Sunday, August 4, 2013

பகுதி 3: அத்தியாயம் 8: மாறா..மூலதனமும் மாறும்...மூலதனமும்.

உழைப்பாளி தன் உழைப்பினது இலக்குப் பொருள் மீது குறிப்பிட்ட அளவு கூடுதல் உழைப்பைச் செலவிட்டு -- அந்த உழைப்பின் பிரத்தியேகத் தன்மையும் பயன்பாடும் என்னவாயிருப்பினும் -- அந்த இலக்குப் பொருளுக்குப் புதிய மதிப்பைச் சேர்க்கிறார். மறு புறம் நிகழ்முறையில் பயன்படுத்திக் கொள்ளப்படும் உற்பத்திச் சாதனங்களின் மதிப்புகள் பாதுகாக்கப்பட்டு, உற்பத்திப் பொருளினது மதிப்பின் அடக்கக் கூறுகளாகப் புதுக் கோலம் பூணுகின்றன.

உழைப்பின் இலக்குப் பொருளுக்குப் புதிய மதிப்பைச் சேர்ப்பதும் அதன் முந்தைய மதிப்பைப் பாதுகாப்பதும் ஒரே செயற்பாட்டின் போது உழைப்பாளி ஏக காலத்தில் தோற்றுவிக்கும் இரு வேறு விளைவுகளே என்பதால், விளைவின் இந்த இரட்டைத் தன்மைக்கு அவரது உழைப்பின் இரட்டைத் தன்மையே காரணமாய் கொள்ள முடியும்.

நுகரப்பட்ட உற்பத்திச் சாதனங்களின் மதிப்புகளை உழைப்பாளி பாதுகாப்பது, அல்லது அவற்றை உற்பத்திப் பொருளுக்கு அதன் மதிப்பின் பகுதிகளாகப் பெயர்ப்பது, ஸ்தூலமற்றதாய்க் கொண்ட அவரது கூடுதல் உழைப்பின் மூலமன்று. அந்த உழைப்பின் குறிப்பான பயனுள்ள தன்மையின் மூலமே; உற்பத்தித் திறனுள்ள தனி வடிவத்தின் மூலமே. உழைப்பு உற்பத்திச் சாதனங்களைத் தீண்டுவதன் மூலமே அவற்றை உயிரற்ற நிலையிலிருந்து எழுப்பி, உழைப்பு நிகழ்முறையின் உயிர்த் துடிப்புள்ள காரணிகளாக்கி, அவற்றுடன் இணைந்து புதிய உற்பத்திப் பொருட்களாகிறது.

நூற்பானது ஒரு புறம் பஞ்சு, கதிர் ஆகியவற்றின் மதிப்புகளோடு புதிய மதிப்பைச் சேர்ப்பது ஸ்தூலமற்ற மனித உழைப்புச் சக்தியின் செலவீடாக இருத்தல் என்ற அதன் பொதுத் தன்மையின் மூலமே; நூற்பு என்ற அதே உழைப்பு மறு புறம் உற்பத்திச் சாதனங்களின் மதிப்புகளை உற்பத்திப் பொருளுக்குப் பெயர்ப்பதும் சரி, அவற்றை உற்பத்திப் பொருளில் பாதுகாப்பதும் சரி, ஸ்தூலமான, பயனுள்ள நிகழ்முறையாக இருத்தலென்ற அதன் தனித் தன்மையின் மூலமே. என்வே ஒரே நேரத்தில் இரட்டை விளைவு உண்டாக்கப்படுகிறது.

குறிப்பிட்ட அளவிலான உழைப்பைச் சேர்ப்பதன் மூலம் புதிய மதிப்பு சேர்க்கப்படுகிறது. இப்படிச் சேர்க்கப்பட்ட உழைப்பின் பண்பால், உற்பத்திச் சாதனங்களின் மூல மதிப்புகள் உற்பத்திப் பொருளில் பாதுகாக்கப்படுகின்றன.

முன்னர் 36 மணி நேரத்தில் நூற்ற அதே அளவு பஞ்சை ஏதேனும் புதிய கண்டுபிடிப்பின் பயனாய் நூற்பாளர் இப்போது 6 மணி நேரத்தில் நூற்க முடிவதாகக் கொள்வோம். 6 மணி நேர நூற்பின் மூலம், ஒவ்வொரு இராத்தல் கச்சாப் பொருளுக்கும் நூற்பாளரின் உழைப்பால் சேர்க்கப்படும் புதிய மதிப்பு முன்பிருந்ததில் ஆறில் ஒரு பங்கே என்ற போதிலும், பாதுகாக்கப்பட்டு உற்பத்திப் பொருளுக்கு மாற்றப்படும் கச்சாப் பொருளின் மதிப்பு முன்பிருந்ததைப் போல் ஆறு மடங்கு அதிகமாகும். உழைப்பு ஒரு நிலையில் மதிப்பைப் பாதுகாக்கவும், மறு நிலையில் மதிப்பைப் படைக்கவும் இயலுவதற்குக் காரணமான உழைப்பின் அவ்விரு குணங்களும் அடிப்படையில் வேறுபட்டவை என்பதையே இது காட்டுகிறது.

உற்பத்திச் சாதனங்கள் பயன்-மதிப்பை இழக்கும் போது மதிப்பை இழக்காததற்கான காரணம் என்னவென்றால், அவை உழைப்பு நிகழ்முறையில் தமது பயன்-மதிப்பின் ஆரம்ப வடிவத்தை இழந்த போதிலும் உற்பத்திப் பொருளில் ஒரு புதிய பயன்-மதிப்பின் வடிவத்தை மேற்கொள்ளுகின்றன.

உழைப்பு நிகழ்முறையில் உற்பத்திச் சாதனங்கள் உற்பத்திப் பொருளுக்கு தமது மதிப்பைப் பெயர்ப்பது, தமது பயன்-மதிப்போடு கூடப் பரிவர்த்தனை-மதிப்பையும் இழக்கிற அளவுக்கே என்பது தெளிவாகிறது.

ஒரு நூற்பு இயந்திரம் 10 ஆண்டு காலம் நீடித்தால், அந்த வேலைக் காலத்தில் அதன் மொத்த மதிப்பு 10 ஆண்டு கால உற்பத்திப் பொருட்களுக்கு சன்னம் சன்னமாகப் பெயர்க்கப்படுகிறது.

உற்பத்திச் சாதனங்கள் உழைப்பு நிகழ்முறையின் போது தம் சொந்தப் பயன் மதிப்பின் அழிவால் தாமே இழப்பதை விட அதிக மதிப்பை உற்பத்திப் பொருளுக்குப் பெயர்ப்பதில்லை என்பது தெட்டத் தெளிவாகிறது. இப்படியொரு சாதனம் இழப்பதற்கு மதிப்பேதும் இல்லையென்றால், அதாவது அது மனித உழைப்பின் உற்பத்திப் பொருளாக இல்லையென்றால், உற்பத்திப் பொருளுக்கு அது மதிப்பெதையும் பெயர்ப்பதில்லை. அது பரிவர்த்தனை-மதிப்பைப் படைப்பதற்கு பங்கு செலுத்தாமலே பயன்...மதிப்பைப் படைக்க உதவுகிறது. மனித உதவியில்லாமல் இயற்கையால் வழங்கப்படும் எல்லா உற்பத்திச் சாதனங்களும் இவ்வகையில் அடங்கும்.  நிலம், நீர், காற்று, கனிம நிலையிலுள்ள உலோகங்கள், கன்னிக் காடுகளின் மர வளம் போன்றவற்றை உதாரணமாய்க் கொள்ளலாம்.

உழைப்பு நிகழ்முறையின் காரணிகளில் ஒன்றாகிய ஒர் உற்பத்திச் சாதனம் அந்நிகழ்முறையில் தொடர்ந்து முழுமையாகப் பங்கு பெறுகிற அதே நேரத்தில், மதிப்பைப் படைக்கும் நிகழ்முறைக்குள் பகுதி பகுதியாகவே பங்கு பெறுகிறது. இங்கே இரு நிகழ்முறைகளுக்கும் இடையிலான வேறுபாடு அவற்றின் பொருளாயதக் காரணிகளில் பிரதிபலிக்கிறது; மதிப்பைப் படைக்கும் நிகழ்முறையில் ஒர் ஆக்கக்கூறு என்ற முறையில் பகுதிபகுதியாகவே பங்கு பெறுகிற அதே உற்பத்திச் சாதனம் உழைப்பு நிகழ்முறையில் முழுமையாகப் பங்கு பெறுகிறது என்பதில் பிரதிபலிக்கிறது.

மறுபுறம், மதிப்பைப் படைக்கும் நிகழ்முறையில் முழுமையாகப் பங்கு பெறுகிற உற்பத்திச் சாதனம் உழைப்பு நிகழ்முறையில் சிறிது சிறிதாகவே பங்கு பெறுவதும் உண்டு. பஞ்சை நூலாக நூற்பதில் பயன் படுத்தப்பட்ட ஒவ்வொரு 115 இராத்தல் பஞ்சுக்கும் 15 இராத்தல் கழிவு எனக் கொள்வோம்; 15 இராத்தல் பஞ்சின் பயன்...மதிப்பு மறைந்து போனால்தான் 100 இராத்தல் நூல் நூற்க இயலும். எனவே இந்தப் பஞ்சின் அழிவு நூலின் உற்பத்திக்கு இன்றியமையாதத் தேவையாகும். அது ஒர் அவசிய நிலைமை என்பதால்தான், அந்தப் பஞ்சின் மதிப்பு உற்பத்திப் பொருளுக்குப் பெயர்க்கப்படுகிறது. உழைப்பு நிகழ்முறையிலிருந்து விளைகிற ஒவ்வொரு வகைக் கழிவுக்கும் இது பொருந்தும்--சுயேச்சையான புதிய பயன்-மதிப்புகளின் உற்பத்தியில் ஒரு சாதனமாக அதனை மேற்கொண்டு உபயோகிக்க முடியாத அளவிற்காவது பொருந்தும்.

உழைப்பு நிகழ் முறையில் பங்கு பெறுகிற உற்பத்திச் சாதனம் முன்பிருந்தே தன்னிடமிருப்பதை விட அதிகமான மதிப்பை உற்பத்திப் பொருளுக்குச் சேர்க்க முடியாது. அதன் மதிப்பு நிர்ணயிக்கப்படுவது உற்பத்திச் சாதனமாய் உள்ளே செல்கிற உழைப்பு நிகழ்முறையால் அன்று. உற்பத்திப் பொருளாய் அது வெளியே வருகிற நிகழ்முறையாலேயே.

செயல்படும் உழைப்புச் சக்தி, அதாவது உயிருள்ள உழைப்பு மதிப்பைச் சேர்க்கிற அதே நேரத்தில், மதிப்பை பாதுகாக்கவும் செய்கிற குணத்தைப் பெற்றுள்ளது. இது இயற்கையின் வரப்பிரசாதம். இதனால் தொழிலாளிக்கு இழப்பேதுமில்லை; ஆனால் முதலாளிக்கு நிறைய ஆதாயமுண்டு; எப்படியென்றால் அது அவரது மூலதனத்திற்கு இருக்கும் மதிப்பைக் கேடுறாமல் பாதுகாக்கிறது. தொழில் சுணக்கமின்றி நன்றாய் இருக்கும்வரை, உழைப்பின் இந்த நன்கொடை அவரது கண்ணிற்கு படுவதே இல்லை; அவர் பணம் பண்ணுவதிலேயே குறியாய் இருக்கிறார். உழைப்பு நிகழ்முறையை திடீரெனத் தடைப்படுத்தும் நெருக்கடி அவருக்கு உறைக்கும்படி இதனை உணர்த்துகிறது.

உற்பத்திப் பொருளின் மதிப்பில் உற்பத்திச் சாதனங்களின் மதிப்பு திரும்ப இடம் பெறுகிறதே தவிர, கண்டிப்பாகச் சொன்னால், அந்த மதிப்பு மறுவுற்பத்தியாவதில்லை. உற்பத்தியாவது புதிய பயன் மதிப்பே. பழைய பயன்...மதிப்பு இந்த புதிய பயன்-மதிப்பில் திரும்ப இடம் பெறுகிறது.

உழைப்பு நிகழ்முறையின் அகவயக் காரணியைப் பொறுத்த வரை, செயல்படும் உழைப்புச் சக்தியை பொறுத்த வரை, இப்படிச் சொல்ல முடியாது. உழைப்பாளி தன் உழைப்பு தனிக் குறிகோளுடைய தனி வகையைச் சேர்ந்ததாக இருப்பதன் பயனாய் உற்பத்திச் சாதனங்களின் மதிப்பை பாதுகாத்து உற்பத்திப் பெயர்க்கிற அதே நேரத்தில், உழைப்பென்னும் செயலாலேயே கணம் தோறும் கூடுதலான அல்லது புதிய மதிப்பைப் படைக்கிறார்.

உற்பத்திச் சாதனங்கள், அதாவது கச்சாப் பொருள், துணைப் பொருள், உழைப்புச் சாதனங்கள் ஆகியவை மூலதனத்தின் எந்தப் பகுதியைக் குறிக்கின்றனவோ அந்தப் பகுதி உற்பத்தி நிகழ்முறையில் அளவு வழியிலான மதிப்பு மாறுபாடு எதையும் அடைவதில்லை. எனவே, நான் அதனை முலதனத்தின் மாறாப் பகுதி, அல்லது மாறா மூலதனம் என்று அழைக்கிறேன்.

உழைப்பு நிகழ்முறையில் உழைப்புச் சக்தி குறிக்கிற மூலதனப் பகுதியின் மதிப்பு மாறுபாடு அடையவே செய்கிறது. அது தன் சொந்த மதிப்பின் சமதையை மறுவுற்பத்தி செய்வது மட்டுமல்லாமல் ஒரு மிகை அல்லது உபரி..மதிப்பையும் உற்பத்தி செய்கிறது; இந்த மிகை அல்லது உபரி..மதிப்பு மாறுபடக் கூடியது. நான் அதை மூலதனத்தின் மாறும் பகுதி அல்லது சுருக்கமாக மாறும் மூலதனம் என்று அழைக்கிறேன்.

கச்சாப் பொருள், இயந்திர சாதனம் போன்றவற்றின் மதிப்பு மாறலாம்; ஆதலால் அவற்றிலிருந்து உற்பத்திப் பொருளுக்குப் பெயர்க்கப்படும் மதிப்பு பகுதியும் மாறலாம். ஆனால் மதிப்பு மாற்றம் உருவாவது கச்சாப் பொருளும் இயந்திரமும் உற்பத்தி சாதனமாக செயல்படுகிற நிகழ்முறைக்கு வெளியேதான். இந்த நிகழ்முறையில் ஈடுபடுகிற கச்சாப் பொருளும் இயந்திரமும் நிகழ் முறையைச்  சாராத நிலையில் தனக்கிருப்பதை விடக் கூடுதலான மதிப்பை உற்பத்திப் பொருளுக்கு பெயர்க்க முடியாது.

உற்பத்தி சாதனங்கள் உழைப்பு நிகழ்முறையில் பங்கு வகிக்க தொடங்கிய பின்னரும் கூட அவற்றின் மதிப்பில் ஏற்படும் மாற்றம் மாறா-மூலதனம் என்ற அவற்றின் தன்மையை மாற்றிவிடுவதில்லை.

மாறும்-மூலதனத்துடனான மாறா-மூலதனத்தின் விகிதச்சாரத்தில் ஏற்படும் மாற்றமும் மூலதனத்தின் இந்த இருவகைகளுக்கும் உரிய அதனதன் பணிகளை பாதிப்பதில்லை. உற்பத்திச் சாதனங்களின் மொத்த மதிப்பு குறிக்கிற மாறா-மூலதனத்தில் பிரம்மாண்டமான அதிகரிப்பும், அதே நேரத்தில் உழைப்புச் சக்தியில் முதலீடு செய்யப்படும் மாறும்-மூலதனத்தில் பெரும் குறைப்பும் நிகழும்போதும் இரண்டுக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடு இதனால் சிறிதும் பாதிக்கப்படுவதில்லை.

No comments:

Post a Comment