Sunday, August 4, 2013

பகுதி 3: அறுதி உபரி..மதிப்பின் உற்பத்தி. அத்தியாயம்: 7 உழைப்பு நிகழ்முறையும் உபரி..மதிப்பின் உற்பத்தி நிகழ்முறையும். பிரிவு 1: உழைப்பு நிகழ்முறை அல்லது பயன்..மதிப்புகளின் உற்பத்தி

முதலாளி உழைப்புச் சக்தியை வாங்குவது அதனை பயன்படுத்திக்கொள்வதற்காகவே; பயன்படுத்தப்படும் உழைப்புச் சக்தி உழைப்பே ஆகும். உழைப்புச் சக்தியை வாங்குபவர், விற்பவரை வேலை செய்ய வைப்பதன் முலம் அதனை நுகர்கிறார்.

பயன்..மதிப்புகள் அல்லது சரக்கின் உற்பத்தி முதலாளியின் கட்டுப்பாட்டிலும், அவர் சார்பாகவும் நடத்தப்படுகிறது என்ற உண்மை, அந்த உற்பத்தியின் பொதுவான தன்மையை மாற்றி விடுவதில்லை.

உழைப்பு என்பது, முதலாவதாக, மனிதனும் இயற்கையும் பங்கு பெறுகிற, மனிதன் தனக்கும் இயற்கைக்கும் இடையிலான பொருளாயதப் பிரதிச் செயல்களைத் தானாகவே தொடங்கி, முறைப்படுத்தி கட்டுப்படுத்துகிற நிகழ்முறயாகும்.

தன்னுள் உறங்கும் சக்திகளை வளரச் செய்து, அவற்றை அவன் தனது ஆட்சிக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுமாறு கட்டாயப்படுத்துகிறான்.

மனித உழைப்பு இன்னமும் உள்ளுணர்ச்சியின் பாற்பட்டதாய் அதன் ஆரம்பக் கட்டத்திலிருந்த அந்த நிலையிலிருந்து அளப்பரிய கால இடைவெளியால் பிரிக்கப்பட்டுள்ளது.

உழைப்பு நிகழ்முறை ஒவ்வொன்றின் முடிவிலும் கிடைக்கும் விளைவு அந்நிகழ்முறையின் தொடக்கத்திலேயே உழைப்பாளியின் மனத்தில் இருந்ததுதான். அவர் தாம் வேலை செய்கிற மூலப் பொருளில் வடிவ மாற்றத்தை உண்டாக்குவதோடு தமது குறிக்கோளையும் நிறைவேற்றிக் கொள்கிறார். இக்குறிக்கோள் அவரது வேலை முறையின் நெறியை நிர்ணயிக்கிறது.

உழைப்பு நிகழ்முறையின் மூல காரணிகள் வருமாறு: 1. மனிதனின் நேரடிச் செயற்பாடு, அதாவது வேலை; 2. அந்த வேலைக்கு உள்ளாகிற  இலக்குப் பொருள்; 3. அதற்கான சாதனங்கள்.

கன்னி நிலம் (பொருளாதார வழியில் பேசுவதானால் இதில் நீரும் அடங்கும்) அப்படியே பயன்படுத்தத் தக்க தயார் நிலையில் அவசிய பண்டங்கள் அல்லது வாழ்வுச் சாதனங்களை மனிதனுக்கு வழங்குகிறது. அது மனிதனைச் சாராமல் இயற்கையாகவே இருப்பது; மனித உழைப்பின் சர்வப்பொது இலக்குப் பொருளாய் அமைவது. உழைப்பு சில பொருட்களை சுற்றுப்புறத்துடனான நேரடித் தொடர்பிலிருந்து பிரித்தெடுக்க மட்டுமே செய்கிறது. அந்தப் பொருட்களெல்லாம் உழைப்பின் இலக்குப் பொருட்கள். இயற்கை தானாகவே வழங்குபவை.

உழைப்பின் இலக்குப் பொருள் முந்தைய உழைப்பின் மூலம் வடிக்கட்டப்பட்டதென்று சொல்லக் கூடுமானால் அதைக் கச்சாப் பொருள் என்று அழைக்கிறோம். கச்சாப் பொருள் அனைத்தும் உழைப்பின் இலக்குப் பொருளாகும்; ஆனால் உழைப்பின் இலக்குப் பொருள் ஒவ்வொன்றும் கச்சாப் பொருள் அன்று. உழைப்பைக் கொண்டு சிறிது மாற்றத்திற்கு உட்பட்ட பின்னரே அது கச்சாப் பொருளாக முடியும்.

உழைப்புச் சாதனம் என்பது உழைப்பாளி தனக்கும் தன் உழைப்பின் இலக்குப் பொருளுக்கும் இடையே வைப்பதும், அவரது செயற்பாட்டின் கடத்தியாகப் பயன்படுவதுமான பொருள். அல்லது பொருட் தொகுதி ஆகும்.  அவர் சில பொருட்களின் யாந்திரிக, பெளதிக, இரசாயனப் பண்புகளைப் பயன்படுத்தி பிற பொருட்களைத் தமது நோக்கங்களுக்கு சேவகம் புரியச் செய்கிறார். பழங்கள் போன்ற தயார் நிலையிலுள்ள வாழ்வுச் சாதனங்களை சேகரிப்பதில் மனிதனின் கை கால்களே உழைப்புச் சாதனங்களாகப் பயன்படுகின்றன. பூமியே ஒரு உழைப்புச் சாதனம்தான். பழக்கப்பட்ட மிருகங்கள், திருத்திச் செப்பனிட்ட கற்கள், மரம், எலும்புகள் உழைப்புச் சாதனங்களாக முக்கிய பங்கு வகிக்கின்றன. உழைப்புச் சாத்னங்களின் உபயோகமும் புனைவும் மனித உழைப்பு நிகழ்முறைக்கே உரித்தான தனிச் சிறப்புகளாகும். எனவே கருவி செய்யும் மிருகம் என்று மனிதனுக்கு இலக்கணம் வகுக்கிறார் பிராங்க்ளின்.

உழைப்பு நிகழ் முறையை நடத்துவதற்கு அவசியமான எல்லா பொருட்களையும் உழைப்புச் சாதனம் என்ற வகையில் சேர்த்துக் கொள்ளலாம்.  நேரடியாக உழைப்பு நிகழ் முறையில் நுழையாவிட்டாலும் இவையின்றி அது நடை பெறவே முடியாது, அல்லது பகுதியளவே நடை பெற முடியும். பூமி இவ்வகைப்பட்ட சர்வ பொது சாதனம். ஏனெனில் உழைப்பாளி நிற்பதற்கு ஓர் இடத்தையும் அவரது செயற்பாடு ஈடுபடுவதற்கு ஒர் களத்தையும் அது வழங்குகிறது. முந்தைய உழைப்பின் பலனாய் அமைந்து, இவ்வகை உழைப்புச் சாதனங்களாகவும் இருப்பவற்றில் பட்டறைகள், கால்வாய்கள், சாலைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

உழைப்பு அதன் இலக்குப் பொருளுடன் இணைகிறது. உழைப்பு பொருள் வடிவம் ஆகிறது; இலக்குப் பொருள் உருமாறுகிறது. முன்பு உழைப்பாளியிடம் இயங்குவதாய் இருந்தது இப்போது உற்பத்திப் பொருளில் இயங்கா நிலைப் பண்பாகிறது.

உழைப்பு நிகழ்முறை முழுவதையும் அதன் பலனாகிய உற்பத்திப் பொருளின் கோணத்திலிருந்து ஆராய்ந்தால், உழைப்புச் சாதனங்கள், உழைப்பின் இலக்குப் பொருள் இரண்டுமே உற்பத்திச் சாதனங்கள் ஆகும் என்பதும், அந்த உழைப்பு திறனுடை உழைப்பு ஆகும் என்பதும் தெளிவாகும்.

உழைப்புக்கான மூலப் பொருள் நேரடியாக இயற்கையால் வழங்கப்படும் தொழில்களான சுரங்கம் தோண்டுதல், வேட்டை, மீன் பிடித்தல், வேளாண்மை (கன்னி நிலத்தை கொத்துவது என்ற வரம்புக்குள் அடங்குவது) போன்ற எடு பொருள் தொழில்களை விதி விலக்காகக் கொண்டால், எல்லாத் தொழிற் கிளைகளும் முன்பே உழைப்பின் மூலம் வடித்தெடுக்கப்பட்ட பொடுட்களையே, முன்பே உழைப்பின் உற்பத்திப் பொருட்களாயுள்ள கச்சாப்பொருளையே கையாளுகிறது.

மிகப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உழைப்புச் சாதனங்கள் மிகவும் மேலோட்டமாகப் பார்ப்பவருக்கும் கூட கடந்து போன சகாப்தங்களின் உழைப்பினது தடயங்களைக் காட்டுகின்றன.

கச்சாப் பொருள் உற்பத்திப் பொருளின் பிரதான உட்பொருளாகவும் இருக்கலாம். அல்லது துணைப்பொருளாக மட்டும் அதன் ஆக்கத்தில் சேருவதாகவும் இருக்கலாம். துணைப் பொருள் உழைப்புச் சாதனங்களால் உட்கொள்ளப்படலாம்.

ஆக, ஒரு பயன்..மதிப்பைக் கச்சாப் பொருளாய் கொள்வதா, உழைப்புச் சாதனமாகக கொள்வதா, உற்பத்திப் பொருளாகக் கொள்வதா என்பது உழைப்பு நிகழ் முறையில் அது ஆற்றுகிற பணியாலேயே, அங்கு அது வகிக்கிற இடத்தாலேயே நிர்ணயிக்கப்படுகிறது என்பதைப் பார்க்கிறோம்.  இந்த பணி அல்லது இடம் மாறும்போது அதன் தன்மையும் மாறுபடுகிறது.

உழைப்பு அதன் பொருளாயதக் காரணிகளை, அதாவது அதன் இலக்குப் பொருளையும் அதன் சாதனங்களையும் உபயோகித்துக்கொள்கிறது, அவற்றை நுகர்கிறது; ஆகவே அது ஒரு நுகர்வு நிகழ் முறையாகும்.  இப்படி திறனுடை நுகர்வு சொந்த நுகர்விலிருந்து எப்படி வேறுபடுத்திக் காட்டப்படுகிறது என்றால், பின்னது உற்பத்திப் பொருட்களை உயிருள்ள தனி மனிதருக்கான வாழ்வுச் சாதனங்களாக உபயோகித்துக் கொள்கிறது.  முன்னது உழைப்பை, அதாவது உயிருள்ள தனி ஆளின் உழைப்புச் சக்தியைச் செயல்பட வைக்கும் ஒரே சாதனம் என்ற முறையில் உற்பத்திப் பொருட்களை உபயோகித்துக் கொள்கிறது.  ஆகவே நுகர்வாளரே சொந்த நுகர்வின் பலன்.  நுகர்வாளர் அல்ல, உற்பத்திப் பண்டமே திறனுடை நுகர்வின் பலன்.

கூழின் சுவை கேப்பையைப் பயிரிட்டது யார் என்று தெரிவிப்பதில்லை. அதே போல், இந்த சாமானிய உழைப்பு நிகழ் முறையும் அது எத்தகைய சமூக நிலைமைகளில் நடைபெறுகிறது என்பதைத் தானாகவே தெரிவிப்பதில்லை.

தொழிலாளி தனக்காக உழைப்பதற்குப் பதில் முதலாளிக்காக உழைக்கிறார் என்ற உண்மை உழைப்பு நிகழ்முறையின் பொதுவான தன்மையை மாற்றிவிடுவதில்லை என்பது தெளிவு.

உழைப்பை மூலதனத்துக்குக் கீழ்படுத்டுவதன் மூலம் உற்பத்தியின் வினைமுறைகளில் மாற்றங்கள் செய்தல் பிற்காலத்திலேயே சாத்தியம்.

உழைப்பு நிகழ் முறையை முதலாளி உழைப்புச் சக்தியை நுகருகிற நிகழ்முறையாக மாற்றிவிடும்போது, உழைப்பாளி முதலாளியின் கண்காணிப்பில் வேலை செய்கிறார். முதலாளி கருத்துடன் கவனம் செலுத்தி வேலை சரியானபடி நடைபெறுமாறு செய்கிறார். கச்சாப் பொருள் வீண் விரயமும், கருவிகளில் வேலைக்கு அவசியமானதை விடக் கூடுதலான தேய்மானம் ஏற்படாதபடி உற்பத்திச் சாதனங்களை மதி நுட்பத்துடன் பயன்படுத்துமாறு செய்கிறார்.

இரண்டாவதாக உற்பத்திப் பொருள் முதலாளிக்குரிய சொத்தாகுமே தவிர, அதன் நேரடி உற்பத்தியாளராகிய உழைப்பாளருக்குரியதன்று .

No comments:

Post a Comment