உழைப்புச் சக்தியின் மதிப்பு சராசரித் தொழிலாளிக்கு வழக்கமாகத் தேவைப்படும் அவசிய வாழ்க்கைத் தேவைகளின் மதிப்பால் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த அவசிய தேவைகளின் அளவு குறிப்பிட்ட சமுதாயத்தில் குறிப்பிட்ட காலத்தில் தெரிந்ததே; எனவே இதனை மாறாப் பருமனாகக் கருதலாம்.
சரக்குகள் அவற்றின் மதிப்புக்கே விற்கப்படுகின்றன என்றும், உழைப்புச் சக்தியின் விலை எப்போதாவது அதன் மதிப்பை விட உயர்ந்தாலும், ஒரு போதும் அம்மதிப்பை விடக் குறைவதில்லை என்றும் அனுமானித்துக் கொள்வோம்.
உபரி-மதிப்பினதும் உழைப்புச் சக்தியின் விலையினதுமான ஒப்பீட்டு பருமன்கள் (1) வேலை..நாளின் கால அளவு (2) உழைப்பின் இயல்பான மும்முரம் அல்லது உழைப்பின் மும்முரப் பருமன் (3) உழைப்பின் உற்பத்தித் திறன் ஆகிய மூன்று காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன.
I வேலை-நாளின் கால அளவும் உழைப்பின் மும்முரமும் மாறாதவை. உழைப்பின் உற்பத்தித் திறன் மாறுவது.
1.உழைப்பின் உற்பத்தித் திறனும், அத்துடன் உற்பத்திப் பண்டத் திரளும், உற்பத்தி செய்யப்பட்ட தனிப்பட்ட சரக்கு ஒவ்வொன்றின் விலையும் எப்படி மாறுபட்டாலும், குறிப்பிட்ட கால அளவுள்ள வேலை-நாள் எப்போதுமே ஒரே அளவு மதிப்பைப் படைக்கிறது.
2. உபரி-மதிப்பும் உழைப்புச் சக்தியின் மதிப்பும் எதிரெதிர் திசைகளில் மாறுபடுகின்றன. உழைப்பின் உற்பத்தித் திறனிலான மாறுபாடு -- அதன் பெருக்கம் அல்லது சுருக்கம் -- உழைப்புச் சக்தியின் மதிப்பில் எதிர்த் திசையிலும், உபரி-மதிப்பில் அதே திசையிலும் மாறுபாட்டைத் தோற்றுவிக்கிறது.
உபரி-மதிப்பு, உழைப்புச் சக்தியின் மதிப்பு ஆகியவற்றின் கூட்டுத் தொகை வேலை-நாள் படைக்கிற மதிப்பாகும். உபரி-மதிப்பின் அறுதிப் பருமனிலோ, அல்லது உழைப்புச் சக்தியினது மதிப்பின் அறுதிப் பருமனிலோ மாற்றம் ஏதும் ஏற்பட வேண்டுமானால், அதே போது அவற்றின் ஒப்பீட்டுப் பருமன்களிலும் -- அதாவது ஒன்றுக்கொன்று உள்ள ஒப்பளவிலும் -- மாற்றம் ஏற்பட்டாக வேண்டும். அவை ஒருங்கே உயர்வதோ குறைவதோ சாத்தியமில்லை.
உழைப்பின் உற்பத்தித் திறன் உயராமல் உழைப்புச் சக்தியின் மதிப்பு குறைய முடியாது; ஆதலால் உபரி-மதிப்பு உயர முடியாது. உழைப்பின் உற்பத்தித் திறனிலான அதிகரிப்பு உழைப்புச் சக்தியின் மதிப்பில் வீழ்ச்சியையும், அதன் விளைவாக உபரி-மதிப்பில் உயர்வையும் தோற்றுவிக்கிறது. மறு புறம் இவ்வுற்பத்தித் திறனிலான குறைவோ உழைப்புச் சக்தியின் மதிப்பில் உயர்வையும், உபரி-மதிப்பில் வீழ்ச்சியையும் தோறுவிக்கிறது.
உழைப்பின் உற்பத்தித் திறனில் குறிப்பிட்ட மாற்றத்தின் விளைவாக உபரி-மதிப்பில் ஏற்படும் அதிகரிப்பு அல்லது குறைவின் விகிதம் வேலை-நாளில் உபரி-மதிப்பாக உருப்பெறும் பகுதியின் ஆரம்பப் பருமனைப் பொறுத்ததாகும்; அந்த நாட்பகுதி எந்த அளவுக்குச் சிறியதோ, மாற்றத்தின் விகிதம் அந்த அளவுக்குப் பெரியது; அந்த நாட்பகுதி எந்த அளவுக்குப் பெரியதோ, மாற்றத்தின் விகிதம் அந்த அளவுக்குச் சிறியது.
3. உபரி-மதிப்பில் ஏற்படும் அதிகரிப்பு அல்லது குறைவு, எப்போதுமே, இதற்கிணையாய் உழைப்புச் சக்தியின் மதிப்பில் ஏற்படும் குறைவு அல்லது அதிகரிப்பின் விளைவாகுமே தவிர, காரணமாகாது.
கீழ் வரம்பாகக் கொண்டு உழைப்புச் சக்தியின் விலையில் ஏற்படும் வீழ்ச்சியின் அளவானது, ஒரு புறத்தில் மூலதனத்தின் நெருக்குதலுக்கும் மறு புறத்தில் தொழிலாளி காட்டும் எதிர்ப்புக்கும் உள்ள ஒப்பீட்டு வலுவைப் பொறுத்ததே.
உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரித்துக் கொண்டிருக்கும்போது, உழைப்புச் சக்தியின் விலை மேலும் மேலும் சரிந்து செல்வதும், ஆயினும் இதனுடன் கூடவே தொழிலாளியின் வாழ்வுச் சாதனங்களது திரள் இடைவிடாது பெருகிச் செல்வதும் சாத்தியமாகிறது. ஆனால் இந்நிலையிலும் கூட, உழைப்புச் சக்தியின் மதிப்பு குறைவதன் விளைவாய் உபரி-மதிப்பு அதற்கிணையாக உயரும். இவ்வாறு தொழிலாளியின் நிலைக்கும் முதலாளியின் நிலைக்கும் இடையிலான பெரும் பிளவு விரிந்த வண்ணமிருக்கும்.
இலாப வீதம் என்பது முன்னீடு செய்யப்பட்ட மொத்த மூலதனத்தோடு உபரி-மதிப்புக்குள்ள விகிதமாகும்; உபரி-மதிப்பு வீதம் என்பது அந்த மூலதனத்தின் மாறும் பகுதியோடு உபரி-மதிப்பிற்குள்ள விகிதமாகும்.
II வேலை-நாள் மாறாதது. உழைப்பின் உற்பத்தித் திறன் மாறாதது. உழைப்பின் மும்முரம் மாறுவது.
ஒரே கால அளவு கொண்ட இரு வேலை-நாட்களில் அதிக மும்முரமான உழைப்புடைய வேலை-நாள் அவ்வளவு அதிக மும்முரமில்லாத உழைப்புடைய வேலை-நாளை விட அதிக உற்பத்திப் பொருட்களில் உருக் கொள்கிறது.
உழைப்பின் மும்முரம் அதிகமாகும் போது, அந்த மதிப்பு மாறாதிருக்கிறது; ஏனென்றால் ஒவ்வொரு பண்டத்துக்கும் முன் போல் அதே அளவு உழைப்பு செலவாகிறது. இங்கே உற்பத்திப் பண்டங்கள் ஒவ்வொன்றினதும் விலைகள் குறையாமல் உற்பத்திப் பண்டங்களின் தொகை அதிகமாவதைக் காண்கிறோம்.
ஆனால் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்போது குறிப்பிட்ட மதிப்பு முன்னிலும் அதிகமான உற்பத்திப் பண்ட திரளில் நிரவப்படுகிறது.
ஆனால் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்போது குறிப்பிட்ட மதிப்பு முன்னிலும் அதிகமான உற்பத்திப் பண்ட திரளில் நிரவப்படுகிறது.
படைக்கப்படும் மதிப்பானது, உழைப்பின் மும்முரம் சமுதாயத்தில் அதன் இயல்பான மும்முரத்திலிருந்து விலகிச் செல்லும் அளவுக்கேற்ப மாறுபடுகிறது. எனவே குறிப்பிட்ட வேலை-நாள் முன் போல் மாறா மதிப்பைப் படைப்பதில்லை, மாறும் மதிப்பையே படைக்கிறது.
இந்த மதிப்பு பிரிக்கப்பட்டு வருகிற இரு பகுதிகள் --- அதாவது உழைப்புச் சக்தியின் விலை, உபரி..மதிப்பு இரண்டுமே --- ஏககாலத்தில் சமமாகவோ சமமின்றியோ அதிகமாகலாம் என்பது தெளிவு.
உழைப்புச் சக்தியின் விலையிலான உயர்வு உழைப்புச் சக்தியின் மதிப்புக்கு மேல் விலை உயர்ந்திருப்பதைக் குறிக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. மாறாக, விலை உயர்வானது மதிப்பு வீழ்ச்சியோடு சேர்ந்து வரலாம். உழைப்புச் சக்தியின் விலையிலான உயர்வு அதன் அதிகரித்த தேய்மானத்துக்கு ஈடாகாத போதெல்லாம் இவ்வாறு நிகழ்கிறது.
உழைப்பின் மும்முரம் ஒவ்வொரு தொழிற் கிளையிலும் ஏக காலத்திலும் சரிநிகராகவும் அதிகரித்தால், புதிய, உயர்ந்த மும்முர நிலை சமுதாயத்துக்குரிய இயல்பான நிலையாக மாறி விடும்; ஆகவே அது கணக்கில் கொள்ளப்படாது. ஆனால், அப்போதும் கூட உழைப்பின் மும்முரம் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறாக இருக்கும்; மதிப்பு விதியை சர்வதேச அளவில் பிரயோகிக்கையில் விளைவுகள் வெவ்வேறாகவே இருக்கும். ஒரு நாட்டின் கூடுதலான மும்முரமுள்ள வேலை-நாள் இன்னொரு நாட்டின் குறைவான மும்முரமுள்ள வேலை-நாளை விட அதிகப் பணத்தொகையால் குறிக்கப்படும்.
III உழைப்பின் உற்பத்தித் திறனும் மும்முரமும் மாறாதவை. வேலை-நாளின் கால அளவு மாறுவது.
1. வேலை-நாள் அதன் கால அளவுக்கேற்ற விகிதத்தில் அதிகமான அல்லது குறைவான அளவு மதிப்பைப் படைக்கிறது. இவ்வாறு அது படைப்பது மதிப்பின் மாறுபடும் அளவே தவிர, மாறா அளவன்று.
2. உபரி-மதிப்பின் பருமனுக்கும் உழைப்புச் சக்தியினது மதிப்பின் பருமனுக்கும் இடையிலான உறவில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் உபரி-உழைப்பின், ஆதலால் உபரி-மதிப்பின் அறுதிப் பருமனிலான மாற்றத்திலிருந்து பிறக்கிறது.
3. உபரி-உழைப்பின் நீட்டிப்பு உழைப்புச் சக்தியினது தேய்மானத்தின் மீது ஏற்படுத்தும் பிரதிபலிப்பின் விளைவாக மட்டுமே உழைப்புச் சக்தியின் அறுதி மதிப்பு மாற முடியும். இந்த அறுதி மதிப்பில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் உபரி-மதிப்பின் பருமலினான மாற்றத்தின் விளைவே தவிர, ஒருபோதும் அதன் காரணமன்று.
வேலை..நாளை குறுக்குவதால் உழைப்புச் சக்தியின் மதிப்பிலோ, அவசிய..உழைப்பு நேரத்திலோ மாற்றம் ஏற்படுவதில்லை. உபரி..உழைப்பும் உபரி..மதிப்புமே குறைகின்றன. உபரி..மதிப்பின் அறுதிப் பருமனோடு கூடவே, அதன் ஒப்பீட்டுப் பருமனும் அதாவது மாறாதிருக்கும் பருமனையுடைய உழைப்புச் சக்தியின் மதிப்போடு ஒப்பளவிலான அதன் பருமனும் வீழ்கிறது.
வேலை..நாளை நீட்டுவதால் உபரி..மதிப்பு அறுதியாகவும் ஒப்பளவிலும் அதிகரிக்கிறது. உழைப்புச் சக்தியின் மதிப்பில் அறுதி மாற்றம் ஏதும் இல்லையென்றபோதிலும் ஒப்பளவிலான வீழ்ச்சி ஏற்படுகிறது. ஒரு நாள் உழைப்பு உருக்கொண்டிருக்கும் மதிப்பு அந்த நாளின் கால அளவுக்கேற்ப அதிகரிக்கிறது என்பதால், உபரி..மதிப்பும் உழைப்புச் சக்தியின் விலையும் சம அளவுகளிலோ சமமில்லா அளவுகளிலோ ஏககாலத்தில் அதிகரிக்கலாம் என்பது தெளிவு.
IV ஒரே நேரத்தில் உழைப்பின் கால அளவிலும் உற்பத்தித் திறனிலும், மும்முரத்திலும் மாறுபாடுகள்.
உழைப்பின் உற்பத்தித் திறன் குறைகிற அதி நேரத்தில் வேலை-நாளை நீட்டுதல் :
உழைப்பின் உற்பத்தித் திறன் குறைகிற அதே நேரத்தில் வேலை..நாளை நீட்டும் போது, உபரி-மதிப்பின் ஒப்பீட்டுப் பருமன் குறைந்தாலும் அதன் அறுதிப் பருமன் மாறாது இருக்கலாம்; அதன் அறுதிப் பருமன் அதிகரித்தாலும் ஒப்பீட்டுப் பருமன் மாறாது இருக்கலாம்; போதுமான அளவு வேலை..நாளை நீட்டினால், இரண்டுமே அதிகரிக்கலாம்.
உழைப்பின் மும்முரமும் உற்பத்தித் திறனும் அதிகரிக்கிற அதே நேரத்தில் வேலை..நாளைக் குறுக்குதல்:
உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரித்தாலும், மும்முரம் அதிகரித்தாலும், விளைவு ஒரே மாதிரியானதே. இரண்டில் எது அதிகரித்தாலும், குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்களின் திரள் அதிகமாகிறது. எனவே, தொழிலாளிக்கு அவரது வாழ்வு சாதனங்களையோ அவற்றின் சமதையையோ உற்பத்தி செய்ய தேவைப்படும் வேலை-நாட்பகுதி குறுகிப் போகிறது. வேலை-நாளின் குறைந்தபட்ச கால அளவு இந்த அவசியமான, ஆனால் சுருங்கத்தக்க வேலை-நாட்பகுதியால் நிர்ணயிக்கப்படுகிறது. வேலை-நாள் முழுவதுமே இந்தப் பகுதியின் கால அளவாகச் சுருங்குவதானால், உபரி-உழைப்பு மறைந்து போய்விடும்; மூலதனத்தின் ஆளுகையில் இப்படி நிகழ வாய்ப்பே இல்லை. முதலாளித்துவப் பொருளுற்பத்தி வடிவத்தை இல்லாதொழிப்பதன் முலம் மட்டுமே, வேலை..நாளின் கால அளவை அவசிய-உழைப்பு நேரமாகக் குறைக்கலாம். ஆனால் அந்நிலையிலும் கூட அவசிய-உழைப்பு நேரத்தின் வரம்புகள் விரிந்து செல்லும். ஒரு புறம் ஏனெனில், "வாழ்வுச் சாதனங்கள்" என்ற கருத்து கணிசமாக விரிவடையும்; தொழிலாளி முற்றிலும் வேறுவிதமான வாழ்க்கைத் தரத்தை கோருவார். மறுபுறம் ஏனெனில், இப்போது உபரி- உழைப்பாக இருப்பதன் ஒரு பகுதி -- அதாவது சேம வைப்புக்கும் திரட்டலுக்குமான நிதியை உண்டாக்கும் உழைப்பு -- அப்போது அவசிய..உழைப்பாகக் கணக்கிடப்படும்.
உழைப்பின் உற்பத்தித் திறன் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகரிக்கிறதோ, வேலை-நாளை அவ்வளவுக்கு அவ்வளவு குறைக்கலாம். வேலை-நாள் எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கப்படுகிறதோ, உழைப்பின் மும்முரத்தை அவ்வளவுக்கு அவ்வளவு அதிகரிக்கலாம். சமூகக் கண்ணோட்டத்தில், உழைப்புச் சிக்கனம் அதிகரிக்கும் அதே விகிதத்தில் உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது; உற்பத்திச் சாதனங்களின் சிக்கனம் மட்டுமல்ல, பயனற்ற உழைப்பை முற்றாகத் தவிர்ப்பதும் கூட உழைப்புச் சிக்கனம் என்பதில் அடங்கும். முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை ஒரு புறம் ஒவ்வொரு தனித்தொழிலிலும் சிக்கனத்தை அமலாக்கும் அதே நேரத்தில் மறுபுறம், தன் அராஜகப் போட்டி முறையால், உழைப்புச் சக்தியும் சமுதாய உற்பத்திச் சாதனங்களும் அக்கிரமமான விதத்தில் விரயம் செய்யப்படும் நிலையைத் தோற்றுவிக்கிறது. இப்போது இன்றியமையாதவை என்றாலும், தம்மளவில் தேவையில்லாத உத்தியோகங்கள் ஏராளமாய் தொற்றுவிக்கப்படுவது பற்றி சொல்லவே வேண்டாம்,.
உழைப்பின் மும்முரமும், உற்பத்தித் திறனும் குறிப்பிட்டதாய் இருக்கையில், வேலையானது சமுதாயத்தின் உடல்திறனுள்ள உறுப்பினர்கள் அனைவரிடையிலும் மேலும் மேலும் சமமாய்ப் பிரிக்கப்படுவதற்கேற்ப, இயற்கையால் அவசியமாக்கப்படும் உழைப்பின் சுமையை சமுதாயத்தின் குறிப்பிட்ட ஒரு அடுக்கு தன் தோளிலிருந்து பிறிதொரு அடுக்கின் தோளுக்கு மாற்ற மேலும் மேலும் சக்தியற்றதாக்கப்படுவதற்கேற்ப, பொருளுற்பத்திக்காக சமுதாயம் செலவிடவேண்டிய நேரம் மேலும் மேலும் குறைந்து செல்லும்; ஆதலால் தனியாள் அறிவுத் துறையிலும் சமூகத் துறையிலும் தடையின்றி வளர்ச்சி பெறுவதற்குக் கிடைக்கும் நேரம் மேலும் மேலும் கூடிச் செல்லும். ஆனால், வேலை..நாள் இப்படிக் குறுக்கப்படுவதற்கு ஓர் இறுதி வரம்பு உண்டு; உழைப்பு சகலருக்குமான ஒன்றாகும் போது இந்த வரம்பு வரப்பெறுகிறது. முதலாளித்துவ சமுதாயத்தில், பெருந்திரளான மக்களின் ஆயுட்காலம் முழுவதையும் உழைப்பு நேரமாக மாற்றுவதன் மூலம், ஒரு வர்க்கத்துக்கு வெட்டிப் பொழுது கிடைக்க வழி செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment