Thursday, October 31, 2013

பகுதி 4. அத்தியாயம் 15: இயந்திர சாதனமும் நவீனத் தொழில் துறையும். பிரிவு 8

பட்டறைத் தொழிலிலும், கைத்தொழில்களிலும், வீட்டுத் தொழிலிலும் நவீனத் தொழில் துறை ஏற்படுத்திய புரட்சி 

கைத்தொழிலையும் உழைப்புப் பிரிவினையையும் அடிப்படையாகக் கொண்ட கூட்டு-வேலையின் விழ்ச்சி

தனியொரு இயந்திரம் கூட்டு-வேலையின் அல்லது பட்டறைத் தொழிலின் இடத்தை மேற்கொள்ளும் போது, அதுவே கைவினைத் தன்மையுள்ள தொழில் ஒன்றின் அடிப்படையாகப் பயன்படலாம். ஆயின், இப்படிக் கைத்தொழில்களுக்குத் திரும்பிச் செல்வது ஆலைத் தொழிலுக்கு மாறிச் செல்வதேயாகும். வழக்கமாகவே, மனிதத் தசையாற்றலுக்குப் பதிலாக நீராவி அல்லது நீர் போன்ற யாந்திரிக இயக்குவிசை இயந்திரங்களை ஓட்ட முற்பட்டதும் ஆலைத்தொழில் உதயமாகிறது.

இங்குமங்குமாக, ஆனால் எப்படியும் சிறிது காலத்துக்கு மட்டுமே ஒரு தொழிலை இயந்திரவிசை கொண்டு சிறுவீதத்தில் நடத்திச் செல்லலாம். கவன்ட்ரி பட்டு நெசவுத் தொழிலில் "குடிசைத் தொழிற்சாலைகள்" என்ற பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.

இந்த தொழிற்சாலைகளுக்கும் முறையான தொழிற்சாலைக்கும் இடையிலான போராட்டம் 12 ஆண்டுகளுக்கும் அதிகமாக நீடித்தது. இந்தப் பரிசோதனை 300 குடிசைத் தொழிற்சாலைகளின் அழிவில் போய் முடிந்தது.

பட்டறைத் தொழில்வழிப் பண்ட உற்பத்தி அடுக்கடுக்கான நிகழ்முறைகளின் தொடரால் அன்றி அதிக எண்ணிக்கையிலான தொடர்பில்லாத நிகழ்முறைகளால் ஆனதாக இருக்கும் சந்தர்ப்பங்களில் ஆலைத் தொழிலாகும்  மாற்றம் மிகக் கடினமானது.

ஆயினும் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் 6 தனித்தனிப் பணிகளை ஒரே நேரத்தில் தானியங்கு வழியில் ஆற்றிய ஓர் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.

பட்டறைத் தொழில் மீதும் வீட்டுத் தொழில்கள் மீதும் ஆலைத் தொழிலின் பிரதிபலிப்பு

ஆலைத் தொழிலின் வளர்ச்சியோடும், அதனோடு சேர்ந்து வரும் பயிர்த்தொழிற் புரட்சியோடும் கூட, மற்றெல்லாத் தொழிற் கிளைகளிலும் நடைபெறும் உற்பத்தி விரிவடைவது மட்டுமல்லாமல், தன்மையிலும் மாற்றமடைகிறது.

இயந்திர சாதனம் முதலில் ஒரு நுணுக்க நிகழ்முறைக்கும் அடுத்து இன்னொரு நிகழ்முறைக்கும் பயன்பட்டு, பட்டறைத் தொழிலினுள் நுழைகிறது.  இவ்வாறு, பழைய உழைப்புப் பிரிவினையின் அடிப்படையிலான ஒழுங்கமைப்பாகிய பட்டறைத் தொழில்களின் திண்மையான ஒழுங்கமைப்பு குலைந்து போய் இடையறாத மாற்றங்களுக்கு ஆட்படுகிறது.

நவீன வீட்டுத் தொழில் எனப்படுவதற்கும், பழயை முறையிலான வீட்டுத் தொழிலுக்கும் பெயரைத் தவிரப் பொதுவானது ஒன்றுமில்லை. அந்த பழைய முறையிலான தொழில் இப்போது தொழிற்சாலையின், பட்டறையின், அல்லது பண்டகசாலையின் ஒரு வெளிப் பிரிவாக மாற்றப்பட்டிருக்கிறது. மூலதனத்தால் ஓரிடத்தில்  பெருந்திரளாகக் குவிக்கப்பட்டு, நேரடியாக அதன் கட்டளைக்குட்படுகிற ஆலைத் தொழிலாளர்கள், பட்டறைத் தொழிலாளர்கள், கைத்தொழிலாளர்கள் ஆகியோரன்னியில், கண்ணுக்குத் தெரியா இழைகளின் மூலம் இன்னொரு பட்டாளத்தையும் அது இயக்குகிறது. வீட்டுத் தொழில்களில்  ஈடுபட்டுள்ள தொழிலாளர்களது பட்டாளம் இது.

மலிவான, முதிர்ச்சியுறாத உழைப்புச் சக்தியைச் சுரண்டுவது, முறையான தொழிற்சாலையில் நடப்பதை விட நவீன பட்டறைத் தொழிலில் இன்னும் அதிக வெட்கக்கேடான முறையில் நடைபெறுகிறது.

மாதர்களும் குழந்தைகளும் ஈவிரக்கமற்ற விதத்தில் நச்சுப் பொருட்களின் அல்லது தீங்கிழைக்கும் பொருட்களின் பாதிப்புக்கு ஆளாக்கப்படுகின்றனர். இது வீட்டுத் தொழிலில் இன்னும் அதிகம்.

நவீனத் தொழில் துறையாலும் விவசாயத்தாலும் "தேவையற்றோர்" ஆக்கப்படும் மக்கள் திரள்களின் கடைசிப் புகலிடங்களான இந்த வீட்டுத் தொழில்களில் வேலைக்கான போட்டி உச்சமடைகிறது.

குறிப்பிட்ட தொழிற் கிளையில் உழைப்பின் சமுதாய உற்பத்தித் திறனும் நிகழ்முறைகளின் ஒன்றிணைப்புக்கான தொழில் நுட்ப அடிப்படையும் எந்த அளவுக்குக் குறைவாக வளர்ச்சி அடைந்துள்ளனவோ, அந்த அளவுக்கு அதிகமாக இச்சிக்கனம் இக்கிளையில் தனது பகைநிலையையும் கொலைத் தன்மையையும் வெளிக்காட்டுகிறது.

நவீனப் பட்டறைத் தொழிலும் வீட்டுத் தொழிலும் நவீன இயந்திரத் தொழிலாய் மாறிப் போதல். அதொழில்களுக்குத் தொழிற்சாலைச்  சட்டங்களைப் பிரயோகிப்பதால் இப்புரட்சி துரிதமாதல்

மாதர்கள், குழந்தைகள் ஆகியோரின் உழைப்பை ஒவ்வாத முறையில் பிரயோகித்தும், வேலை செய்வதற்கும் வாழ்வதற்கும் வேண்டிய இயல்பான நிலைமை ஏதுமில்லாத படி சூறையிட்டும், மிகை வேலையையும் இரவு வேலையையும் மிருகத்தனமான அளவுக்கு சுமத்தியும், இப்படி உழைப்புச் சக்தியை மலிவாக்கிச் செல்லும் வழியில் தாண்டிச் செல்ல முடியாத இயற்கைத் தடைகள் இறுதியில் குறுக்கிடுகின்றன. இதே குறுக்கீடுதான் இந்த வழிமுறைகளைக் கொண்டு சரக்குகளை மலிவாக்கிச் செல்வதற்கும், பொதுவாக முதலாளித்துவச் சுரண்டலுக்கும் ஏற்படுகிறது. இப்படியொரு நிலை இறுதியில் ஏற்பட்டதும் -- இது ஏற்பட பல்லாண்டு காலமாகிறது -- இயந்திர சாதனத்தைப் புகுத்த வேண்டிய தருணம் பிறக்கிறது; சிதறிக் கிடக்கும் வீட்டுத் தொழில்களும், மேலும் பட்டறைத் தொழில்களும் கூட இத்தருணம் முதல் அதிவேகமாய் ஆலைத் தொழில்களாக மாற வேண்டியதாகிறது.

இயந்திரத் தொழிலாலும், மேம்பட்ட பயிற் தொழிலாலும் "விடுவிக்கப்பட்ட" ஆட்கள் மலிவான மானுடப் பொருளாய் அமைகின்றனர். வேண்டல் அதிகரிக்கையில் நிறைவு செய்வதற்கு ஓர் உழைப்புப் பட்டாளம் தயார் நிலையில் இருப்பது முதலாளிக்கு அவசியம் என்பதே இவ்வகைப் பட்டறைத் தொழில்கள் தோன்றுவதற்கு முக்கியக் காரணம்.

உபரி-மதிப்பு உற்பத்தியாவதற்கும், உற்பத்திப் பண்டங்கள் மேலும் மேலும் மலிவாவதற்கும் முக்கிய காரணமாய் இருந்ததும் இருப்பதும் என்னவென்றால், உயிர் விடாமல் காலம் தள்ளும் அவல வாழ்வுக்கு வேண்டிய குறைந்த பட்சத்துக்கு மேல் அதிகமாகாத கூலியே தரப்படுவதும், மனித உயிரமைப்பு தாளக் கூடிய உச்ச அளவுக்கு வேலை நேரம் நீட்டிக்கப்படுவதும்தான். சரக்குகளாக மாற்றப்பட்ட மனித வியர்வையும் மனித இரத்தமும் இவ்வளவு மலிவாக இருந்ததால்தான், சந்தைகள் இடையறாது விரிவடைந்தன, தொடர்ந்து நாள்தோறும் விரிவடைகின்றன.

இறுதியாக ஓர் எல்லை வந்தடையப் பெற்றது. பழைய வழிமுறைக்கான அடிப்படை விரிவடைந்து கொண்டிருந்த சந்தைகளுக்கும், இன்னும் அதிவேகமாய் முதலாளிகளிடையே விரிவடைந்து கொண்டிருந்த போட்டிக்கும் இப்போது போதுமானதாயில்லை. இயந்திர சாதனத்தின் பிரவேசத்துக்குரிய தருணம் வந்துவிட்டது.

வீட்டுத் தொழில் உழைப்பாளர்களின் கூலியுடன் ஒப்பிடுமிடத்து இயந்திர உழைப்பாளர்களின் கூலி உயர்கிறது. சற்று மேலான நிலைக்குரிய கைவினைஞர்களின் கூலியும் இயந்திரம் அவர்களோடு போட்டியிடுவதால் சரிந்து விடுகிறது.

லண்டனில் கடந்த பத்தாண்டுகளில் பட்டினிச் சாவின் பயங்கர அதிகரிப்பு இயந்திர தையலின் பெருக்கத்தோடு கைகோத்துச் செல்கிறது.


ஒரு புறம், பெரிய பட்டறைகளில் பல இயந்திரங்கள் ஒன்று குவிக்கப்படுவது நீராவிச் சக்தியை உபயோகிப்பதற்கு வழி செய்கிறதென்றால், மறு புறம் நீராவிக்கும் மனிதத் தசையாற்றலுக்கும் இடையிலான போட்டி பெரிய தொழிற்சாலைகளில் தொழிலாளர்களும் இயந்திரங்களும் ஒன்று குவிவதை விரிவுபடுத்துகிறது.

ஒரு புறம், கால அளவு, நிறுத்தங்கள், ஆரம்பம், முடிவு ஆகியவை தொடர்பாக வேலை-நாளைக் கட்டாயமாக ஒழுங்குபடுத்துவது, குழந்தைகளுக்கான அஞ்சல்முறை கட்டாயமாக ஒழுங்குபடுத்துவது, குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட எந்த குழந்தையையும் சேர்த்துக் கொள்ளாமை முதலானவை கூடுதலான இயந்திர சாதனத்தையும் இயக்குவிசை என்ற விதத்தில் தசையாற்றலின் இடத்துக்கு நீராவியைக் கொணர்வதையும் அவசியமாக்குகின்றன. மறு புறம் பொதுவில் பயன்படுத்தப்படும் உலைகள், கட்டடங்கள் போன்ற உற்பத்திச் சாதனங்கள் கால இழப்பை ஈடு செய்யும் பொருட்டு அதிகமாக்கப்படுகின்றன. கூடுதலாய் மூலதனச் செலவீடு அவசியமாகி விடுகிறது.    

ஆலைத் தொழிலின் நிலவலுக்கான அடிப்படை நிபந்தனை குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அளவு சரக்கின், அல்லது குறிப்பிட்ட விளைபயனின் உற்பத்தியாகும்.

கால அளவு தொடர்பாக வேலை-நாளுக்குக் கட்டுத் திட்டமில்லாத போதெல்லாம், இரவு வேலையால் தங்குதடையின்றி மனித உயிர் நசியும் போதெல்லாம், நிலைமையை மேம்படுத்துவதற்கு வேலையின் இயல்பு ஏற்படுத்துகிற சிறு தடங்கலும் கூட இயற்கையாய் அமைந்த நிரந்தரத் தடையாகக் கருதப்படும் நிலை விரைந்து உருவாகிறது. நச்சுக் கிருமிகளை ஒழித்துக் கட்டும் நஞ்சுபோல, தொழிற்சாலைச் சட்டம் இத்தகைய நிரந்தர தடைகளை நிர்மூலமாக்குகிறது.

தொழிற்சாலைச் சட்டம் (1864) நேரத்தை மிச்சப்படுவதை அவசியமாக்கியது. எனவே புதிய இயந்திரங்கள் கண்டுபிடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படச் செய்தது.

தொழிற்சாலைச் சட்டங்கள் பட்டறைத் தொழிலை ஆலைத் தொழிலாக மாற்றுவதற்கு வேண்டிய பொருளாயதக் கூறுகளைச் செயற்கை முறையில் கனியச் செய்கின்றன என்றாலும், இச்சட்டங்கள் அதேபோது முதலீட்டை அதிகமாக்க செய்யவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி, சிறு அதிபர்களின் வீழ்ச்சியையும், மூலதனக் குவிப்பையும் (concentration of capital ) துரிதப்படுத்துகின்றன.  

இந்த வேலை நேர முறைப்படுத்தல் அறிவுவழிப்பட்ட முதற்கடிவாளமாயிற்று. கடற் பயணத்தின் வளர்ச்சியும், பொதுவாக தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியும் உண்மையில் வியாபாரப் பருவம் சார்ந்த வேலைக்கு ஆதாரமாய் இருந்த தொழில் நுட்ப அடித்தளத்தை தகர்த்தன. முன்னிலும் சமாளிக்க இயலாதவை என்று சொல்லப்பட்ட ஏனைய இடர்பாடுகள் எல்லாம் பெரிய பெரிய கட்டடங்களாலும், கூடுதலான இயந்திர சாதனங்களாலும் வேலை செய்யும் தொழிலாளர்களின் தொகைப் பெருக்கத்தாலும், இவையெல்லாம் சேர்ந்து மொத்த வர்த்தக முறையில் ஏற்படுத்தும் மாற்றங்களாலும் ஒழிந்து போகின்றன.

உழைப்பு நேரத்தைக் கட்டாயமாக முறைப்படுத்துவதற்கான "பாராளுமன்றப் பொதுச் சட்டத்தின் நெருக்குதலின் விளைவாக அல்லாமல் மூலதனம் இவ்வாறான மாற்றங்களுக்கு இணங்க ஒரு போதும் மனம் ஒப்புவதில்லை; அதன் பிரதிநிதிகளே திரும்பத் திரும்ப ஒப்புக் கொள்ளும் உண்மை இது.

No comments:

Post a Comment