Friday, November 8, 2013

பகுதி 4. அத்தியாயம் 15: இயந்திர சாதனமும் நவீனத் தொழில் துறையும். பிரிவு 9 மற்றும் 10

தொழிற்சாலைச் சட்டங்கள். துப்புரவு, கல்வி பற்றிய அவற்றின் சரத்துக்கள். இங்கிலாந்தில் அவற்றின் பொதுவான விரிவாக்கம்.

இச்சட்டங்களில் துப்புரவு தொடர்பான சரத்துகள் மிகவும் சொற்பமே --- இந்த சரத்துக்களின் சொல்லாட்சியும் கூட முதலாளிகள் அவற்றைக் கடைபிடிக்காமல் ஏய்ப்பதற்கே தோதாய் உள்ளன.

இந்த சரத்துக்களின்படி, தொழிலதிபர்கள் தங்களது தொழிலாளர்களின் கைகால்களைக் காத்திடும் சாதனங்களுக்கென சிறிதளவே செலவு செய்தாக வேண்டும் என்றாலும், இவற்றை வெறித்தனமாக எதிர்த்தது தடையில்லா வாணிபக் கொள்கையினரது கோட்பாட்டின் லட்சணத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறது. இந்த கோட்பாடு என்ன சொல்கிறது என்றால், முரண்பட்டு மோதுகிற நலன்களைக் கொண்ட சமுதாயத்தில் ஒவ்வொரு தனியாளும் தனது தனிப்பட்ட நன்மை ஒன்றையே நாடுவதன் மூலம் தவிர்க்க முடியாமலே பொது நலத்தை முனேற்றுகிறாராம்.

இயந்திர சாதன வரலாறு இதுவரை கண்டிராத அளவுக்கு எத்தனையோ விபத்துக்கள் எத்தனையோ வழிகளில் ஏற்படுகின்றன. 

இவை ஒவ்வொன்றையும், சில ஷில்லிங் செலவிட்டு மிகவும் சாமானிய ஏற்பாடுகளைச் செய்திருந்தால், தடுத்திருக்கலாம்.

சுத்தத்தையும் சுகாரத்தையும் பராமரிப்பதற்கான சாமானிய ஏற்பாடுகளையும் கூட பாராளுமன்றச் சட்டங்களின் மூலமே திணிக்க வேண்டி இருக்கிறதென்றால், முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையின் தன்மை பட்டவர்த்தனமாகிறதல்லவா? 

சுவாசிப்பதற்கு 500 கன அடி இடவசதி அவசியம். இதனை மூலதனத்திடமிருந்து பெறமுடியவில்லை என்று துப்புரவு அதிகாரிகள், தொழில் துறை விசாரணை ஆணையர்கள், தொழிற்சாலை ஆய்வாளர்கள் எல்லோருமே ஓயாமல் திரும்ப திரும்ப சொல்கிறார்கள். மூலதனம் என்று ஒன்று இருப்பதற்கு தொழிலாளர்களிடையே காச நோயும், ஏனைய நுரையீரல் நோய்களும் நிலவுவது அத்தியாவசிய நிலைமையாகும் என்று இவர்களெல்லாம் பறைசாற்றுகிறார்கள் என்பதே இதன் பொருள்.

தொழிற்சாலைச் சட்டத்தில் கல்வி சம்பந்தமான சரத்துக்கள் மொத்தத்தில் போதாக்குறையானவை என்றாலும் குழந்தைகளை வேலைக்கமர்த்துவதற்கான இன்றியமையா நிபந்தனையாக ஆரம்பக் கல்வியைக் குறிப்பிடுகின்றன. 

முறையாகப் பள்ளி சென்று படிக்கும் குழந்தைகளின் கல்வியில் பாதியளவே கிடைத்தது என்றாலும், தொழிற்சாலைக் குழந்தைகள் அதே அளவும் பல சந்தர்ப்பங்களில் இன்னும் அதிகமாகவும் கற்றுக் கொண்டார்கள் என்று தொழிற்சாலை ஆய்வாளர்கள் பள்ளி ஆசிரியர்களை விசாரித்து சீக்கிரமே கண்டறிந்தார்கள்.   

ஆங்கிலேய எழுத்தச்சுத் தொழிலில் பழகு தொழிலாளர்களை முழு திறனுள்ள அச்சிடுவோராக மலர பயிற்சி அளிக்கப்பட்டது. படிக்கவும் எழுதவும் தெரிந்திருப்பது அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் தொழிலின் தேவையாக இருந்தது. அச்சு இயந்திரம் வந்ததும் இதெல்லாம் மாறிப் போயிற்று. அதில் வேலை செய்வோர் இருவகைப்பட்டவர்கள்; வயது வந்த இயந்திரப் பொறுப்பாளர்கள் ஒரு வகை; இயந்திரத்தின் அடியில் காகிதத் தாள்களைப் பரப்புவது, அல்லது அச்சிடப்பட்ட தாள்களை அதிலிருந்து எடுக்கும் அலுப்பு தட்டும் வேலையைச் செய்யும் சிறுவர்கள் இன்னொரு வகை. 

அவர்களது கூலி  சிறுவர்களுக்கு சற்று அதிகமே என்றாலும், அவர்கள் வளர வளர அதற்கேற்ற விகிதத்தில் அதிகமாவதில்லை. குழந்தைக்குரிய இந்த வேலைக்கு லாயக்கில்லாத அளவுக்கு வயதானதுமே அச்சிடும் நிறுவனங்களிலிருந்து அவர்கள் நீக்கப்படுகிறார்கள்.

கைத்தொழிலும் பட்டறைத் தொழிலும் சமுதாயப் பொருளுற்பத்தியின் பொதுவான அடிப்படையாக இருக்கும் வரை, உற்பத்தியாளரைப் பிரத்தியேகமாக ஒரு கிளைக்குக் கீழ்பட்டவராக்குவது, அவரது வேலையின் பன்முகத் தன்மையைச் சிதைப்பது வளர்ச்சி ஏணியில் அவசியமான ஒரு படியாகும். 

மாற்றத்துக்கு இங்குமங்கும் காரணமாகிற ஒன்றே ஒன்று உழைப்புக் கருவிகளில் படிப்படியாக ஏற்படும் மாறுதலே. ஆனால் இந்த உழைப்புக் கருவிகளின் வடிவமும் கூட, அனுபவம் வாயிலாய் திட்டவட்டமாக நிலைப் படுத்தப்பட்ட பின், மாறுதலுக்கு வாய்ப்பின்றி கெட்டிப்பட்டு விடுகிறது.

மனிதர்களிடமிருந்து அவர்களது சமுதாயப் பொருளுற்பத்தி நிகழ்முறையை மறைத்த மூடுதிரையை, தன்னியல்பாய்ப் பிரிந்த பல்வேறு உற்பத்திக் கிளைகளையும் வெளியாருக்கு மட்டுமல்லாமல், தீட்சை பெற்றவர்களுக்கும் கூட புரியா புதிர்களாக்கிய மூடுதிரையை நவீனத் தொழில் துறை கிழித்தெறிந்தது. அது கடைப்பிடித்த கோட்பாடு (ஒவ்வொரு நிகழ்முறையையும் அதிலடங்கிய இயக்கங்களாக --- அவற்றை மனிதக் கரத்தால் நிறைவேற்றும் சாத்தியப்பாட்டைக் கருதாமலே --- பகுப்பதென்ற கோட்பாடு) தொழில் நுட்பவியல் என்ற நவீன கால விஞ்ஞானத்தைத் தோற்றுவித்தது.

ஒரு நிகழ்முறையின் நடப்பு வடிவத்தை நவீனத் தொழில் துறை இறுதியான ஒன்றாகக் கருதிச் செயல்படுவதில்லை. எனவே சென்ற உற்பத்தி முறைகளெல்லாம் சாராம்சத்தில் மாற்றத்துக்கு எதிரானவையாய் இருக்க, நவீனத் தொழில் துறையின் தொழில் நுட்ப அடித்தளம் புரட்சிகரமானதாய் இருக்கிறது.  இயந்திர சாதனத்தின் மூலமும் இரசாயன நிகழ்முறைகளின் மூலமும், இதர பல வழிகளிலும் அது உற்பத்தியின் தொழில் நுட்ப அடித்தளத்தில் மட்டுமல்லாமல், தொழிலாளியின் செயற்பாடுகளிலும் உழைப்பு நிகழ்முறையின் சமூக இணைவுகளிலும் கூட ஓயாமல் மாற்றங்களை உண்டாக்கிய வண்ணமுள்ளது. இவ்வழியில் அது சமுதாயத்தில் நிகழும் உழைப்புப் பிரிவினையையும் புரட்சிகரமான முறையில் மாற்றுகிறது.

ஆயினும் அதன் முதலாளித்துவ வடிவத்தில், பழைய உழைப்புப் பிரிவினையை அதன் கெட்டிப்பட்ட தனித் திறப்பாட்டுகளுடன் கூட அப்படியே வார்ப்பிடுகிறது.

மறுபுறம் வேலை மாறுபாட்டை உற்பத்தியின் ஓர் அடிப்படை விதியாக ஏற்க நவீன தொழில் துறை கட்டாயப்படுத்துகிறது. மாறுபட்ட வேலைக்கு தொழிலாளி தகுதி பெற்றிருப்பதையும், அவரது மாறுபட்ட திறப்பாடுகள் கூடுமான அளவுக்கு வளர்ச்சியடைவதையும் அவ்வாறே அடிப்படை விதியாக ஏற்க வேண்டியதாகிறது. இந்த விதியின் முறையான செயல்பாட்டுக்கு உற்பத்தி முறையைத் தகவமைப்பதென்ற பிரச்சினை சமுதாயத்துக்கு ஜீவ மரணப் பிரச்சினையாகிறது. இன்றைய நுணுக்கத் தொழிலாளிக்கு பதிலாய், நவீனத் தொழில் துறையானது முழு வளர்ச்சி பெற்ற தனி மனிதனை தோற்றுவிக்குமாறு சமுதாயத்தை மெய்யாகவே கட்டாயப்படுத்துகிறது.

தொழிலாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்துக்கு வரும் போது ... தவிர்க்க முடியாமல் வந்தே திரும் .... தத்துவம், நடைமுறை இரு விதத்திலுமான தொழில் நுட்ப போதனை தொழிலாளி வர்க்கப் பள்ளிகளில் அதற்குரிய இடத்தைப் பெறும் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது. பழைய உழைப்புப் பிரிவினையை ஒழிப்பதே நுரைத்தெழுகிற இத்தகைய புரட்சிகர செயற்பாடுகளின் இறுதி இலக்கு.

குறிப்பிட்ட உற்பத்தி வடிவத்தில் உள்ளார்ந்துள்ள பகைமைகளின் வரலாற்று வளர்ச்சியே அந்த உற்பத்தி வடிவம் கலைக்கப்பட்டு புதிய வடிவம் நிறுவப்படுவதற்குள்ள ஒரே வழியாகும் என்பது கைவினை உலகின் மணிவாசகம்.           

நவீன தொழில் துறையானது உற்பத்தி நிகழ்முறையில் ஒரு முக்கிய பங்கை வீட்டு வட்டத்துக்கு வெளியே மாதர்களுக்கும், இளம் வயதினருக்கும், இரு பாலான குழந்தைகளுக்கும் ஒதுக்குவதன் மூலம், குடும்பம் மற்றும் ஆண்‍-பெண்  உறவுகளின் இன்னுமுயர்ந்த வடிவத்துக்கான புதிய பொருளாதார அடித்தளத்தைப் படைக்கிறது.

1987 ஆம் வருட சட்ட நெறியில் நமக்கு எடுப்பாய்த் தெரிவது என்னவென்றால்: ஒரு புறம், முதலாளித்துவச் சுரண்டலின் அத்துமீறல்களுக்கு எதிராக இவ்வளவு அசாதாரண நடவடிக்கைகளை இவ்வளவு விரிவான முறையில், கோட்பாட்டளவில் ஏற்க வேண்டிய அவசியத்துக்கு ஆளும் வர்க்கங்களின் பாராளுமன்றம் உள்ளாகிறது; மறு புறம், அந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துகையில், அதனிடம் தயக்கமும், காழ்ப்புணர்ச்சியும், கெடுமதியும் காணப்படுகின்றன.  

1842 ஆம் வருட சுரங்க வேலைச் சட்டம் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும், பெண்களையும் சுரங்கங்களில் தரைக்கட்டியில் வேலை வாங்குவதற்கு தடை விதிப்பதுடன் நின்று கொண்டது

1866 "சுரங்கங்கள் பற்றிய பொறுக்குக் குழுவின் அறிக்கை ஐந்தே வரிகளில் முடித்து விடுகிறது. அது கூறுவதெல்லாம் இதுதான்: குழு சொல்வதற்கு ஒன்றுமில்லையாம்! மேலும் சில சாட்சிகளை விசாரிக்க வேண்டுமாம்.

(இப்படியாக பல்வேறு சட்டங்கள் பற்றி பல்வேறு விவரங்கள் தரப்பட்டுள்ளன)

நவீனத் தொழில் துறையும் விவசாயமும்

இயந்திர சாதனத்தின் உபயோகத்தால், ஆலைத் தொழிலாளிக்கு ஏற்படுவது போல் விவசாயத்தில் அவ்வளவாக உடலுக்குத் தீங்கு விளவதில்லை; ஆனால் உழைப்பாளர்களை நீக்கி விட்டு அவர்களுக்கு பதிலியாவதில் இயந்திர சாதனத்தின் செயல் அதிகம் தீவிரமாய் உள்ளது. குறைந்த எதிர்ப்பையே சந்திக்கிறது.

குறிப்பிட்ட காலத்துக்கு மண்ணின் வளத்தை அதிகமாக்குவதிலான முன்னேற்றம் எல்லாமே அந்த வளத்துக்குரிய நிலையான ஆதாரங்களைக் கெட்டழியச் செய்யும் வழியிலான முன்னேற்றம்தான். ஒரு நாடு எவ்வளவுகெவ்வளவு நவீனத் தொழில் துறையை அடிப்படையாகக் கொண்டு ---- உதாரணமாக அமெரிக்க ஐக்கிய நாட்டைப் போல் --- தன் வளர்ச்சியைத் தொடங்குகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அதிவேகமாய் இந்த அழிவு நிகழ்கிறது. 

No comments:

Post a Comment