Saturday, August 10, 2013

பகுதி 3: அத்தியாயம் 10: வேலை நாள். பிரிவு 1 முதல் 4 வரை

பிரிவு 1: வேலை..நாளின் வரம்புகள்

உழைப்புச் சக்தியின் மதிப்பு, மற்றெல்லாச் சரக்குகளின் மதிப்பையும் போலவே, அதன் உற்பத்தியின் அவசியமான வேலை நேரத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.

'உபரி வேலை நேரம் / அவசிய வேலை நேரம்' என்ற விகிதம் உபரி..மதிப்பு விகிதத்தை நிர்ணயிக்கிறது.

உபரி,,மதிப்பு வீதம் மட்டுமே வேலை நாளின் கால அளவை நமக்குத் தந்திடாது; வேலை நாளின் 2 அடக்கக் கூறுகளான அவசிய வேலை நேரமும், உபரி உழைப்பு நேரமும் எவ்வளவு கால அளவு கொண்டது என்பதை காட்டாது.

வேலை நாள் மாறும் அளவே ஒழிய மாறா அளவன்று. வேலை நாள் நிர்ணயிக்கப்படக் கூடியது, ஆனால் தன்னளவில் நிர்ணயமற்றது. 

வேலை நாள் குறிப்பிட்ட வரம்புகளுக்கு உட்பட்டே மாற முடியும். உபரி உழைப்பு = 0 என்று ஆக்கினால், கீழ் வரம்பை, அதாவது தன் சொந்த பராமரிப்புக்காக தொழிலாளி அவசியம் வேலை செய்ய வேண்டிய நாட் பகுதியைப் பெறுகிறோம்.

வேலை நாளுக்கு மேல் வரம்பு உண்டு. குறிப்பிட்ட நிலைக்கப்பால் அதை நீட்ட முடியாது. இந்த மேல் வரம்பை நிர்ணயிப்பவை இரு காரணிகள். முதல் காரணி உழைப்புச் சக்தியின் பௌதிக எல்லைகள் ஆகும். இயற்கையான நாளின் 24 மணி நேரத்துக்குள் மனிதன் தனது ஜீவ ஆற்றலில் குறிப்பிட்ட அளவையே செலவிட முடியும்.

உண்ணவும், குளிக்கவும், உடுக்கவும் வேண்டும். முற்றிலும் பௌதிகத் தன்மை வாய்ந்த இந்த வரையறைகளோடு, தார்மிகத் தன்மை வாய்ந்த வரையறைகளும் வேலை..நாளின் நீட்டிப்புக்குத் தடை ஆகின்றன. அறிவுத் தேவைகளையும், சமூகத் தேவைகளையும் நிறைவு செய்து கொள்வதற்கு உழைப்பாளிக்கு நேரம் தேவைப்படுகிறது; இத்தேவைகளின் அளவும் எண்ணிக்கையும் சமுதாய முன்னேற்றத்தின் பொது நிலையால் நிர்ணயிக்கப்படுகின்றன, எனவே வேலை..நாளின் கால அளவிலான ஏற்ற இறக்கம் பௌதிக, சமுதாய எல்லைகளுக்கு உட்பட்டது.

மூலதனம் உயிரற்ற உழைப்பு ஆகும்; அது உதிரமாகாளியைப் போல உயிருள்ள உழைப்பை உறிஞ்சியே வாழ்கிறது; எவ்வளவு அதிகமாக உழைப்பை உரிஞ்சுகிறதோ, அவ்வளவு அதிகமாக வாழ்கிறது. தொழிலாளி வேலை செய்யும் நேரம் என்பது, முதலாளி அவரிடமிருந்து வாங்கியிருக்கும் உழைப்புச் சக்தியை நுகர்கிற காலம் ஆகும்.

முதலாளியை நோக்கி தொழிலாளியின் குரல்: நான் உம்மிடம் விற்றிருக்கும் சரக்கின் பயன்பாடு மதிப்பைப் படைக்கிறது. சொந்த மதிப்பை விடக் கூடுதலான மதிப்பைப் படைக்கிறது என்பது அதற்கும் ஏனைய எல்லாச் சரக்குகளுகுமுள்ள வேறுபாடு ஆகும். அதனால்தான் நீர் அதனை வாங்கினீர். உமது தரப்பில் தன்னியல்பான மூலதனப் பெருக்கமாய் தோன்றுவது, எனது தரப்பில் உழைப்புச் சக்தியின் கூடுதல் செலவீடாகும். என் அன்றாட உழைப்புச் சக்தியின் பயன்பாடு உமக்கே உரியது. ஆனால் நீர் அதற்காக நாள் தோறும் கொடுக்கிற விலையைக் கொண்டு நான் அதை அன்றாடம் மறுவுற்பத்தி செய்யவும், மீண்டும் விற்கவும் முடிய வேண்டும். நான் இன்று போலவே நாளையும் அதே இயல்பான ஆற்றலுடனும், ஆரோக்கியத்துடனும், புத்துணர்வுடனும் வேலை செய்ய முடிய வேண்டும். எனது ஒரே சொத்தாகிய உழைப்புச் சக்தியைச் கட்டுச் செட்டாக நிர்வகித்து, அதன் அசட்டுத்தனமான விரயத்தை அறவே தவிர்ப்பேன். அதன் இயல்பான ஆயுளுக்கும், ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் ஏற்றது எவ்வளவோ அவ்வளவை மட்டுமே நான் ஒவ்வொரு நாளும் செலவிடுவேன், இயங்கச் செய்வேன், செயல்படுத்துவேன். எனது உழைப்புச் சக்தியை பயன்படுத்திக் கொள்வது வேறு; சூறையாடுவது வேறு.

வேலை நாளை முடிந்த வரை நீட்டவும், முடிந்த போதெல்லாம் ஒரு வேலை..நாளிலிருந்து இரு வேலை நாட்களைப் பெறவும் முதலாளி முயலும்போது, வாங்குபவர் என்ற முறையில் தன் உரிமைகளையே நிலைநாட்டிக் கொள்கிறார்.

தொழிலாளி வேலை நாளை இயல்பான குறிப்பிட்ட காலவரை கொண்ட ஒன்றாகக் குறைக்க விரும்பும் போது, விற்பவர் என்ற முறையில் தன் உரிமைய நிலை நாட்டிக் கொள்கிறார். எனவே, எதிரும் புதிருமான ஒரு நிலை இங்கே எழுகிறது; உரிமைக்கு எதிராய் உரிமை நிற்கிறது.

எனவேதான் முதலாளித்துவ பொருளுற்பத்தியின் வரலாற்றில் வேலை..நாள் என்றால் என்ன என்பது ஒரு போராட்டம் வாயிலாகத் தீர்மானிக்கப்படுகிறது. கூட்டு மூலதனத்துக்கும் கூட்டு உழைப்புக்கும் இடையிலான, அதாவது முதலாளி வர்க்கத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும்  இடையிலான போராட்டம் வாயிலாகத் தீர்மானிக்கப்படுகிறது.

பிரிவு 2: உபரி..உழைப்புக்கான பேராசை.

உபரி..உழைப்பு மூலதனத்தின் கண்டுபிடிப்பன்று. சமுதாய உற்பத்தியின் ஒரு பகுதியினர் உற்பத்திச் சாதனங்களின் ஏகபோகத்தைப் பெற்றுள்ள இடங்களிலெல்லாம், தொழிலாளி சுதந்திரமுடையவராய் இருந்தாலும் சரி, சுதந்திரமற்றவராய் இருந்தாலும் சரி, தன் சொந்த பராமரிப்புக்கு அவசியமான வேலை நேரத்தோடு கூட உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளருக்கான வாழ்வுச் சாதனங்களை உற்பத்தி செய்யும் பொருட்டுக் கூடுதல் வேலை நேரமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உற்பத்திப் பொருளின் பயன்..மதிப்பு ... பரிவர்த்தனை..மதிப்பன்று .... கோலோச்சுகிற சமுதாயத்தின் குறிப்பிட்ட பொருளாதார வடிவமைப்பெதிலும் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கக் கூடிய குறிப்பிட்ட சில தேவைகள் உபரி..உழைப்பிற்கு வரம்பிடும். பரிவர்த்தனை..மதிப்பை அதன் சுயேச்சையான தனி வடிவமாகிய பண வடிவத்தில் அடைவது குறிக்கோளாக இருக்கும்போதுதான் மிகையுழைப்பு கோரத் தாண்டவமாடுகிறது.

உபரி..உழைப்பும் அவசிய..உழைப்பும் ஒன்றோடு ஒன்று கலந்துள்ளன. ஒவ்வொரு நிமிடத்திலும் தொழிலாளி தனக்காக 30 வினாடியும், முதலாளிக்காக 30 வினாடியும் வேலை செய்கிறார்.

வாலேக்கிய விவசாயி கார்வே முறையில் தன் சொந்த பராமரிப்புக்காகச் செய்கிற அவசிய உழைப்பு தன் சொந்த வயலிலும், உபரி உழைப்பை பிரபுவின் பண்ணையிலும் செய்கிறார். உபரி..உழைப்பு அவசிய உழைப்பிலிருந்து தெளிவாக பிரித்துக் காட்டப்படுகிறது. உழைப்பு நேரத்தின் இரு பகுதிகளும் தனித்தனியாக அக்கம்பக்கமாக இருக்கிறது. ஆயினும் அளவு வழிபட்ட உறவில் எந்த வேறுபாடும் எழ முடியாது. உழைப்பு நாட்களுக்கான நேரடி வேட்டை மேலும் அப்பட்டமாக வெளிப்படுகிறது.

ருமேனிய மாகாணங்களில் நிலக் கூட்டுடைமையின் அடிப்படையில், நிலத்தின் ஒரு பகுதியை சமூதாயத்தின் உறுப்பினர்கள் தனியுடைமையாகத் தனித்தனியே சாகுபடி செய்தனர். இன்னொரு பகுதியை பொதுவில் சாகுபடி செய்தனர். இந்த பொது உழைப்பின் விளபொருட்களில் ஒரு பாகம் மோசமான அறுவடைகளையும், ஏனைய விபத்துகளையும் சமாளிப்பதற்கான சேம வைப்பு நிதியமாகவும் ஒரு பாகம் போர், சமயம் ஆகியவற்றின் செலவுகளுக்கும் ஏனைய பொது இருப்பாகவும் பயன்பட்டன. காலப் போக்கில் இராணுவம், சமயம் ஆகியவற்றின் பிரமுகர்கள் பொது நிலத்தையும் அதில் செல்விடப்பட்ட உழைப்பையும் அபகரித்துக் கொண்டனர்.

கார்வே சட்டப்படி ஒவ்வொரு வாலேக்கிய விவசாயியும் நிலப்பிரபு எனப்படுபவருக்கு, பண்ட வடிவில் செலுத்தும் திரளான பல்வேறு கொடுப்புகளன்னியில் 14 நாள் உழைப்பையும் தர வேண்டும். வேலை நாள் என்பது ... அரசியல் பொருளாதாரத்தில் ஆழ்ந்த நுண்ணோக்குடன் ... சராசரி அன்றாட விளைபொருளின் உற்பத்திக்கு அவசியமான வேலை நாள். அப்படியானால் அது மூன்று மடங்கு .. ஒரு நாள் வயல் உழைப்பு என்பதை மூன்று நாள் உடல் உழைப்பின் பலன் என்று கொள்ள வேண்டும். ஆகவே 42 கார்வே நாள். இன்னும அசாதாரண சந்தர்ப்பங்களில் மேலும் 14 நாள்.........

டான்யூபிய மாகாணங்களது ரெக்ளமெண்டின் ஒவ்வொரு பத்தியும் உபரி..உழைப்பை சட்ட சம்மதமாக்குகிறது. உபரி..உழைப்புக்கான பேராசையை இச்சட்டம் நேர்வழியில் தெரிவிக்கிறதென்றால், ஆங்கிலேயத் தொழிற்சாலைச் சட்டங்கள் இப்பேராசையை எதிர் வழியில் தெரிவிக்கின்றன.

நிலத்தைச் சத்திழக்கச் செய்து மலடாக்கிய கண்மூடித்தனமான அதே கொள்ளை வெறி நாட்டின் உயிர்ச் சக்தியை வேரறுக்க முற்பட்டது. காலந்தவறாமல் வரும் தொத்து நோய்கள் ... ஜெர்மனியிலும், பிரான்ஸிலும் இராணுவத்திற்கான உயரத் தகுதி குறைந்து வருவதைப் போலவே .... இவ்வுண்மையைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.

1867ல் அமலில் உள்ள 1850 வருடத் தொழிற் சட்டம் 10 மணி நேர சராசரி வேலை..நாளை விதிக்கிறது. 

தொழிற்சாலை ஆய்வாளரின் கூற்றுப்படி "மோசடிக்கார ஆலை அதிபர் காலையில் வேலை தொடங்கும் போதும், காலை உணவு நேரத்திலும், சாப்பாட்டு நேரத்திலும், வேலை முடிவின் போதும் அதிகமாக வேலை நேரத்தை கூடுதலாக்குவது ஆண்டு ஒன்றுக்கு 13 மாதம் வேலை செயவதற்கு சமமாகிறது.

"ஓய்வெடுக்கவும், இளைப்பாறவும் அனுமதிக்கப்படுவதாக வெளி ஒப்புக்குச் சொல்லப்படுகிற நேரங்களில் நாள் ஒன்றுக்கு அரை அல்லது முக்கால் மணி நேரம் அபகரிக்கப்படுகிறது.

"தண்டிக்கப்பட்டவர்கள் கட்ட வேண்டியிருந்த அபராதமும் செலவுகளும் சொற்பமே என்பதைப் பார்க்கும் போது, தாங்கள் மாட்டிக் கொண்டாலும் கணிசமான ஆதாயம் மிச்சப்படும் என்று அவர்களுக்கு தெரிந்துவிடுகிறது.

மூலதனம் செய்யும் இவ்வகையான திருட்டுகளுக்கு "அற்பத்தனமான நிமிட திருட்டுகள்" என்று தொழிற்சாலை ஆய்வாளர்கள் பெயர் சூட்டுகின்றனர்.

பிரிவு 3: ஆங்கிலத் தொழில் துறையில் சுரண்டலுக்கு சட்ட வரம்புகள் இல்லாத கிளைகள்.

1860ல் நாட்டிங்காம் அசெம்பிளி வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் தலைவர் என்ற முறையில் மாஜிஸ்திரேடின் அறிவிப்பின்படி ஒன்பது அல்லது பத்து வயது குழந்தைகள் காலையில் இரண்டு, மூன்று அல்லது நான்கு மணிக்கு அவர்களது அழுக்குப் படுக்கையிலிருந்து இழுத்து வரப்பட்டு, வயிற்றுப் பாட்டுக்காக இரவு பத்து, பதினொன்று அல்லது பன்னிரண்டு மணி வரை வேலை  செய்யுமாறு கட்டாயப் படுத்தப்படுகின்றனர். அவர்களது கை கால்கள் சூம்பிப் போகின்றன; உடல் கட்டுக் குலைந்து போகிறது; முகம் வெளிறிப் போகிறது; அவர்களது மனிதத்துவம் கல்லாய் இறுகி மரத்துப் போகிறது; அதை நினைத்துப் பார்த்தால் நெஞ்சு பொறுக்கவில்லை.

1863ல் ஆணையர்கள் அளித்த அறிக்கையிலிருந்து: வடக்கு ஸ்த்ஃபோர்டுஷயர் மருத்துவமனை டாக்டர் ஜே.டி.ஆர்லெட்ஜ் கூறுகிறார்: மண்பாண்டத் தொழிலாளர்கள் பௌதிக வழியிலும் தார்மிக வழியிலும் சீரழிந்த மக்கள் சமூகத்தின் சின்னமாவர். அவர்கள் பொதுவாக வளர்ச்சி குன்றியவர்களாகவும், உரு கெட்டவர்களாகவும் உள்ளனர். பலர் மார்புக் கூடுக் குறையுடையவர்களாகவும் உள்ளனர். உரிய காலத்துக்கு முன்பே வயோதிகர் ஆகின்றனர். அற்ப ஆயுள் படைத்தோர் என்று கூறத் தேவையில்லை. சோகை பிடித்தும், இரத்தஞ் செத்தும் உள்ளனர். செரியாமாந்தத்தின் விடாப்பிடியான தாக்குதல்கள். கல்லீரலிலும், சிறு நீரகங்களிலும் கோளாறுகள் ஆகியவற்றில் அவர்களது உடல் தளர்வு வெளிப்படுகிறது. மார்பு நோயால் ... கபவாதம்....

இப்படியாக அவர்களின் ஆரோக்கிய குறைவைப் பற்றி பெரியதொரு அறிக்கையே படிக்கின்றார்.

இந்த பிரிவு  முழுவதும் இப்படியான ஏராளமான‌அறிக்கைகள் தரப்பட்டுள்ளன.

பிரிவு 4: பகல் நேர வேலையும் இரவு நேர வேலையும். அஞ்சல் முறை

மாறா மூலதனமாகிய உற்பத்திச் சாதனங்கள், உபரி மதிப்பின் படைப்பென்ற கண்ணோட்டத்தில் பார்க்கையில், உழைப்பையும், உழைப்பின் ஒவ்வொரு துளியுடனும் அதற்கேற்ற அளவில் உபரி..உழைப்பையும் உட்கிரகிப்பதற்கே உள்ளன. அவை இதைச் செய்யத் தவறுகையில், அவை இருப்பதே முதலாளிக்கு ஒப்பளவில் இழப்புக்குக் காரணமாகிறது; ஏனெனில் அவை வேலையற்றுக் கிடக்கும் காலத்தில் பயனற்ற மூலதன முன்னீட்டைக் குறிக்கின்றன.

நாளின் 24 மணி நேரம் முழுவதிலும் உழைப்பைத் தனதாக்கிக் கொள்வது முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் உள்ளார்ந்த போக்காகும். ஆனால் ஒரே ஆளின் உழைப்புச் சக்தியை இரவு பகலாக இடைவிடாமல் சுரண்ட உடல் இடமளிக்காது என்பதால். உடல் தொடர்பான இந்தத் தடையினைக் கடப்பதற்காக, பகலில் சக்திகளைச் செலவழித்து விடும் தொழிலாளர்களையும், இரவில் பிழியப்படும் தொழிலாளர்களையும் மாறி மாறி ஈடுபடுத்துவது அவசியமாகிறது.

இரவு நேர உழைப்பின் பொதுவான தீமை ஒரு புறமிருக்க, ஒவ்வொரு தொழிலாளிக்கும் அதிகாரபூர்வ வேலை நாள் என்பதன் வழக்கமான அர்த்தம் இரவு நேரத்திலோ பகல் நேரத்திலோ 12 மணி நேரம் என்பதாகும். ஆனால் இந்த அளவைத் தாண்டி மிகையாக வேலை செய்வது பல சந்தர்ப்பங்களில், ஆங்கிலேய அதிகாரபூர்வ அறிக்கையின் சொற்களில் சொல்வதானால், "மெய்யாவே பயங்கரமானது. வேலையளவினை பார்க்கும் போது, 9 முதல் 12 வரை வயதுள்ள பையன்கள் செய்யக் கூடிய வேலையாக அதனை கருத எவருக்கும் மனம் ஒப்பாது. இப்படிப்பட்ட அதிகார துஷ்ப்பிரயோகங்களைப் பெற்றோர்களும் முதலாளிகளும் செய்வதை இனியும் அனுமதிக்கலாகாது."

"அன்றாடப் போக்கில் ஆனாலும், நெருக்குதலான சமயங்களில் ஆனாலும் இரவு, பகல் முறை வைத்து சிறுவர்கள் வேலை செய்வதென்ற பழக்கமே அடிக்கடி மிதமிஞ்சி நீண்ட நேரம் வேலை செய்வதற்குத் தவிர்க்க முடியாமலே வழி திறப்பதாகத் தெரிகிறது.

மூலதனமே இந்த 24 மணி நேர ஏற்பாட்டை எப்படிக் கருதுகிறது என்பதை இப்போது கவனிப்போம். இயல்பாகவே, இவ்வேற்பாட்டின் படுமோசமான வடிவங்களை .... இதைத் தவறான முறையில் பயன்படுத்தி வேலை..நாளைக் "கொடுமையாகவும், ஏன், நம்ப முடியாததாகவும் கூட" நீட்டுவதை ... கண்டு கொள்ளாமல் மூலதனம் மௌனம் சாதிக்கிறது.

ஆலை அதிபர்கள் கூறுவது:

ஆட்களில் சிலருக்கு பகல் நேர வேலையும் இரவு நேர வேலையும் மாறி மாறி வருவதில்லை. அவர்கள் எப்போதும் இரவில் வேலை செய்கின்றனர்....

ஒவ்வொரு துறையிலும் தேர்ச்சி பெற்ற கரங்களும் மூளைகளும் கிடைப்பது சிரமமாயுள்ளது; ஆனால் சிறுவர்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் கிடைப்பார்கள்.....

பையன்களில் சுமார் 1/3 பேர் அல்லது 170 பேர் 13 வயதுக்குட்பட்டவர்கள். 18 வயதுக்குட்பட்டவர் யாரும் 24 மணி நேரத்தில் 12 மணி நேரத்துக்கதிகமாக வேலை செய்யலாகாது என்று கோருவது அவ்வளவாக ஆட்சேபத்துக்குரியதென்று நான் நினைக்கவில்லை. ஆனால் இரவு நேர வேலைக்கு ஆகாதென்று 12 வயதுக்கு மேல் கோடு கிழிக்க முடியுமென்று நான் நினைக்கவில்லை.

இப்போது எங்களிடம் இரவில் வேலை பார்க்கிற சிறுவர்களை தடை செய்வது சரியன்று...

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை இரவில் வேலை செய்யவிடாமல் தடுப்பதால் பெரும் இடர்பாடு உண்டாகும். தலையாய இடர்பாடு சிறுவர்களுக்கு பதில் ஆட்களுக்கு வேலை கொடுப்பதால் செலவு அதிகரிக்கும் என்பதாகும்...

முழு ஆட்களின் கூடுதலான சக்தியால் ஆதாயம் இல்லை. உலோகம் கனமாக இருக்கும் சில் சந்தர்ப்பங்களில் மட்டும் ஆதாயம் இருக்கும். ஆட்கள் சிறுவர்களைப் போல் பணிந்து நடக்கமாட்டார்கள். தமக்கு கீழே சிறுவர்கள் இல்லாமற் போவதையும் அவ்வளவாக விரும்பமாட்டார்கள்..... 

பழகு தொழிலாளர்களான சிறுவர்களுக்கு அளிக்கிற பயிற்சி அச்சிறுவர்களுக்கு அளிக்கப்படுகிற ஊதியத்தில் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.வயது வந்த ஆட்களின் கூலியில் ஒரு பகுதியை சிறுவர்களின் இரவு நேர வேலையைக் கொண்டு கொடுப்பதற்கு பதில் கையை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும்...

ஆனால் பாதி நேரத்துக்கு இவ்வளவு விலையுயர்ந்த இயந்திர சாதனம் சோம்பிக் கிடப்பதால் இழப்பு ஏற்படும்; இப்போதைய ஏற்பாட்டின்படி நாங்கள் பெற முடிகிற அளவு வேலையைப் பெறுவதற்கு கட்டடங்களையும் இயந்திர தளவாடங்களையும் இரு மடங்காக்க வேண்டியிருக்கும்; இது முதலீட்டை இரு மடங்காக்கிவிடும்...

உலைகளைப் பயன்படுத்துவதால் இதனிலும் அதிகமான இழப்பு ஏற்படும். அவை சூடேறிய நிலையிலேயே வைக்கப்படுவதானால் (இப்போது தொழிலாளர்களது உயிர்ச்சத்து வீணாவதற்குப் பதில்) எரிபொருள் வீணாகும்; இல்லையேல் திரும்பவும் தீ மூட்டி சூடேற்றுவதில் நேர இழப்பு ஏற்படும்...

No comments:

Post a Comment