Tuesday, October 22, 2013

பகுதி 4. அத்தியாயம் 15: இயந்திர சாதனமும் நவீனத் தொழில் துறையும். பிரிவு 6

இயந்திர சாதனத்தால் நீக்கப்படும் தொழிலாளர்கள் தொடர்பான இழப்பீட்டுத் தத்துவம்.

முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் பலரும், தொழிலாளர்களை நீக்கம் செய்கிற எல்லா இயந்திர சாதனங்களும் அதே நேரத்தில் அதே தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கப் போதுமான மூலதனத் தொகையைக் கட்டாயமாக விடுவிக்கின்றன என்று வலியுறுத்துகின்றனர்.

ஆனால் மூலதனத்தின் ஒரு பகுதி விடுவிக்கப்படுவதற்கு பதில் முடக்கப்பட்டுள்ளது.

இயந்திர சாதனத்தில் மேம்பாடு ஏற்படும் போதெல்லாம், அந்த சாதனத்தில் வேலை செய்வோரின் தொகை குறையவே செய்யும். புதிதாகப் புகுத்தப்பட்ட இயந்திர சாதனத்துக்கான செலவு அதனால் நீக்கப்படும் உழைப்புச் சக்திக்கும் குறைவாயிருந்தால் அந்த அளவுக்கு மூலதனம் விடுவிக்கப்பட்டிருக்கும். அதிலும் ஒரு பகுதி இப்போது மாறா..மூலதனமாக வேண்டும்; இவ்வாறு மீதமுள்ள தொகையே உழைப்புச் சக்திக்காக செலவிடுவதெற்கென்று எஞ்சியுள்ளது.

எப்படியும், அவ்வியந்திர சாதனத்தின் நிர்மாணம் அதனை ஈடுபடுத்துவதால் நீக்கம் செய்யப்படுவோரை விடக் குறைவான ஆட்களுக்கே வேலை கொடுக்கிறது. நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் பெற்று வந்த கூலித் தொகை இப்போது இயந்திர சாதனத்தின் உருவில் பின் வருவனவற்றைக் குறிக்கிறது: (1) அவ்வியந்திர சாதனத்தின் நிர்மாணத்தில் பயன்படுத்தப்பட்ட உற்பத்திச் சாதனங்களின் மதிப்பு, (2) அதன் நிர்மாணத்தில் வேலைக்கமர்த்தப்பட்ட இயந்திர கம்மியர்களின் கூலி, (3) அவர்களது "அதிபர்" வசம் போகிற உபரி..மதிப்பு.

எனவே அதிகரித்த இயந்திர கம்மியர்களுக்கு இடையறாது வேலை தர வேண்டுமானால், ஒருவர் பின் ஒருவராக தயாரிப்பாளர்கள் இயந்திர சாதனத்தைக் கொண்டு தொழிலாளர்களை நீக்கம் செய்ய வேண்டும். 

இயந்திர சாதனம் ஆட்களை விடுவித்து, அவர்களை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய நிலையில் வைக்கிறது என்பது மட்டுமல்லாமல் அவர்கள் நுகர்ந்து வந்த வாழ்வுச் சாதனங்களையும் அவர்கள் நுகர்விலிருந்து திரும்ப்பப் பெற்று விடுவிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மைதான். 

நீக்கப்பட்ட தொழிலாளர்களைப் பொறுத்த வரை, இந்த வாழ்வுச் சாதனங்கள் அவர்களுக்கு சரக்குகளாக இருந்தனவே தவிர, மூலதனமாக இருக்கவில்லை. 

அவர்கள் வாங்கற் சாதனங்களிடமிருந்து இயந்திர சாதனத்தால் விடுவிக்கப்பட்டனர் என்ற நிலைமை அவர்களை வாங்குவோர் என்ற நிலையிலிருந்து வாங்க முடியாதோராக மாற்றியது. அந்தச் சரக்குகளுக்கு வேண்டல் குறைந்தது இதனால்தான். இக்குறைவு வேறு திசையிலிருந்து வரும் அதிகரிப்பால் ஈடு செய்யப்படா விட்டால், இச்சரக்குகளின் சந்தை விலை வீழ்கிறது. இந்நிலைமை சிறிது காலத்திற்கு நீடிக்குமானால், இச்சரக்குகளின் உற்பத்தியில் வேலை செய்யும் தொழிலாளர்களை நீக்க வேண்டியதாகிறது. 

அதாவது இயந்திர சாதனம் அது புகுத்தப்படுகிற உற்பத்திக் கிளையில் மட்டுமல்லாமல், புகுத்தப்படாத கிளைகளிலும் தொழிலாளர்களை வேலையிழக்கச் செய்து தெருவில் நிறுத்திகிறது என்பதையே நிரூபிக்கின்றனர்.

எந்தத் தொழிற் கிளையிலும் வேலையிலிருந்து வெளியேற்றப்படும் தொழிலாளர்கள் வேறு ஏதாவது கிளையில் வேலை தேடலாம் என்பது மெய்தான். அவர்களுக்கு அது கிடைத்து, இவ்வாறு அவர்களுக்கும் வாழ்வு சாதனங்களுக்கும் இடையிலான பிணைப்பு புதுப்பிக்கப்பட்டால், முதலீட்டை நாடிக் கொண்டிருக்கும் புதிய கூடுதலான மூலதனத்தைக் கொண்டு இது நிகழ்கிறதே தவிர, முன்னதாக அவர்களுக்கு வேலை கொடுத்து, பின்னர் இயந்திர சாதனமாக மாற்றப்பட்ட மூலதனத்தைக் கொண்டு அல்லவே அல்ல.

இயந்திர சாதனத்தால் நீக்கப்பட்ட ஏழைகள் உழைப்புப் பிரிவினையால் முடமாக்கப்பட்டவர்கள்; தமது பழைய தொழிலுக்கு வெளியே மதிப்பில்லாதவர்கள்; குறையூதியத் தொழிலாளர்கள் மிகையாகக் கிடைக்கிற மட்டரகமான ஒரு சிலவற்றைத் தவிர பிற தொழிற் கிளைகள் எதிலும் சேர முடியாதவர்கள். 

இயந்திர சாதனத்தின் முதலாளித்துவ பிரயோகத்திலிருந்து பிரிக்க முடியாதவையான முரண்பாடுகளும் பகைநிலைகளும் பிறப்பதற்கு இயந்திர சாதனம் அதனளவில் காரணமன்று. அவற்றின் முதலாளித்துவப் பிரயோகமே காரணம் என்பதை வைத்து, அம்முரண்பாடுகளும் பகைநிலைகளூம் நிலவவேயில்லை என்றே அவர்கள் கூறிவிடுகின்றனர்!

இயந்திர சாதனம் அதனளவில் உழைப்பு நேரத்தைக் குறைக்கிறது; ஆனால் மூலதனத்துக்குப் பணி செய்யும் போது உழைப்பு நேரத்தை நீட்டுகிறது.

அதனளவில் உழைப்பை இலகுவாக்குகிறது; ஆனால் மூலதனத்தால் ஈடுபடுத்தப்படும் போது உழைப்பின் மும்முரத்தை உயர்த்துகிறது.

அதனளவில் இயற்கைச் சக்திகள் மீது மனிதன் கண்ட வெற்றியாகத் திகழ்கிறது, ஆனால் மூலதனத்தின் கையில் இருக்கையிலிருக்கையில் மனிதனை அச்சக்திகளின் அடிமையாக்குகிறது.


அதனளவில் உற்பத்தியாளர்களின் செல்வத்தை அதிகமாக்குகிறது, ஆனால் மூலதனத்தின் கையிலிருக்கையில் அவர்களை வக்கற்றவர்கள் ஆக்குகிறது.

இவற்றையும் ஏனைய பல நிலைமைகளையும் வைத்து முதலாளித்துவ பொருளாதார அறிஞர், இந்த முரண்பாடுகளெல்லாம் எதார்த்தத்தின் நிழல்களே தவிர எதார்த்தம் அல்ல, உள்ளபடியாகவோ தத்துவார்த்தமாகவோ நிலவுகிறவை அல்ல என்பது நிதர்சனமாக தெரிவதாக அசங்காமல் சொல்லுகிறார்.

இயந்திர சாதனத்தின் முதலாளித்துவப் பிரயோகம் பற்றிய உண்மை நிலவரங்களை அம்பலப்படுத்துகிறவர் எவரும் எவ்வகையான இயந்திர சாதனப் பிரயோகத்தையும் எதிர்ப்பவராம், சமுதாய முன்னேற்றத்தின் எதிரியாம்.

இயந்திர சாதனம், அது புகுத்தப்படும் தொழில்களில் எல்லாம், கட்டாயமாய் வேலையிலிருந்து ஆட்களை வெளியேற்றிவிடுகிறது என்ற போதிலும், ஏனைய தொழில்களில் இதற்கு மாறாக வேலை வாய்ப்பினைப் பெருகச் செய்யலாம். ஆயினும் இந்த விளைவுக்கும் இழப்பீட்டு தத்துவம் எனப்படுவதற்கும் இடையே பொதுவானதொன்றுமில்லை.

உள்ளபடியே, குறைந்த தொகையிலான தொழிலாளர்களைக் கொண்டு இயந்திர சாதனத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பண்டத்தின் மொத்த அளவு, கையால் செய்த பண்டத்தின் மொத்த அளவுக்குச் சமமாய் இருப்பதற்குப் பதில், பெரிதும் கூடுதலாகவே உள்ளது.

குறிப்பிட்ட தொழிலில் இயந்திர சாதனத்தின் உபயோகம் பெருகும் போது, இத்தொழிலுக்கு உற்பத்திச் சாதனங்களைத் தருகிற ஏனைய தொழில்களில் உற்பத்தியைப் பெருகச் செய்வதே உடனடி விளைவாகும். இதன் மூலம் அதிகரித்த தொகையிலான ஆட்களுக்கு எவ்வளவு தூரம் வேலை கிடைக்கும் என்பது, வேலை-நாளின் கால அளவும் உழைப்பின் மும்முரமும் குறிப்பிட்டதாய் இருக்க, ஈடுபடுத்தப்படும் மூலதனத்தின் இயைபினை (composition), அதாவது அதன் மாறும் அங்கத்துடன் மாறா அங்கம் கொண்டுள்ள விகிதத்தைப் பொறுத்ததாகும். இந்த விகிதமோ அத்தொழில்களை இயந்திர சாதனம் ஏற்கனவே வசப்படுத்தியிருக்கிற, அல்லது வசப்படுத்தி வருகிற அளவிற்கேற்பக் கணிசமாக மாறுபடுகிறது.

நிலக்கரி சுரங்கங்களிலும் உலோகச் சுரங்கங்களிலும் உழைக்க வேண்டியிருந்த ஆட்களின் தொகை ஆங்கிலேய ஆலைத்தொழில் கண்ட முன்னேற்றத்தின் விளைவாக பெருமளவு அதிகரித்தது. ஆனால் சுரங்கத் தொழிலில் புதிய இயந்திர சாதன உபயோகத்தின் விளைவாக இத்தொகையின் பெருக்கம் மட்டுப்பட்டுள்ளது.

கச்சாப் பொருள்களைப் பொறுத்த வரை பஞ்சு நூற்பின் துரித முன்னேற்றமானது அமெரிக்க ஐக்கிய அரசில் பருத்தி சாகுபடியையும், ஆப்பிரிக்க அடிமை வர்த்தகத்தையும் தழைத்தோங்க செய்தது.

ஆங்கிலேய கம்பளித் தொழிற்சாலைகளின் உதயமானது பயிர் நிலத்தைப் பையப்பைய ஆட்டு மேய்ச்சல் நிலமாக மாற்றியதோடு, விவசாயத் தொழிலாளர்களில் ஒரு பகுதியை வேண்டாத உபரியாக்கி, பெருந்திரளாய் அவர்கள் நகரங்களுக்குத் துரத்தப்படுவதற்கு வழிகோலியது.

இயந்திர வழி நூற்பு கைத்தறி நெசவாளர்களுக்கு மிக மலிவாகவும் அபரிமிதமாகவும் நூல் வழங்கியதால், அவர்கள் ஆரம்பத்தில் முதலீட்டை அதிகப்படுத்தமலே முழு நேரம் வேலை செய்யமுடிந்தது. அதற்கேற்ப அவர்களது சம்பாத்தியமும் உயர்ந்தது.

ஜென்னியாலும், திராசிலாலும். மியூலாலும் இவ்விதம் அதிகரித்து வந்த நெசவாளர் தொகை எட்டு லட்சம் ஆயிற்று. இன்னிலையில் விசைத்தறி இதற்கு முடிவு கட்டியது. இதே போல, இயந்திர சாதனம் அபரிமிதமாகத் துணி உற்பத்தி செய்ததால், தையற்காரர்கள், தையர்காரிகள், ஊசிப் பெண்கள் ஆகியோரின் தொகை அதிகரித்துச் சென்றது. தையல் இயந்திரத்தின் வருகை இதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இயந்திர சாதனத்தின் உடனடி விளைவு உபரி-மதிப்பையும், உபரி-மதிப்பு உருக்கொண்டுள்ள உற்பத்திப் பண்டத் திரளையும் பெருகச் செய்வதாகும். முதலாளிகளும், அவர்களைச் சார்ந்திருப்பவர்களும் நுகர்கிற பண்டங்கள் இன்னும் ஏராளமாய் பெருகுகிறது.

சொகுசு பண்டங்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. செப்பஞ்செய்யப்பட்ட பல்வேறு வகை உற்பத்திப் பண்டங்களுக்கு உலகச் சந்தைகளுடனான புதிய உறவுகளும் காரணமாகும். இவ்வுறவுகளை நவீனத் தொழில் துறை தோற்றுவிக்கிறது.  முன்னிலும் பெரிய அளவுகளில் உள் நாட்டு உற்பத்திப் பண்டங்களுக்குப் பிரதியாக அயல் நாட்டு சொகுசு பண்டங்கள் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுவது மட்டுமல்லாமல், அயல் நாட்டுக் கச்சாப் பொருட்கள், பகுதிப் பொருட்கள், இடை நிலை உற்பத்திப் பொருட்கள் முன்னிலும் பெருந்திரளாக உள் நாட்டுத் தொழில்களில் உற்பத்திச் சாதனங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. உலகச் சந்தைகளுடனான இந்த உறவுகளின் விளைவாக, உழைப்புக்கான வேண்டல் போக்குவரத்துத் தொழில்களில் அதிகரிக்கிறது. இத்தொழில்கள் ஏராளமான வகைகளாகப் பிரிந்து போகின்றன.

கால்வாய்கள், கப்பல் துறைகள், குகைப் பாதைகள், பாலங்கள் இன்னபிறவற்றை அமைப்பதில் உழைப்புக்கான வேண்டலை பெருகச் செய்கிறது. இப்பணிகள் தூரத்து எதிர்காலத்தில்தான் பலன் தரக் கூடியவை.

நவீனத் தொழில் துறையின் அசாதாரண உற்பத்தித் திறன், மற்றெல்லா உற்பத்தித் துறைகளிலும் உழைப்புச் சக்தி முன்னிலும் விரிவான அளவிலும் முன்னிலும் மும்முரமான முறையிலும் சுரண்டப்படுவதற்கு வழி செய்கிறது என்பதால், மேலும் மேலும் பெரிய தொழிலாளி வர்க்கப் பகுதியை உற்பத்திக்குதவாத விதத்தில் வேலை வாங்குவதற்கும், ஆதலால் வேலைக்காரர்கள், வேலைக்காரிகள், கையாட்கள் முதலானோர் உள்ளிட்ட ஒரு வேலைக்கார வர்க்கத்தின் பெயரால், புராதன வீட்டு அடிமைகளை --- இடையறாது விரிவடையும் அளவில் --- புனருத்தாரணம் செய்வதற்கும் இடமளிக்கிறது. 

No comments:

Post a Comment