Friday, October 11, 2013

பகுதி 4. அத்தியாயம் 15: இயந்திர சாதனமும் நவீனத் தொழில் துறையும். பிரிவு 4

தொழிற்சாலை

கருவியோடு கூட, அதனைக் கையாள்வதில் தொழிலாளி பெற்றுள்ள‌ தேர்ச்சியும் இயந்திரத்துக்குப் போய்ச் சேருகிறது. கருவியின் திறன்கள், மனித உழைப்புச் சக்தியுடன் பிணைந்த தடைக் கட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுகின்றன.

பட்டறைத் தொழிலின் சிறப்பியல்பாய்த் திகழும் தனித் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களின் படிவரிசைக்குப் பதிலாக, தானியங்கித் தொழிற்சாலையில், இயந்திரங்களின் கவனிப்பாள‌ர்கள் செய்ய வேண்டியிருக்கும் ஒவ்வொரு வகை வேலையையும் ஒரே நிலைக்குச் சமப்படுத்திக் குறைக்கும் போக்கு தலைதூக்குகிறது.

ஒவ்வொரு துறையிலும் ஒருசேர அமைந்த ஒரே மாதிரியான அநேக இயந்திரங்களில் அவர்கள் வேலை செய்கின்றனர். எனவே, அவர்களது கூட்டு-வேலை சாமானிய வகைப்பட்டதேயாகும்.

இயந்திரங்களை வைத்து வேலை செய்கிற தொழிலாளர்களாகவும், இந்தத் தொழிலாளர்களின் வெறும் சேவகர்களாகவும் (மிகப் பெரும்பாலும் குழந்தைகள்) பிரிக்கப்படுவதே அடிப்படைப் பிரிவினையாகும்.

இவ்விரண்டு பிரதான பிரிவுகளோடு கூட, பொறியாளர்கள், இயந்திரக் கம்மியர்கள், பொருத்துநர்கள் போன்ற எண்ணிக்கை நோக்கில் முக்கியமற்ற ஆட்களின் பிரிவு ஒன்றும் உள்ளது. மேம்பட்ட தொழிலாளர் பிரிவு இது; இவர்களில் சிலர் விஞ்ஞானக் கல்வி கற்றவர்கள்; மற்றவர்கள் ஒரு தொழிலுக்கென்றே வளர்க்கப்பட்டவர்கள். இந்தப் பிரிவு ஆலைத் தொழிலாளர் வர்க்கத்துடன் சேர்த்து கணக்கிடப்பட்டாலும், அதிலிருந்து வேறுபட்டதாகும். இந்த உழைப்புப் பிரிவு முற்றிலும் தொழில் நுட்ப வழிப்பட்டதே.

பட்டறைத் தொழிலில் நடப்பது போல் குறிப்பிட்ட பணிக்கு எப்போதும் குறிப்பிட்ட ஆளையே ஒதுக்கி இந்த பங்கீட்டை இறுகச் செய்வது, இயந்திர சாதனத்தை ஈடுபடுத்தத் தொடங்கிய பின் அவசியமற்றதாகிவிடுகிறது. அமைப்பு முழுவதன் இயக்கமும் தொழிலாளியிடமிருந்து அல்லாமல் இயந்திர சாதனத்திடமிருந்தே தொடங்குவதால் வேலை இடையே நிற்காமலே எந்த நேரத்திலும் ஆள் மாற்றம் செய்ய முடியும்.

ஒரே கருவியைக் கையாள்வதன் ஆயுட்காலத் தனித்திறன் இப்போது ஒரே இயந்திரத்தில் பணிபுரியும் ஆயுட்காலத் தனித்திறனாகிறது. தொழிலாளியைக் குழந்தைப் பருவம் முதற்கொண்டே நுணுக்க இயந்திரமொன்றின் பகுதியாக மாற்றியமைத்திடும் விதத்தில் இயந்திர சாதனம் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது. இவ்விதத்தில் அவரது மறுவுற்பத்தியின் செலவுகள் கணிசமாகக் குறைக்கப்படுவது மட்டுமல்ல; வேறு வழியின்றி அவர் முதலாளியைச் சார்ந்து வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது.

கைத்தொழில்களிலும், பட்டறைத் தொழிலிலும் தொழிலாளி கருவியைப் பயன்படுத்துகிறார்; தொழிற்சாலையில் இயந்திரம் அவரைப் பயன்படுத்துகிறது. அங்கே உழைப்புக் கருவியின் இயக்கங்கள் அவரிடமிருந்து ஆரம்பிக்கின்றன; இங்கே இயந்திரத்தின் இயக்கங்களை அவர் பின் தொடரவேண்டும். பட்டறைத் தொழிலில் தொழிலாளர்கள் உயிருள்ள இயங்கமைப்பின் அங்கங்களாவர். தொழிற்சாலையில் உயிரற்ற இயங்கமைப்பு தொழிலாளியைச் சாராமல் சுயேச்சையாய் இருப்பதையும், அதற்குத் தொழிலாளி ஒட்டுவால் ஆகி விடுவதையும் காண்கிறோம்.

தொழிற்சாலையில் செய்யும் வேலை, நரம்பு மண்டலத்தை மிக அதிகமாய் சோர்வுறச் செய்து விடுகிறது; அதே போது தசைநார்களின் பல்வகை இயக்கத்தை ஒழித்துவிடுகிறது. உடல் நடவடிக்கை, அறிவு நடவடிக்கை இரண்டிலுமே அணுவளவும் சுதந்திரம் இல்லாமல் செய்துவிடுகிறது. உழைப்பை இலகுவாக்குவதே கூட ஒரு விதமான சித்திரவதையாகிவிடுகிறது; ஏனெனில் இயந்திரம் தொழிலாளியை வேலையிலிருந்து விடுவிப்பதில்லை; மாறாக வேலையை சற்றும் சுவையற்றதாக்கி, சலிப்புறச் செய்கிறது. உழைப்பு நிகழ்முறை மட்டுமன்று, உபரி மதிப்பைப் படைக்கும் நிகழ்முறையும் ஆகும் என்பதால் எல்லா வகை முதலாளித்துவப் பொருளுற்பத்திக்கும் பொதுவான தன்மை ஒன்றுண்டு: தொழிலாளி உழைப்புக் கருவிகளை வேலை வாங்குவதில்ல, உழைப்புக் கருவிகள் தாம் தொழிலாளியை வேலை வாங்குகிறது.

அறிவு தொடர்பான உற்பத்தித் திறன்களை கையுழைப்பிலிருந்து பிரித்து, அத்திறன்களை உழைப்பின் மீதான மூலதனத்தின் சக்தியாக மாற்றும் போக்கு இயந்திர சாதனத்தை அடித்தளமாய் கொண்டு எழுந்துள்ள நவீனத் தொழில் துறையால் இறுதியாக நிறைவு செய்யப்படுகிறது.

தொழிற்சாலை இயங்கமைப்பில் உருக்கொண்டிருப்பதும் அவ்வியங்கமைப்புடன் சேர்ந்து "ஆலையதிபரின்" சக்தியாக அமைவதுமான விஞ்ஞானம், பிரம்மாண்டமான பௌதிகச் சக்திகள், உழைப்பின் பெருந்திரள் ஆகியவற்றின் முன்னால் தனிப்பட்ட சாமானிய ஆலைத் தொழிலாளி ஒவ்வொருவரின் தனித்தேர்ச்சியும் சிறு துகள் அளவினதாய் தேய்ந்து கண்ணிற்படாமல் போயிற்று. 

உழைப்புக் கருவிகளின் சீரான இயக்கத்துக்குத் தொழிலாளியைத் தொழில் நுட்ப வழியில் கீழ்ப்படுத்துவதன் மூலம் உழைப்பாளி மக்களைத் தொழிலாளர்களாகவும், மேற்பார்வையாளர்களாகவும் -- ஒரு தொழில் துறைப் பட்டாளத்தின் சாதாரணச் சிப்பாய்களாகவும், சார்ஜெண்ட்டுகளாகவும் - - பிரிக்கிறது.

தொழில் துறைச் சமரில் கொல்லப்பட்டோர், காயமடைந்தோர் பட்டியலை பருவ கால முறைப்பாட்டுடன் இவியந்திர சாதனங்கள் வெளியிடுகின்றன ... செயற்கை வெப்ப நிலையை உயர்த்துவதாலும், தூசி மண்டிய காற்றாலும், செவிப்பறை கிழியும்படியான ஒலியாலும் சகல புலனுறுப்புகளுமே கேடுறுகின்றன.

வேலையின் போது தொழிலாளியின் உயிருக்கு அவசியமானவையெல்லாம், இடம், ஒளி. காற்று ஆகியவையெல்லாம், உற்பத்தி நிகழ்முறையின் ஆபத்தான, ஆரோக்கியக் கேடான விளைவுகளுக்கெதிராக அவரது சரீரத்துக்குள்ள பாதுகாப்புகள் எல்லம் சூறையாடப்படுகின்றன. 

No comments:

Post a Comment