சரக்குகளின் பரிவர்த்தனையானது முரண்பாடான, ஒன்றையொன்று விலக்குகிற நிலைமைகளைச் சுட்டுவதாகும். சரக்குகள் சரக்குகளாகவும் பணமாகவும் பிரிவது இந்த முரண்பாடுகளை ஒழித்துவிடுவதில்லை. அவை ஒருங்கே சேர்ந்திருக்க முடிகிற ஒரு வழிமுறையை அது வளர்த்திடுகிறது. பொதுவாக , இதுவே மெய்யான முரண்பாடுகளை இணக்கப்படுத்தும் ஒரு வழி.
சரக்குகள் யாருக்கு அவை பயன்..மதிப்புகள் அல்லவோ அவர்களிடமிருந்து யாருக்குப் பயன்..மதிப்புகளாகின்றனவோ அவர்களுக்கு மாற்றப்படுகின்ற நிகழ்முறையே பரிவர்த்தனை என்பதால் அது ஒரு சமுதாயப் பொருள்வகைச் சுற்றோட்டம்.
சரக்கானது பயன்..மதிப்பாகப் பயன்படக் கூடிய ஓய்விடத்தைக் கண்டுகொண்டதுமே பரிவர்த்தனைத் துறையிலிருந்து நுகர்வுத் துறைக்குள் விழுகிறது.
சரக்குகள் சரக்குகளாகவே பரிவர்த்தனை நிகழ் முறையில் நுழைகின்றன. இந்நிகழ்முறை பிற்பாடு அவற்றைச் சரக்குகளாகவும், பணமாகவும் வேறுபடுத்துகிறது; இவ்வாறு, அவற்றில் உள்ளார்ந்துள்ள அக எதிர்நிலைக்கு .. ஒரே நேரத்தில் பயன்..மதிப்புகளாகவும், மதிப்புகளாகவும் இருத்தல் என்ற அக எதிர் நிலைக்கு ... இணையான புற எதிர் நிலையை அது தோற்றுவிக்கிறது.
சரக்குகளின் இந்தப் பகைமை வடிவங்கள் (antagonistic forms) அவற்றின் பரிவர்த்தனை நிகழ்முறை நடந்தேறுகிற மெய்யான வடிவங்களாகும்.
சரக்குகளின் பரிவர்த்தனையுடன் கூடவே அவற்றின் வடிவத்தில் பின்வரும் மாற்றங்களும் ஏற்படுகின்றன: சரக்கு ... பணம் ... சரக்கு.
சரக்குகளின் உடைமையாளருக்கு தேவைகள் எந்த அளவுக்கு பலதரப்பட்டவையோ அந்த அளவுக்கு அவரது உழைப்பு ஒரு தரப்பட்டதாக இருப்பதற்கு சமுதாய உழைப்புப் பிரிவினை காரணமாகிறது. அவரது உழைப்பின் உற்பத்திப் பொருள் பரிவர்த்தனை..மதிப்பாக மட்டுமே அவருக்கு பயன்படுவதன் காரணம் இதுவேதான்.
மதிப்பைக் கணக்கிடுவதில் தற்செயலாக இழைக்கக் கூடிய தவறு சீக்கிரமே சந்தையில் திருத்தப்பட்டு விடுகிறது. சராசரியாக சமூக வழியில் அவசியமான அளவு உழைப்பு நேரத்தையே தனது உற்பத்திப் பொருளில் அவர் செலவிட்டிருப்பதாக வைத்துக் கொள்கிறோம். விலை என்பது அவரது சரக்கில் எவ்வளவு ஈடேற்றம் பெற்றுள்ளதோ அவ்வளவு சமூக உழைப்பின் பணப்பெயர்தான். ஆனால் ஒரு உற்பத்தியாளரின் அனுமதியின்றியும், அவரது முதுகுக்குப் பின்னாலும், பழைய வழியிலான உற்பத்திமுறை மாற்றத்துக்குட்படுகிறது. அப்பொருளின் உற்பத்திக்குச் சமூக வழியில் நிச்சயமாய் அவசியாமாயிருந்த உழைப்பு நேரம் இன்று அவ்வாறில்லாது போகிறது.
உழைப்புப் பிரிவினை உழைப்பின் உற்பத்திப் பொருளை சரக்காக மாற்றுகிறது. அதே நேரத்தில் அது இந்த மாற்றமைவின் நிறைவேற்றத்தை முற்றிலும் தற்செயலான ஒன்றாக்குகிறது.
தங்கம் பணத்தின் பாத்திரத்தை வகிக்க வேண்டுமானால், ஏதேனுமொரு கட்டத்தில் சந்தையில் அடியெடுத்து வைத்தாக வேண்டும். உழைப்பின் நேரடி உற்பத்திப் பொருள் என்ற முறையில் தங்கம் சம மதிப்புள்ள வேறொரு உற்பத்திப் பொருளுக்காகப் பண்டமாற்று செய்யப்படும் இடமான அவ்வுலோகம் உற்பத்தியாகும் இடத்தில் இது நிகழக் காணலாம். அக்கணமுதற்கொண்டு அது எப்போதுமே ஏதேனுமொரு சரக்கின் ஈடேற்றம் பெற்ற விலையைக் குறிக்கிறது.
ஒரு பொற்காசினைப் பார்ப்பதைக் கொண்டே, அது எந்த குறிப்பிட்ட சரக்குக்காகப் பரிவர்த்தனை செய்து கொள்ளப் பட்டது என்பதைச் சொல்ல முடியாது. எல்லாச் சரக்குகளும் அவற்றின் பண வடிவத்தில் ஒரே மாதிரியாய் இருக்கின்றன. எனவே குப்பை பணமல்ல என்றாலும், பணம் குப்பையாக இருக்கலாம்.
சரக்குகள் பணத்தின் மீது செலுத்தும் ஏக்கப் பார்வைகளான விலைகள் பணத்தின் அளவைச் சுட்டுவதன் மூலம் அதன் மாறுந்தகுதியின் வரம்புகளை வரையறுக்கின்றன.
ஒரு சரக்கின் முழுமையான உருமாற்றம், அதன் மிகவும் சாமானிய வடிவத்தில் நான்கு முனைகளையும், மூன்று கதா பாத்திரங்களையும் கொண்டுள்ளது, முதலில் சரக்கு பணத்தை எதிர்கொள்கிறது; பணம் என்பது சரக்கின் மதிப்பு மேற்கொள்கிற வடிவமாகும்; இப்போது, சரக்கு பணமாக மாற்றப்பட்டதுமே, பணம் அதன் நிலையற்ற சமதை வடிவம் ஆகிறது. இச்சமதை வடிவத்தின் பயன்..மதிப்பு ஏனைய சரக்குகளின் தசையுருக்களில் காணக் கிடக்கிறது. முதல் செய்கையில் விற்பவராய் இருப்பவர் இரண்டாவது செய்கையில் வாங்குபவராகிறார்; இந்த இரண்டாவது செய்கையில் மூன்றாவது சரக்குடைமையாளர் ஒருவர் விற்பவராக அரங்கத்தில் தோன்றுகிறார். சரக்கு உருமாற்றத்தில் அடங்கியுள்ள ஒன்றுகொன்று எதிர் மாறான இவ்விரு கட்டங்களும் சேர்ந்து ஒரு சுழல் இயக்கமாக, ஒரு சுற்றாக அமைகின்றன.
ஒரு சரக்கு தன் உரு மாற்றங்களின் போக்கில் கடக்கிற சுற்று ஏனைய சரக்குகளின் சுற்றுகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது. வெவ்வேறு சுற்றுகள் அனைத்தும்ம் சேர்ந்த மொத்தமே சரக்குகளின் சுற்றோட்டம் ஆகும்.
சரக்குகளின் சுற்றோட்டம் உற்பத்திப் பொருட்களின் நேரடிப் பரிவர்த்தனையிலிருந்து (பண்டமாற்றிலிருந்து) வடிவத்தில் மட்டுமல்லாமல் சாரத்திலும் வேறுபடுகிறது. நேரடிப் பண்டமாற்றால் சுமத்தப்படும் தடைகளான காலம், இடம் மற்றும் தனியாட்கள் தொடர்பான தடைகளை எல்லாம் சுற்றோட்டம் தகர்த்துச் செல்கிறது.
ஒரு சரக்கின் முழுமையான உருமாற்றத்தில் ஒன்றையொன்று பூர்த்தி செய்யும் இரு கட்டங்களுக்கிடையிலான கால இடைவெளி அதிகப்படியாக நீண்டு விட்டால், விற்றலுக்கும் வாங்கலுக்கும் இடையிலான பிளவு அளவுமீறிக் கடுமையாகி விட்டால், அவற்றிடையிலான மிக நெருங்கிய தொடர்பு, அவற்றின் ஓர்மை ஒரு நெருக்கடியைத் தோற்றுவிப்பதன் மூலம் தன்னை நிலை நாட்டிக் கொள்கிறது.
பணத்தின் ஓட்டம் என்பது, ஒரே நிகழ்முறை இடைவிடாமலும் மாறுதலின்றியும் திரும்பத் திரும்ப நிகழ்வதாகும். எப்போதுமே சரக்கு விற்பவரின் கையிலிருக்கிறது; எப்போதுமே பணம் வாங்கற் சாதனமாய் வாங்குபவரின் கையிலிருந்து பணத்தை எடுத்து விற்பவரின் கையில் சேர்க்கிறது. அங்கே இன்னொரு சரக்குடன் மீண்டும் அதே நிகழ்முறைக்கு உட்படுகிறது. பணத்தின் இயக்கத்திற்குள்ள இந்த ஒரு சார்பான தன்மை சரக்கின் இயக்கத்திற்குள்ள இரு சார்பான தன்மையிலிருந்து எழுகிறது.
ஒரு சரக்கை விலக்கி விட்டு அதனிடத்து இன்னொரு சரக்கு வருவது சரக்குகளின் வடிவ மாற்றத்தைக் கொண்டு சாதிக்கப்படாமல், சுற்றோட்ட ஊடகமாக செயல்படுகிற பணத்தாலேயே சாதிக்கபடுவது போன்ற தோற்றம் பெறுகிறது. பணத்தின் இந்த செயல் எப்படிப் பார்த்தாலும் தம்மளவில் அசைவற்றவையாகவே தோன்றுகிற சரக்குகளைச் சுற்றியோடச் செய்வது போலவும், பயன்..மதிப்புகளாய் இல்லாத கரங்களிலிருந்து பயன்..மதிப்புகளாயுள்ள கரங்களுக்கு அவற்றை மாற்றுவது போலவும், எப்போதுமே பணத்தின் திசைக்கு எதிர்த் திசையில் இதைச் செய்வது போலவும் தோன்றுகிறது.
சர்க்குகளின் மதிப்புக்குப் பணத்தின் உருவில் சுயேச்சையான மெய்ம்மை இருக்கிறது என்பதாலேயே அது சுற்றோட்ட ஊடகமாக செயல்படுகிறது. எனவே, உண்மையில் சுற்றோட்ட ஊடகமென்ற முறையிலான அதன் இயக்கம் சரக்குகள் தமது வடிவங்களை மாற்றிக் கொள்கிற இயக்கமே ஆகும்.
சரக்குகளுடைய விலைகளின் மொத்தத் தொகையால் முன் கூட்டியே கருத்தளவில் தெரிவிக்கப்படும் தங்கத்தின் அளவு அல்லது தொகையையே பணம் மெய்யுருவில் குறிக்கிறது. ஆகவே இவ்விரு தொகைகளின் சமத்துவம் கூறாமலே விளங்கும். ஆயினும், சரக்குகளின் மதிப்புகள் மாறாதிருக்க, அவற்றின் விலைகள் தங்கத்தின் (பணப் பொருளின்) மதிப்புக்கேற்ப மாறுபடுகின்றன. அது குறைகிற விகிதத்தில் உயர்ந்தும், அது உயர்கிற விகிதத்தில் குறைந்தும் விடுகின்றன.
ஒரு சரக்கு இன்னொரு சரக்கை அவற்றின் பொதுவான மதிப்புறவின் மூலம் பாதிக்கிறது; தங்கம் அல்லது வெள்ளியில் தெரிவிக்கப்படும் அச்சரக்குகளின் விலைகள் அவற்றின் ஒப்பீட்டு மதிப்புகளால் நிர்ணயிக்கப்படும் விகிதாசாரங்களாக இவ்விதம் படிப்படியாய் நிலைபெறுகின்றன. இறுதியில் எல்லாச் சரக்குகளின் மதிப்புகளும் பணமாகிய உலோகத்தினது புதிய மதிப்பின் வாயிலாகக் கணிக்கப்படும் வரை இவ்வாறே நடை பெறுகிறது.
சரக்குகளின் திரள் மாறாதிருந்தால், சுற்றோட்டத்தில் ஓடுகிற பணத்தின் அளவு அந்த சரக்குகளின் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுகேற்ப மாறுபடுகிறது. விலை மாற்றத்தின் விளைவாக விலைகளின் மொத்தத் தொகை அதிகரிக்கிறது அல்லது குறைகிறது என்பதால் இச்சரக்குத் திரள் அதிகரிக்கிறது அல்லது குறைகிறது. இந்த விளைவைத் தோற்றுவிப்பதற்கு, எல்லாச் சரக்குகளின் விலைகளும் ஏக காலத்தில் உயர வேண்டும் அல்லது குறைய வேண்டும் என்பது எவ்விதத்திலும் அவசியமில்லை. எல்லாச் சரக்குகளதும் விலைகளின் மொத்தத் தொகையை அதிகரிக்கச் செய்வதற்கோ, குறைப்பதற்கோ, ஆகவே அதிகமாகவோ குறைவாகவோ பணத்தைச் சுற்றோட்டத்தில் விடுவதற்கு முதன்மையான சரக்குகள் பலவற்றின் விலைகளிலான உயர்வோ வீழ்ச்சியோ போதுமானது. விலை மாற்றம் உள்ளபடியே சரக்குகளின் மதிப்பு மாற்றத்தால் ஏற்பட்டதானாலும், அல்லது அது சந்தை விலைகளிலான ஏற்ற இறக்கங்களால் ஏற்பட்டதே ஆனாலும், சுற்றோட்ட ஊடகத்தினது அளவின் மீது அது ஒரே விதமான விளைவையே உண்டாக்குகிறது.
சுற்றோட்ட ஊடகத்தின் அளவே விலைகளை நிர்ணயிக்கிறது என்பதும், சுற்றோட்ட ஊடகத்தின் அளவு நாட்டிலுள்ள உயர்நிலை உலோகங்களின் அளவினைப் பொறுத்தது என்பதும் தவறான கருத்தாகும்.
தங்கமும் வெள்ளியும் நாணயங்கள் என்ற வீதத்தில் உள் நாட்டில் அணிந்து உலக சந்தையில் களைகிற வெவ்வேறு தேசச் சீருடைகள் சரக்குச் சுற்றோட்டத்தின் உள்நாட்டு அல்லது தேச மண்டலங்களுக்கும், அவற்றின் உலக மண்டலத்துக்கும் இடையிலான பிரிவைக் குறிக்கின்றன. எனவே நாணயத்துக்கும், பொற்பாளத்துக்கும் இடையிலான ஒரே வேறுபாடு உருவ வேறுபாடே; தங்கம் எந்த நேரத்திலும் ஒரு உருவத்திலிருந்து இன்னொரு உருவத்துக்கு மாற முடியும்.
அதிகபட்ச அளவு தேய்மானத்துக்குட்படுகிற சுற்றோட்டத் துறைகளில் வெள்ளி, செம்பு அடையாளங்கள் தங்கத்திற்குப் பதிலியாகின்றன. மிகச் சிறு அளவில் விற்றல்களும் வாங்கல்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இடங்களில் இது நிகழ்கிறது. தங்கம் ஒரு புறம் சில்லறை சுற்றோட்டத்துக்குள் இடைவிடாது பாய்ந்து கொண்டும், மறு புறம் அடையாளங்களாக மாற்றப்படுவதால் இடைவிடாது வெளியேற்றப்பட்டுக் கொண்டும் இருக்கிறது.
காகிதப் பணத்தின் வெளியீடானது, அடையாளங்கள் புழங்க விடப்படாவிட்டால் உள்ளபடியே சுற்றோட்டத்தில் இருக்கக் கூடியதான தங்கத்தை தொகையில் விஞ்சக் கூடாது. இப்போது சுற்றோட்டம் உட்கிரகிக்க முடிகிற தங்கத்தின் அளவு ஒரு குறிப்பிட்ட மட்டத்துக்கு மேலாகவும் கீழாகவும் இடையறாது அலைவுறுகிறது.