெரும் குடியரசு குடியேறும் தொழிலாளர்களின் சொர்க்க பூமியாய் இருந்த நிலை மறைந்தொழிந்தது. அங்கே, கூலிக்குறைப்பும் கூலித் தொழிலாளியின் சார்பு நிலையும் இன்றும் இயல்பான ஐரோப்பியத் தரத்தை நெருங்கி வரவில்லை என்றபோதிலும், முதலாளித்துவப் பொருளுற்பத்தி அசுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. பிரபுக் குலத்தோருக்கும், முதலாளிமார்களுக்கும் குடியேற்ற நாடுகளின் தரிசு நிலங்களை அரசாங்கம் வெட்கமின்றி தாரை வார்ர்கிறது.

நமது கருத்துகுரியதெல்லாம், பழைய உலகின் அரசியல் பொருளாதாரம் புதிய உலகத்தில்  கண்டுபிடித்து, கூரை மீதேறிக் கூவியறிவிக்கிறது அல்லவா, அந்த இரகசியமதான் --- முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறைக்கும் திரட்டல் முறைக்கும், ஆகவே முதலாளித்துவ தனியுடைமைக்கும் அடிப்படை முன் தேவையாய் அமைவது தனியாள் சுயமாய் சம்பாதித்த தனிச் சொத்தை ஒழிப்பதே, வேறு விதமாய்ச் சொன்னால் உழைப்பாளியின் உடைமையைப் பறிப்பதே ஆகும் என்ற இரகசியம்தான்.          

Friday, January 17, 2014

பகுதி 8 அத்தியாயம் 32 முதலாளித்துவத் திரட்டலின் வரலாற்று வழிப்பட்ட போக்கு

அடிமைகளையும் பண்ணையடிமைகளையும் நேரடியாகக் கூலித் தொழிலாளர்களாய் மாற்றாதவரை, எனவே அது வடிவ மாற்றமாக மட்டுமே உள்ள வரை, மூலதனத்தின் ஆதித் திரட்டல் குறிப்பதெல்லாம் நேரடி உற்பத்தியாளர்களின் உடைமைப் பறிப்பையே; அதாவது உடைமையாளரது உழைப்பின் அடிபடையிலான தனிச் சொத்தின் சிதைவையே. சமுதாய உடைமை அல்லது கூட்டு உடைமைக்கு எதிர் நிலையான தனியுடைமை, உழைப்புச் சாதனங்களும் உழைப்பின் புற நிலைமைகளும் தனியார்களுக்குச் சொந்தமாகயிருக்கும் போது மட்டுமே நிலவுகிறது. ஆனால், இந்த தனியார்கள் உழைப்பாளிகளா இல்லையா என்பதைப் பொறுத்து, தனியுடைமை தன்மை வேறுபடுகிறது.

உழைப்பாளி தாமே தமது உழைப்புச் சாதனங்களின் தனியுடைமையாளராய் இருந்து, தாமே அவற்றை இயக்கும் போதுதான், தாம் சாகுபடி செய்யும் நிலத்துக்குரிய விவசாயியாக, தாம் திறம்பட கையாளும் கருவிக்குரிய கைவினைஞராக இருக்கும் போதுதான், சிறு வீத பொருளுற்பத்தி முறை பூத்துக் குலுங்குகிறது; அதன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்துகி'றது; குறைவற்ற முழு வடிவம் அடைகிறது. இந்த உற்பத்தி முறைக்கு நிலம் துண்டாடப்பட்டிருப்பதும், ஏனைய உற்பத்திச் சாதனங்கள் சிதறுண்டிருப்பதும் அவசியம். இந்த உற்பத்தி சாதனங்களின் குவிப்புக்கு எப்படி இதில் இடமில்லையோ அதே போல் கூட்டு‍‍-வேலை, தனித்தனி உற்பத்தி நிகழ் முறை ஒவ்வொன்றுக்குள்ளேயும் உழைப்புப் பிரிவினை, இயற்கை சக்திகள் மீது சமுதாய கட்டுப்பாடு, இச்சக்திகளை சமுதாயம் உற்பத்தித் திறனுள்ள விதத்தில் பிரயோகிப்பது; சமுதாய உற்பத்தித் திறன்களின் தடையற்ற வளர்ச்சி ஆகியவற்றுக்கும் இதில் இடமில்லை. குறுகிய, ஓரளவு ஆதிகாலத்தில் வரம்புகளுக்குள் இயங்கும் உற்பத்தியமைப்புக்கும், சமுதாயத்துக்கும் மட்டுமே இது ஒத்துவரும்.

குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில், இது தன் சிதைவுக்கான பொருளாயதக் காரணிகளைத் தோற்றுவிக்கிறது. அதுமுதல் சமுதாயத்தினுள் புதிய சக்திகளும் புதிய வேட்கைகளும் ஊற்றெடுக்கின்றன; ஆனால் சமுதாயத்தின் பழைய ஒழுங்கமைப்பு தடையாய் அமைந்து, அவற்றை அடக்கி வைக்கிறது. அது ஒழிக்கப்பட்டாக வேண்டும்; ஒழிக்கப்படுகிறது. அதன் ஒழிப்பு  --- தனியாட்களுக்குரியவையாய் சிதறுண்டு கிடக்கிற உற்பத்திச் சாதனங்களைச் சமுதாய வழியில் குவியச் செய்து, பலரது சிறு சொத்துடைமையை சிலரது பெருஞ் சொத்துடைமையாக மாற்றி, பெருந்திரளான மக்களிடமிருந்து நிலத்தையும் வாழ்வுச் சாதனங்களையும் உழைப்புச் சாதனங்களையும் பறித்து இவ்வாறு பெருந்திரளான மக்களை அச்சத்துக்கும் வேதனைக்கும் உரிய விதத்தில் உடைமையற்றோராக்குவது --- மூலதனத்தின் வரலாற்று பீடிகை ஆகிறது. தொடர்ச்சியான பல வலுவந்த வழிமுறைகள் இதிலடங்கும்; இவற்றில், மூலதனத்தின் ஆதித் திரட்டல் வழிமுறைகள் என்ற விதத்தில் சகாப்தகரமானவற்றை மட்டுமே பரிசீலித்தோம்.

சுயேச்சையான தனித்த உழைப்பாளி அவரது உழைப்புச் சாதனங்களுடன் ஒன்றிக் கலப்பதன் அடிப்படையிலானதென்று சொல்லத்தக்க சுயசம்பாத்தியத் தனியுடைமை போய், முதலாளித்துவ தனியுடைமை வருகிறது; இது பிறர் உழைப்பின் --- பெயரளவில் சுதந்திரமான உழைப்பின் --- சுரண்டலை, அதாவது கூலியுழைப்பை ஆதாரமாய்க் கொண்டுள்ளது.

இந்த மாற்ற நிகழ்முறை பழைய சமூகத்தை அடி முதல் நுனி வரை போதுமான அளவு சிதைத்தும், உழைப்பாளிகள் பாட்டாளிகளாகவும் அவரகளது உழைப்புச் சாதனங்கள் மூலதனமாகவும் மாறியதும், முதலாளித்துவ பொருளுற்பத்தி முறை சொந்தக்காலில் நிற்கத் தொடங்கியதும், உழைப்பை மேலும் சமூகமயமாக்குதல் நிலத்தையும் ஏனைய உற்பத்திச் சாதனங்களையும் சமுதாய அளவில் பயன்படக்கூடிய, எனவே பொதுவிலான உற்பத்திச் சாதனங்களாக மேலும் மாற்றுதல், அதே போல் தனிச் சொதுடைமையாளர்களின் உடைமையை மேலும் பறித்தல் ஆகியவை புது வடிவெடுக்கின்றன. 

இப்போது  உடைமைப் பறிப்புக்கு ஆளாக வேண்டியது சொந்தத்துக்குப் பாடுபடும் உழைப்பாளியல்ல; பல உழைப்பாளிகளை சுரண்டும் முதலாளியே. இந்த உடைமைப் பறிப்பை முதலாளித்துவ பொருளுற்பத்தியினது உள்ளார்ந்த விதிகளின் செயல்பாடே, மூலதனத்தின் மையப்பாடே நிறைவேற்றுகிறது. எப்போதுமே ஒரு முதலாளி பல முதலாளிகளை விழுங்கிவிடுகிறார். இந்த மையப்பாட்டுடன் கூடவே, அதாவது சில முதலாளிகள் பல முதலாளிகளை இவ்வாறு உடைமைப் பறிப்புக்கு ஆளாக்குவதன் கூடவே, உழைப்பு நிகழ்முறையின் கூட்டு..வேலை வடிவமும், விஞ்ஞானத்தின் உணர்வுபூர்வமான தொழில் நுட்பப் பிரயோகமும், நிலத்தின் முறைவழிச் சாகுபடியும், உழைப்புக் கருவிகளைப் பொதுவில் மட்டுமே பயன்படுத்தக்கூடியவையாய் மாற்றுவதும், எல்லா உற்பத்திச் சாதனங்களையும் ஒன்றிணைந்த, சமூகமயாமான உழைப்பின் உற்பத்திச் சாதனங்களாக உபயோகிப்பதன் மூலம் அவற்றைச் சிக்கனப்படுத்துவதும், உலகச் சந்தை என்னும் வலையில் எல்லா மக்கள் சமூகங்களையும் சிக்க வைப்பதும், இத்துடன் முதலாளித்துவ ஆளுகையின் சர்வதேசத் தன்மையும் மேன்மேலும் அதிக அளவில் வளர்கின்றன. 

இந்த மாற்ற நிகழ்முறையின் அனுகூலங்களையெல்லாம் அபகரித்து ஏகபோகமாக்கிக் கொள்ளும் முதலாளித்துவத் திமிங்கலங்களின் தொகை தொடர்ந்து குறைந்து செல்வதோடு கூடவே, துன்ப துயரமும் ஒடுக்குமுறையும் அடிமைத்தனமும் சீரழிவும் சுரண்டலும் பெருகிச் செல்கின்றன. ஆனால். தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்பும் வளர்ந்து செல்கிறது; இவ்வர்க்கம் தொகையில் தொடர்ந்து பெருகுகிறது. முதலாளித்துவ பொருளுற்பத்தி நிகழ்முறையின் இயங்கமைப்பே இவ்வர்கத்தைக் கட்டுப்பாடு மிக்கதாக்கி, ஒன்றுபடுத்தி, அமைப்பு வழியில் திரளச் செய்கிறது. மூலதனத்தின் ஏகபோகம், அதனோடு சேர்ந்தும் அதன் ஆளுகையிலும் பிறந்து வளர்ந்த பொருளுற்பத்தி முறைக்குப் பூட்டிய விலங்காகி விடுகிறது. முடிவில் உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில், அவற்றின் மூதலாளித்துவ மேலோடு அவற்றுக்கு ஒவ்வாததாகி விடும் நிலை வருகிறது. ஆகவே அந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது.

முதலாளித்துவப் பொருளுற்பத்தி இயற்கை விதிக்குரிய உறுதிப்பாட்டுடன் அதன் மறுப்பையே ஈன்றெடுக்கிறது. இது மறுப்பின் மறுப்பு.

தனியாள் உழைப்பிலிருந்து பிறக்கும் சிதறலான தனியுடைமையை முதலாளித்துவ தனியுடைமையாக மாற்றுவது, ஏற்கெனவே நடைமுறையில் சமூகமயாமாகி விட்ட பொருளுற்பத்தியை ஆதாரமாய்க் கொண்ட முதலாளித்துவ தனியுடைமையை சமுதாயப் பொதுவுடைமையாக மாற்றுவதை விடவும் ஒப்பிடமுடியாத அளவுக்கு நீண்ட நெடிய நிகழ்முறையாகும்; வன்முறை மலிந்த கடினமான நிகழ்முறையாகும்; இது இயற்கைதான். முதலாவது மாற்றம் உடைமை பறிப்பாளர் ஒரு சிலர் மக்கட் பெருந்திரளின் உடைமையைப் பறிப்பதாகும். இரண்டாவது மாற்றம் மக்கட் பெருந்திரள் உடைமையாளர் ஒரு சிலரின் உடைமையைப் பறிப்பதாகும்.            

பகுதி 8 அத்தியாயம் 31: தொழில் துறை முதலாளி பிறந்த கதை

தொழில் துறை முதலாளி பிறந்த கதை சாகுபடியாளர் பிறந்த கதையைப் போல் படிப்படியாக நடந்தேறியதல்ல. சந்தேகத்துகிடமின்றி, சிறு கைவினைச் சங்க ஆண்டான்கள் பலரும் இன்னுமதிகத் தொகையில் சுயேச்சையான சிறு கைவினைஞர்களும், ஏன், கூலித் தொழிலாளிகளும் கூட, சிறு முதலாளிகளாக மாறினார்கள்; கூலியுழைப்புச் சுரண்டலையும், ஆகவே மூலதனத் திரட்டலையும் படிப்படியாக விரிவுபடுத்தி முழு அளவில் முதலாளிகளானார்கள்.

தப்பியோடி வந்த பண்ணையடிமைகள் எவர் அதிபராக வேண்டும், எவர் வேலைக்காரராக வேண்டும் என்ற பிரச்சினை அவர்கள் தப்பியோடி வந்த தேதி முன்னால் வருகிறதா, பின்னால் வருகிறதா என்பதைக் கொண்டே பெரும்பாலும் தீர்மானிக்கப் பட்டது.

கடு வட்டியைக் கொண்டும், வாணிபத்தைக் கொண்டும் உருவான பண-மூலதனம் தொழில் துறை மூலதனமாக மாற விடாமல் கிராமப்புறத்தில் பிரபுத்துவ அமைப்பும் நகரங்களில் கைவினைச் சங்க அமைப்பும் தடுத்துக் கொண்டிருந்தன. பிரபுத்துவ சமூகம் சிதைவுற்று, கிராமப்புற மக்கள் திரளின் உடைமை பறிக்கப்பட்டு, அவர்களின் ஒரு பகுதியினர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்தக் கட்டுத்தளைகள் ஒழிந்தன. புதிய பட்டறைத் தொழில்கள் கடல்வழித் துறைமுகங்களிலோ, உட்பகுதியில் பழைய நகராட்சிகள், கைவினைச் சங்கங்கள் ஆகியவற்றின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட இடங்களிலோ நிறுவப்பட்டன.

அமெரிக்காவில் தங்கமும் வெள்ளியும் கண்டுபிடித்தது, அக்கண்டத்து பூர்வ குடிகளை அழித்தும் அடிமைப்படுத்தியும் சுரங்கங்களில் சமாதி செய்தும் நாசமாக்கியது, கிழக்கிந்தியப் பகுதிகளை பிடித்து சூறையாடத் தொடங்கியது, கறுப்புத் தோல் மானிடரை வாணிப வேட்டையாடுவதற்கான வேட்டைக் காடாய் ஆப்பிரிக்காவை மாற்றியது --- இவையெல்லாம் முதலாளித்துவப் பொருளுற்பத்திச் சகாப்தத்தின்  அருணோதயக் காட்சிகளாய் அமைந்தன. அன்பும் அமைதியும் மிகுந்த இந்தச் செயல்கள் ஆதித் திரட்டலின் பிராதான நிகழ்வுகளாய் அமைந்தன. 

ஆதித் திரட்டலின் பல்வேறு நிகழ்வுகளையும் இப்போது முக்கியமாய் ஸ்பெயின், போர்ச்சுகல், ஹாலந்து, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஏறக்குறைய காலவரிசைப்படி காணலாம். இங்கிலாந்தில் 17ஆம் நூற்றாண்டின் முடிவில் இவை முறைப்படியான ஓர் இணைவை வந்தடைகின்றன; காலனி நாடுகள், தேசக் கடன், நவீன வரிவிதிப்பு முறை, காப்பு முறை ஆகியவை இந்த இணைவில் அடங்கும். இந்த வழிமுறைகள் ஓரளவுக்கு மிருக பலத்தை நம்பியிருப்பவை. காலனியாதிக்க அமைப்பை உதாரணமாய்க் குறிப்பிடலாம். ஆனால் பிரபுத்துவ பொருளுற்பத்தி முறை முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையாக மாறும் நிகழ்முறையை செயற்கையாகத் துரிதப்படுத்தவும், மாறிச் செல்லும் காலத்தைக் குறுக்கவும், இவையெல்லாம் ஒருமுகப்படுத்தப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட சமூக வலுவந்தமாகிய அரசு அதிகாரத்தைப் பிர்யோகிக்கின்றன. புதிய சமுதாயத்தைக் கருக்கொண்ட பழைய சமுதாயம் ஒவ்வொன்றுக்கும் வலுவந்தமே மருத்துவத் தாய். அதுவே ஒரு பொருளாதாரச் சக்திதான்.

கிறித்துவ இனத்தார் எனப்படுவோர் உலகின் எல்லா மண்டலங்களிலும் தம்மால் அடிமைப்படுத்த முடிந்த எல்லா மக்கள் சமூகங்கள் மீதும் காட்டுமிராண்டிச் செயல்களும், வெறித்தனமான அட்டூழியங்களும் புரிந்துள்ளனர்.அவர்கள் ஜாவா தீவுக்கு அடிமைகள் வேண்டுமென்று செலிபிஸ் தீவிலிருந்து ஆட்களைத் திருடிக் கொண்டுவர கையாண்ட முறை அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தெளிவாய் புலப்படுத்துகிறது. இத்திருட்டுக்காக ஆள் திருடர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். திருடனும் மொழிபெயர்பாளனும் விற்பனையாளனும் இந்தத் தொழிலில் முக்கியமானவர்கள்; சுதேசி மன்னர்களே பிரதான விற்பனையாளர்கள். அவர்கள் கால் வைத்த இடமெல்லாம் பேரழிவும், மக்கள் தொகைச் சுருக்கமும் நேரிட்டன. ஜாவாவைச் சேர்ந்த பாஞ்சுவாங்கி மாகாணத்தில்  1750இல் 80,000 பேர் வசித்தனர். 1811இல் 18.000 பேர் மட்டுமே இருந்தனர். வாணிபத்தின் பெருமையே பெருமை!

ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் அரசியல் ஆட்சி நடத்தியதோடு, தேயிலை வர்த்தகத்திலும், பொதுவாக சீன வர்த்தகத்திலும், ஐரோப்பாவிற்கும் ஐரோப்பாவிலிருந்துமான சரக்கு போக்குவரத்திலும் தனி ஏகபோகம் பெற்றது தெரிந்ததே. அதிகாரிகள் தாமே விலை நிர்ணயித்து பரிதாபத்துக்குரிய இந்தியர்களை இஷ்டம்போல் கொள்ளையிட்டனர். இந்த தனியார் வர்த்தகத்தில் கவர்னர் ஜெனரலும் பங்கு பெற்றார். சல்லிக் காசு முதலீடின்றி ஆதித்திரட்டல் நடந்தேறியது.

1769க்கும் 1770 க்குமிடையில், ஆங்கிலேயர்கள் அரிசி முழுவதையும் வாங்கி வைத்து, கொள்ளை விலை கிடைத்தாலன்றி அதனை விற்க மறுத்து, பஞ்சத்தையே உண்டாகி விட்டார்கள்.     

ஏற்றுமதி வர்த்தகத்துக்கென்றே அமைந்த மேற்கிந்தியத் தீவுகள் போன்ற தோட்டத்தொழில் காலனிகளிலும், சூறைக் களமாகிவிட்ட மெக்சிகோ, இந்தியா போன்ற செல்வ செழுமையும் மனித வளமும் வாய்ந்த நாடுகளிலும் பூர்வ குடிகளை நடத்திய விதம் இயல்பாகவே பயங்கர்மானதாய் இருந்தது. ஆனால், முறையாகக் குடியேற்ற நாடுகள் எனப்படுகிறவற்றிலும் கூட, ஆதித் திரட்டலின் கிறித்துவ தன்மை பொய்யாகிவிடவில்லை.

காலனியாதிக்க அமைப்பு சேமப் பண்ணை போன்று வர்த்தகத்தையும், நீர்வழிப் போக்குவரத்தையும் முதிர்ச்சியுறச் செய்தது. லூதரின் "ஏகபோக சங்கங்கள்" மூலதனக் குவிப்புக்கான சக்தி வாய்ந்த நெம்புகோல்களாய் இருந்தன. காலனி நாடுகள் முளைவிட்டு வந்த பட்டறைத் தொழில்களுக்கு சந்தை கிடைக்கச் செய்ததோடு. சந்தை ஏகபோகத்தின் வாயிலாக மூலதனத் திரட்டலைப் பெருகச் செய்தன. ஐரோப்பாவுக்கு வெளியே அப்பட்டமான கொள்ளை, அடிமைப்படுதல், படுகொலை ஆகிய வழிகளில் கைப்பற்றிய செல்வங்கள் கடல் வழியாகத் தாய்நாடு வந்து அங்கே மூலதனமாயின.

இன்று தொழில் துறை முதன்மை என்பது வாணிப முதன்மையையும் குறிப்பதாகும். ஆனால், முறையான பட்டறைத் தொழில் என்படுவதன் காலத்தில், வாணிப முதன்மைதான் தொழில் துறையில் ஆதிக்க நிலைக்கு வழிசெய்கிறது. அந்தக் காலத்தில் காலனியாதிக்க அமைப்பு அதிமுக்கிய பாத்திரம் வகித்தமைக்கு இதுவே காரணம்.            

பொதுக் கடன்கள், அதாவது தேசக் கடன்கள் வாயிலான செலாவணி முறை பட்டறைத் தொழிற் காலத்தில் பொதுவாக ஐரோப்பா முழுவதுமே வியாபித்துவிட்டது. காலனியாதிக்க அமைப்பு அதன் கடல்வழி வர்த்தகத்தாலும் வாணிபப் போர்களாலும் இந்த கடன்..செலாவணி முறைக்கு சேமப் பண்ணை ஆயிற்று. இவ்வாறு இது முதலில் ஹாலந்தில் வேரூன்றியது. தேசக் கடன், அதாவது அரசின் உடைமை மாற்றம்---இந்த அரசு எதேச்சாதிகாரமாகவோ, அரசியல் சாசன வழிப்பட்டதாகவோ, குடியரசாகவோ இருக்கலாம்----முதலாளித்துவ சகாப்த்த்தை குறிக்கும் தனி விசேஷமாயிற்று..

பொதுக் கடன்..செலாவணி என்பது மூலதனத்தின் தாரக மந்திரம் ஆகிறது. பொதுக் கடன் ஆதித் திரட்டலின் வலுமிக்க நெம்புகோல்களில் ஒன்றாகிறது. மந்திரக் கோலை வீசியதும் நிகழும் அற்புதம் போல், இது மலட்டுப் பணத்தை இனப்பெருக்கத் திறனுடையதாக்கி, இவ்விதம் அதனை மூலதனமாக மாற்றுகிறது; தொழில் துறையிலும், ஏன், கடுவட்டியிலும் கூட தவிர்க்கமுடியாதபடி ஏற்படுகிற இன்னல்களுக்கும் அபாயங்களுக்கும் உட்படுத்தாமலே மூலதனமாக மாற்றுகிறது.

தேசக் கடன் தொகை ஒவ்வொன்றிலும் கணிசமான பகுதி வரிக் குத்தகையாளர்களுக்கும் வணிகர்களுக்கும் தனிப்பட்ட பட்டறையதிபர்களுக்கும் வானிலிருந்து வந்து விழுந்த மூலதனமாய் பயன்படுகிறது. இதற்கெல்லாம் மேலாக, கூட்டுப் பங்கு நிறுமங்கள் உருவாவதற்கும், வாங்கல்  விற்றலுக்குரிய எல்லாவிதப் பண்டங்களிலும் பேரம் நடப்பதற்கும், பங்கு வாணிபம் தோன்றுவதற்கும், சுருங்கச் சொல்லின் பங்குச் சந்தை சூதாட்டத்துக்கும் நவீன வங்கியாதிக்கத்துக்கும் தேசக் கடன் வகைசெய்கிறது.

தேசிய நாமங்கள் சூட்டப்பெற்ற பெற்ற பென்னம்பெரும் வங்கிகள் எல்லாம் அவை பிறந்த போது தனிப்பட்ட ஊக வணிகர்களின் சங்கங்களாகவே இருந்தன. இவர்கள் அரசாங்கத்தின் பக்கம் சேர்ந்து கொண்டு, தமக்கு கிடைத்த தனிச் சலுகைகளின் பயனாய் அரசுக்கே கடன் கொடுக்கும் நிலைக்கு உயர்ந்தார்கள். ஆகவே, இந்த வங்கிகளின் இருப்பில் தொடர்ந்து ஏற்பட்ட உயர்வு தேசக் கடன் திரண்டு பெருகியதற்கு பிழையா அளவை ஆகிறது. இவ்வங்கிகளின் முழு வளர்ச்சி 1694இல் இங்கிலாந்து வங்கி நிறுவப்பட்டதிலிருந்து ஆரம்பமாகிறது.

தேசக் கடனுடன் கூடவே சர்வதேசக் கடன்-செலாவணி முறையும் உருவாயிற்று; பல சந்தர்ப்பங்களிலும் இது ஏதாவதொரு மக்கள் சமூகத்தினது ஆதித் திரட்டலின் மூலாதாரங்களில்  ஒன்றை மூடி மறைக்கிறது. எடுத்துக்காட்டாக வெனீசியக் கொள்ளையமைப்பின் இழிசெயல்கள் ஹாலந்தினுடைய மூலதனச் செல்வத்தின் இரகசிய அடித்தளங்களில் ஒன்றாய் அமைந்தன.

இன்று அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிறப்புச் சான்றிதழே இல்லாமல் தலைதூக்கும் ஏராளமான மூலதனம் நேற்று இங்கிலாந்தில் குழந்தைகளின் இரத்தத்திலிருந்து பிறந்த மூலதனமே.

தேசக் கடனுக்கு அரசின் வருவாய் ஆதரவாய் இருப்பதால் --- இந்த வருவாயிலிருந்து வருடாந்திர வட்டி தொகைகளும் பிறவும் செலுத்தப்பட வேண்டுமென்பதால் --- நவீன வரி விதிப்பு முறை தேசக் கடன் முறையினை முழுமைப்படுத்துவதற்கான அவசியக் கூறாயிற்று. அரசாங்கம் அசாதாரணச் செலவுகளை சமாளிக்க இந்தக் கடன்கள் உதவுகின்றன.

இவ்வாறு, நவீன வரி வருவாய் அமைப்பு --- அத்தியாவசியமான வாழ்வுச் சாதனங்களுக்கு வரி விதிப்பதை (அவற்றின் விலையை இவ்விதம் உயரச் செய்வதை) அச்சாணியாய் கொண்ட இந்த அமைப்பு --- தற்பெருக்கத்தின் கருவை தன்னகத்தே கொண்டுள்ளது. மிகை வரிவிதிப்பு தற்செயலாய் நிகழ்வதன்று; கோட்பாடாய் அனுசரிக்கப்படுவது என்றே சொல்ல வேண்டும்.

இந்த ஏற்பாடு கூலித் தொழிலாளியின் மீது ஏற்படுத்திய நாசகர விளைவைக் காட்டிலும், இங்கே நாம் கவனிக்க வேண்டியது: இதன் விளைவாக விவசாயிகளும், கைவினைஞர்களும், சுருங்கச் சொன்னால் கீழ் நடுத்தர வர்க்கத்தின் எல்லா பிரிவினரும் வலுவந்த உடைமைப் பறிப்புக்கு ஆளானார்கள் என்பதே. இது பற்றி முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களிடையே கூட் இருவேறு கருத்தில்லை. இவ்வமைப்பின் உடைமைப் பறிப்புத் திறனை அதன் உறுப்புகளில் ஒன்றான காப்பு முறை உயர்த்துகிறது.

பட்டறையதிபர்களை உண்டாக்குவதற்கும் சுயேச்சையான உழைப்பாளர்களின் உடைமையை பறிப்பதற்கும், நாட்டின் உற்பத்திச் சாதனங்களையும் வாழ்வுச் சாதனங்களையும் மூலதனமாக்குவதற்கும், மத்திய கால உற்பத்தி முறையிலிருந்து நவீன கால உற்பத்தி முறைக்கு மாறிச் செல்லும் காலத்தை வலுவந்தமாய்க் குறுக்குவதற்கும் காப்பு முறை செயற்கைச் சாதனமாய் பயன்பட்டது.

உபரி-மதிப்பு ஈட்டுவோருக்கு சேவகம் செய்யத் தொடங்கியவுடனே, அந்த அரசுகள் காப்புத் தீர்வைகள் மூலம் சுற்றடியாகவும், ஏறுமதி வரிகள் மூலம் நேரடியாகவும் தத்தமது மக்களை சூறையாடியதோடு நிற்கவில்லை. தமது சார்பு நாடுகளிலும் எல்லாத் தொழில்களையும் வலுவந்தமாய் வேரோடு பிடுங்கியெறிந்தன.

காலனியாதிக்க அமைப்பு, பொதுக் கடன்கள், கடுமையான வரி விதிப்பு, காப்பு முறை, வாணிபப் போர்கள் முதலானவை --- முறையான பட்டறைத் தொழிற் காலம் பெற்றெடுத்த இந்தக் குழந்தைகள் --- நவீனத் தொழில் துறையின் பிள்ளைப் பிராயத்தில் விசுவரூபமெடுத்து வளர்கின்றன. ஒன்றுமறியா அப்பாவி மக்கள் மிகப் பெருமளவில் வதைக்கு ஆளாவது நவீனத் தொழில் துறையின் பிறப்பைக் குறிக்கிறது. முடியரசுக் கடற்படைக்கு ஆள் சேர்ப்பது போலவே, தொழிற்சாலைகளுக்கும் வலுவந்தமாய் ஆள் சேர்த்தனர்.

சின்னஞ்சிறு குழந்தைகளின் பிஞ்சு விரல்களே மிகப் பெரும்பாலும் அதிகமாய்த் தேவைப்பட்டதால், லண்டன், பர்மிங்காம் போன்ற இடங்களின் வெவ்வேறு வட்டார வேலையில்லங்களிலிருந்து பழகு தொழிலாளர்களை கொள்முதல் செய்யும் பழக்கம் உடனே பிறந்தது.

வேலைகள் நடக்கும்படி பார்த்துக் கொள்ள கங்காணிகள் நியமிக்கப்பட்டனர்; அவர்களது குறியெல்லாம் குழந்தைகளை முடிந்தவரை அதிகமாக வேலை வாங்குவதே.

அதீத உழைப்பால் இறப்பின் விளிம்புக்குச் செல்லும் வரை, அவர்களைத் துன்புறுத்தினார்கள் --- சவுக்கால் அடித்தார்கள், சங்கிலியால் பிணைத்தார்கள்; சில சந்தர்ப்பங்களில் கொடுமை தாளாமல் சிலர் தற்கொலை செய்து கொள்ள நேர்ந்தது. லங்காஷயர் போன்ற மாவட்டங்களில் பொதுமக்களின் கண்ணிற்கெட்டாத தொலைவுகளில் இருந்த எழில் கொஞ்சும் பள்ளத்தாக்குகள் கொடுவதையும் கொலை பலவும் நடக்கும் துயரார்ந்த இருள்வெளியாய் மாறின.

.......  தொரந்து இரவு முழுக்க வேலை செய்ய இன்னொரு தொகுதி ஆட்களைத் தயாராக வைத்துக் கொண்டார்கள்; இரவுத் தொகுதியினர் சற்று முன்னரே விட்டுப் போன படுக்கைகளில் பகல் தொகுதியினர் வந்து படுப்பார்கள். படுக்கையின் சூடு தணிவதே இல்லை என்பது லங்கஷயர் வழக்காகிவிட்டது.

முதலாளித்துவ திரட்டலுக்கான வழிமுறையாகத் தங்களுக்கு பயன்பட்ட ஒவ்வொரு அக்கிரமத்தைப் பற்றியும் இந்த நாடுகள் வாய் கூசாமல் பெருமையடித்துக் கொண்டன.

.....  இங்கிலாந்து ஸ்பானிய அமெரிக்காவுக்கு 1743 வரை ஆண்டுக்கு 4800 நீக்ரோக்களை வழங்கும் உரிமையைப் பெற்றது. இது பிரிட்டானிய கள்ள கடத்தலுக்கு அதிகாரப்பூர்வ போர்வை ஆயிற்று. அடிமை வர்த்தகத்தைக் கொண்டு லிவர்பூல் உப்பி கொழுத்தது. இதுவே அதன் ஆதித் திரட்டலுக்கான வழியாய் இருந்தது.

இப்படியெல்லாம் படாத பாடு பட்டுத்தான், முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையின் "சாசுவத இயற்கை விதிகள்" நிலை நாட்டப் பெற்றன. உழைப்பாளிகளும் உழைப்புச் சாதனங்களும் பிரிந்து தனித்தனியாகும் நிகழ்முறை பூர்த்தி செய்யப்பட்டது; ஒரு துருவத்தில் சமுதாய உற்பத்திச் சாதனங்களும் வாழ்வுச் சாதனங்களும் மூலதனமாக மாற்றப்பட்டன; மறு துருவத்தில் பெருந்திரளான மக்கள் கூலித் தொழிலாளர்களாய், நவீன சமுதாயத்தின் செயற்கைப் படைப்பாகிய "சுதந்திர உழைப்பாளி ஏழைகளாய்" மாற்றப்பட்டனர். பணம் "பிறவியிலேயே கன்னத்தில் இரத்தக் கறை படிந்ததாய் உலகில் பிரவேசிக்கிறது" என்கிறார் ஒழியே. ஆனால், மூலதனமோ உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை, உடலின் ஒவ்வொரு மயிர்க்காலிலிருந்தும் இரத்தமும் சகதியும் சொட்ட சொட்ட உலகில் பிரவேசிக்கிறது.

Tuesday, January 14, 2014

பகுதி 8 அத்தியாயம் 30: வேளாண்மைப் புரட்சியால் தொழில் துறையில் ஏற்பட்ட விளைவு. தொழில் துறை மூலதனத்துக்காக உள்நாட்டுச் சந்தையை உருவாக்குதல்.

விவசாயக் குடிகளின் நிலவுடைமைப் பறிப்பும் நிலவெளியேற்றமும் தொடர்ச்சியாக அல்லவென்றாலும் மீண்டும் மீண்டும் நடைப் பெற்றதன் காரணமாய் நகரத் தொழில்களுக்கு, கைவினைச் சங்கங்களுடன் சிறிதும் தொடர்பில்லாதவர்களும் அச்சங்கங்களால் விலங்கிடப்படாதவர்களுமான திரள் திரளான பாட்டாளிகள் கிடைத்தார்கள்.

சொந்தக் காலில் நிற்கும் சுயேச்சை விவசாயிகள் தொகை வரவர குறைந்து போனதால், தொழில் துறைப் பாட்டாளி வர்க்கம் திரண்டு குவிந்தது.

நிலவுடைமைப் புரட்சியுடனாகவே சாகுபடி முறைகள் மேம்பாடுற்றன; கூட்டு-வேலை அதிகமாயிற்று, உற்பத்திச் சாதனங்களின் குவிப்பு கூடுதலாயிற்று. விவசாயக் கூலித் தொழிலாளர்கள் இன்னும் கடுமையாய் வேலை வாங்கப்பட்டனர். எனவே, விவசாயக் குடிகளின் ஒரு பகுதியினர் விடுவிக்கப்பட்டதோடு, அவர்களது முந்தைய ஊட்டச் சாதனங்களும் விடுவிக்கப்பட்டன. இப்போது அவை மாறும் மூலதனத்தின் பொருட் கூறுகளாக மாறின. 

வாழ்வுச் சாதனங்களுக்கு நேர்ந்த அதே கதிதான் உள்நாட்டு வேளாண்மையை நம்பியிருக்கும் தொழில் துறைக் கச்சாப் பொருட்களுக்கும் நேர்ந்தது. அவை மாறா-முலதனத்தின்  கூறுகளில் ஒன்றாய் மாற்றப்பட்டன.

வெண் சணல் முன்பிருந்தது போலவே இருக்கிறது; ஓர் இழை கூட மாறவில்லை; ஆனால் புதியதொரு சமூக ஆன்மா அதனுள் புகுந்துவிட்டது. இப்போது அது பட்டறைத் தொழில் அதிபருடைய மாறா-மூலதனத்தின்  பகுதி ஆகிறது. 

வெண் சணல் நூற்பில் செலவிடப்படும் கூடுதல் உழைப்பு முன்பெல்லாம் ஏராளமான விவசாயக் குடும்பங்களுக்குக் கூடுதல் வருமானமாக மாறியது; இரண்டாம் பிரெடெரிக் ஆட்சிக் காலத்தில் பிரஷ்ய அரச குடும்பத்துக்கான வரி வருவாயாக மாறியது எனலாம். இப்போது அது ஒரு சில முதலாளிகளுக்குக் கிடைக்கும் இலாபமாக மாறுகிறது. 

நூற்பாளர்களும் நெசவாளர்களும் சுயேச்சையாய் வாழ்வதற்கான சாதனங்களாயிருந்த கதிர்களும் தறிகளும் இப்போது அவர்களை அடக்கி ஆள்வதற்கும் அவர்களிடமிருந்து ஊதியமிலா உழைப்பைக் கறப்பதற்குமான சாதனங்களாய் மாறி விட்டன.

பெரும் பட்டறைகள் --- ஒருசேரப் பிணைக்கப்பட்ட வயல்களைக் குறிப்பிடுவது போல ---  manufactures reunies, அதாவது பட்டறைக் குழுமங்கள் என்றே அழைக்கப்பட்டன. 

விவசாயக் குடிகளில் ஒரு பகுதியினரின் நிலவுடைமைப் பறிப்பும் நிலவெளியேற்றமும் தொழிலாளர்களையும், அவர்களது வாழ்வுச் சாதனங்களையும், உழைப்புக்கான மூலப் பொருளையும் தொழில் துறை மூலதனத்துக்கென விடுவித்தது மட்டுமல்லாமல் உள்நாட்டுச் சந்தையை உருவாக்கவும் செய்தன.

நூல், துணி, மோட்டாக் கம்பளிப் பண்டங்கள் --- இப்பண்டங்களின் கச்சாப் பொருட்கள் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் எட்டக்கூடியவையாய் இருந்தன; ஒவ்வொரு விவசாயக் குடும்பத்தாலும் அதன் சொந்த உபயோகத்துக்காக நூற்கப்பட்டு வந்தன --- இப்போது பட்டறைத் தொழிலின் உற்பத்திப் பண்டங்களாக மாறிவிட்டன. 

நிலத்தில் சாகுபடி செய்வதை துணைத் தொழிலாய் வைத்துக் கொண்டே தொழில் துறை உழைப்பை பிரதான வேலையாய் கொள்ளும் சிறுவுடைமைக் கிராமவாசிகளது புதிய வர்க்கத்தை அது உண்டாக்குகிறது. 

முடிவில் நவீனத் தொழில் துறைதான் இயந்திர சாதனங்களின் மூலம் முதலாளித்துவ வேளாண்மைக்கு நிலையான அடித்தளம் இடுகிறது. விவசாயக் குடிகளில் மிகப் பெரும்பாலானவர்களின் நிலவுடைமையை அடியோடு பறிக்கிறது.  வேளாண்மையும் கிராமப்புற வீட்டுத் தொழிலும் பிரிந்து தனித்தனியாவதைப் பூர்த்தி செய்கிறது; இந்த வீட்டுத் தொழிலின் வேர்களான நூற்பையும் நெசவையும் கெல்லியெறிகிறது. அதோடு இவ்விதம் அது உள்நாட்டுச் சந்தை முழுவதையும் முதன்முதலாகத் தொழில் துறை மூலதனம் வெற்றி கொள்ளச் செய்கிறது.      

பகுதி 8 அத்தியாயம் 29: முதலாளித்துவ சாகுபடியாளர் பிறந்த கதை

சுயேச்சையான சிறு நிலவுடைமையாளர்களும் பண்ணையடிமைகளும் மிகவும் வேறுபட்ட வழிகளில் நிலவுரிமைகள் பெற்றிருந்தனர்; எனவே மிகவும் வேறுபட்ட பொருளாதார நிலைமைகளில் விடுதலைப் பெற்றனர். இங்கிலாந்தில் சாகுபடியாளரின் (capitalist farmer) முதல் வடிவம் கங்காணி (bailiff) என்பதாகும். இந்த கங்காணியே பண்ணையடிமைதான். 14ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இவரது இடத்துக்கு சாகுபடியாளர் வருகிறார். இச்சாகுபடியாளருக்கு நிலவுடைமையாளர் விதையும் கால்நடைகளும் கருவிகளும் தருகிறார். இவரது நிலைமைக்கும் விவசாயியின் (peasant) நிலைமைக்கும் அதிக வேறுபாடு இல்லை. ஆனால் இவர் கூடுதலான அளவில் கூலியுழைப்பைச் சுரண்டுகிறார். விவசாய செலவில் ஒரு பகுதியை இவரும், மறு பகுதியை நிலவுடைமையாளரும் முன்னீடு செய்கிறார்கள். ஒப்பந்தத்தால் நிர்ணயிக்கப்படும் விகிதத்தில் இருவரும் மொத்த விளைபொருளைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள். இங்கிலாந்தில் இந்தக் குத்தகை வடிவம் விரைவில் மறைந்து, முறையான முதலாளித்துவ சாகுபடியாளர் வருகிறார்; இவர் கூலித் தொழிலாளர்களை அமர்த்தி, தனது மூலதனத்தைப் பெருக்கிக் கொள்கிறவர்; உபரி-உற்பத்தியின் ஒரு பகுதியை நில வாடகையாகப் பண வடிவிலோ பண்ட வடிவிலோ நிலவுடைமையாளருக்குச் செலுத்துகிறவர்.

15ஆம் நூற்றாண்டின் கடைசி மூன்றாம் பகுதியில் தொடங்கி அனேகமாக 16ஆம் நூற்றாண்டு முழுவதிலும் நீடித்து நடந்த வேளாண்மைப் புரட்சி உழவர் பெருந்திரளை எவ்வளவு வேகத்தில் வறுமையிலாழ்த்தியதோ, சாகுபடியாளரை அவ்வளவு வேகத்தில் செல்வந்தராக்கியது.

கிராமப் பொது நிலங்களை அபகரித்ததன் மூலம், அவர் அநேகமாய் எவ்வித செலவும் இல்லாமலே தமது கால்நடைச் செல்வத்தைப் பெருமளவு அதிகரித்துக் கொள்ள முடிந்தது. இந்தக் கால்நடைகள் நிலத்தின் செய்நேர்த்திக்கு வேண்டிய எருவைப் பெருக்கின.

உயர் நிலை உலோகங்களின் மதிப்பிலும் எனவே பணத்தின் மதிப்பிலும் ஏற்பட்ட தொடர்ச்சியான வீழ்ச்சி சாகுபடியாளருக்குக் கிடைத்த பொற்கனி ஆயிற்று. மேலே விவரிக்கப்பட்ட  நிலைமைகளெல்லாம் ஒருபுறமிருக்க, இது கூலியைக் குறையச் செய்தது. கூலியின் ஒரு பாகம் இப்போது பண்ணையின் இலாபத்தோடு சேர்ந்து கொண்டது. தானியம், கம்பளி, இறைச்சி ஆகியவற்றின் விலையில், சுருங்கச் சொல்லின் வேளாண்மை உற்பத்திப் பொருட்கள் எல்லாவற்றின் விலையிலும் தொடர்ச்சியாக ஏற்பட்ட உயர்வு சாகுபடியாளர் தரப்பில் எந்த முயற்சியுமின்றியே அவரது பண..மூலதனத்தை ஊதிப் பெருகச் செய்தது. அதேபோது, அவர் செலுத்திய நில வாடகை (பணத்தின் பழைய மதிப்பில் கணக்கிடப் படுவதால்) எதார்த்தத்தில் சுருங்கியது. இவ்வாறு சாகுபடியாளர்கள் தொழிலாளர்களை மட்டுமல்லாமல் நிலவுடைமையாளர்களையும் தலையில் தட்டி செல்வந்தராயினர். 

பகுதி 8 அத்தியாயம் 28: உடைமை பறிக்கப்பட்டோருக்கு எதிரான கொலைகாரச் சட்டங்கள் ... 15 ஆம் நூற்றாண்டின் முடிவில் தொடங்கியவை. பாராளுமன்றச் சட்டங்கள் மூலம் கூலியை வலுவந்தமாய்க் குறைத்தல்.

"சுதந்தர பாட்டாளி வர்க்கத்தை அது படைக்கப்பட்டு உலகில் விடப்பட்ட அதே வேகத்தில் உட்கிரகிப்பது முடியவில்லை. அதேபோது, வழக்கமான தமது வாழக்கை முறையிலிருந்து திடீரென வலிந்திழுக்கப்பட்ட இவர்கள் அவ்வளவு திடீரென புதிய நிலைமையின் கட்டுப்பாட்டுக்குத் தம்மை தகவமைத்துக் கொள்ள முடியவில்லை. ஓரளவு மனப்பாங்காலும், மிகப் பெரிமளவு சூழ்நிலைகளின் நிர்ப்பந்தத்தாலும் இவர்கள் திரள் திரளாய்ப் பிச்சைக்காரர்களாகவும், கொள்ளைக்காரர்களாகவும், வேலையற்ற ஊர்சுற்றிகளாகவும் மாற வேண்டியதாயிற்று. இதனால்தான் 15 ஆம் நூற்றாண்டின் முடிவிலும், 16 ஆம் நூற்றாண்டு முழுவதிலும் மேற்கு ஐரோப்பாவெங்கிலும் வேலையற்ற ஊர்சுற்றிகளுக்கு எதிராகக் கொலைகாரச் சட்டங்கள் அமலாயின.

இல்லாது ஒழிந்து போன பழைய நிலைமைகள் இருப்பது போலவும், அவர்கள் விரும்பினால் அந்தப் பழைய நிலைமைகளில் தொடர்ந்து வேலை செய்திருக்கலாம் என்பது போலவும், இந்தச் சட்டங்கள் அவர்களை "விரும்பிக் குற்றம் புரிந்த" குற்றவாளிகளாய்க் கருதி தண்டித்தன.

எட்டாம் ஹென்றி, 1530: வயோதிகர்களும் வேலை செய்யமுடியாதவர்களுமான பிச்சைக்காரர்கள் பிச்சையெடுக்க உரிமம் பெறுவர். ஆனால் திடகாத்திரமான ஊர்சசுற்றிகளுக்கு கசையடியும், சிறைத் தண்டனையும் கிடைக்கும்.  ஊர்சுற்றியாய் இரண்டாவது முறை கைதானால் மீண்டும் கசையடி கிடைக்கும்; பாதிக் காதும் துண்டிக்கப்படும்; மூன்றாவது முறை இக்குற்றம் புரிந்தால், அவர் திருத்த முடியாத குற்றவாளியாகவும், பொது நலனின் விரோதியாகவும் கருதப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்படும். 

ஆறாம் எட்வர்டு, 1547: ஒருவர் வேலை செய்ய மறுத்தால், அவரை சோம்பேறி என்று எவர் குற்றஞ்சாட்டினாரோ அவருக்கே அடிமையாகும் படி தண்டிக்கப்படுவார். எஜமானர் அடிமைக்கு ரொட்டியும் தண்ணீரும் உணவாகக் கொடுப்பார்; எவ்வளவு அருவருப்பான வேலையானாலும் சரி, சவுக்கையும் சங்கிலியையும் பயன்படுத்தி அடிமையை வலுவந்தமாய் வேலைவாங்கும் உரிமை அவருக்குண்டு. அடிமையானவர் இருவார காலம் வேலைக்கு வராவிட்டால் ஆயுட் காலத்துக்கும் அடிமையாய் இருக்கும் படி தண்டிக்கப்படுவார்; நெற்றியிலோ முதுகிலோ அடிமை என்பதன் முதல் எழுத்து சூடு போட்டுப் பொறிக்கப்படும். மூன்று தடவை ஓடிப் போனால் கடுங்குற்றவாளியாய் கருதப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும். 

ஊர்சுற்றிகளின் குழந்தைகளைக் கொண்டுபோய், ஆண்களை 24 வயது வரைக்கும், பெண்களை 20 வயது வரைக்கும் பழகு தொழிலாளர்களாய் வைத்துக் கொள்ளும் உரிமை எல்லோருக்கும் உண்டு. இடையில் அவர்கள் ஓடிப் போய் விட்டால், மேற்கூறிய வயது வரை தம் எஜமானர்களுக்கு அடிமையாக வேண்டும்; எஜமானர்கள் விரும்பினால் அவர்களை சங்கிலி கொண்டு பிணைக்கவும், சவுக்கால் அடிக்கவும், வேறு வகையில் தண்டிக்கவும் செய்யலாம். 

இவ்வாறுதான், முதலில் விவசாயக் குடிகளின் நிலைவுடைமையை வலுவந்தாமாய்ப் பறித்து, அவர்களை வீடுவாசலிலிருந்து விரட்டியடித்து, வேலையற்ற ஊர் சுற்றிகளாய் மாற்றி, பின்னர் கசையால் அடித்து, சூட்டுக் குறியிட்டு, அகோரமான பயங்கரச் சட்டங்களால் வதைத்து கூலியுழைப்பு முறைக்கு வேண்டிய கட்டுப்பாட்டுக்குப் பணிய வைத்தார்கள்.

சமுதாயத்தின் ஒரு துருவத்தில் உழைப்பின் இன்றியமையாத் தேவைகள் மூலதன வடிவில் திரளாய்க் குவிந்திருப்பதும் மறு துருவத்தில் தமது உழைப்புச் சக்தி தவிர விற்பதற்கு வேறொன்றுமில்லாத மனிதத் திரள்கள் குழுமியிருப்பதும் மட்டும் போதாது. தாமே விரும்பி இந்த உழைப்புச் சக்தியை விற்குமாறு அவர்களைக் கட்டாயப்படுதுவதும் போதாது. முதலாளித்துவ பொருளுற்பத்தியின் முன்னேற்றமானது அந்த உற்பத்தி முறையின் நிலைமைகளைக் கூறாமலே விளங்கும் இயற்கை விதிகளாய்க் கொள்ளும்படியான தொழிலாளி வர்க்கத்தை கல்வியாலும் மரபுகளாலும், பழக்க வழக்கங்களாலும் வளரச் செய்கிறது. முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிகழ்முறை முழு அளவுக்கு ஒழுங்கமைந்ததும் சகல வித எதிர்ப்பையும் தகர்த்திடுகிறது. ஒப்பீட்டு உபரி-மக்கள் தொகை இடையறாமல் உருவாகி, உழைப்பின் வழங்கல்-வேண்டல் விதியின் செயலையும், எனவே கூலியின் விகிதத்தையும் மூலதனத்தின் தேவைகளுக்கு இசைவான தடத்தில்  செலுத்திவிடுகிறது. முதலாளிக்கு தொழிலாளி கீழ்படுவது பொருளாதார உறவுகளின் ஓயாத நிர்பந்தத்தால் முழுமையாகிறது. பொருளாதார நிலைமைகளுக்கு அப்பாற்பட்ட நேரடி வன்முறை இன்னமும் பயன்படுத்தப்படுவது உண்டுதான். ஆனால் இது விதிவிலக்காக மட்டுமே நிகழ்கிறது.

வளரும் பருவத்திலுள்ள முதலாளி வர்க்கம் கூலியை "முறைப்படுத்துவதற்கு", அதாவது உபரி..மதிப்பு உண்டாவதற்கேற்ற விகிதத்தில் கூலியை வரம்பிடவும், வேலை-நாளை நீட்டவும் தொழிலாளியை உரிய அளவு சார்புநிலையில் வைத்துக் கொள்ளவும் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்த விரும்புகிறது, பயன்படுத்துகிறது. ஆதித் திரட்டல் என்பதன் இன்றியமையாக் கூறுகளில் இதுவும் ஒன்று.

உழைப்பானது வடிவத்தில் மட்டுமே மூலதனத்துக்குக் கீழ்பட்டிருந்தது ---அதாவது பொருளுற்பத்தி முறை இன்னமும் முதலாளித்துவத்துக்குரிய தனித்தன்மை பெற்றதாகவில்லை. மாறா-மூலதனத்தை விட மாறும்-மூலதனம் பெரிதும் முதன்மை பெற்றிருந்தது.  ஆகவே, மூலதனத் திரட்டல் பெருகப் பெருக, கூலியுழைப்புக்கான வேண்டல் அதிகமாய் அதிகரித்தது. ஆனால் கூலியுழைப்பின் வழங்கல் மெதுவாகவே அதிகரித்தது. நாட்டின் பொருளுற்பத்தியில் பெரியதொரு பகுதி  --- பிற்காலத்தில் முதலாளித்துவ திரட்டல்-நிதியமாக மாறி விடுகிற இப்பகுதி --- இன்னமும் தொழிலாளியின் நுகர்வு-நிதியமாகவே பயன்பட்டு வந்தது.

கூலியுழைப்புப் பற்றிய சட்ட நெறி (தொழிலாளி சுரண்டப்படுவதே ஆரம்பம் முதல் அதன் நோக்கம்; பிறகு வளர்ந்து முன்னேறுகையிலும் தொடர்ந்து தொழிலாளியிடம் இதேபோல் பகைமையே கொண்டிருந்தது) இங்கிலாந்தில் மூன்றாம் எட்வர்டு ஆட்சியில் 1349 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட தொழிலாளர் சட்டத்திலிருந்து ஆரம்பமாகிறது.    

நகரத்துக்கும் கிராமத்துக்கும், பலன்வீத வேலைக்கும் நாள்வீத வேலைக்கும் கூலி விகிதம் சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்டது. சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்டதைக் காட்டிலும் உயர்ந்த கூலி கொடுப்பது தடை செய்யப்பட்டது; ஆனால் உயர்ந்த கூலி கொடுப்பதற்குரிய தண்டனையை விட பெறுவதற்குரிய தண்டனை கடுமையானதாய் இருந்தது. [இவ்வாறே எலிசபெத்தின் பழகு தொழிலாளர் சட்டத்தின் பிரிவுகள் 18,19 இல், உயர்ந்த கூலி கொடுத்தால் 10 நாள் சிறைத் தண்டனையும், பெற்றால் 21 நாள் சிறை தண்டனையும் விதிக்க ஆணையிடப்பட்டுகிறது]

14 ஆம் நூற்றாண்டு முதல் தொழிற்சங்கங்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்தாகிய ஆண்டான 1825 வரையிலும் தொழிலாளர்கள் சங்கஞ்சேருவது கொடுங்குற்றமாய்க் கருதப்பட்டது. 1349 ஆம் வருடத்திய தொழிலாளர் சட்டம், அதிலிருந்து பிறந்த ஏனைய சட்டங்கள் இவற்றின் தாத்பரியத்தை வெட்டவெளிச்சமாக்கிடும் உண்மை  என்னவென்றால்: அரசானது கூலிக்கு திட்டவட்டமான உச்ச வரம்பு விதிக்கிறதே தவிர, எவ்விதத்திலும் அடி வரம்பு நிர்ணயிக்கவில்லை.

16 ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்களின் நிலைமை இன்னும் படுமோசமாகி விட்டதென்பது தெரிந்ததே. பணக் கூலி உயர்ந்தது; ஆனால் பணத்தின் மதிப்பிறக்கத்துக்கும், அதையொட்டி சரக்குகளின் விலைகளில் நேரிட்ட உயர்வுக்கும் ஏற்ற விதத்தில் உயரவில்லை. எனவே உண்மைக் கூலி குறைந்தது.

பட்டு நெசவாளர்களின் கூலியைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை அமைதி காப்பு நடுவர்களிடம் ஒப்படைத்து மூன்றாம் ஜார்ஜ் ஆட்சியின் 13 ஆவது ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட சட்டம் அப்போதும் அமலில் இருந்தது.

ஸ்காட்லாந்தில் சுரங்கத் தொழிலாளர்களின் கூலியைத் தொடர்ந்து முறைப்படுத்தி வர வேண்டுமென்று 1799இலும் கூட ஒரு பாராளுமன்றச் சட்டம் உத்திரவிட்டது. இடைக்காலத்தில் நிலைமைகள் அடியோடு மாறி விட்டன என்பதை ஆங்கிலேயக் கீழ்ச்சபையில் என்றும் கேட்டிராத வகையில் நடந்த நிகழ்ச்சி நிரூபித்தது. கூலி இதற்கு மேல் உயர்வது கூடவே கூடாது என்று கூலிக்கு உச்ச வரம்பு விதிக்கும் சட்டங்களையே 400 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்றி வந்த அம்மன்றத்தில் , 1796 ஆம் ஆண்டில் விட்பிரெடு என்பவர் விவசாயத் தொழிலாளர்களுக்கு சட்டபூர்வமான குறைந்தபட்சக் கூலி நிர்ணயிக்க வேண்டுமென முன்மொழிந்தார்.

சட்டங்களின் விதிமுறைகள் ஒப்பந்தத்தை மீறும் அதிபருக்கு எதிராய் உரிமையியல் சட்ட நடவடிக்கைக்கு மட்டுமே இடமளிக்கின்றன: இதற்கு மாறாக ஒப்பந்தத்தை மீறும் தொழிலாளிக்கு எதிராய் குற்றவியல் சட்ட நடவடிக்கைக்கு இடமளிக்கின்றன. இவ்விதிமுறைகள் நாளது வரையிலும் (1873) முழுமையாக அமலிலுள்ளன. தொழிற்சங்கங்களுக்கு எதிரான காட்டுமிராண்டிச் சட்டங்கள் 1825இல், அச்சந்தரும் முறையில் போர்க்கோலம் பூண்ட பாட்டாளி வர்க்கத்தை எதிர்கொள்ள முடியாமல் வீழ்ந்துபட்டன. ஆனால் முழுமையாக அல்ல.

Wednesday, January 8, 2014

பகுதி 8 அத்தியாயம் 27: விவசாயக் குடிகளின் நிலவுடைமையைப் பறித்தல்

இங்கிலாந்தில், பண்ணையடிமை முறை (serfdom) 14 ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் அநேகமாய் மறைந்து விட்டது. மக்கள் தொகையில் பெரும்பாலார் சுதந்திர நிலவுடைமை..விவசாயிகளாய் (free peasant proprietors) இருந்தனர். 

15 ஆம் நூற்றாண்டின் கடைசி மூன்றாம் பகுதியும் 16 ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டும் பிரபுத்துவ பரிவாரங்கள் கலைக்கப்பட்டதால், விடுபட்ட சுதந்தரப் பாட்டாளிகள் பெருந்திரளாய் உழைப்புச் சந்தைக்கு வரலாயினர்.

மன்னரோடும் பாராளுமன்றத்தோடும் ஆணவமாய் மோதிய பெரும் பிரபுத்துவ கோமான்கள், விவசாயிகளை நிலத்திலிருந்து வலுவந்தமாக விரட்டியதன் மூலமும், கிராமப் பொது நிலங்களை அபகரித்துக் கொண்டதன் மூலமும் ஒப்பிட்டு சொல்ல முடியாத படி பன்மடங்கு பெரிதான பாட்டாளிப் பெருந்திரளைத் தோற்றுவித்தனர்.

புதிய பிரபுக் குலம் தான் வாழ்ந்த காலத்தின் புதல்வனாய் இருந்தது; பணமே இதற்கு சக்திகளுக்கெல்லாம் சக்தியாய் இருந்தது. சாகுபடி நிலத்தை மேய்ச்சல் வெளியாக மாற்றுவதே இதன் முழக்கமாய் இருந்தது.

ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கம் அதன் பொற்காலத்திலிருந்து இரும்புக் காலத்துக்கு, இடைக் கட்டங்கள் ஏதுமில்லாமலே திடுதிப்பெனப் பெயர்க்கப்பட்டுவிட்டது.

இந்தப் புரட்சியைக் கண்டு சட்ட நெறி திகைத்துப் போய் "நாட்டின் செல்வம்" (அதாவது மூலதனத்தை உண்டாகுவதும், மக்கள் திரளை கண்மூடித்தனமாகச் சுரண்டி வறுமையில் ஆழ்த்துவதும்) அரசுத் திறமனைத்தின் இறுதி இலட்சியமாகக் கொள்ளப்படும் உயர் நாகரிக நிலையை இன்னும் அது எட்டவில்லை.

முதலாளித்துவ அமைப்பு கோரியது என்னவென்றால், பெருந்திரளான மக்கள் சீரழிந்து, கிட்டத்தட்ட அடிமை நிலையை எட்ட வேண்டும். அவர்களைக் கூலிப் பட்டாளங்களாக மாற்ற வேண்டும், அவர்களது உழைப்புச் சாதனங்களை மூலதனமாக மாற்ற வேண்டும். 

இந்த மாற்றக் காலத்தில் விவசாயக் கூலித் தொழிலாளியின் குடிசையை ஒட்டிய 4 ஏக்கர் நிலத்தைப் பாதுகாக்கவும் சட்டம் முயன்றது; அவரது குடிசையில் பிறரைக் குடிவைக்கவும் தடை விதித்தது. 

"புகழார்ந்த புரட்சி" ("Glorious Revolution") ஆரஞ்சு வம்சத்தைச் சேர்ந்த மன்னர் வில்லியத்தோடு கூடவே, உபரி மதிப்பை தமதாக்கும் நிலவுடைமையாளர்களையும் முதலாளிகளையும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது. இது வரை மிதமான அளவில் நடந்து வந்த அரசுநிலத்திருட்டை இவர்கள் பிரம்மாண்ட அளவில் செய்து, புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்தார்கள். இந்தப் பண்ணைகள் தானமாய்த் தரப்பட்டன; அல்லது, நம்ப முடியாத அளவுக்கு குறைந்த விலைக்கு விற்கப்பட்டன; அல்லது தனியார் பண்ணைகளால் நேரடியாகவே கைப்பற்றிச் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இவையெல்லாம் சட்ட சம்பிரதாயங்களை சிறிதும் அனுசரிக்காமல் நிகழ்ந்தவை. இவ்வாறு மோசடி செய்து வசப்படுத்தப்பட்ட அரசு நிலங்களும், கபளீகரம் செய்யப்பட்ட திருச்சபைப் பண்ணை நிலங்களில் குடியரசுப் புரட்சிக் காலத்தில் இழந்தவை போக எஞ்சியவையும்தான் ஆங்கிலேய ஆதிக்கக் கும்பலைச் சேர்ந்த கோமான்களின் இன்றைய பெருஞ்சொத்துகளுக்கு அடிப்படை ஆகின்றன. தொழில், வணிக முதலாளிகள் இந்த நடவடிக்கையை ஆதரித்தார்கள்.

இந்தப் புதிய நிலவுடைமைப் பிரபுக் குலத்தார் இயற்கையாகவே புதிய வங்கியதிபர்களுக்கும், புதிதாய் உருவான நிதி மன்னர்களுக்கும், அப்போது காப்பு வரிகளைச் சார்ந்திருந்த பெரும் பட்டறையதிபர்களுக்கும் கூட்டாளிகளாய் இருந்தனர்.

சமுதாயக் கூட்டுடைமை பிரபுத்துவப் போர்வையில் நீடித்து வந்த பண்டைய டூட்டானிய மரபாகும். இச்சொத்தின் வலுவந்த அபகரிப்பு --- பொதுவாக சாகுபடி நிலத்தை மேய்ச்சல் நிலமாக மாற்றுவதோடு சேர்ந்து நிகழும் இந்த அபகரிப்பு --- எப்படி 15 ஆம் நூற்றாண்டின் முடிவில் தொடங்கி 16 ஆம் நுற்றாண்டில் தொடர்ந்து நடந்தது என்று பார்த்தோம். ஆனால் அந்த காலத்தில் இந்த காரியம் தனிப்பட்ட வன்முறைச் செயல்கள் மூலம் நிறைவேற்றப்பட்டது; இந்த வன்முறைக்கெதிராக நூற்றைம்பது ஆண்டுகளாக சட்டத் துறை நடத்தி வந்த போராட்டம் தோல்வியில் முடிந்தது.

இக்களவின் நாடாளுமன்ற வடிவமே கிராமப் பொது நில அடைப்புச் சட்டங்கள்; வேறுவிதமாகச் சொல்வதானால், நிலவுடைமையாளர்கள் மக்களின் நிலத்தை தனியுடைமையாக்கித் தமக்குத் தாமே வழங்கிக் கொள்ளும் ஆணைகள்.

அரச குடும்ப நிலங்களின் திருட்டுக்கு அடுத்தபடி, 18ஆம் நூற்றாண்டில் முதலாளிப் பண்ணைகள் அல்லது வணிகப் பண்ணைகள் என்றழைக்கப்பட்ட பெரிய பண்ணைகளை ஊதிப் பெருக்கச் செய்வதற்கும், விவசாய குடிகளை "விடுவித்து" பட்டறைத் தொழிலுக்கான பாட்டாளிகள் ஆக்குவதற்கும் சிறப்பாகத் துணைசெய்தது.

ஆயினும், தேச செல்வத்துக்கும் மக்களின் வறுமைக்கும் உள்ள ஒற்றுமைய 19 ஆம் நூற்றாண்டைப் போல் 18 ஆம் நூற்றாண்டு இன்னும் முழுமையாக ஏற்றுக் கொண்டுவிடவில்லை. எனவேதான், "கிராமப் பொது நிலங்களின் அடைப்பு" பற்றி அக்காலத்திய பொருளாதார இலக்கியத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

திருச்சபைச் சொத்தைச் சூறையாடியது, அரசு நிலங்களை வஞ்சகமாய்க் கைப்பற்றியது, கிராமப் பொது நிலங்களைக் களவாடியது, பிரபுத்துவச் சொத்தையும் கணக் குடிகளது சொத்தையும் அபகரித்தது, கண்மூடித்தனமான பயங்கரம் நிறைந்த நிலைமைகளில் அச்சொத்தை நவீனத் தனியார் சொத்தாக மாற்றியது ஆகிய இவையெல்லாம் அன்பும் அமைதியும் வாய்ந்த ஆதித் திரட்டல் வழிமுறைகளே அன்றி வேறல்ல. இந்த வழிமுறைகள் முதலாளித்துவ வேளாண்மைக்காக வயல் வெளிகளைக் கைப்பற்றின; நிலத்தை மூலதனத்தின் பிரிக்க முடியாத பகுதியாக்கின; "சுதந்தரமான" சட்டக் காப்பற்ற பாட்டாளி வர்க்கம் நகரத் தொழில்களுக்கு வேண்டிய அளவு கிடைத்திட வழி செய்தன.

பகுதி 8: ஆதித் திரட்டல் என்பது. அத்தியாயம் 26: ஆதித் திரட்டலின் ரகசியம்

உபரி-மதிப்பு இல்லையேல் மூலதனத் திரட்டல் இல்லை; முதலாளித்துவப் பொருளுற்பத்தி இல்லையேல் உபரி-மதிப்பு இல்லை. சரக்கு-உற்பத்தியாளர்களின் கையில் மூலதனம் மற்றும் உழைப்புச் சக்தியின் கணிசமான திரள்கள் இல்லையேல் முதலாளித்துவ பொருளுற்பத்தி இல்லை. எனவே இந்த இயக்கம் முழுவதும் நச்சு வட்டத்தில் சுழல்வதாகத் தோன்றுகிறது; முதலாளித்துவ திரட்டலுக்கு முன் ஓர் ஆதித் திரட்டல் (primitive accumulation) அதாவது முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையின் விளைவாக அல்லாமல் அதன் தொடக்கமாய் அமையும் திரட்டல் நடைபெறுவதாகக் கொண்டால்தான் இந்த நச்சு வட்டத்திலிருந்து விடுபட முடியும்.

எவ்வளவு பாடுபட்டு உழைத்தும் கூட இன்றுவரை தம்மைத் தவிர விற்பதற்கு ஏதுமில்லாத மிகப் பெரும்பாலோர் வறுமையில் உழல்வதும், உழைப்பதை நிறுத்தி நீண்ட காலமாகிவிட்ட போதிலும் ஒரு சிலரது செல்வம் ஓயாது மேலும் மேலும் பெருகிச் செல்வதும் ஆதிப் பாவத்திலிருந்து தொடங்குவதாக சொத்துடைமைக்கு ஆதரவாக உப்புச்சப்பில்லாத இப்படிப் பட்ட சிறுபிள்ளைத் தனம்தான் நாள்தோறும் நமக்கு போதிக்கப்படுகிறது. 

உள்ளபடியான வரலாற்றில், நாடு பிடிப்பதும் அடிமைப்படுத்துவதும் கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும் --- சுருங்கச் சொல்லின் பலப்பிரயோகம் --- பெரும் பங்கு வகிப்பது பேர்போன உண்மை.  அரசியல் பொருளாதாரத்தின் கனிவு கொண்ட வரலாற்றில்  காலகாலமாய் அன்பும் அமைதியும் கோலோச்சுகின்றன. உரிமையும் "உழைப்பும்" செல்வம் சேர்ப்பதற்கு என்றென்றும் ஒரே மார்க்கமாய் இருந்தன; நடப்பு ஆண்டு மட்டும்தான் எப்போதும் இதற்கு விதிவிலக்கு.  ஆனால், உண்மை என்னவென்றால் ஆதித் திரட்டல் முறைகளுக்கு அன்புடனோ அமைதியுடனோ ஒட்டுமில்லை, உறவுமில்லை.

தமது உழைப்பை ஈடேற்றம் செய்வதற்குத் தேவையான சாதனங்களின் உடைமையிலிருந்து உழைப்பாளர்களை முழுமையாகப் பிரித்திடுவது முதலாளித்துவ அமைப்பின் முன் தேவையாகும். முதலாளித்துவ பொருளுற்பத்தி சொந்தக் காலில் நிற்கத் தொடங்கியதுமே, இப்பிரிவினையை நிலைநிறுத்துவது மட்டுமல்லாமல், மேலும் மேலும் விரிவான அளவில் தொடர்ந்து உருவாகிச் செல்கிறது. ஆகவே முதலாளித்துவ அமைப்புக்கு வழி திறந்து விடும் நிகழ்முறை தொழிலாளியிடமிருந்து அவரது உற்பத்திச் சாதனங்களின் உடைமையைப் பறிக்கிற நிகழ்முறையாக அல்லாமல் வேறெதுவுமாகவும் இருக்க முடியாது. எனவே ஆதித் திரட்டல் என்பது உற்பத்தியாளரை உற்பத்திச் சாதனங்களிலிருந்து விலக்கிடும் வரலாற்று நிகழ்முறையே தவிர வேறல்ல.

முதலாளித்துவச் சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டுமானம் பிரபுத்துவச் சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டுமானத்திலிருந்து முளைத்தெழுந்தது. பின்னதன் சிதைவினால் முன்னதன் கூறுகள் விடுபட்டு இயங்கலாயின.

உற்பத்தியாளர்களைக் கூலித் தொழிலாளர்களாக மாற்றும் வரலாற்று இயக்கம், ஒரு பக்கத்தில் பண்ணையடிமைத்தனத்திலிருந்தும் கைவினைச் சங்கங்களின் தளைகளிலிருந்தும் அவர்கள் பெற்ற விடுதலையாகத் தோன்றுகிறது; மறுபக்கத்தில், தமக்குச் சொந்தமாயிருந்த உற்பத்திச் சாதனங்களனைத்தையும், பழைய பிரபுத்துவ ஏற்பாடுகளால் கிடைத்த வாழ்க்கை உத்தரவாதங்கள் அனைத்தையும் பறிகொடுத்த பிறகுதான், இந்த புதிய சுதந்திர மாந்தர்கள் தம்மைத்த் தாம் விற்பவர்களாயினர். அவர்களது உடைமைப் பறிப்பின் (expropriation) வரலாறு மனித இனத்தின் சரித்திர ஏடுகளில் இரத்தமும் நெருப்புமான எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது.

தொழில் துறை முதலாளிகள் --- இந்தப் புதிய கோமான்கள் --- கைத்தொழில்களின் கைவினைச் சங்க ஆண்டான்களை (guild masters) மட்டுமல்லாமல், செல்வாதாரங்களின் உடைமையாளர்களான பிரபுத்துவக் கோமான்களையும் அகற்ற வேண்டியிருந்தது.

தொழில் துறையின் தீரர்களான இவர்கள் தாம் எவ்வகையிலும் பங்கு வகிக்காத நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தியே வாளேந்திய தீரர்களின் இடத்தைப் பிடிப்பதில் வெற்றி பெற முடிந்தது. இழிவான உபாயங்களைக் கையாண்டே இந்தத் தொழில் துறைத் தீரர்கள் மேனிலை அடைந்தார்கள்.

கூலித் தொழிலாளியும், அதே போல் முதலாளியும் உருவாவதற்கு வழிகோலிய வளர்ச்சியின் தொடக்க நிலை தொழிலாளியின் அடிமைநிலை ஆகும். முன்னேற்றமென்பது இந்த அடிமைநிலையின் வடிவத்தில் ஏற்பட்ட மாற்றமே. பிரபுத்துவ சுரண்டல் போய் முதலாளித்துவ சுரண்டல் வந்த உருமாற்றமே.

முதலாளித்துவ சுரண்டல் என்பது 16 ஆவது நூற்றாண்டிலிருந்துதான் தொடங்குகிறது. ஆதித் திரட்டலின் வரலாற்றில், முதலாளி வர்க்கத்தின் உருவாக்கத்துக்கு நெம்புகோலாகச் செயல் புரியும் எல்லாப் புரட்சிகளுமே சகாப்தகரமானவை. ஆனால், பெருந்திரளானோர் திடீர் என்றும் வலுவந்தமாகவும் அவர்களது வாழ்வுச் சாதனங்களிலிருந்து துண்டிக்கப்பட்டு, "பிணைப்புகளற்ற," சுதந்தரமான பாட்டாளிகளாக உழைப்புச் சந்தையிலிருந்து விடப்படும் தருணங்களே யாவற்றுக்கும் முதலாய் சகாப்தகரமானவை.      

இந்த உடைமைப் பறிப்பின் வரலாறு வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு கோலம் பூணுகிறது; வெவ்வேறு வரிசைமுறைகளில், வெவ்வேறு வரலாற்றுக் காலங்களில் அதன் பல்வேறு வளர்ச்சிப் படிகளைக் கடக்கிறது. இங்கிலாந்தில் மட்டும்தான் அதன் முழுப் பொலிவைக் காட்டும் வடிவில் நடந்தேறுகிறது.