Monday, December 2, 2013

பகுதி 7 அத்தியாயம் 24: உபரி..மதிப்பை மூலதனமாக மாற்றுதல். பிரிவு 1

முதலாளித்துவ பொருளுற்பத்தியின் அளவுவீதம் மேன்மேலும் அதிகமாகிச் செல்லுதல். சரக்கு உற்பத்தியைக் குறிக்கும் சொத்துடைமை விதிகள் முதலாளித்துவத் தனதாக்கத்தின் விதிகளாக மாறுதல்

உபரி மதிப்பை மூலதனமாக மாற்றுவது மூலதனத் திரட்டல் (accumulation of capital) என்று அழைக்கப்படுகிறது. 

மூலதன-மதிப்பு ஆரம்பத்தில் பண வடிவில் முன்னீடு செய்யப்பட்டது. மாறாக, உபரி-மதிப்பு மொத்த உற்பத்தியில் குறிப்பிட்ட ஒரு பகுதியின் மதிப்பாகவே ஆரம்பத்தில் இருக்கிறது. இந்த மொத்த உற்பத்தி விற்கப்பட்டு, பணமாக மாற்றப்பட்டால், மூலதன-மதிப்பு அதன் ஆரம்ப வடிவத்தை மீண்டும் பெறுகிறது. அதுமுதல் மூலதன-மதிப்பு, உபரி-மதிப்பு இவையிரண்டுமே பணத் தொகைகள்தாம்; மூலதன-மதிப்பு, உபரி-மதிப்பு இரண்டையும் செலவிட்டு, முதலாளி சரக்குகள் வாங்குகிறார்; இந்த சரக்குகளைக் கொண்டு முன்னிலும் விரிவான அளவில் உற்பத்தி செய்ய முற்படுகிறார்.

உழைப்பு நிகழ் முறையில் ஈடுபடுத்தக் கூடிய பண்டங்களையும் (அதாவது உற்பத்திச் சாதனங்களையும்), மேலும் தொழிலாளியின் வாழ்வுக்கு வேண்டிய பண்டங்களையும் (அதாவது வாழ்வுச் சாதனங்களையும்) தவிர வேறெதையும் மூலதனமாக மாற்ற முடியவே முடியாது. ஆதலால், வருடாந்திர உபரி-உழைப்பில் ஒரு பகுதி, முன்னீடு செய்யப்பட்ட மூலதனத்தை மாற்றீடு செய்ய தேவைப்படுவதற்கும் கூடுதலான உற்பத்திச் சாதனங்களையும் வாழ்வுச் சாதனங்களையும் உற்பத்திச் செய்வதற்குப் பிரயோகிக்கப்பட்டிருக்க வேண்டும். சுருங்கச் சொல்லின், உபரி-உற்பத்திப் பொருளில் புதிய மூலதனத்தின் பொருட் கூறுகளும் சேர்ந்திருப்பதால்தான் இந்த உபரி-உற்பத்திப் பொருளின் மதிப்பாகிய உபரி-மதிப்பு மூலதனமாய் மாற்றத்தக்கதாகிறது.

ஏற்கனவே வேலையில் உள்ள தொழிலாளர்களைச் சுரண்டுவது அளவிலோ மும்முரத்திலோ அதிகரிக்காவிட்டால், கூடுதல் உழைப்புச் சக்தி தேவைப்படும். முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் இயங்கமைப்பு ஏற்கனவே இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கூடுதல் உழைப்புச் சக்தியை வருடாந்திர உற்பத்தியிலடங்கிய உபரி-உற்பத்திச் சாதனங்களோடு மூலதனம் இணைத்து விட்டாலே போதும். உபரி-மதிப்பு மூலதனமாக மாற்றப்பட்டு விடுகிறது. சாமானிய மறுவுற்பத்திக்குரியதான வட்டப் பாதை அதன் வடிவத்தை மாற்றிக் கொண்டு சுழலேணியாய் மாறுகிறது.

ஆரம்ப மூலதனம் அதன் முதலீட்டாளருக்கு எப்படிக் கிடைத்தது? "தன் சொந்த உழைப்பாலும் தன் மூதாதையர்களின் உழைப்பாலுமே" என்று அரசியல் பொருளாதாரத்தின் சொல்விளம்பிகள் ஏகோபித்த குரலில் பதிலளிக்கிறார்கள். ஆனால், கூடுதல் மூலதனம் இப்படிப்பட்டதன்று. அதன் மதிப்பில் ஊதியமில்லா உழைப்பிலிருந்து வராதது ஓரணுக்கூட இல்லை. கூடுதல் உழைப்புச் சக்தி சேர்ந்து கொள்கிற உற்பத்திச் சாதனங்களும், மற்ற தொழிலாளர்கள் உயிர் வாழ்வதற்கான அவசிய பண்டங்களும் உபரி-உற்பத்திப் பொருளின் கூறுகளே தவிர வேறல்ல.

கூடுதல் தொழிலாளர்கள் ஏற்கனவே வேலை செய்யும் தொழிலாளர்களின் ஊதியமில்லா உழைப்பைக் கொண்டு வேலைக்கமர்த்தப்படுகிறார்கள் என்பதால் எந்த மாறுபாடும் ஏற்படுவதில்லை. 

முன்னரே பொருள் வடிவாக்கப்பட்ட பிறர் உழைப்பில் ஒரு பகுதியைத் திரும்பத் திரும்ப முதலாளி சமதையேதும் தராமல் தனது உடைமையாக்கி, அதனை மேலும் அதிக அளவிலான உயிருள்ள உழைப்புக்குப் பரிவர்த்தனை செய்கிறார். சொத்துரிமைகள் அவரது சொந்த உழைப்பை ஆதாரமாய் கொண்டவை என்றுதான் முதலில் நினைத்தோம். எப்படியும், இப்படி ஒரு அனுமானம் அவசியமாய் இருந்தது; ஏனென்றால், சரிசமமான உரிமை படைத்த சரக்குடைமையாளர்கள் மட்டுமே ஒருவரையொருவர் எதிர்கொண்டனர்; அவரவரும் தன் சொந்த சரக்கினை உடைமை மாற்றம் செய்துதான் பிறரது சரக்கினைத் தனது உடைமையாக்கிக் கொள்ள முடிந்தது. இந்த சரக்குகள் யாவும் உழைப்பால் படைக்கப்படுகிறவைதாம். ஆனால், இப்போது, சொத்து என்பது பிறரது ஊதியமிலா உழைப்பை அல்லது அவ்வுழைப்பின் உற்பத்திப் பொருளைத் தனதாக்கிட முதலாளிக்குள்ள உரிமை என்றும், தான் உற்பத்தி செய்யும் பொருளை தனதாக்கிட தொழிலாளிக்குள்ள முடியாமை என்றும் ஆகி விடுகிறது. உழைப்பிலிருந்து சொத்து இப்படி பிரிக்கப்படுவதானது இவையிரண்டின் முழுதொத்த தன்மையிலிருந்து வந்ததாகத் தோன்றிய விதியின் தவிர்க்க முடியாத விளைவாகிறது.

முதலாளித்துவத் தனதாக்க முறை சரக்கு உற்பத்தியின் மூல விதிகளை எவ்வளவுதான் மதியாததாய்த் தோன்றினாலும், இவ்விதிகளைப் பிரயோகிப்பதால் வருவதே தவிர அவற்றை மீறுவதால் அல்ல. 

புதிய உற்பத்திப் பொருளின் மதிப்பில் மேலும் அடங்கியிருப்பது; உழைப்புச் சக்தியினது மதிப்பின் சமதையும், அத்துடன் கூட ஓர் உபரி-மதிப்பும். திட்டமான காலத்துக்கு, உதாரணமாக ஒரு நாள் அல்லது ஒரு வாரத்துக்கு விற்கப்படும் உழைப்புச் சக்தியின் மதிப்பு --- அந்த காலத்தில் அதனை உபயோகித்துப் படைக்கப்படும் மதிப்பை விடக் குறைவு.  ஆனால் தொழிலாளி அவரது உழைப்புச் சக்தியை விற்று பயன்-மதிப்பை உடைமை மாற்றம் செய்திருக்கிறார். விற்றல் வாங்கல் ஒவ்வொன்றிலும் நடப்பது இதுவே.

உழப்புச் சக்தி என்னும் இந்த குறிப்பிட்ட சரக்கு உழைப்பை வழங்கி, மதிப்பைப் படைக்கும் தனிவிதப் பயன்-மதிப்பைக் கொண்டதாகும். 

விற்பவரை ஏமாற்றி இது நடைபெறவில்லை, அவருக்கு அவரது சரக்கின் மதிப்பு கிடைத்து விடுகிறது. 

ஒன்றுக்கொன்று பரிவர்த்தனை செய்து கொள்ளப்படும் சரக்குகளின் பரிவர்த்தனை விதி சமத்துவத்தைக் கோருகிறது. ஆனால், அவற்றின் பயன்..மதிப்புகளைப் பொறுத்த வரை, ஆரம்பத்திலிருந்தே, இரண்டுக்குமிடையில் வேறுபாடு இருப்பது இந்த விதிக்கு முன் தேவையாகிறது. பேரம் முடிந்து நிறைவேற்றப்பட்ட பின்னரே தொடங்குவதான அவற்றின் நுகர்வுக்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

பணம் மூலதனமாகிற ஆரம்ப மாற்றம் சரக்கு உற்பத்தியின் பொருளாதார விதிகளையும், அவற்றிலிருந்து பெறப்படும் சொத்துரிமையையும் சற்றேனும் மீறாமலேதான் நடந்தேறுகிறது. ஆயினும் அதன் விளைவு என்னவென்றால்;

1. உற்பத்திப் பொருள் முதலாளிக்குச் சொந்தம், தொழிலாளிக்கு அல்ல.
2. உற்பத்திப் பொருளின் மதிப்பில் முன்னீடு செய்யப்பட்ட மூலதனத்தின் மதிப்போடு கூட உபரி-மதிப்பும் அடங்கியுள்ளது; இந்த உபரி-மதிப்புக்காகத் தொழிலாளி உழைப்பைச் செலவிடுகிறார், முதலாளி ஏதும் செலவிடுவதில்லை என்றாலும் இது சட்டப்படி முதலாளிக்குச் சொந்தமான சொத்தாகிறது.
3. தொழிலாளி அவரது உழைப்புச் சக்தியை இழந்துவிடவில்லை; வாங்குகிறவர் கிடைப்பாராயின் மீண்டும் அவர் இதனை விற்கலாம்.

சாமானிய மறுவுற்பத்திக்கு பதில் விரிதிற மறுவுற்பத்தி (reproduction on an extended scale), அதாவது மூலதனத் திரட்டல் நடைபெறுவதாயினும் நிலைமையில் மாற்றம் ஏதுமில்லை. 

தனியொரு முதலாளிக்கும் தனியொரு தொழிலாளிக்கும் பதிலாக எதிரும் புதிருமாக நிற்கும் முதலாளி வர்க்கத்தையும் தொழிலாளி வர்க்கத்தையும் முழுமொத்தமாகப் பார்க்கையில், நிச்சயமாக நிலைமை முற்றிலும் மாறி விடுகிறது.

விற்றலும் வாங்கலும் குறிப்பிட்ட தனியாட்களிடையே பேசி முடிக்கப்படுவதால், முழு சமுதாய வர்க்கங்களிடையிலான உறவுகளை இங்கே தேடக் கூடாது.                          

இன்று செயல்படுகிற மூலதனம் காலவட்ட மறுவுற்பத்திகளும் முன்சென்ற திரட்டல்களுமான நீண்ட நெடிய தொடரைக் கடந்து வந்திருப்பினும், அதன் ஆரம்பக் கன்னிமையை ஒரு போதும் இழப்பதில்லை. பரிவர்த்தனை விதிகளை ஒவ்வொரு தனிப் பரிவர்த்தனைச் செயலிலும் கடைபிடித்துக் கொண்டிருக்கும்வரை, சரக்கு உற்பத்திக்குரியவையான சொத்துரிமைகளை எவ்விதத்திலும் பாதிக்காமலே தனதாக்க முறையில் முற்றிலும் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

இந்த புரட்சிகரமான மாற்றம், உழைப்பாளியே உழைப்புச் சக்தியை ஒரு சரக்காகச் சுதந்திரமாய் விற்கத் தொடங்கும் தருணம் முதற்கொண்டு தவிர்க்க முடியாததாகிறது.          

அரசியல் பொருளாதாரம் மூலதனத்தைப் பொதுவாக "உபரி-மதிப்பின் உற்பத்தியில் திரும்பத் திரும்ப ஈடுபடுத்தப்படும் திரட்டப்பட்ட செல்வம்" (மாற்றப்பட்ட உபரி-மதிப்பு அல்லது வருவாய்) என்றும், முதலாளியை "உபரி-மதிப்பின் உடைமையாளர்" என்றும் வர்ணிக்கிறது.  

No comments:

Post a Comment