Tuesday, October 1, 2013

மூலதனம் கற்றல் அரங்கு





ஓராண்டிற்கு முன் நடந்த ‘மூலதனம்’ கற்றலுக்கான துவக்க விழா அழைப்பிதழ் மேலே உள்ளது. 150 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட நூலுக்கு ஒரு கற்றல் அரங்கு; அதற்கு ஒரு துவக்க விழா. இதெல்லாம் இந்த காப்சூலில் சர்வரோக நிவாரணம் தேடும் நாளில் யாரையாவது ஈர்க்குமா? என பலரும் கேட்க அரங்கு நிரம்பிய நிகழ்வாக நடந்து இன்றோடு ஓராண்டு. ஒரு நாள் கூத்து எதிலும் சாத்தியம். தொடருமா என அடுத்த சந்தேகம் வந்தது. பேராசிரியர்.வெங்கடேஷ் ஆத்ரேயா 15 அமர்வுகளில் (15 நாளுக்கு ஒருமுறை - 3 மணிநேரம்) என நடத்திய வகுப்புகள் முடிந்தன. தொடர் சொற்பொழிவு சரி, கற்பது? பேரா. ஆத்ரேயா வழிகாட்டியபடி ஒவ்வொரு அமர்விலும் ஒரு அத்தியாயம் என இன்று 14 ஆவது அமர்வில் 14 ஆவது அத்தியாயம் நடந்து முடிந்தது. இது காட்டிய வழியில் இரண்டாம் குழு துவங்கி அதுவும் இன்று 5 ஆவது அமர்வில் நான்காம் அத்தியாயத்தை முடித்துள்ளது. ஆசிரியர் இல்லாத இந்த வகுப்புகளில் பங்கேற்போரே படித்து வந்து ஒவ்வொருமுறையும் யாராவது ஒருவர் அத்தியாயத்தை விளக்க பின் பிறர் பங்கேற்கும் விவாதத்துடன் முடியும்.

150 ஆண்டுகளுக்கு முன் மார்க்ஸ் முதலாளித்துவம் ஆங்காங்கே தீவுகளாக ஆரம்ப நிலையில் இருந்தபோது எழுதிய ‘மூலதனம்’ என்ற இந்த செவ்வியல் பனுவல், அவர் காலத்தைவிட இன்றைக்கு அதிகப் பொருத்தப்பாடு உடையதாக இருப்பதை சொந்த வாசிப்பில் உணர்வது ஒரு கிடைத்தற்கறிய அனுபவம். பொருளாதாரம், வரலாறு, சமூகவியல், தத்துவம் என பலதுறையைத் தொட்டுத் துலக்கிச் செல்லும் மார்க்சின் எழுத்து அவரது மெல்லிய நகைச்சுவை, அவரது இலக்கிய வாசிப்பின் ஆழம், ஒரு காத்திரமான அறிவியல் நூலில் அதைப் பயன்படுத்தும் அழகு என்பதெல்லாம் வாசித்தால் மட்டுமே அறிய முடியும் ரசவாத வித்தகம். முதல் மூன்று அத்தியாயம் தாண்டிவிட்டால் ‘மூலதனம்’ நூலை வாசிப்பு இன்பத்திற்காகவே வாசிக்கலாம். முதல் மூன்று அத்தியாயம் சிரமம்தான். ஆனால் மார்க்சே சொல்லியபடி ‘அறிவியலில் ராஜபாட்டை ஏதுமில்லை; வழுக்கக் கூடிய அதன் செங்குத்துப் பாதையில் மனம் தளராது ஏறத் துணிபவர்களே அதன் ஒளி மிகு சிகரங்களை காணமுடியும்’ என்பதையும் உணர்ந்த போது இதற்கு செலவழித்த ஆற்றலும் நேரமும் பயனுள்ளதே எனும் உணர்வுதான். 

ஒரே ஒரு சிரமம்தான்.. ‘தத்துவவாதிகள் இந்த உலகைப் பலவாறாக விளக்கினார்கள்; நமது பணி மாற்றத்தைக் கொண்டு வருவது’ என்கிறார் மார்க்ஸ். என்ன செய்யப் போகின்றோம்? இந்த நல்ல கேள்வியை வீட்டுக்கு எடுத்து வந்துள்ளோம். இருக்கட்டும்... நல்ல கேள்வி பதிலுக்கான பயணத்தில் பாதித் தொலைவிற்கு இட்டு வந்துவிடுமல்லவா?



No comments:

Post a Comment