ஒப்பீட்டு உபரி-மக்கள் தொகை அல்லது தொழில் துறை சேமப் பட்டாளம் மேன்மேலும் அதிகமாதல்
முதலாளித்துவ முறையிலான பொருளுற்பத்தியும், அதோடு கூடவே உழைப்பின் உற்பத்தித் திறனில் ஏற்படும் வளர்ச்சியும், மூலதனத்தின் அங்கக இயைபில் அதனால் உண்டாகும் மாற்றமும் மூலதனத் திரட்டலின் முன்னேற்றத்துக்கு அல்லது சமுதாய செல்வத்தின் வளர்ச்சிக்கு இணையான வேகத்தில் மட்டுமே நடைபெறுவதில்லை. இவையெல்லாம் இன்னும் கூட மிக அதிக வேகத்தில் நடைபெறுகின்றன. ஏனென்றால், மொத்த சமுதாய மூலதனத்தின் அறுதிப் பெருக்கமாகிய வெறும் திரட்டலோடு கூடவே அந்த மொத்தத்தில் உள்ளடங்கிய தனித்தனி மூலதனங்களின் மையப்பாடும் நடந்தேறுகிறது. மேலும் ஏனென்றால் கூடுதல் மூலதனத்தின் தொழில் நுட்ப இயைபில் மாற்றம் ஏற்படுகையில் ஆரம்ப மூலதனத்தின் தொழில் நுட்ப இயைபிலும் இதையொத்த மாற்றம் ஏற்படுகிறது. எனவே, மூலதனத் திரட்டல் முன்னேறிச் செல்லும்போது, மாறும்-மூலதனத்துடன் மாறா-மூலதனத்திற்குள்ள விகிதம் மாறுகிறது.
மாறாப் பகுதியுடன் ஒப்பிடுமிடத்து மாறும் பகுதி வளர்வேகத்தில் குறைந்து செல்கிறது. மூலதனத்தின் மாறும் பகுதியில் வளர்வேகத்தில் ஏற்படும் இந்த ஒப்பீட்டுக் குறைவு --- மொத்த மூலதனத்தின் வளர்வேக அதிகரிப்புடன் கூடவே ஏற்பட்டு இந்த அதிகரிப்பைக் காட்டிலும் எப்போதுமே துரிதமாய் நிகழும் இக்குறைவு --- எதிர் முனையில் தலை கீழ் வடிவம் பெறுகிறது; அதாவது உழைக்கும் மக்கள் தொகையில் ஏற்படும் அறுதி அதிகரிப்பாக, மாறும்-மூலதனம் அல்லது வேலை வாய்ப்புச் சாதனங்களின் அதிகரிப்பைக் காட்டிலும் எப்போதும் துரிதமாய் ஏற்படும் அதிகரிப்பாகத் தோற்றமளிக்கிறது.
உண்மையில் முதலாளித்துவத் திரட்டல்தான் ஒப்பளவில் தேவைக்கதிகமான உழைப்பாளி மக்கள் தொகையை --- அதாவது மூலதனத் தற்பெருக்கத்தின் சராசரித் தேவைகளுக்குப் போதுமானதை விடவும் அதிகமானது என்பதால் உபரி..மக்கள்தொகை எனப்படுவதை --- ஒய்வு ஒழிச்சலின்றி, அதன் ஆற்றலுக்கும் அளவுக்குமான நேர் விகிதத்தில் உண்டாக்குகிறது.
எல்லாத் துறைகளிலுமே மூலதனத்தின் மாறும் பகுதி அதிகரிப்பதும், ஆகவே அதனால் வேலை பெறும் தொழிலாளர்களின் தொகை அதிகமாவதும் கொந்தளிப்பான தொழில்..வாணிப ஏற்ற இறக்கங்களோடும் தாற்காலிகமாய் உண்டாகிற உபரி-மக்கள்தொகையோடும் எப்போதும் சேர்ந்துதான் ஏற்படுகின்றன.
மூலதனம் கூடுதலான தொழிலாளர்களை ஈர்ப்பதுடனாகவே கூடுதலான தொழிலாளர்களை வெளியே விரட்டும் நிகழ்வின் வீச்சும் மேன்மேலும் விரிவடைகிறது.
உழைக்கும் மக்கள் தாம் படைக்கும் மூலதனத்தின் திரட்டலை உண்டாக்குவதோடு கூட. தாமே ஒப்பளவில் தேவைக்கதிகமானோராய் ஆக்கப்படுவதற்கான, ஒப்பீட்டு உபரி..மக்கள்தொகையாக மாற்றப்படுவதற்கான சாதனங்களையும் படைக்கிறார்கள்; அதோடு எப்போதுமே மேன்மேலும் அதிகமாகிச் செல்லும் அளவில் இதனைச் செய்கிறார்கள். இது முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறைக்கே உரித்தான மக்கள்தொகை விதியாகும்.
மூலதனத் திரட்டலின் அல்லது முதலாளித்துவ அடிப்படையிலான செல்வப் பெருக்கத்தின் அவசிய விளைவாய் இருக்கும் உபரியான உழைக்கும் மக்கள் தொகை, மறு புறத்தில் முதலாளித்துவ திரட்டலின் நெம்புகோலாகிறது; அது மட்டுமன்று, முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை நிலவிடத் தேவையான நிலைமையும் ஆகிறது. இந்த உபரியான உழைக்கும் மக்கள், மூலதனமே அதன் சொந்தச் செலவில் வளர்த்து ஆளாக்கியது போல் முற்றிலும் அதன் உடைமையாகி, வேண்டும் போது பயன்படுத்திக் கொள்ளத் தயார் நிலையில் உள்ள தொழில் துறை சேமப் பட்டாளம் (Industrial Reserve Army) ஆகி விடுகிறார்கள்.
நவீனத் தொழில் துறைக்கே உரித்தான பாதையாகிய சராசரி முனைப்பு, அதிமும்முர உற்பத்தி, நெருக்கடியும் தேக்கமும் ஆகிய கட்டங்கள் அடங்கிய பத்தாண்டு சகடமானது (இடையிடையே சிறுசிறு அலைவுகளைக் கொண்டது) தொழில் துறை சேமப் பட்டாளம் அல்லது உபரி-மக்கள்தொகை இடையறாது உண்டாவதிலும், மறுபடியும் உண்டாவதிலும் ஆதாரப்பட்டுள்ளது.
மக்கள் தொகை அறுதியாக உயர்ந்தாலும் உயரா விட்டாலும் உழைப்பாளர் தொகை உயர வேண்டும். தொழிலாளர்களில் ஒரு பகுதியை ஓயாமல் "விடுவிக்கும்" சாமானிய நிகழ்முறையே உழைப்பாளர் தொகையை இவ்விதம் உயரச் செய்கிறது.
நவீனத் தொழில்துறையின் இயக்கப் போக்கு முழுவதுமே உழைக்கும் மக்களில் ஒரு பகுதியினரை வேலையில்லாதவர்களாக அல்லது பகுதி நேரத்துக்கு மேல் வேலையில்லாதவர்களாக ஓயாமல் மாற்றுவதில் ஆதாரப்பட்டுள்ளது.
ஒரு புறத்தில், மூலதனத் திரட்டல் முன்னேறிச் செல்கையில், முன்னிலும் அதிகமான மாறும்-மூலதனம் முன்னிலும் அதிகமான தொழிலாளர்களை அமர்த்தாமலே முன்னிலும் அதிகமான உழைப்பைக் கறக்கிறது; மறு புறத்தில், ஒரே பருமனுள்ள மாறும்-மூலதனம் ஒரே அளவு உழைப்புச் சக்தியைக் கொண்டு முன்னிலும் அதிகமான உழைப்பைக் கறக்கிறது; இறுதியாக உயர்தர உழைப்புச் சக்திகளை அகற்றி, கூடுதலான தொகையில் மட்டரக உழைப்புச் சக்திகளை செயலில் இறக்குகிறது.
ஆகவே, ஒப்பீட்டு உபரி-மக்கள்தொகையின் (relative surplus population) உருவாக்கம் அல்லது தொழிலாளர்களின் வெளியேற்றம் என்பது, மூலதனத் திரட்டலின் முன்னேற்றத்துடன் சேர்ந்து வருவதும், அம்முன்னேற்றத்தால் முடுக்கி விடப்படுவதுமான பொருளுற்பத்தி நிகழ்முறையின் தொழில் நுட்பப் புரட்சியை விடத் துரிதமாக நடக்கிறது; இப்புரட்சிக்கிணையாய் மூலதனத்தின் மாறாப் பகுதியோடு ஒப்பிடுமிடத்து மாறும் பகுதி குறைந்து செல்வதை விடவும் துரிதமாக நடக்கிறது.
தொழிலாளி வர்க்கத்தில் வேலை பெற்ற பகுதியின் மிகையுழைப்பு சேமப் பட்டாள அணிகளைப் பெருக்குகிறது. அதே போது சேமப் பட்டாளத்தின் போட்டியானது வேலை பெற்றோரை முன்னிலும் அதிகமாய் நிர்பந்தித்து, மிகையுழைப்புக்கு சம்மதிக்குமாறும், மூலதனத்தின் சொல்லுக்கு அடங்கி நடக்குமாறும் கட்டாயப்படுத்தப்படுகிறது. தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதி மிகையுழைப்புக்கு ஆட்படுவதால் மறு பகுதி வேலையின்றி சும்மாயிருக்கும்படி நிர்பந்திக்கப்படுகிறது. நேர்மாறாக, பின் சொன்ன நிலைமையால் முன்சொன்ன நிலைமையும் ஏற்படுகிறது.
பொதுவாக கூலியின் அலைவுகளை ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து, பிரத்தியேகமாய் தொழில் துறை சேமப் பட்டாளத்தின் பெருக்கத்தாலும் குறுக்கத்தாலுமே அவை இயக்கப்படுகின்றன
இந்தப் பெருக்கமும் குறுக்கமும் செயல்படும் பட்டாளமாகவும் சேமப் பட்டாளமாகவும் தொழிலாளி வர்க்கம் பிரிந்துள்ள மாறுபடும் விகிதங்களாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன.
இந்நிலையில், மூலதனத்தின் செயல் மக்கள்தொகையில் ஏற்படும் அறுதி மாற்றத்தைப் பொறுத்ததெனப் பசப்புகிற விதி அதியற்புத விதிதான்.
தொழிலாளர்கள் எவ்வளவு அதிகமாய் வேலை செய்கிறார்களோ, பிறருக்காக எவ்வளவு அதிகமாய் செல்வத்தை உற்பத்தி செய்கிறார்களோ, அவர்களது உற்பத்தித் திறன் எவ்வளவு அதிகரிக்கிறதோ, மூலதனத்தின் தற்பெருக்கச் சாதனம் என்ற அவர்களின் பணி எப்படி அதே அளவுக்கு அவர்களுக்கு மேன்மேலும் ஆபத்து விளைவிப்பதாகி விடுகிறது என்ற இரகசியத்தை அவர்கள் புரிந்து கொள்ளத் தலைப்படுகிறார்கள்; முதலாளித்துவ பொருளுற்பத்தியின் இந்த இயற்கை விகிதங்கள் வர்க்கத்தின் மீது ஏற்படுத்டும் நாச விளைவுகளைப் போக்கிட அல்லது தணித்திட வேலைபெற்றோருக்கும் வேலையற்றறோருக்குமிடையில் முறையான ஒத்துழைப்பை ஏற்படுத்தத் தொழிற் சங்கங்கள் மூலமும் பிறவற்றின் மூலமும் முயற்சி எடுக்கிறார்கள்.
பொதுவாக கூலியின் அலைவுகளை ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து, பிரத்தியேகமாய் தொழில் துறை சேமப் பட்டாளத்தின் பெருக்கத்தாலும் குறுக்கத்தாலுமே அவை இயக்கப்படுகின்றன
இந்தப் பெருக்கமும் குறுக்கமும் செயல்படும் பட்டாளமாகவும் சேமப் பட்டாளமாகவும் தொழிலாளி வர்க்கம் பிரிந்துள்ள மாறுபடும் விகிதங்களாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன.
இந்நிலையில், மூலதனத்தின் செயல் மக்கள்தொகையில் ஏற்படும் அறுதி மாற்றத்தைப் பொறுத்ததெனப் பசப்புகிற விதி அதியற்புத விதிதான்.
தொழிலாளர்கள் எவ்வளவு அதிகமாய் வேலை செய்கிறார்களோ, பிறருக்காக எவ்வளவு அதிகமாய் செல்வத்தை உற்பத்தி செய்கிறார்களோ, அவர்களது உற்பத்தித் திறன் எவ்வளவு அதிகரிக்கிறதோ, மூலதனத்தின் தற்பெருக்கச் சாதனம் என்ற அவர்களின் பணி எப்படி அதே அளவுக்கு அவர்களுக்கு மேன்மேலும் ஆபத்து விளைவிப்பதாகி விடுகிறது என்ற இரகசியத்தை அவர்கள் புரிந்து கொள்ளத் தலைப்படுகிறார்கள்; முதலாளித்துவ பொருளுற்பத்தியின் இந்த இயற்கை விகிதங்கள் வர்க்கத்தின் மீது ஏற்படுத்டும் நாச விளைவுகளைப் போக்கிட அல்லது தணித்திட வேலைபெற்றோருக்கும் வேலையற்றறோருக்குமிடையில் முறையான ஒத்துழைப்பை ஏற்படுத்தத் தொழிற் சங்கங்கள் மூலமும் பிறவற்றின் மூலமும் முயற்சி எடுக்கிறார்கள்.
No comments:
Post a Comment