Saturday, December 7, 2013

பகுதி 7 அத்தியாயம் 24: உபரி..மதிப்பை மூலதனமாக மாற்றுதல். பிரிவு 4 மறும் 5

உபரி-மதிப்பு மூலதனமாகவும் வருவாயாகவும் பிரிக்கப்படும் விகிதத்தைச் சாராமலே, மூலதனத் திரட்டலின் அளவை நிர்ணயிக்கும் காரணிகள். உழைப்புச் சக்தி மீதான சுரண்டல்-கடுமை. உழைப்பின் உற்பத்தித் திறன். ஈடுபடுத்தப்படும் மூலதனத் தொகைக்கும் நுகரப்படும் மூலதனத் தொகைக்கும் இடையிலான வேறுபாடு அதிகமாதல். முன்னீடு செய்யப்படும் மூலதனத்தின் பருமன்.

முதலாவதாக உபரி-மதிப்பு வீதம் உழைப்புச் சக்தி மீதான சுரண்டல்-கடுமையை பொறுத்தது. உழைப்பின் உற்பத்தித் திறன் கூடுதலாவதால் ஏற்படுகிற திரட்டல் வேக முடுக்கத்தை தொழிலாளியைச் சுரண்டுவது கூடுதலாவ‌தால் ஏற்படுகிற திரட்டல் வேக முடுக்கத்துக்கு முழுதொத்ததாய்க் கொள்ளும் அளவுக்கு சில சந்தர்ப்பங்களில் செல்கிறது. கூலியை உழைப்புச் சக்தியின் மதிப்புக்கும் கீழாக வலுவந்தமாய் குறைப்பது நடைமுறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தொழிலாளியின் அவசிய நுகர்வு நிதியத்தை (necessary consumption fund ) மூலதனத் திரட்டலுக்கான நிதியமாகவே கூட மாற்றி விடுகிறது.

18ஆம் நூற்றாண்டின் முடிவிலும் 19ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளிலும், ஆங்கிலேய சாகுபடியாளர்களும் நிலவுடைமையாளர்களும் விவசாயத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்சத்துக்கும் குறைவானதைக் கூலியாகவும், மீதத்தை மறை வட்டார உதவியாகவும் அளித்து கூலியின் அறுதி குறைந்தபட்சத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தனர்.

தொழிலாளியின் அவசிய நுகர்வு நிதியத்திலிருந்து நேரடியாக அடிக்கப்படும் கொள்ளை இக்காலத்தில் உபரி-மதிப்பை உருவாக்குவதற்கும், எனவே மூலதனத்தின் திரட்டல் நிதியத்தை உருவாக்குவதற்கும் ஆற்றுகிற பங்கை வீட்டுத் தொழில் எனப்படுவது ஏற்கனவே தெளிவாக்கிவிட்டது.

எல்லாத் தொழிற் கிளைகளிலும், மாறா-மூலதனத்தில் உழைப்புச் சாதனங்களாலான பகுதி (தொழில் முயற்சியின் பருமனால் நிர்ணயிக்கப்படுவதான) குறிப்பிட்ட தொகையிலான தொழிலாளர்களுக்குப் போதுமானதாய் இருக்க வேண்டும் என்றாலும் தொழிலாளர்கள் அதிகரிக்கும் அதே விகிதத்தில்தான் எப்போதும் அதிகரிக்க வேண்டும் என்பதில்லை.

உழைப்புச் சக்தியை அதிகத் தாக்கத்துக்குள்ளாக்கி கூடுதலாய் வருத்துவதால் பெறப்படும் கூடுதல் உழைப்பு, மூலதனத்தின் மாறாப் பகுதியை அதிகமாக்காமலே உபர-உற்பத்திப் பண்டத்தையும் உபரி-மதிப்பையும் (அதாவது மூலதனத் திரட்டலின் ஆதாரத்தை) அதிகமாக்க முடியும். 

சுரங்கங்கள் முதலான எடுபொருள் தொழில்களில் (Extractive industries) கச்சாப் பொருட்களானவை முன்னீடு செய்யப்படும் மூலதனத்தின் பகுதியாவதில்லை. இத்தொழில்களில் மாறா-மூலதனம் அநேகமாய் முழு அளவுக்கு உழைப்புச் சாதனங்களாலேயே ஆனதாகும்; இச்சாதனங்களால் முன்னிலும் அதிக அளவு உழைப்பை உட்கிரகிக்க முடியும். மற்றவையெல்லாம் மாறாதிருக்க, உற்பத்திப் பண்டத்தின் திரளும் மதிப்பு செலவிடப்படும் உழைப்புக்கு நேர் விகிதத்தில் உயரும்.

செய்பொருளுற்பத்தித் தொழில் எனப்படுவதில் உழைப்பின் கூடுதல் செலவீடு நேரிடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கச்சாப் பொருட்களில் அதற்கிணையான கூடுதல் செலவீடு தேவைப்படுகிறது.

மூலதனமானது செல்வத்தின் இரு பெரும் படைப்பாளிகளான உழைப்புச் சக்தியையும் நிலத்தையும் தன்னோடு இணைத்துக் கொள்வதன் மூலம், விரிவகற்சித் திறன் பெறுகிறது; இந்தத் திறனின் துணை கொண்டு அது தனது திரட்டலின் கூறுகளைப் பெருக்கிச் செல்ல முடிகிறது.    

மூலதனத் திரட்டலில் இன்னொரு முக்கிய காரணி சமுதாய உழைப்பினது உற்பத்தித் திறனின் படித்தரமாகும். உழைப்பின் உற்பத்தித் திறன் உயரும் போது உற்பத்திப் பண்டத்தின் திரள் அதிகமாகிறது.

இந்த உபரி-உற்பத்திப் பண்டத்தை வருவாயாகவும் கூடுதல் மூலதனமாகவும் பகிர்ந்திடும் விகிதம் மாறாதிருக்குமாயின், திரட்டல்-நிதியத்தில் குறைவேதும் இல்லாமலே முதலாளியின் நுகர்வு கூடுதலாகலாம். திரட்டல் நிதியத்தின் ஒப்பீட்டுப் பருமன் நுகர்வு-நிதியத்தின் செலவில் அதிகரிக்கும் போதே கூட, சரக்குகளின் விலை குறைவால் முதலாளிக்கு அனுபோகச் சாதனங்கள் முன்னிலும் அதிகமான அளவிலும் கூட கிடைக்கலாம்.

உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகமாவதன் கூடவே, தொழிலாளியின் ஊதியத்துக்காகும் செலவு குறைகிறது; அதனால் உண்மைக் கூலி உயரும்போதே கூட உபரி-மதிப்பு வீதம் உயர்ந்து செல்கிறது. உண்மைக் கூலி ஒருபோதும் உழைப்பின் உற்பத்தித் திறன் உயரும் விகிதாசாரத்தில் உயர்வதில்லை.

கூடுதல் மூலதனத்தின் மதிப்பு மாறாதிருக்கும்போது, அல்லது குறையும் போதே கூட வளர்வேகத் திரட்டல் நடைபெறுகிறது. மறுவுற்பத்தியின் அளவுவீதம் பொருள்வகையில் விரிவடைவதோடு கூட, உபரி-மதிப்பின் உற்பத்தியும் கூடுதல் மூலதனத்தின் மதிப்பைக் காட்டிலும் துரிதமாய் அதிகரிக்கிறது.

உழைப்புச் சாதனங்களின் பயன்பாட்டுக் காலத்தில் உழைப்பின் உற்பத்தித் திறன் உயர்ந்திருக்குமானால், பழையவற்றுக்கு பதிலாய் அதிக செய்திறனுள்ள, மலிவாகிவிட்ட புதிய இயந்திரங்கள், கருவிகள், பொறியமைவுகள் முதலானவை புகுத்தப்படுகின்றன.

மாறா மூலதனத்தின் மற்றொரு பகுதி --- கச்சாப் பொருளும் துணைப் பொருட்களும் --- ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் இடையறாது மறுவுற்பத்தி செய்யப்படுகிறது.

இரசாயத்திலான ஒவ்வொரு முன்னேற்றமும் பயனுள்ள மூலப் பொருட்களின் எண்ணிக்கையையும், ஏற்கனவே தெரிந்த மூலப் பொருட்களின் பயனுள்ள பிரயோகங்களையும் பெருகச் செய்கிறது; இவ்விதம் மூலதன வளர்ச்சியோடு கூடவே அதன் முதலீட்டுத் துறையையும் விரிவாக்குகிறது. இது மட்டுமன்று உற்பத்தி மற்றும் நுகர்வு நிகழ்முறைகளின் கழிவுகளை மறுவுற்பத்தி நிகழ்முறையின் சுற்றோட்டத்தினுள் திரும்பவும் எப்படி செலுத்துவது என்பதையும் அது கற்றுக் கொடுக்கிறது; இவ்விதம் மூலதன முன்னீடு இல்லாமலே புதிய மூலப் பொருளை மூலதனத்துக்குப் படைத்தளிக்கிறது.

விஞ்ஞானமும் தொழில் நுட்பவியலும் உள்ளபடியே இயங்கிச் செயல்படும் மூலதனத்தின் பருமனைச் சார்ந்திராத ஒரு விரிவகற்சித் திறனை மூலதனத்துக்கு கொடுக்கின்றன. அவை அதே போது, ஆரம்ப மூலதனத்தில் புதுப்பிக்கப்பட்டு புது உருவம் பெறுகிற இப்பகுதி தன் பழைய உருவம் பயன்பாட்டிலிருந்த போது அடையப்பட்ட சமூக முன்னேற்றத்தை இலவசமாக சுவீகரித்துக் கொள்கிறது. உற்பத்தித் திறனில் ஏற்படும் இந்த வளர்ச்சியுடன் கூடவே ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் மூலதனத்தில் பகுதியளவு மதிப்பிறக்கம் ஏற்படுவது மெய்தான். இந்த மதிப்பிறக்கத்தால் போட்டியில் கடுமையான பாதிப்பு ஏற்படுமானால், அந்த பாதிப்பின் சுமை தொழிலாளி மீதே விழுகிறது; தொழிலாளியை முன்னிலும் கூடுதலாய்ச் சுரண்டியே முதலாளி இழப்பு ஏற்படாமல் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறார்.

உழைப்பானது, அதன் உற்பத்திச் சாதனங்களின் பயந்திறனிலும் விரிவிலும் மதிப்பிலும் ஏற்படும் அதிகரிப்பைத் தொடர்ந்து, எனவே அதன் உற்பத்தித் திறனது வளர்ச்சியுடன் சேர்ந்து நடைபெறும் மூலதனத் திரட்டலைத் தொடர்ந்து, புத்தம் புது வடிவில் மேன்மேலும் அதிகமாகிச் செல்லும் மூலதன-மதிப்பைப் பாதுகாத்து நிரந்தரமாக்குகிறது. இது உழைப்பின்  இயற்கையான ஆற்றலாகும். எப்படி சமுதாய உழைப்பின் உற்பத்தித் திறன்கள் மூலதனத்தின் உள்ளார்ந்த இயல்புகளாய்த் தோற்றமளிக்கின்றனவோ, எப்படி முதலாளிகள் இடையறாது உபரி-உழைப்பைத் தமதாக்குவது மூலதனத்தின் இடையாறாத தற்பெருக்கமாகத் தோற்றமளிக்கிறதோ, அதே போல் உழைப்பின் இந்த இயற்கையான ஆற்றலும் அது உருக்கொண்ட மூலதனத்தின் உள்ளார்ந்த இயல்பாகத் தோற்றமளிக்கிறது.

உழைப்புச் சாதனங்கள் உற்பத்திப் பொருளுக்கு மதிப்பு சேர்க்காமலே உற்பத்திப் பொருளாக்கிகளாக மட்டும் செயல்படுவதற்கேற்ப, அதாவது முழுமையாக ஈடுபடுத்தப்பட்டு, ஆனால் சிறிதளவு மட்டும் நுகரப்படுவதற்கேற்ப, நாம் முன்னர் பார்த்தது போல, இயற்கைச் சக்திகள், நீர், நீராவி, காற்று, மின்சாரம் போன்றவை புரியும் அதே இலவசச் சேவையைப் புரிகின்றன.

கடந்த கால உழைப்பு எப்போதுமே மூலதனமாக மாறுவேடம் தரிக்கிறது; அதாவது ஏ, பி, சி முதலானோரது கடந்த கால உழைப்புக்குரிய கடன் உழைப்பாளியல்லாத எக்ஸ் என்பவரின் நிகழ் காலக் கையிருப்பாக வடிவெடுக்கிறது..

அடுத்தடுத்த திரட்டல்களைக் கொண்டு மூலதனம் எவ்வளவுக்கு அதிகரிக்கிறதோ, நுகர்வு-நிதியமாகவும் திரட்டல்-நிதியமாகவும் பிரிக்கப்படும் மதிப்புத் தொகை அவ்வளவுக்கு அதிகரிக்கிறது. எனவே முதலாளி முன்னிலும் கூடுதலாய் சுகபோகம் அனுபவிக்கலாம்; அதே போதில் முன்னிலும் கூடுதலாய் "துறவும்" பூணலாம்.

தொழிலாளர் நுகர்வு..நிதியம் எனப்படுவது 

தொல்சீர் பொருளாதார இயலானது சமுதாய மூலதனத்தை நிலையான செய்திறன் கொண்ட நிலையான பருமனாகவே எப்போதும் கொள்ள விரும்பியது. அவர்கள் கோட்பாட்டின்படி பொருளுற்பத்தி நிகழ்முறையின் சர்வ சாதாரணமான நிகழ்வுகளும், உதாரணமாக அதன் திடீர்ப் பெருக்கங்களும் சுருக்கங்களும், ஏன் மூலதனத் திரட்டலும் கூட நினைக்கவே முடியாதவையாகிவிடுகின்றன. இந்தக் கோட்பாட்டை சப்பைக்கட்டுவாத நோக்கத்துக்கு அனுசரணையாகவே பயன்படுத்தினர். முக்கியமாக மூலதனத்தின் ஒரு பகுதியை, அதாவது மாறும்-மூலதனத்தை, அல்லது உழைப்புச் சக்தியாக மாற்றப்படக்கூடிய மூலதனப் பகுதியை மாறாது நிலையாயிருக்கும் பருமனாகக் காட்டும் பொருட்டே பயன்படுத்தினர். மாறும்-மூலதனத்தின் பிண்டப் பொருள், அதாவது தொழிலாளிக்கென அதனால் குறிக்கப்படுகிற வாழ்வுச் சாதனங்களின் திரள், அல்லது தொழிலாளர் நுகர்வு நிதியம் எனப்படுவது சமுதாயச் செல்வத்தில் தனித்த ஒரு பகுதியாகும் என்றும், இயற்கையின் விதிகளால் வரையறுக்கப்பட்டதென்றும், மாற்ற முடியாததென்றும் கதை கட்டினர்.

ஒரு புறம், சமுதாயச் செல்வத்தை தொழிலாளரல்லாதவருக்கான சுகபோகச் சாதனங்களாகவும், உற்பத்திச் சாதனங்களாகவும் பகிர்வதில் தலையிட தொழிலாளிக்கு உரிமை இல்லை. மறுபுறம், அனுகூலமான, விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே, தொழிலாளர் நுகர்வு-நிதியம் எனப்படுவதை செல்வந்தர்களது "வருவாயின்" செலவில் அவரால் அதிகமாக்க முடிகிறது.


தொழிலாளர் நுகர்வு-நிதியத்தின் முதலாளித்துவ வரம்புகளை அதன் இயற்கை வரம்புகளாகவும் சமூக வரம்புகளாகவும் சித்தரிக்க முயல்கின்றனர். அதாவது ஒவ்வொரு தொழிலாளிக்கும் தரப்படும் தனித்தனி கூலிகளை சேர்த்து கூட்ட வேண்டும்; பின்னர், இவ்வாறு வரும் கூட்டுத் தொகையைக் கடவுளும் இயற்கையும் நமக்கு விதித்திட்ட "தொழிலாளர் நுகர்வு..நிதியத்தின்" மொத்த மதிப்பென்று சாதிக்க வேண்டும் என்பதே.

No comments:

Post a Comment