Wednesday, December 11, 2013

பகுதி 7 அத்தியாயம் 25 முதலாளித்துவ திரட்டலின் பொது விதி பிரிவு 1

மூலதனத்தின் இயைபு மாறாதிருக்க, மூலதனத் திரட்டலுடன் கூடவே உழைப்புச் சக்திக்கான வேண்டல் அதிகரித்தல்.

மதிப்பென்ற முறையில் மூலதனம் மாறா-மூலதனமாகவும், மாறும்-மூலதனமாகவும், அதாவது உற்பத்திச் சாதனங்களின் மதிப்பாகவும் உழைப்புச் சக்தியின் மதிப்பாகிய கூலியின் மொத்தத் தொகையாகவும் எவ்விதத்தில் பிரிக்கப்படுகிறது என்பது மூலதனத்தின் இயைபை நிர்ணயிக்கிறது.

பிண்டப் பொருளென்ற முறையில், உற்பத்தி நிகழ்முறையில் செயல்படும் மூலதனம் அனைத்தும் உற்பத்திச் சாதனங்களாகவும், உயிருள்ள உழைப்புச் சக்தியாகவும் பிரிக்கப்படுகிறது. இதனை மூலதனத்தின் மதிப்பு-இயைபு (value..composition) என்று அழைக்கிறேன்.

ஒரு புறம் ஈடுபடுத்தப்படும் உற்பத்திச் சாதனங்களின் திரளுக்கும், மறு புறம் அவற்றை ஈடுபடுத்துவதற்கு தேவையான உழைப்பின் திரளுக்கும் இடயிலான உறவால் நிர்ணயிக்கப்படுகிறது. இதனை தொழில்நுட்ப இயைபு (technical composition) என்று அழைக்கிறேன்.

இவையிரண்டும் கறாரான இடையுறவு (correlation) கொண்டவை. இந்த இடையுறவைப் புலப்படுத்தும் விதத்தில் மூலதனத்தின் மதிப்பு-இயைபை ---அது தொழில்நுட்ப இயைபினால் நிர்ணயிக்கப்பட்டு அதன் மாற்றங்களை படம் பிடித்துக் காட்டுகிற அளவுக்கு --- மூலதன அங்கக இயைபு (organic composition) என்று அழைக்கிறேன்.

கூடுதல் மூலதனமாக மாற்றப்படும் உபரி-மதிப்பில் ஒரு பகுதி, எப்போதுமே, மாறும்-மூலதனமாக அல்லது தொழிலாளர் நுகர்வுக்கான கூடுதல் நிதியமாக மாற்றப்பட வேண்டும். உழைப்புக்கான வேண்டலும் தொழிலாளர்களின் வாழ்வுச் சாதன நிதியமும் மூலதனம் அதிகரிக்கும் அதே விகிதத்தில் அதிகரிக்கின்றன என்பதும். மூலதனம் அதிகரிக்கும் அதே வேகத்தில் அதிகரிக்கின்றன என்பதும் தெளிவு.

புதிதாய் தோன்றிய சமுதாயத் தேவைகள் இன்னபிறவற்றின் விளைவாக மூலதனத்தின் முதலீட்டுக்கான புதிய சந்தைகளோ புதிய மண்டலங்களோ திறக்கப்படுவது போன்ற காரணங்களால் மேலும் மேலும் செல்வம் சேர்ப்பதற்கான தூண்டுதலுக்கு ஆளாகி, உபரி-மதிப்பு அல்லது உபரி-உற்பத்திப் பண்டம் மூலதனமாகவும் வருவாயாகவும் பிரிக்கப்படுவதில் ஏற்படும் மாற்றத்தின் மூலமே திரட்டல் வீதம் திடுமென உயரலாம். திரட்டப்பட்டுக் கொண்டிருக்கும் மூலதனத்தின் தேவைகளிலான அதிகரிப்பு இம்மாதிரியான காரணங்களால் உழைப்புச் சக்தியில் அல்லது தொழிலாளர் தொகையிலான அதிகரிப்பை விஞ்சிவிடலாம்.

சாமானிய மறுவுற்பத்தியானது முதலாளித்துவ உறவை, அதாவது முதலாளிகள், கூலித் தொழிலாளர்கள் என்ற உறவை மறுவுற்பதி செய்வது எப்படியோ, அதே போல மேன்மேலும் அதிகமாகிச் செல்லும் அளவு வீதத்திலான மறுவுற்பத்தி --- அதாவது மூலதனத் திரட்டல் --- மேன்மேலும் அதிகமாகிச் செல்லும் அளவுவீதத்திலான மூலதன உறவை மறுவுற்பத்தி செய்கிறது.  திரளான உழைப்புச் சக்தியின் மறுவுற்பத்தி மூலதனத்தின் மறுவுற்பத்திக்கு இன்றியமையாதது. இந்த உழைப்புச் சக்தி மூலதனத்தின் தற்பெருக்கத்துக்காக அம்மூலதனத்தோடு ஓயாமல் மறுபடியும் மறுபடியும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டியதும், மூலதனத்திலிருந்து விடுபட முடியாததும் ஆகும்.

மூலதனத் திரட்டல் என்பது இவ்விதம் பாட்டாளி வர்க்க பெருக்கத்தைக் குறிப்பதாகும்.

உழைப்புச் சக்தியானது எந்த அளவுக்கு உற்பத்திச் சாதனங்களை மூலதனமாக தொடருமாறு பேணிக் காத்திடுகிறதோ, தன் சொந்த மதிப்பை மூலதனமாக மறுவுற்பத்தி செய்கிறதோ, ஊதியமில்லா உழைப்பின் வாயிலாக கூடுதல் மூலதனம் தோன்றுவதற்கான ஆதாரத்தைக் கொடுக்கிறதோ, அந்த அளவுக்குதான் விற்கக் கூடியதாய் இருக்கிறது.

ஊதியமில்லா உழைப்பில் ஏற்படும் குறைவு மூலதனத்தின் ஆட்சி எல்லை விரிவடைவதற்கு எவ்விதத்திலும் தடையாவதில்லை.

உழைப்பின் விலையேற்றத்தால் மூலதனத் திரட்டல் மந்தமாகிறது.

முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிகழ்முறையின் பொறியமைவே அது தாற்காலிகமாகத் தோற்றுவிக்கும் தடங்கல்களை அகற்றி விடுகிறது. உழைப்பின் விலை திரும்பவும் சரிந்து மூலதனத்தின் தற்பெருக்கத் தேவைகளுக்கு ஏற்ற மட்டத்தை அடைகிறது.

முதலாவது நேர்வில், மூலதனம் மிகுதியாக இருப்பதற்கு காரணம் உழைப்புச் சக்தியில்  அல்லது உழைக்கும் மக்கள் தொகுதியில் அறுதியாகவோ விகிதாசார அளவிலோ ஏற்படும் அதிகரிப்பின் குறைந்த வீதமல்ல; மாறாக, மூலதனம் மிகுதியாக இருப்பதுதான் சுரண்டலுக்கு ஆட்படும் உழைப்புச் சக்தியின் போதாமைக்குக் காரணம்.

இரண்டாவது நேர்வில், மூலதனத்தின் போதாமைக்குக் காரணம் உழைப்புச் சக்தியில் அல்லது உழைக்கும் மக்கள் தொகையில் அறுதியாகவோ விகிதாசார அளவிலோ ஏற்படும் அதிகரிப்பின் உயர்ந்த வீதமல்ல; மாறாக, சுரண்டலுக்கு ஆட்படும் உழைப்புச் சக்தி, அல்லது சரியாகச் சொன்னால், அதன் விலை மிகுதியாக இருப்பதற்குக் காரணம் மூலதனத்தின் ஒப்பளவிலான குறுக்கமே.

கணித முறையில் சொல்வதானால்: திரட்டல் வீதம் சாரும் மாறியன்று, சாரா மாறியே. கூலி வீதம் சாரா மாறியன்று, சாரும் மாறியே.

மூலதனத் திரட்டலுக்கும் கூலி விகிதத்துக்கும் இடையிலான உறவு என்பது மூலதனமாக மாற்றப்படும் ஊதியிமிலா உழைப்புக்கும் இந்த கூடுதல் மூலதனத்தை இயக்குவதற்குத் தேவைப்படும் கூடுதலான ஊதிய உழைப்புக்கும் இடையிலான உறவே தவிர வேறில்லை.

கூலியுயர்வு வரம்பு மீறாத படி கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த வரம்பு முதலாளித்துவ அமைப்பின் அடித்தளங்களை சேதமில்லாத படி விட்டுவைப்பதோடு, மேலும் மேலும் விரிவான அளவில் இவ்வமைப்பு மறுவுற்பத்தியாவதையும் உறுதி செய்கிறது.

மனிதனது கரத்தின் படைப்பு மனிதனையே ஆள்கிறது.

No comments:

Post a Comment